Thursday, October 31, 2013

முகநூல் உறவுகளின் தீபாவளிக் கொண்டாட்டம்


         எனது ஃபேஸ்பேஸ்புக் வட்டத்தில் சில உறவுகளைத் தேர்ந்தெடுத்து அவர்களிடம்  தீபாவளி பற்றிய சில துணுக்குகளைக் கேட்டு வாங்கினேன்.பலதரப்பட்ட பகிர்வுகளைக் கொடுத்து அசத்திவிட்டார்கள்.முதலாவதாக தேசியப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரியும் சுதாகரிடம் பேசினேன்.

 

 உதயா: முதலில் உங்க சின்ன வயசு தீபாவளிக் கொண்டாட்டம் பத்தி சொல்லுங்க சுதாகர்.

 

சுதாகர் : எல்லார் வீட்டிலும் செய்யறமாதிரி எண்ணெய்க் குளியல்,ஆட்டிறைச்சி,கோழிக்கறியோடு கூடிய இட்லி,தோசை,புத்தாடைகள் இப்படிதான் எனது கொண்டாட்டம்.எனக்கு ரொம்ப பிடிச்சமான விசயம்னா அக்கம் பக்கத்து வீட்டுக்குப் போறது (சிரிப்பு)

 

உதயா: ஏன் அது ரொம்ப பிடிக்கும்?உங்க வீட்ல இல்லாத பலகாரமெல்லாம் அவங்க வீட்டுல இருக்குமோ?

 

சுதாகர் : இல்லை,அவங்க வீட்டுல இருந்து அங்பாவ் எல்லாம் கிடைக்கும்,அதனால் (சிரிப்பு)என் சின்ன வயசுல ஒருதடவை தீபாவளி அன்னைக்கு சரியான காய்ச்சல்.படுத்த படுக்கையா இருந்தேன்.அந்தத் தீபாவளியை மறக்கவே முடியாது.

 

உதயா: சரி,இந்த வருடம் கொண்டாட்டம் எப்படி?ஏதும் ஷ்பெஷல் உண்டா?

 

சுதாகர் : எப்போதும் போல் வீட்டில் எல்லாருக்கும் புத்தாடை எடுத்துக் கொடுப்பேன்.இந்த வருசம் எங்க வீட்டுல ஒரு புது வரவு.என் தங்கை சுஹாவின் ஆண்குழந்தை நிதேஷ்.அவர்தான் ஷ்பெஷல்.

 

உதயா: குட்டிப் பையனுக்குதான் நிறைய புத்தாடை வந்திருக்கும் இல்லையா?

 

சுதாகர் : ஆமாம்,நானும் வாங்கி கொடுத்தேன்.அதேமாதிரி ஆதரவற்ற இல்லத்துல இருக்கும் ஒன்பது வயது சிறுவன் ஒருவனுக்கும் இந்த வருட தீபாவளிக்கு புத்தாடை எடுத்துக்கொடுக்கப்போறேன்.(உங்கள் நல்லமனம் வாழ்க சுதாகர்)

 

  அடுத்ததாக பள்ளி ஆசிரியையாக இருக்கும் தினக்குரல் வாசகி திருமகள் கிருஷ்ணனிடம் அவரது தலைதீபாவளி குறித்து கேட்டேன்.

 

திருமகள் : கடந்த வருசம் வரைக்கும் தீபாவளி என்றால் ஜாலியா இருப்பேன்.எனக்குதான் எல்லாரும் புத்தாடை எடுத்து கொடுப்பாங்க.இந்த வருடம் கல்யாணமாகிட்டதால பொறுப்பு அதிகமா இருக்கு.நானும் கணவரும் எங்க உறவினர்களுக்கு எல்லாம் உடை வாங்கினோம்.ஒவ்வொருவருக்கா தேடிப் பிடிச்சி வாங்கறது பிடிச்சிருந்துச்சி.புதிய அனுபவமா இருந்துச்சி.பலகாரம் எங்க அம்மா வீட்டுல கொஞ்சம் இங்கே கொஞ்சம் செஞ்சோம்.என் கணவர் சுகுமாருக்கு நல்லா முறுக்கு செய்ய தெரியும்னு கண்டுபிடிச்சிட்டேன்.(சிரிப்பு)அடுத்த வருசம் உங்களுக்கும் முறுக்கு செஞ்சு தரோம்.


 

உதயா: அடுத்த வருசம் நேரா வீட்டுக்கு வந்து நீங்க முறுக்கு சுடுறதை நேரடி ஒளிபரப்பு செய்திடறேன்.சரி, வேறு என்ன ஏற்பாடு செஞ்சிருக்கீங்க?

 

திருமகள் : இங்கே பூச்சோங்ல இருக்கற எங்க வீட்டுக்கும்,மலாக்காவுல இருக்கற எங்க வீட்டுக்கும் எனக்குப் பிடிச்ச பிங்க் நிற சாயம் பூசியாச்சு.(உங்கள் பிங்க் தலைதீபாவளி சிறப்பாக அமையட்டும் திருமகள்)

 

  எங்கள் வீட்டுக்கும் எனக்குப் பிடித்தமான ஊதாநிற சாயம் பூசினால் நல்லா இருக்குமே என நினைத்தபடி தினக்குரல் வாசகர் குளுவாங் விக்னேஷ்வரன் அண்ணாவிடம் அவரது மறக்கமுடியாத தீபாவளி பற்றி பேசினேன்.

 

விக்னேஷ்வரன் :2003-ஆம் ஆண்டு நான் பெந்தோங் தோட்டத்தில் துணை நிர்வாகியாய் வேலை செய்துக்கிட்டு இருந்தேன்.அப்போ நான் கட்டை பிரம்மச்சாரி.(வருத்தப்படாத வலிபர் சங்கமா அண்ணா?)நிறைய வேலைங்க இருந்ததால் எல்லாத்தையும் முடிச்சிட்டு தீபாவளிக்கு முதல்நாள்தான் ராத்திரி எட்டு மணிக்கு அரக்கப் பறக்க என் ஊரான குளுவாங்குக்குக் கிளம்பினேன்.என் காரின் பின்னால் டயர் பஞ்சராகிடுச்சி.அது தெரியாம நான் போய்க்கிட்டு இருந்தேன்.கெந்திங் குகையைத் தாண்டிச் செல்லும் வழியில் என் கார் அலச ஆரம்பிச்சிடுச்சி.காரை ஓரம் கட்டிப் பார்த்தால் பின்னால் டயரில் அறவே காத்து இல்லை.என்னடா சோதனை என நெனச்சிக்கிட்டு கார் டிக்கியைத் திறந்து பார்த்தால் அங்கே இன்னொரு சோதனை என்னைப் பார்த்து பல்லை இளிக்குது.(ஹா ஹா)என்னோட ஸ்பேர் டயரிலும் காத்து அறவே இல்லை.கும்மிருட்டு,காராக் நெடுஞ்சாலை பேய்க்கதைகளுக்குப் பேர் போன இடம் வேற.எனக்கு பயங்கரமாய் வியர்த்துக்கொட்ட ஆரம்பிச்சிடுச்சி.நண்பர்கள் யாரையாச்சும் உதவிக்கு அழைக்கலாம்னு பார்த்தா எல்லாரும் அவங்கவங்க ஊருக்கு எப்பவோ போயி சேர்ந்துட்டாங்க.என்ன செய்யறதுன்னு விழிச்சிக்கிட்டு இருந்த வேளையில் கடவுள் மாதிரி நெடுஞ்சாலை ரோந்து பணியில் இருந்த வாகனம் என் முன்னாடி வந்து நின்னுச்சி.என் டயரை எடுத்துப் போய் பஞ்சர் ஒட்டி ஒருமணி நேரத்தில் எடுத்து வந்து என் காரில் பொருத்திய அந்த ரெண்டு பேரும் என் கண்ணுக்கு தெய்வமா தெரிஞ்சாங்க.அவங்களுக்கு நன்றி கூறி அன்பளிப்பா பணம் கொடுத்ததுக்கு வாங்க மறுத்துட்டாங்க.இது எங்கள் கடமை என சொல்லி,எனக்கு தீபாவளி வாழ்த்து சொல்லி பத்திரமா போகும்படி அனுப்பி வெச்சாங்க.நான் கிளம்ப ராத்திரி 11 மணியாகிடுச்சி.நான் குளுவாங்க் போய் சேர அதிகாலை நான்கு மணியாகிடுச்சி;எல்லாரும் எண்ணெய்க் குளியலுக்குப் போக ஆரம்பிச்சிட்டாங்க.அவங்களோட ஆனந்தத்தைப் பார்த்ததும் என்னோட தூக்கமும்,களைப்பும் பறந்து போயி நானும் தீபாவளி மூட்டுக்கு மாறிட்டேன்.ஆனால் ஒன்னு இனிமேல் தூரப்பயணம் போகும் முன் காரில் எல்லாம் சரியா இருக்குதான்னுமுன்கூட்டியே பார்க்கனும் என முடிவு செய்து இன்றுவரைக்கும் பின்பற்றி வரேன்.

 

  விக்னேஷ் அண்ணாவின் கதை ஒரு மர்மக் கதையைப் படித்தமாதிரி பரபரப்பைத் தந்ததால் அடுத்து ஒரு நகைச்சுவையான விசயம் இருந்தால் நல்லா இருக்குமே என ஒருகாலத்தில் பிரபலமா எழுதி,இப்போது இடைவெளி விட்டிருக்கும் சகோதரி கவிதா வீரமுத்துவிடம் அவர் வாழ்க்கையில் நடந்த சுவாரசியமான தீபாவளி பொழுதுகளைப் பற்றி கேட்டேன்.


 

கவிதா : தீபாவளி என்றாலே என் மனம் அசைபோடுவது எனது தம்பி பாரியைத்தான்.. எல்லா ஏற்பாடுகளும் சுமூகமாக நடக்கும்.. எது இல்லை என்றாலும் முறுக்கு சுற்றுவதற்கும் (பிறகு 'சுடுவதற்கும்') அவருடைய மிகப்பிடித்தமான நெய் உருண்டைக்கும் ஆள் கட்டாயம் உதவிக் கரம் நீட்டுவார்.. ஆனால் மற்றதையெல்லாம் கண்டுகொள்ள மாட்டார்.மற்ற உருட்டல் மிரட்டல் வேலை எல்லாம் முடித்து விடுவோம்.. வீட்டு அலங்காரம் அவர் பொறுப்பு.. ஒரு வாரமாக அதையும் இதையும் வாங்கி அலங்கார வேலைக்கு ஆயத்தமாகிவிடுவார். ஆனால் முன்னமே செய்தால் கிக் இருக்காதாமே?ஆக தீபாவளி முதல் நாள் தான் அலங்காரம் என எழுதப்படாத விதி.அந்த நாளும் வரும். என் அம்மாவோ 2 கிலோ சிட்டுருண்டை தயார் செய்ய என்னை 'புக்' செய்திருப்பார்.. (அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்) மலை போல குவிந்திருக்கும் மாவின் முன்னே பரிதாபமாக அமர்ந்து உருண்டை உருட்ட ஆரம்பிப்பேன்.அப்போது என் தம்பி இலேசாய் கொட்டாவி விடுவார் பாருங்க.எனக்கு வயிற்றில் புளியைக் கரைத்து ஊற்றும்.சொல்லி வைத்தாற்போல அவரும் சரியா 11 மணியளவில் தூங்கிவிடுவார் பாருங்களேன்..! அப்புறம் என்ன??? சிட்டுருண்டையைப் பிடித்து பொரித்து அடுக்கி பிறகு அலங்காரம் செய்து கோழித்தூக்கம் போட்டுவிட்டு தீபாவளியன்று தூங்கி வழிவேன்.அஃது ஒரு காலம் அழகிய காலம்.. !




 

   தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் ஆங்கில மொழி பயில,சிட்னி ஆஸ்திரேலியாவில் இருந்த பினாங்கு ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி மாணவி பிரவினா விஜயகுமாரிடம் அங்கு இருந்தபோது அவருடைய தீபாவளி கொண்டாட்டம் எப்படி இருந்தது என கேட்டேன்.

 

பிரவினா: 2011- ஆம் ஆண்டுதான் நாங்க சிட்னிக்குப் போனோம்.அந்த வருசம் தீபாவளி நெருங்கும்போது ரொம்ப கவலையா இருந்துச்சி காரணம் முதல் தடவையா பண்டிகையின்போது எங்க குடும்பத்தைவிட்டு பிரிஞ்சிருக்கவேண்டிய நிலை.தீபாவளி கொண்டாடும் மூட் இல்லாமல் இருந்தோம்.அப்புறம் யோசிச்சோம்.கவலையா இருந்து என்ன கிடைக்கப்போகுது?ஒருவேளை சிட்னியில் தீபாவளியைக் கொண்டாடுவதற்கு எங்களுக்குக் கிடைச்ச வாய்ப்பா அது இருக்கலாமில்லையா?அதனால் அங்குப் போயிருந்த மலேசிய மாணவர்களான நாங்கள் அன்னைக்குக் காலையில பாரம்பரிய உடையில கோயிலுக்குப் போனோம்.அன்று மாலை நாங்க எங்க வீட்டுல திறந்த இல்ல உபசரிப்பு நடத்தினோம்.அங்குப் படிச்சிக்கிட்டு இருந்த மத்த மலேசிய மாணவர்களை அழைச்சோம்.நாங்க நிறைய ஏற்பாடுகள் செய்திருந்தோம்.கோலம் போட்டு,வீட்டையும் அலங்கரிச்சிருந்தோம்.கோழிக்கறி,காய்கறி உணவு,சோறு,சப்பாத்தி எல்லாம் சேர்ந்து சமைச்சிருந்தோம்.மலேசியாவுல எங்க வீட்டுல இருந்து அனுப்பியிருந்த பலகாரத்தையும் வெச்சிருந்தோம்.முக்கியமான பலகாரமான முறுக்கும் இருந்துச்சி.எங்கள் மலாய்க்கார நண்பர்கள் ரொம்ப சந்தோசப்பட்டாங்க.அங்கே எங்களுக்கு அறிமுகமான சில மலேசிய குடும்பங்களையும் அழைச்சிருந்தோம்.நாங்கள் ஒன்னா சாப்பிட்டு,அரட்டையடிச்சிட்டு கூதூகலமா இருந்தோம்.ரெண்டு வருசத்துக்கு அப்புறம் இதோ இந்த வருசம் மலேசியாவில் எங்கள் தீபாவளி கொண்டாட்டம்.எங்கள் படிப்பும் முடிஞ்சிட்டதால் இன்னும் ஜாலியா இருக்கு.

 

  அந்த ஜாலியின் ஊடே கொஞ்சம் காரசரமான ஒரு விசயத்தையும் போட்டால் நல்லா இருக்குமே என் நினைத்தவேளையில் தெய்வம் போல் ஃபேஸ்புக் வந்தார் தேவன் ராம்நாதன்.என் இடுகைகளுக்கு விருப்பு அளித்துக்கொண்டிருந்தவரிடம் ஒரு சர்ச்சைக்குரிய கேள்வியைக் கேட்டேன்.

 

உதயா: தேவன்,தீபாவளி நம் பண்டிகையே அல்ல,அதனால் தீபாவளி கொண்டாடாதீங்க என சிலர் இங்கே ரொம்ப தீவிரமா எல்லாரையும் வலியுறுத்திக்கிட்டு இருக்காங்களே,அது பத்தி நீங்க என்ன நினைக்கறீங்க?தீபாவளி கொண்டாடறது சரியா தப்பா என கேட்டேன்.

(அப்பாடா ஒரு சர்ச்சையைக் கிளப்பிவிட்டாச்சு என்ற களிப்பில் கொஞ்சநேரம் எழுந்து நடந்துவிட்டு வருவதற்குள் தனது கருத்தைப் பகிர்ந்திருந்தார் தேவன்.

 

தேவன் : தீபாவளி தமிழர்களின் பண்டிகை அல்ல என்பது சிலரின் கருத்து. தமிழ் பேசும் மக்கள் திராவிடர்கள் என அடையலாம் காணப்படுகின்றனர். திராவிடர்கள் வாழ்ந்த முறை இன்னமும் ஆய்வுகளுக்கு உட்பட்டும் விவாதிக்கப்படும் வருகின்றது. மலேசியாவைப் பொருத்தமட்டில் தீபாவளி தமிழர்களின் அடையாளமாக கருதப்படுகிறது. தமிழ் மெல்ல முடங்கிக் கொண்டு இருக்கும் இவ்வேளையில் இது போன்ற பண்டிகைகளே நம்மை நாம் அடையலாம் காட்டிக்கொள்ள உதவுகின்றன. தீபாவளியை இந்நாட்டில் நாம் காலடி வைத்த நாளில் இருந்து கொண்டாடுகின்றோம்.அதையும் தமிழர்கள் பண்டிகை அல்ல என விட விழைந்தால் நம் அடையாளங்கள் யாவும் மிக எளிதில் பட்டுப்போகும். திராவிடன் தோன்றிய காலம் தொட்டு பரிணாம வளர்ச்சியில் தமக்கென அடையாளங்களை காட்டிக்கொண்டான். தமக்குத் தேவையானதையும் நன்மை பயப்பதையும் ஏற்றுக்கொண்டான். மதமும் இதை சார்ந்தே திராவிடனுடன் வளர்ந்து விட்டது. மதம் அடிப்படையில் கொண்டாடப்படும் இத்தீபத்திருநாளின் சாராம்சம் நன்மையை காட்டும் வேளையில் அந்த நன்மையை தற்கால இளையோரையும் உணர செய்ய நாம் அனைவரும் விழையவேண்டும். அடையாளங்களை விட்டுக்கொடுக்காமல், நம் திராவிட மொழியை மறவாமல் முன்னேறும் சிந்தையில் தீபம் ஏற்றினால் அணையாமல் எரியும் மலேசியா தமிழனின் வளர்ச்சி தீபம். அத்தீபம் தீபாவளியாகவே இருக்கட்டுமே.

 

 உதயா: வாவ்,வாழ்த்துகள் தேவன்.அழகுத் தமிழில் அருமையான விளக்கம்.இதன் மூலம் என் கேள்விக்கும் பதில் கிடைச்சிருக்கு.ஒரு புதிய கோணத்தில் சிந்திச்சி இருக்கீங்க. (உண்மைதான் நம் அடையாள அம்சங்களில் ஒன்றாக இருக்கும் தீபாவளியை நாம் விட்டுக்கொடுத்துவிடக்கூடாது?)

 

   அடுத்து என் கவனம் இரு வாரங்களுக்கு முன்பே மனசு முறுக்கு முறுக்கு சொல்லுது என ஃபேஸ்புக்கில் தன் வீட்டு முறுக்கையும் படம் பிடித்துப் போட்டிருந்த மின்னல் பண்பலையின் கவிதா கன்னியப்பாவின் மேல் பாய்ந்தது..


 

உதயா: அப்புறம் முறுக்கு செய்து முடிச்சாச்சா?

 

கவிதா : ம் நான் என் அம்மாவுக்கு உதவி செய்தேன்.செஞ்சு முடிச்சுட்டோம்,எனக்கு எப்போதும் எங்க வீட்டு முறுக்குதான் பிடிக்கும்.நாங்க பாரம்பரிய முறையில்தான் செய்வோம்.முறுக்கு சூப்பரா வந்திருக்கு.

 

உதயா: இந்த வருசம் தீபாவளிக்கு வேலையா?எப்படி?

 

கவிதா : இல்லை,நான் வருசா வருசம் என் ஊரான கிந்தாவேலிக்குப் போயிடுவேன்.என் சக அறிவிப்பாளர்கள் எல்லாரும் ரொம்ப நல்லவங்க.தூரமா இருக்கறவங்களை அவங்க ஊருக்கு தீபாவளி கொண்டாட அனுப்பிட்டு,அவங்க வேலைல இருப்பாங்க.எனக்கு என் தோட்டப்புறத்துல அந்த அழகான இடத்துல தீபாவளி கொண்டாடதான் ரொம்ப பிடிக்கும்.இந்த வேளையில என் சக அறிவிப்பாளர்களுக்கு என் நன்றியைத் தெரிவிச்சுக்கறேன்.

 

 தன் ஊருக்குத் திரும்பி பெருநாள் கொண்டாடப்போகும் கவிதாவின் பேச்சில் தெரித்த உற்சாகம் என்னையும் தொற்றிக்கொண்டது.ஈப்போ ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் பயின்று கொண்டிருக்கும் நித்தியா கணேசனிடம் அவரது மறக்க முடியாத தீபாவளி அனுபவம் குறித்து கேட்டேன்.

 

 
நித்யா : ஐந்தாம் படிவத்தில் படிச்சிக்கிட்டு இருந்தப்போ நான்,பரிமளா,குமுதா,விக்னேஷ்வரி,மாதவி அஞ்சு பெரும் ரொம்ப நெருக்கமான நண்பர்களா இருந்தோம்.தீபாவளிக்கு எப்போதும் ஒவ்வொருவர் வீட்டுக்கும் போயி காலை உணவு சாப்பிட்டுட்டு கடைசியா மத்தியான சாப்பாட்டுக்கு எங்க வீட்டுக்கு வருவோம்.அப்படிதான் அந்தத் தீபாவளிக்கு காலையில குமுதா வீட்டுக்குப் போனோம்.அவங்க வீட்டுல நிறைய நாய் வளர்த்தாங்க.எனக்கு நாயின்னா ரொம்ப பயம்.என் மத்த தோழிங்க எல்லாம் வீட்டுக்குள்ள போயிட்டாங்க.குமுதா வீட்டு நாலு நாய்ங்க என்னைச் சுத்தி நின்னுக்கிச்சு.அதுங்க பார்த்த பார்வையிலயே செத்தேன் என நெனச்சேன்.நல்ல வேளையா குமுதாவோட அப்பா வந்து என்னை அந்த நாயிங்க கிட்டஇருந்து காப்பாத்தினாரு,அந்த வருசம் நாய்களோட கொண்டாடிய அந்தத் தீபாவளியை என்னால மறக்கவே முடியாது.

 

உதயா: ஒருவேளை உங்ககிட்ட அங்பாவ் கேட்டு வந்துருப்பாங்க போல.

 

நித்யா : ஹா ஹா இருக்கலாம்.

 

   இளையராஜா ஐயாவின் தீவிர ரசிகரான பாலசுப்ரமணியம் அண்ணன் கடந்த வருடம் நடந்த தீபாவளி ரகளையைப் பகிர்ந்தார்.

 

பாலா : கடந்த வருசம் நாங்க தீபாவளியை பகாவ்ல என் மாமியார் வீட்டுல கொண்டாட முடிவு செய்தோம்.முதல்நாள் இரவு எல்லாரும் சேர்ந்து டோடோல் செய்ய திட்டம் போட்டோம்.ஆனால் மழையின் காரணமா நாங்க போய் சேரவே ராத்திரி மணி எட்டு ஆகிடுச்சி.என் அத்தை டோடோல் செய்யவேண்டாம் தம்பி,ரொம்ப நேரம் கிளறனும்,நேரம் பத்தாதுன்னு சொன்னாங்க.நான், என் மனைவி,மைத்துனர் மூனு பேரும்,”இது ரொம்ப சிம்ப்பள் மேட்டர்..எவ்வளவோ செஞ்சிருக்கோம்,இதைச் செய்யமாட்டோமா?” என நக்கல் அடிச்சுக்கிட்டே வேலையைத் தொடங்கினோம்.கார் நிறுத்தும் வளாகத்தில் அடுப்பு மூட்டி டோடோல் கிண்டினோம்.ஆரம்பத்துல நல்லாதான் இருந்துச்சி,ஆனால் போகப்போக கைவலியோடு தூக்கமும் சேர்ந்துடுச்சி.நேரமாக ஆக அகப்பையும் சட்டியும் ஒன்னோடு ஒன்னு ஒட்டிக்க ஆரம்பிச்சது.என் ரெண்டு மைத்துனர்கள் அதிகாலை ரெண்டு மணிக்கு ஓடிட்டாங்க.நானும் அப்படியே தூங்கி எழுந்து பார்த்தப்போ என் மாமாவும்,மத்த ரெண்டு மைத்துனருங்களும் என்னை மாதிரியே அகப்பையைப் பிடிச்சிக்கிட்டே தூங்கி இருந்தாங்க.மூனு மணிக்கு நானும் தூங்கிட்டேன்.கடைசிவரைக்கும் டோடோல் கிண்டி முடிச்சி,பைகளில் சுத்தி வெச்சது என் மனைவியும்,மாமாவும்தான்.காலையில் எழுந்ததும் என்னால் என் ரெண்டு கையையும் தூக்கவே முடியலை.என் மாமியார்,நீங்க எல்லாம் விடிய விடிய செஞ்சது டோடோலே இல்லை என சொல்லி சிரிச்சாங்க.சாப்பிட்டுப் பார்த்தப்போ எங்களுக்கும் அந்த உண்மை தெரிஞ்சது.உண்மையிலேயே எங்களுக்கு அது கலாட்டா தீபாவளிதான். (அடடா,டோடோல் போச்சே!!!)

  

      அடுத்ததாக துவான்கு பைனூன் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி மாணவி சித்ரா கோவிந்தசாமியிடம் அவரால் மறக்க முடியாத தீபாவளி பற்றி கேட்டேன்.

 

சித்ரா : என் வாழ்வில் மறக்க முடியாத தீபாவளி கொண்டாட்டம் என்றால் 2004ஆம் ஆண்டு வந்த தீபாவளி ஆகும். அந்த வருடம் தீபாவளிக்கு மறுநாள் என் பிறந்தநாள். அதே ஆண்டு யூ.பி.ஸ்.ஆர் தேர்வில் சிறந்த தேர்ச்சி எடுத்த மகிழ்ச்சியோடு என் பிறந்தநாளையும் கொண்டாடும் ஆர்வத்தில் இருந்தேன். பிறந்தநாளன்று அனைவரும் வாழ்த்து தெரிவிக்க என் தந்தையிடத்திலிருந்து எதிர்பாராவிதமாக தங்க மோதிரம் பரிசாக கிடைத்தது. தீபாவளி கொண்டாட்டத்தோடு என் பிறந்தநாள் விழா என இரு மடங்கு மகிழ்ச்சியோடு என் தீபாவளியைக் கொண்டாடினேன். இன்றும் என் விரல்களில் அந்த மோதிரத்தைக் காணும்பொழுது அப்பாவின் நினைவுகளுடன் அந்த தீபாவளி கொண்டாட்டம்தான் நினைவில் வரும்.

(பயில்பணி முடிப்பதில் தூக்கமின்றி பரபரப்பாக இருந்த சித்ரா சுருக்கமாக ஆனால் சுவையாக தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள இன்னும் ஓர் ஆளைத் தேடினேன்.தினக்குரலின் வாலுப்பையனின் ஞாபகம் வந்தது.உடனடியாக பேசவேண்டும் என்றதும் வந்தார் தொடர்பில்.இந்த நேர்காணல் குறித்து சொன்னேன்.

 

உதயா: நீங்க சரியான வாலுவாச்சே?சமையலில் ஆர்வம் வேற.கண்டிப்பா ஏதாச்சும் சேட்டை செய்திருப்பீங்க,சொல்லுங்க நீங்க செஞ்ச ஏதாவதொரு தீபாவளி சேட்டையை.

 

வாலுப்பையன் : ஹா ஹா இன்னைக்குக் காலையில நடந்த ஒரு விசயம் இது.எங்க வீட்டுல தீபாவளிக்கு பலகாரம் செய்துக்கிட்டு இருக்காங்க.நான் என் பங்குக்கு என் அக்கா கூட கேக் செய்யலாம்னு ஆரம்பிச்சேன்.அக்கா மாவு ரெடி பண்ணிட்டு கடைக்குப் போய் முட்டை வாங்கிட்டு வந்துடறேன்னு போநாங்க.அவங்க வரதுக்குள்ள நம்ம வேலையைக் காட்டலாமேன்னு நான் கேக் செய்ய ஆரம்பிச்சிட்டேன்.ஐசிங் கேக் செய்யறதுக்குதானே ஐசிங் சீனி,இது சாதாரண கேக்குதானே,சாதாரண சீனி போதும்னு முடிவு செய்து,மாவை நல்லா அடிச்சி அவுன்குள்ள வெச்சி வேக வெச்சிட்டேன்.என் அக்கா வந்து பார்த்துட்டு பரவாலை,அதுக்குள்ள வேலையை ஆரம்பிசிட்டியேன்னு பெருமைப்பட்டாங்க.நேரம் ஆனதும் கேக்கை அவுன்ல இருந்து எடுத்தேன்.எடுக்கும்போது கேக் தலைகீழாதானே இருக்கும்?

 

உதயா: தெரியலையே எனக்கு?எனக்குத் தெரியாத விசயத்தையெல்லாம் கேட்காதீங்க,எனக்கு கேக் சாப்பிடத்தான் தெரியும்,எப்படி செய்வாங்கன்னு தெரியாது.

 

 வாலு : ஹ்ம்ம் சரி,தலைகீழாதான் முதலில் எடுப்பாங்க..அதோட மேல்பாகம் கீழே இருக்கும்.கவனமா எடுக்கனும்,ஏன்னா மேல்பாகம்தான் அழகா இருக்கனும்.சரின்னு எடுத்துட்டுப் பார்த்தாக்கா கேக் மேல வெள்ளை வெள்ளையா புள்ளி..பாக்கறதுக்கே அசிங்கமா இருந்துச்சி.சரி கொஞ்சமா சாப்பிட்டுப் பார்ப்போமேன்னு பார்த்தால் கேக் நறுக்கு நறுக்குன்னு இருக்கு.குறுக்கே வெட்டிப் பார்த்தா நடுவுல கேக் ஓட்டையா இருக்கு?

 

உதயா: அச்சச்சோ,நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோமா?

 

வாலு:ஆமாம்,கேக் நடுவுல வேகவே இல்லை.அதுமட்டுமில்லை நான் போட்ட சாதாரண சீனிதான் ஒரு பக்கமா வெண்புள்ளி மாதிரி இருந்துருக்கு.அப்புறம் என்ன பண்ணறது.நடுவுல இருந்த ஓட்டையை கடையில் கப் கேக்கு வாங்கி வந்து பொருத்தி அடைச்சுட்டேன்

 

உதயா: கேட்கவே கொடுமையா இருக்கே,

 

வாலு: திரும்ப முயற்சி செய்வேன்.கேக் தீஞ்சாலும் சரி,இந்த முறை நடுவுல நல்லா வேகும்வரை அடுப்புல வெச்சிருப்பேன்.

(எனக்கு நடிகர் கவுண்டமணி சொல்லும் சத்திய சோதனை என்ற வசனம்தான் நினைவுக்கு வந்தது.வாசகர்கள் எவரும் வாபுப்பையனின் வீட்டுக்குப் போகவேண்டாம்;அப்படியே போனாலும் அவர் கையால் கேக் சாப்பிடும் விபரீத ஆசை மட்டும் வேண்டாம் என்ற எச்சரிக்கையோடு இந்தக் கட்டுரையை முடிக்கிறேன்.அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.
 
 

No comments:

Post a Comment