Sunday, May 26, 2013

வளையல் பெண்ணின் உதயகீதங்கள்


  
 கீதம் 6 : சாலை ஓரம் சோலை ஒன்று வாடும்(பயணங்கள்)
 Payanangal Mudivathillai


    
     
     தன் மனம் கவர்ந்த ஆண்மகனின்பால் அளவிலாத நேசம் கொண்ட பெண்ணின் மனது எப்போதுமே அவனை நாடும். அவனுடன்  எவ்வளவு பேசினாலும் ஏக்கமது தீராது.சதா அவனை நினைத்து ஏக்கத்தில் வாடும்.கனவில்கூட அவனோடு இருக்கவேண்டும் என எதிர்பார்க்கும்.அபத்தமான ரசனைகளில் இன்புறும்.அத்தகைய  அழகிய ஏக்கத்தை வெளிப்படுத்தும் பாடல்களில் ஒன்றுதான் பயணங்களில் முடிவதில்லை திரையில் இடம்பெற்ற சாலை ஓரம் சோலை ஒன்று வாடும் என்ற இனிய கானம்.

     1982-ஆம் ஆண்டு மோகன்,பூர்ணிமா,எஸ்.வி.சேகர்,பூர்ணம் விஸ்வநாதன் ஆகியோர் நடித்து, ஆர்.சுந்தர்ராஜன் இயக்கத்தில் வெளிவந்த இப்படம் ஏறத்தாழ ஒன்றரை வருடங்கள் ஓடி சாதனை புரிந்தது.இளைஞர்களைப் பெரிதும் கவர்ந்த காதல் காவியமாக அமைந்திருந்த இப்படத்தை அக்கால இளைஞர்கள் மிகவும் விரும்பி பார்த்ததாகவும்,இப்படத்தின் பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் புகழ்ப்பெற்றதாகவும் என் அம்மா  சொன்னார்.இப்படத்தில் நடித்த மோகனுக்கும்,பூர்ணிமாவுக்கும் சிறந்த நடிகர்,நடிகை என்ற விருதும் கிடைத்துள்ளது.

    இளையராஜாவின் இசையில் ஜானகியம்மா,எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் குரலில் இளையநிலா பொழிகிறது,ராகதீபம் ஏற்றும்போது,தோகை இளமயில்,மணியோசை கேட்டு எழுந்து,ஆத்தா ஆத்தோரமா வாரியா,வைகறையில் என கேட்க கேட்க திகட்டாத இனிமையான பாடல்கள் இடம்பெற்றிருந்தன.

   பாடகனாகவேண்டும் என்ற இலட்சியத்தோடு  இருக்கும் ஓர் இளைஞனின் வாழ்க்கையில்  மலரும் காதல்  இறுதியில் என்னவாகிறது  என்பதுதான் கதை.இனி இப்பாடல்  இடம்பெறும் சூழலைக் கொஞ்சம் மீட்டுணர்வோமா?

  படிப்பு முடிந்து  தன் ஊருக்குத் திரும்பும் ராதா(பூர்ணிமா),தன்  அப்பாவின் நண்பரின் மகளான சுசீலாவின்(ரஜினி) வீட்டில் சில தினங்கள் தங்கியிருக்க செல்கிறாள்.ஒரு போட்டிக்காக கவிதை எழுதித் தரும்படி கேட்க,ராதாவும் கவிதை எழுதுகிறாள்.

 

வரும்வழியில் பனிமழையில்

பருவநிலா தினம் நனையும்

முகில் எடுத்து முகம் துடைத்து

விடியும்வரை நடைபயிலும்

 

    என்ற வரிகளை ராதா வாசித்துக் காட்டும்போது சுசீலா பிரமித்துப் போகிறாள்.நிச்சயம் அக்கவிதைக்குத்தான் முதல் பரிசு கிடைக்கும் என்கிறாள்.அப்போது அந்தத் தாள் பறந்து  போய் பக்கத்து குடியிருப்பில் விழுகிறது.சரி வேறு எழுதிக்கொள்ளலாம் என அவள் நினைக்கும்போது பக்கத்து வீட்டிலிருக்கும் ரவி (மோகன்) அக்கவிதைக்கு இசையூட்டி  பாடலாகப் பாடுகிறான்.மனதை வருடும் அந்தக் குரலில் மெய்மறந்துபோகும் ராதா சுசீலாவின் மூலம்  ரவியைப் பற்றியும்,அவன் நண்பன் செல்வம் பற்றியும் அறிகிறாள்.செல்வம் படித்த படிப்புக்கு வேலை கிடைக்காமல் திண்டாடுகிறான் என்பதையும்,அவன்நண்பன் ரவி எப்படியாவது பெரிய பாடகனாக வேண்டும் என்ற இலட்சியத்தில் இருப்பதை அறிகிறாள்.வயிற்றுப்  பசிக்காக அவர்கள் படும் பாட்டையும்,வீட்டுவாடகை கட்டமுடியாமல் வீட்டு உரிமையாளரிடம் திட்டு  வாங்கி அவமானப்படுவதையும் அறியும் அவள் கண்கள் கலங்குகின்றன.

  கடற்கரையில் கிழிந்த சட்டையோடு நடந்து போகும் ரவியின் மீது  இளகிய மனம் கொண்ட ராதாவுக்கு இரக்கம் பிறக்கிறது.ஏழை என்ற காரணத்திற்காக அவனது திறமை அடிபட்டுப் போய்விடக்கூடாதென எண்ணுகிறாள்.தன் தந்தையிடம்(பூர்ணம்விஸ்வநாதன்) பேசி கோயில் கும்பாபிஷேகத்தில் பாடும் வாய்ப்பை வாங்கித் தருகிறாள்.இடிமழையில் மக்கள் எழுந்து ஓட,ரவி ஒவ்வொருவரிடமும் தன் பாடலைக் கேட்கும்படி கெஞ்சுவது கண்டு ராதாவின் உள்ளமும் நெகிழ்ந்து போகிறது.ஒரு  வெறியோடு ரவி ராகதீபம் ஏற்றும்போது புயல்மழையோ?” என பாட,மழை,இடி,மின்னல் நின்று,மக்கள் கூடி அவனது பாட்டை இரசிக்கின்றார்கள்.அவனுக்கு ஓர் அங்கீகாரம் கிடைக்கிறது.

    ரவியின்மீது கொண்ட பரிவும்,அக்கறையும் காதலாக மாறுகிறது.சுசீலா விளையாட்டுக்காக தான் ரவியை நேசிப்பதாக சொல்ல,அவள் கண்கள் கலங்கி,அழுதுவிடுகிறாள்.அந்தளவுக்கு ரவியின் மீது நேசத்தை    வளர்த்துக்கொள்கிறாள்.அவனைப் பாராட்டி கடிதம் எழுதியவள் அவனுக்குத் தொலைக்காட்சியில் பாடும் வாய்ப்பையும் வாங்கித்தருகிறாள்.தொலைக்காட்சி நிலையத்தில் ராதாவின் கையெழுத்தைப் பார்த்தபோது,ஆரம்பத்தில் கவிதை எழுதியவள்,கும்பாபிஷேகத்தில் பாடுவதற்கு வாய்ப்பு வாங்கித் தந்தவள்,ரசிகையாக கடிதம் எழுதியவள் எல்லாமே அவள்தான் என அறிந்து அவன் நெகிழ்ந்து போகிறான்.அவள் எழுதித் தந்த பாடலைப் பாடாமல் வேறு பாடலை அவளுக்காக பாடுகிறான்.

     ரவியின்  பாடல்களைத் தொலைக்காட்சியில்  பார்த்து  இரசித்த கங்கை அமரன் அவனுக்கு திரைப்படத்தில் பாடும்  வாய்ப்பை வழங்குகிறார்.அவனுடைய பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் புகழடைகின்றன.அவனது புகழ் பரவுகிறது.புகழ்ப்பெற்ற பாடகனாகிறான்.திரைப்படங்களில் நிறைய பாடல்களைப் பாடி சம்பாதிக்கிறான்.பெரிய  வீட்டுக்குக் குடிபோகிறான்.அவனது ஒவ்வொரு வளர்ச்சியிலும் உடனிருக்கும் ராதா தன் தந்தையிடம் தான் ரவியை நேசிப்பதைச் சொல்லி,சம்மதமும் வாங்கிவிடுகிறாள்.அப்பாவின் சம்மதம் கிடைத்துவிட்ட மகிழ்ச்சியில் காதல் ஜோடிகள் சந்தோசமாக சிறகடித்துப் பறக்கின்றன.ராதா ரவியின்மீது அளவு கடந்த  நேசத்தைக் காட்டுகிறாள்.அவன் மகிழ்ச்சிக்காக பாடுபடுகிறாள்.

      இந்நிலையில் ரவி  பதினைந்து  நாள்களுக்கு மதுரையில் இருக்கவேண்டி வருகிறது.உற்சாகமாய் ரவியைப் பார்க்கவந்த  ராதா செல்வம் மூலம் அந்த விசயத்தை அறிந்ததும் துடித்துப் போகிறாள்.அவள் கண்கள் கலங்குகின்றன.அவனுடைய லட்சியம் என்பதால் தடை சொல்லாமல் மௌனமாக நின்றாலும் ஏக்கத்தால் வருந்துகிறாள்.

       மறுநாள்  காலை ரவி மதுரைக்குப் புறப்படவேண்டும்.அன்றிரவு ராதாவுக்கு உறக்கம் வரவில்லை.ரவிக்கும் உறக்கம் வராததால் அவளை தொலைபேசியில் அழைக்கிறான்.வேண்டுமென்றே தொலைபேசியை   அலறவிட்டு  பிறகு எடுக்கிறாள்.(வழக்கமாய் பெண்கள் செய்வது ஆயிற்றே)தினமும் இரண்டு மணி நேரமாவது தொலைபேசியில் பேசிவிடும் ராதா வேண்டுமென்றே வம்பு செய்கிறாள் என்பது அறிந்து ரவியும் அவளைச் செல்லமாய்த் திட்டுகிறான்.அவள் தான் தூங்கப்போவதாய்ச் சொன்னதும் அவன் கோபிக்க,அவள் கனவில் சந்திக்கலாமென்கிறாள்.அவளது விளையாட்டுத்  தனத்தை அவனும் இரசிக்கிறான்.எங்கே சந்திக்கலாம் என  கேட்க,அவள் கடற்கரைக்குப் போகலாமென்கிறாள்.கனவில்தானே?காஷ்மீர்,கோவா என்ற இடத்தில் சந்தித்தால் என்னவாம்  என்கிறான்.அவ்வளவு தூரமாகவெல்லாம் சென்றால் சரியான நேரத்தில்  திரும்பமுடியாது  என்கிறாள்.

    இப்ப ராத்திரி மணி  பத்தரை.காலை ஆறு மணிவரை எங்கெல்லாம் சுத்தமுடியுமோ அங்கெல்லாம் கனவில் சுத்தலாம்,” என்கிறான்.அவள் சம்மதிக்க,கனவில் அவர்கள் சந்திக்கும்போது ஒலிக்கிறது சாலையோரம்  சோலை ஒன்று வாடும்” என்ற பாடல்.

   காதல் வயப்பட்டவர்கள் சில வேளைகளில் அபத்தமாய் நடந்து கொள்வார்கள்.கற்பனை உலகில் சஞ்சரிப்பார்கள்.வெவ்வேறு இடத்தில் இருந்தாலும் ஒரே இடத்தில் இருப்பதுபோன்று அல்லது சந்தித்துக்கொள்வதுபோன்று ஒரு மாயையை உருவாக்கிக்கொண்டு இன்பம் காண்பது அன்பு கொண்ட நெஞ்சங்களின் மனமகிழ் விளையாட்டு.இத்தகைய இரசனைகள் அந்த உறவை மேலும் சுவாரஷ்யமாக்குவதோடு,பின்னர் நினைத்துப் பார்க்கும்போது ஏக்கத்தை வரவழைக்கக்கூடியதாக இருக்கும்.அந்த மாயை  உலகம் இப்பாடலில் நன்கு புலப்படும்.

   இரவு  பத்தரைக்கு மேல் கனவில் சந்தித்துக்கொள்கிறார்கள் என்பதால் நல்ல இருட்டில்,சாலை விளக்குகளின் வெளிச்சத்தில் மோகன் பூர்ணிமாவைத் தேடிக்கொண்டு ஓடிவருவதுபோல் காட்சி அமைக்கப்பட்டிருக்கும்.இப்பாடல் காட்சி புத்திசாலித்தனத்தோடு படமாக்கப்பட்டிருக்கும்.பாடலில் பூர்ணிமா நவீன உடையில் அழகாக,துருதுருவென இருப்பார்.மக்கள் நடமாட்டமில்லாத இரவு வேளை என்பதால் இருவரும்  சுதந்திரமாக ஆடிப்பாடி திரிவார்கள்.இரவு நேர ரோந்து பணியில் இருக்கும் இரண்டு  காவல்துறை அதிகாரிகள் வேறு மோகனையும்,பூர்ணிமாவையும் துரத்திக்கொண்டு வருவார்கள்.அவர்களிடம் இருந்து தப்பித்து,நடுசாலையில்  ஆடிப்பாடுவார்கள்.பிறகு கடற்கரைக்குப் போவார்கள்.கடற்கரை மணலில் காதலன் நடக்கும் கால்தடத்தைக்கூட ஒரு பொருட்டாய் நினைத்து ரசிக்கும் காதலியை அவன் ரசித்து,சிரிக்க,அடுத்த நொடியே அலை வந்து அந்தக் கால்தடத்தை அழித்துவிட்டுப் போகும்போது அவள் முகம் அப்படியே வாடிப்போகிறது.

   அவன் மீதான ஏக்கம் அவளுக்குள் அதிகரிக்கும் வேளை அவன் கைக்கடிகாரத்தைப் பார்க்கிறான்.புறப்படும் நேரம் நெருங்கிவிட்டதை  அறிகிறான்.சேர்த்து வைத்த தாகம் என்று தீரும் என அளவிலாத காதலும்,ஏக்கமுமாய்  பாவை அவள் அவனை நெருங்கிவர,அந்தக்  குழந்தைத் தனத்தை இரசிப்பவன் அவளது கன்னத்தை வாஞ்சையாக தடவி,அவளைக் கொஞ்சி,பேசும் கிள்ளையே,ஈரமுல்லையே,நேரமில்லையே இப்போது என பாடிக்கொண்டே கடிகாரத்தைப் பார்த்தவாறு ஓட,அவள் கண்களில் கண்ணீரோடு பின்னால் ஓடிவரும் காட்சி அழகான கவிதை.

   இப்பாடலில் பாலசுப்ரமணியம் அய்யாவின் குரலில் சிரிப்பு கலந்திருக்கும்.தன் மனம் கவர்ந்தவள் கலங்காதவண்ணம் தன் நிலையை எடுத்துரைக்கும் வண்ணம் மென்மையாக இருக்கும்.ஜானகியம்மாவின் குரலும் ஒரு நேசமான பெண்ணின் கொஞ்சலையும்,ஏக்கத்தையும் அழகாய்ப் பிரதிபலிக்கும்.நீங்கள் என்னைப் பார்த்தால் குளிரடிக்கும் என்ற வரிகளில் குளிரடிக்கும்  என்ற வார்த்தையில் நிஜமாகவே குளிரில் நடுங்குவதுபோன்ற தொனியைக்  கொடுத்திருப்பார்.

    எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி தான் நேசிக்கும் ஆண்மகனின்மீது எப்படியெல்லாம்  தன் அளவு கடந்த நேசத்தை வெளிப்படுத்தலாம் என்ற துடிப்பில் இருக்கும் அன்பும்,பண்பும்,பணிவும்,குழந்தைத்தன்மையும் நிறைந்த ஒரு பெண்ணின் உணர்வுகளை இப்பாடல் மிக எதார்த்தமாக,கவிதையியலோடு எடுத்துரைக்கிறது.மிக  ஆழமாய் ஒருவரை நேசிக்கும்போது அவர் சம்பந்தப்பட்ட சிறுசிறு விசயங்கள் கூட அவள் கண்களுக்கு அற்பமாய் தெரியாமல் ரசனையானதாய்,போற்றிப் பாதுகாக்கப்படுவதாய் தோன்றும்.இப்பாடலிலும் அது வெளிப்பட்டுள்ளது.கடற்கரை மணலில் அவன் பதித்துச் சென்ற அவனது கால்தடங்கள்  கூட அவளுக்கு இரசனையானதாய் தெரிகிறது.அதை அலை அடித்து,அழித்ததைக்கூட ஏற்றுக்கொள்ளமுடியாமல் அவளுக்குக் கோபமும்,சோகமும் தோன்றி குரலில் வெளிப்படுகிறது.இன்னும் கொஞ்சநேரம் உடன் இருந்தால் என்ன.....  பெண்களின் பொதுவான ஏக்கம்.பொறுப்பு என வரும்போது ஆண் எளிதில் உணர்ச்சியிலிருந்து விடுபட்டுவிடுகிறான்.ஆனால் பெண்ணால் அப்படி முடியவில்லை.இதைத்தான் ஆணின் தவிப்பு  அடங்கிவிடும்,பெண்ணின் தவிப்பு தொடர்ந்துவரும் என்றார் கவிஞர்.இப்பாடலில் அவனுக்கு  நேரமாகிவிட்டது என்றபோதிலும் அந்தத் தவிப்பு அதிகமாகவே  இருக்கிறது.இப்படி ரசனையான அம்சங்கள் நிறைந்திருக்கும் இப்பாடலை என்னோடு சேர்ந்து,நீங்களும் உங்களுக்குப் பிடித்தமானவரை நினைத்துக்கொண்டு பாடியபடி கற்பனை உலகில் சஞ்சரித்துப்  பாருங்களேன்.

     

 

சாலை ஓரம் சோலை ஒன்று  வாடும்
சங்கீதம் பாடும்
சாலை ஓரம் சோலை ஒன்று  வாடும்
சங்கீதம் பாடும்
கண்ணாளனைப் பார்த்து...கண்ணோரங்கள் வேர்த்து
கண்ணாளனைப் பார்த்து..கண்ணோரங்கள் வேர்த்து
சாலை ஓரம் சோலை ஒன்று வாடும்
சங்கீதம்  பாடும்...

 

 

பாவை இவள் பார்த்துவிட்டால் பாலைவனம் ஊற்றெடுக்கும்
கண்ணிமைகள் தானசைந்தால் நந்தவனக் காற்றடிக்கும்
நீங்கள் என்னைப் பார்த்தால் குளிரெடுக்கும்
மனதுக்குள் ஏனோ மழையடிக்கும்..
பாரிஜாத வாசம் நேரம் பார்த்து வீசும்
பாரிஜாத வாசம் நேரம் பார்த்து வீசும்
மொட்டுக்கதவை பட்டுவண்டுகள் தட்டுகின்றதே
இப்போது...
சாலை ஓரம் சோலை ஒன்று வாடும்
சங்கீதம் பாடும்
கண்ணாளனைப் பார்த்து...கண்ணோரங்கள் வேர்த்து
கண்ணாளனைப் பார்த்து..கண்ணோரங்கள் வேர்த்து
சாலை ஓரம் சோலை ஒன்று வாடும்
சங்கீதம்  பாடும்...

 

கடற்கரை ஈரத்திலே காலடிகள் நீ பதிக்க
அலை வந்து அழித்தனால் கன்னிமனம்தான் துடிக்க
கடலுக்குக் கூட ஈரமில்லையோ..
நியாயங்களைக் கேட்க யாருமில்லையோ
சேர்த்துவைத்த தாகம் கண்ணா என்று தீரும்?
சேர்த்துவைத்த தாகம் கண்ணா என்று தீரும்?
பேசும் கிள்ளையே ஈரமுல்லையே
நேரமில்லையே இப்போது
சாலை ஓரம் சோலை ஒன்று வாடும்
சங்கீதம் பாடும்
கண்ணாளனைப் பார்த்து...கண்ணோரங்கள் வேர்த்து
கண்ணாளனைப் பார்த்து..கண்ணோரங்கள் வேர்த்து
லாலலால லாலலால லாலா

 

 


உதயகுமாரி கிருஷ்ணன்,பூச்சோங்

Saturday, May 25, 2013


வளையல் பெண்ணின் உதயகீதங்கள்
கீதம் 5 : பேர் வெச்சாலும் வெக்காம போனாலும் 
 
 
 
 
   
 
 
      நடிகர் கமல்ஹாசன் நான்கு வேடங்களில் அசத்தியமைக்கல்,மதன,காம,ராஜன் என்ற திரைப்படம் என்னைக் கவர்ந்த   அவருடைய படங்களில் ஒன்று.நடிகர் கமலோடு,நாகேஷ்,ஊர்வசி,குஷ்பூ,ரூபினி,நாசர்,வெண்ணிற ஆடை மூர்த்தி,,சந்தானபாரதி,மனோரமா,டெல்லிகணேஷ்,ஜெயபாரதி,ஆர்.என்.கிருஷ்ணா,பிரவின்குமார் ஆகிய பெரிய நட்சத்திரப் பட்டாளமே இணைந்து  கலக்கிய படம்.பஞ்சு அருணாசலம் தயாரிப்பில் நடிகர் கமல் திரைக்கதை எழுதி,சங்கீதம் ஸ்ரீனிவாசராவ் இயக்கிய இப்படத்திற்கு கிரேஸிமோகன் வசனம் எழுதியிருப்பார்.கலாட்டா காட்சிகள் நிறைந்த இந்த நகைச்சுவைப் படத்திற்கு இளையராஜாதான் இசை.1991-ஆம் ஆண்டு வெளியீடு கண்ட இந்தத் திரைப்படத்தில் கதை கேளு கதை கேளு,சுந்தரி நீயும்,ரம்பம்பம்,சிவராத்திரி,பேர் வெச்சாலும் ஆகிய இனிமையான பாடல்கள் இடம்பெற்றிருந்தன.அனைத்துப் பாடல்களிலும் பலரால் இரசித்துப் பார்க்கப்பட்ட பாடல் எனில் அதற்குக் காரணம் அக்காட்சி படமாக்கப்பட்ட விதம்தான்.மறைந்த மலேசியா வாசுதேவனும்,ஜானகியம்மாவும் பாடியிருக்கும் இப்பாடலை    எழுதியுள்ளார்.
   எனக்கு மிக மிகப் பிடித்தமான இந்தப் பாடலைப்பற்றி பதியும்முன் படத்தில் ஆரம்பத்திலிருந்து வரும் சில காட்சிகளை நான் சொல்லியாகவேண்டும்.ஏனெனில் இப்பாடலோடு பல காட்சிகள் பிணைந்துள்ளன.
    கோடீஸ்வரரான வேணுகோபால் ஒரு பெண்ணோடு நெருங்கிப் பழக அந்தப் பெண் திருமணமாகும் முன்னரே கர்ப்பமாகிவிடுகிறார்.விபரம் அறிந்ததும் வேணுகோபால் அப்பெண்ணை ஏமாற்றாமல் திருமணம் செய்துகொள்ள  எண்ணுகிறார்.அண்ணனின் சொத்துக்காக சொந்தத் தம்பியே அந்தப் பெண்ணைக்  கொன்றுவிட துணிகிறான்.அந்தப் பெண் தப்பியோடி ஒரு வீட்டில் அடைக்கலமாகிறாள்.அவளுக்கு ஒரே பிரசவத்தில் நான்கு பிள்ளைகள் பிறக்க,அவள் இருக்குமிடத்தைத் தெரிந்துகொண்ட தம்பி சந்தானபாரதியை அனுப்பி நான்கு குழந்தைகளையும் கடத்தி,கொன்றுவிடுமாறு பணிக்கிறான்.குழந்தைகளில் ஒன்றைக் கொல்லப் போகும் சமயம் அந்தப் பிஞ்சு சந்தானபாரதியின் கழுத்தில் இருக்கும் சிலுவையைப் பற்றிக்கொள்ள,மனம் இரங்கிய சந்தானபாராதி தான் ஒரு குழந்தையை எடுத்துக்கொண்டு மற்ற மூன்று குழந்தைகளையும் தனித்தனியே வெவ்வேறு இடத்தில் விட்டுவிடுகிறார்.அவற்றில் ஒன்று தந்தையிடமே வளர்கிறது.நான்கு பேரும் வளர்ந்து வாலிபனான பிறகு சொத்துக்காக நடக்கும் ஆள்மாறாட்டாம்தான் கதை.
    நான்கு கமலும் தோன்றும் இந்தப் பாடல் காட்சிக்குச் சம்பந்தம் இருப்பதால் அந்த நான்கு கமலும் சந்தித்துக்கொள்ளும் காட்சியையும் சொல்லியாகவேண்டும்.மதனகோபால் வேணுகோபாலின் வளர்ப்புப் பிள்ளையாக வளர்ந்தவர்.லண்டனில் படித்துவிட்டு திரும்பி வந்தவர்.மீசையில்லாத முகம்,கண்ணாடி,நுனிநாக்கு ஆங்கிலம் என அசத்தலான தோற்றத்தில் இருப்பவர்.அவருக்கு ஜோடி சாந்தாபாய் (ரூபினி).ஆதரவற்று வளரும் ராஜூ மீசை,கிருதாவோடு தீயணைப்பாளராக வருபவர்.அவர் விரும்புவது ஷாலினியை (குஷ்பூ).பாலக்காட்டு சமையல்காராரால் தத்து எடுக்கப்பட்டு சமையல்காரனாக மீசையில்லாத முகம்,மலையாள வாடை வீசும் பேச்சு,வேட்டி என வெள்ளந்தியாக வலம் வரும் காமேஸ்வரனுக்கு திரிபுரசுந்தரியோடு(ஊர்வசி) காதல்.சந்தானபாரதியிடம் வளர்ந்து திருடனாக,தாடி,மீசையோடு முன்புறம் ஓட்டைப் பல்லோடு வருபவர் மைக்கல்.
    மதன் லண்டனில் இருக்கும்போது அவரது வளர்ப்புத் தந்தையைக் பள்ளத்தில் விழவைத்து கொல்ல முயற்சிக்கிறார்கள் .அவ்விபத்தில் அவர் உயிர் பிழைத்துவிட்டதை அறியாமல் அவசர அவசரமாக அவரது சொத்துகளுக்கு தான்தான் வாரிசு என சொல்லிக்கொண்டிருக்கும்போதே மதன் வந்துவிடுகிறார்.தன் சிற்றப்பாவையும்,அவரது மகனான நாசரையும் தனது உதவியாளர் பீம்போய் ( பிரவின்குமார்) மூலம் மிரட்டி,வெளியே அனுப்பிவிடுகிறார்.பணத்தைக் களவாடி மோசடி செய்ததற்காக அவினாசியையும்(நாகேஷ்) வேலையிலிருந்து நீக்கிவிடுகிறார்.
  அதன்பிறகு மதனுக்கு பெங்களூருக்கு வரச்சொல்லி ஓர் அழைப்பு வருகிறது.அந்த அழைப்பை ஒட்டுக்கேட்ட நாகேஷ் மதன் பெங்களூர் போகும் விசயத்தை நாசரிடம் சொல்லிவிட,அவர்கள் மதனைக் கொல்வதற்காக ஆள் அனுப்பிவிட,அங்குதான் ஆள்மாறாட்டம் ஆரம்பமாகிறது.பெங்களூரில் தன்னைக் காப்பாற்றிய தீயணைப்பாளர் ராஜூவை கொஞ்சநாளைக்கு தன்னை மாதிரி நடிக்க சொல்லிவிட்டு,தன் தந்தையைப் பற்றிய  ரகசியத்தைக் கண்டுபிடிப்பதற்காக அங்கேயே தங்கிவிடுகிறான் மதன்.சென்னைக்குக் காரில் திரும்பவிருக்கும் ராஜூவை மதன் என நினைத்து,தீர்த்துக்கட்டுவதற்காக காரின் பிரேக்கைக் கழற்றிவிடும் பொறுப்பை மைக்கலிடம் ஒப்படைக்க பணத்திற்காக அக்காரியத்தைச் செய்யும் மைக்கல் கொஞ்சநேரம் வேடிக்கைப் பார்த்துவிட்டு  போகலாம் என அந்தக் காரில் ராஜூ கிளம்பி செல்வதைப் பார்க்கிறான்.அப்போது மாறுவேடத்திலிருந்த மதன் தன் பர்தாவைக் கழற்றி எறிந்துவிட்டு நடக்க,அவனைப் பார்த்த மைக்கல் ஆச்சரியமடைகிறான்.தன்னை மாதிரியே இருக்கும் மதனைக் கட்டையால் அடித்து மயக்கமடைய செய்துவிட்டு மலை உச்சியிலிருக்கும் ஒரு வீட்டில் கொண்டுபோய் ஒளித்துவைக்கிறார்.அங்கே மதனோடு இருந்த  தன் நிஜ பெற்றோரையும் அறியாத மைக்கல் அவர்களையும் அதே இடத்தில் அடைத்துவைத்துவிட்டு தன் தோற்றத்தை மதன்மாதிரியே மாற்றிக்கொள்கிறான்.
   அதே நேரத்தில் காமேஷ்வரனுக்கும்,திரிபுரசுந்தரிக்கும் திருமணம் முடிந்து  ஊர்வலம் நடப்பதைப் பார்த்துவிடும் அவினாசி மதனின்  லாக்கரில் இருக்கும் தன் பணத்தை எடுப்பதற்காக காமேஷ்வரனை  சில நாள் மதனாக நடிக்கவைக்க திட்டம் தீட்டுகிறார்.பணத்திற்காக எதையும் செய்யும் திரிபுரசுந்தரியின் திருட்டுப் பாட்டியைப் பணம் கொடுத்து தன் திட்டத்திற்குப் பயன்படுத்திக்கொள்ளும் அவினாசி காமேஷ்வரனுக்கு நவீன உடை அணிவித்து,கண்ணாடியும் மாட்டிவிட்டு,’பீம்போய் பீம்போய்,லாக்கர்ல இருக்கற அந்த ஆறுலட்சத்தை எடுத்துக்கொடு என்ற வசனத்தைச் சொல்லிக்கொடுத்து அழைத்து வருகிறார்.னுக்கு மிகவிசுவாசமாகஇருக்கும் பீம்போய்(பிரவின்குமார்)ன் எது சொன்னாலும் கேள்வி கேட்காமல் செய்துமுடிப்பன் என்பதாம் அந்தத்திட்டம்.
    ராஜூ மதனின் மாளிகையில் குஷ்பூவையும் அவள் அப்பாவையும் விருந்தினர் அறையில்  தங்கவைக்கிறான்.தன் அப்பாவுக்குத் தெரியாமல் ராஜுவைச் சந்திக்க ஆசைப்படும் ஷாலினி லையணைகளை அடுக்கி போர்வையால் மூடிவிட்டு ருகிறாள்.அவர்கள் இருவரும் மாளிகையில் இருக்கும் பூங்காவில் சந்திக்க திட்டம் தீட்டுகிறார்கள்.நீங்கள்  எந்த நிற உடையில் வருவீர்கள் என ஷாலினி கேட்க,அவளைத் திருப்பி கேட்கிறான் ராஜூ.அவள் தான் கருப்பு,வெள்ளையில் வரப்போவதாக சொன்னதும்,’அப்படின்னா நான் கலர்ல ரிலீஸ் ஆகிடறேன்,’ என்கிறான்.’அடிக்கடி டிரஸ் மாத்திக்கிட்டே இருக்கேன் என்கிறான் விளையாட்டாய்.
    காமேஷ்வரனோடு  சென்னை திரும்பும் அவினாசி,தன் திட்டத்தை நிறைவேற்றுவதற்காக மதன் என நினைத்து ராஜூவுக்குத் தயாரான சூப்பில் மயக்கமருந்தை கலந்து கொடுத்துவிடுகிறார்.அந்த சூப்பைக் குடிப்பதற்காக வாயில் வைத்த ராஜூ சூடாக இருந்ததால் பீம்போயிடம் குடிக்க சொல்லிவிட்டு கிளம்பி போகிறார்.
   தோட்டத்தில் ராஜுவும்,ஷாலினியும் சந்தித்துப் பேசும் வேளையில் மைக்கலும்,அவன் தந்தையும் பணம் இருக்கும் லாக்கரின் அருகில் போய் நிற்கிறார்கள்.பையை கீழேயே மறந்துவிட்டதாக சொல்லிவிட்டுப் போகும் சந்தானபாரதி மைக்கலை அழைத்து காட்டுகிறார்.அங்கு பேசிக்கொண்டிருந்த ராஜுவையும்,ஷாலினியையும் பார்த்துவிட்டு மதன் தப்பித்துவந்துவிட்டதாக எண்ணி கையில் உருட்டுக்கட்டையை எடுத்துக்கொள்கிறார்.
   ஷாலினியிடம் அவள் நினைப்பதுபோல் தான் பணக்காரன் அல்ல என்ற உண்மையைச் சொல்ல நினைக்கும் ராஜுவிடம் பணத்துக்காக தான் காதலிக்கவில்லை என சொல்லி ' லவ் யூ' என சொல்கிறாள் ஷாலினி.ராஜூ சந்தோசமாகிறான்.அப்போது மைக்கலும்,அவன் அப்பாவும் கொடுத்து கொள்ளும் சைகையே பாடலின் ஆரம்ப இசையாக ஒலிக்க,'பேர் வெச்சாலும் வெக்காம போனாலும் மல்லிவாசம்' என்ற பாடல் தொடர்ந்து ஒலியேறுகிறது.
      அந்தப் பாடல் காட்சி முழுக்க முழுக்க நகைச்சுவையாகவே அமைக்கப்பட்டிருந்தது.நான்கு கமலும் அந்தப் பாடல் காட்சியில் வந்து போவார்கள்.ராஜூ,ஷாலினியோடு ஆடிக்கொண்டிருக்கும்போது நாகேஷ் கமலேஷ்வரனை இழுத்துக்கொண்டு வருவார்.பாட்டியிடம் ஆசீர்வாதம் வாங்கும் காமேஷ்வரன் டாலென ஊர்வசியின் காலிலும் விழப்போக,ஊர்வசி எகிறி குதிக்க செம கலாட்டா.அந்தக் காட்சி ஷாலினியின் அப்பாவாக வரும் வெண்ணிற ஆடை மூர்த்தியின் கண்ணில் பட ராஜூ யாரோ ஒரு பெண்ணோடு வருகிறானே என குஷ்பூவின் மெத்தையை நெருங்கி ஆள்காட்டி விரலால் குத்திப் பார்க்க அவருடைய விரல் உள்ளே அமுங்க,உடனே போர்வையை விளக்கிப் பார்ப்பார்.உண்மை தெரிந்துவிடும்.கோபமாக பூங்காவுக்குப் போவார்.அதே நேரத்தில் ஆடிக்கொண்டிருக்கும் ராஜூவை நெற்றியில் ஒரு கைவைத்து எட்டிப் பார்க்க,காமேஷ்வரனும் அதேமாதிரி நெற்றியில் கைவைத்து எட்டிப் பார்க்க,நாகேஷ் அவரைப் பிடித்து இழுத்து,கீழே வைத்து திட்டுவார்.மயக்கம் தெளிந்து கண்திறக்கும் மதன் அடுத்த காட்சியில் தன்னுடன் பிடிப்பட்டவர்களின் கட்டையும் அவிழ்த்துவிடுவார்.இன்னொரு பெண்ணோடு பழகிக்கொண்டே தன் மகளிடமும் பழகும் ராஜூவை அடிப்பதற்காக கால்செருப்பைக் கழற்றிக்கொண்டு வர,திடுமென கையில் உருட்டுக்கட்டையோடு சந்தானபாரதி குறுக்கே பாய்ந்துவந்து மூர்த்தியை முந்திகொண்டு ராஜூவை அடிக்க முயல,அவரைமாதிரியே அடி வைத்து,ஏறத்தாழ ஏதோ நடன அசைவு மாதிரியே கால்களை அகலமாக வைத்து பின்தொடர்ந்து வருவார் வெண்ணிற ஆடை மூர்த்தி. அப்போது சந்தானபாரதி ராஜுவை அடிப்பதற்காக இரண்டு முறை உருட்டுக்கட்டையை ஓங்க,அது வெகு அருகில்,பின்னால் சத்தம் போடாமல் வந்த மூர்த்தியின் தலையில் விழுந்து அவர் மயங்கிவிடுவார்.
   அதே நேரத்தில் பீம்போய்,பீம்போய் என சொல்லிப்பார்த்துக்கொண்டே முட்டி போட்டபடி காமேஷ்வரன் நடக்க,அவரைப் பிடித்து இழுக்க நாகேஷ் வரும் வேளையில் அவரை முந்திகொண்டு ராஜூதான் சட்டையை மாற்றிக்கொண்டு பாடுகிறான் என குஷ்பூ நெருங்க,அப்படியே ஆடிக்கொண்டே வந்தவழியில் திரும்புகிறார் நாகேஷ்.குஷ்பு ராஜூவின் மேல் உருண்டு அவரைக் கடந்து மல்லாந்து படுத்தபடி பாடும் அந்த நொடியில் முட்டிப்போட்டு நடந்துவந்து காமேஷ்வரனை இழுத்துக்கொண்டு போகிறார் நாகேஷ்.தன்னோடு கீழே பாடிக்கொண்டிருந்தவன் எப்படி அதற்கும் மேலே வேறு உடையில் என வியந்து தன் கைக்கடிகாரத்தைப் பார்க்கிறார் குஷ்பூ.
   பாடல் முடியப்போகும் தருணத்தில் மைக்கலும்,அவன் தந்தையும் ஒரு மரத்தின் பின்னால் உருட்டுக்கட்டையோடு ஒளிந்து கொள்வார்கள்.பாடிக்கொண்டே குஷ்பூ கமலை ஏமாற்றி,பக்கத்தில் இருந்த இன்னொரு மரத்தின் பின்னால் ஒளிந்துகொள்ள,ராஜூ தவறுதலாக மைக்கல் மறைந்திருக்கும் மரத்திற்கு அருகில் வர,வசதியாக அவர் மண்டையில் உருட்டுக்கட்டையால் ஓங்கி அடித்துவிட்டு சந்தோசத்தில் தன் தந்தைக்கு சமிக்ஞை கொடுக்க,அவர் சந்தோசத்தோடு தூக்கி அறியும் சாராயபோத்தல் தலையில் பட்டு,மைக்கலும் மயக்கமடைகிறான்.
  இப்படி பல கதாமாந்தர்களையும்,பல காட்சிகளையும் ஒரே பாடலில் பொருத்தமாக இணைத்திருப்பது உண்மையில் சாதாரண விசயமல்ல.இயக்குனரின் புத்திசாலித்தனம் இப்பாடலில் நன்கு புலப்படுகிறது.வெகு பொருத்தமான இசை.காட்சிகளைப் படமாக்கிவிட்டு அந்த இசைக்குப் பொருந்தும்படி எடிட்டிங் செய்வது கஷ்டமான வேலைதான்.உருட்டுக்கட்டையால் அடிக்கும்போது,மற்ற கமல்கள் வந்து நுழையும்போது இப்படி எல்லாவற்றையும் வெகு பொருததமாய் இணைத்திருக்கிறார்கள்.அந்தப் பூங்காவின் அமைப்பும் அருமை.
  வேறு உடையில் இருக்கும் காமேஷ்வரனை ராஜு என நினைத்துப் பாடும்போது 'காதல் மன்னனா நீயும் கண்ணனா,நாளும் ஓர் அலங்காரமா என்ற வரிகள் வருவது வெகு பொருத்தம்.ஏக்கம் வழியும் மலேசிய வாசுதேவன் ஐயாவின் குரல் இப்பாடலில் ரொமாண்டிக்காக ஒலிக்கிறது.அவரின் அந்தக் குரலில் இளமை கொஞ்சுகிறது.ஜானகியம்மாவின் குரலும் பனித்துளி மாதிரி கிறக்கமாய் இறங்குகிறது.இப்பாடல் காட்சியில் அனைத்து கமலும் மதன் வேடத்தில் இருந்ததால் அழகான உடையில் படு அசத்தலாய் இருந்தார்கள்.குஷ்பூவும் நவீன உடை,பறக்கும் கூந்தலில் மிக இளமையாய் இருந்தார்.இன்னும் இப்பாடலைப் பற்றி நிறைய சொல்லிக்கொண்டே போகலாம்.இனி பாடல் வரிகளை இரசிக்கலாமா?
  என் அன்பிற்கினிய ஜீவன்,நாளை பிறந்தநாள் கொண்டாடவிருக்கும் சுதாகர்,இந்தப் பாடலைப் பற்றி எழுதப்போகிறேன் என்றதும் தான் வியந்த விசயங்களையும் என்னோடு பகிர்ந்துகொண்ட என் நலம்விரும்பி சுதந்திரன் மற்றும் அனைவருக்காகவும் இந்தப் பாடல் வரிகள்.
 
வெச்சாலும் வெக்காம போனாலும் மல்லிவாசம்
அது குத்தால சுகவாசம்
அட இப்போதும் எப்போதும் முப்போதும் தொட்டுப் பேசும்
இந்தப் பெண்ணோட சுகவாசம்
மொட்டுத்தான் வந்து..சொட்டுத்தேன் தந்து
கிட்டத்தான் ஒட்டத்தான் கட்டத்தான் அப்பப்பா
வெச்சாலும் வெக்காம போனாலும் மல்லிவாசம்
அது குத்தால சுகவாசம்
அட இப்போதும் எப்போதும் முப்போதும் தொட்டுப் பேசும்
இந்தப் பெண்ணோட சுகவாசம்
 
கோடை வெப்பத்தில் கோயில் தெப்பத்தில்
சேரலாம் ஏறலாம்..
காமன் குன்றத்தில் காதல் மன்றத்தில்
சேரலாம் தேடலாம்
கோடை வெப்பத்தில் கோயில் தெப்பத்தில்
சேரலாம் ஏறலாம்..
காமன் குன்றத்தில் காதல் மன்றத்தில்
சேரலாம் தேடலாம்
மந்தாரை செடி ஓரம்
கொஞ்சம் மல்லாந்து நெடுநேரம்
சந்தோசம் பெறலாமா?
அதில் சந்தேகம் வரலாமா?
பந்தக்கால் நட்டு..பட்டுப்பாய் இட்டு
மெல்லத்தான் கிள்ளத்தான் அள்ளத்தான் அப்பப்பா
வெச்சாலும் வெக்காம போனாலும் மல்லிவாசம்
அது குத்தால சுகவாசம்
அட இப்போதும் எப்போதும் முப்போதும் தொட்டுப் பேசும்
இந்தப் பெண்ணோட சுகவாசம்
 
 
 
 
காதல் மன்னனா?நீயும் கண்ணனா?
நாளும் ஓர் அலங்காரமா?
காதல் மன்னனா?நீயும் கண்ணனா?
நாளும் ஓர் அலங்காரமா?
போடி மெல்லத்தான் சேதி சொல்லத்தான்
தோன்றினேன் அவதாரமா...
போடி மெல்லத்தான் சேதி சொல்லத்தான்
தோன்றினேன் அவதாரமா...
கல்யாணம் முடிக்காது இந்தக் கச்சேரி தொடங்காது
கண்ணாலே அணைபோட்டு இந்தக் காவேரி உடையாது
அப்பப்பா அப்பு தப்பப்பா தப்பு
செட்டப்பா செட்டப்பு எட்டிப்போ அப்பப்பா
 
வெச்சாலும் வெக்காம போனாலும் மல்லிவாசம்
அது குத்தால சுகவாசம்
அட இப்போதும் எப்போதும் முப்போதும் தொட்டுப் பேசும்
இந்தப் பெண்ணோட சுகவாசம்
மொட்டுத்தான் வந்து..சொட்டுத்தேன் தந்து
கிட்டத்தான் ஒட்டத்தான் கட்டத்தான் அப்பப்பா
வெச்சாலும் வெக்காம போனாலும் மல்லிவாசம்
அது குத்தால சுகவாசம்
அட இப்போதும் எப்போதும் முப்போதும் தொட்டுப் பேசும்
இந்தப் பெண்ணோட சுகவாசம்