Saturday, September 15, 2012

உன்னால்தானே நானே வாழ்கிறேன் - அத்தியாயம் 11 பேருந்து பட்டர்வர்த்தை அடைந்தபோது மணி இரண்டாகிவிட்டது.கௌசிகன் அவளுக்கு முன்பே வந்து பட்டர்வர்த்தில் காத்திருந்தான்.அவளுடைய கையிலிருந்த பொருட்களை வாங்கி கொண்டு அவளுடன் நடந்தான். வீட்டை அடைந்தவள் சாவித்திரிக்கு உதவியாக சில இனிப்பு வகைகளைத் தயார் செய்தாள்.மாலை ஆறு மணிக்கெல்லாம் சமையல் வேலை முடிந்துவிட்டிருந்தது.ஒவ்வொருவராக வரத் தொடங்கியிருந்தார்கள்.வந்தவர்களை வரவேற்று ஹாலில் அமரச் செய்தாள் பூங்குழலி.மேசையில் கேக் எல்லாம் எடுத்து தயாராக வைத்தாள்.எல்லாம் தயாராக இருந்தது மதிவதனனைத் தவிர.அன்று நடந்த அந்த பயங்கரமான சம்பவம் மீண்டும் அவள் நினைவில் வந்தது. * * * * * பூங்குழலி கடலை நோக்கிப் போனபோது அவள் அண்ணனும், அண்ணியும் கரையோரத்தில் இருந்தார்கள்,அம்மாவும், அப்பாவும் மணலில் அமர்ந்திருந்தார்கள்.பூங்குழலி ஓடி வந்து அம்மாவையும், அப்பாவையும் அழைத்துப் போனாள்.கைநிறைய மணலை அள்ளிக்கொண்டு போய் புகழின் தலையில் கொட்டினாள்.அதோடு விட்டிருந்தால் அந்த விபரீதம் நடந்திருக்காது.ஆனால் அவளோ அம்மா, அப்பாவை கடலுக்குள் தள்ளிவிட்டதோடு புகழையும், அண்ணியையும் வேறு பிடித்து இழுத்தாள்.அப்போதுதான் அந்த பயங்கரம் நிகழ்ந்தது. கடல் திடீரென ஆர்ப்பரித்து எழ. பெரிய அலை ஒன்று வந்து அவள் அம்மா, அப்பா,அண்ணன், அண்ணி எல்லாரையும் கடலுக்குள் இழுத்துக்கொண்டு போனது,மக்கள் எல்லாரும் போட்ட கூச்சலில் ஓடிவந்த மதி அலறிக்கொண்டிருந்த பூரணியைக் கண்டுபிடித்து இழுத்து வந்தான்,மதி தன்னை இழுத்து வந்ததுதான் அவளுக்குத் தெரியும்,அதன்பிறகு அவள் இரண்டு நாட்கள் கழித்துதான் கண்விழித்தாள்,அவள் கண்விழித்தபோது கௌசிகன் அவள் அருகில் இருந்தான், “என் அம்மா, அப்பா, புகழ், அண்ணி, மதி,,,,எல்லாரும் எங்க?” கௌசிகன் பதில் பேசாமல் இருக்கவும் அவளுக்குப் புரிந்து போனது.இதற்கு மேல் மறைப்பது உசிதமல்ல என்று அவளிடம் உண்மையைச் சொன்னான் கௌசிகன்.கதறி கதறி அழுதாள் பூங்குழலி.அவளை மேலும் அழவிடாமல் தன் தோளில் சாய்த்து ஆறுதல் படுத்தினான் கௌசிகன். அன்று நடந்த சுனாமி தாக்குதலில் அவளுடைய அம்மா, அப்பா, அண்ணி எல்லாருமே பலியாகிவிட்டார்கள்,அவளைக் காப்பாற்ற முயற்சித்த வேளையில் மதியும் ஒரு பெரிய அலையில் மாட்டிக்கொண்டான்,அவனால் போராட இயலாத நிலையில் அவளைக் கரைக்குத் தள்ளிவிட்டு அலையிடம் சரணடைந்துவிட்டான் மதி,கரைக்கு மிக அருகில் வந்து விட்டவளை யாரோ இழுத்துப் போட்டிருக்கிறார்கள். அவ்வளவு பெரிய விபரீதம் நடந்தும் அவள் உயிரோடு இருப்பதற்கு ஒரே காரணம் அவளுடைய அண்ணன் புகழ்தான்,அந்தச் சம்பவத்தில் புகழ் மட்டும்தான் தப்பியிருந்தான்.அது ஒன்றுதான் அவளுக்குக் கொஞ்சம் ஆறுதலாக இருந்தது.பத்திரிக்கைகளில் சுனாமி பாதிப்பு பற்றி படிக்க நேர்ந்தபோது கலங்கிப் போனாள் அவள்.குவியல் குவியலாக மனித பிணங்கள்.அவள் அம்மா, அப்பா,அண்ணி, மதி எல்லாருமே இப்படிதான் பிணக்குவியலில் ஒருவராக இருந்திருப்பார்களோ? அவளால் நினைத்துப் பார்க்க முடியவில்லை.கரையோரத்தில் இருந்தவர்களைப் பிடித்து தண்ணீரில் தள்ளிவிட்டவளும் அவள்தானே அவளைக் காப்பாற்ற போய்தானே மதியும் இல்லாமல் போனான்.கௌசிகனிடம் அவள் எதையும் கேட்கவில்லை.அவன் சொல்வதைத் தாங்கி கொள்ளும் நிலையில் அவள் இல்லை.ஒரு மாதத்திற்கு எந்தப் பத்திரிக்கையையும் அவள் படிக்கவேயில்லை. ஏதோ புகழாவது அவளுக்குத் துணையாக இருக்கிறானே? எத்தனை பேர் எல்லாரையும் பறிகொடுத்துவிட்டு அனாதைகளாய் நின்றிருந்தார்கள்.அவளுக்கு அண்ணனாவது இருக்கிறானே? அப்போதுதான் அவள் அந்த முடிவை எடுத்தாள்.அவர்கள் எல்லாரும் இறந்துவிட்டதாக ஏன் எண்ண வேண்டும்?அவர்கள் எல்லாரும் உயிரோடு இருப்பதாகவே அவளாக நினைத்துக் கொண்டாள்.மதியின் பிறந்தநாளை அவன் இருப்பதாக நினைத்துக் கொண்டாட எண்ணினாள்.மதியின் பிறந்தநாளன்று யாரும் அழக்கூடாது என்று சொன்னாள்.அன்றைய தினத்தில் ஆதரவற்றோர் இல்லத்திலிருந்து குழந்தைகளையும், பெரியவர்களையும் அழைத்து அன்னதானமிட முடிவு செய்தாள். விருந்து முடிந்து எல்லாரும் போனபிறகு அழ ஆரம்பித்தவள் அழுதுக்கொண்டே இருந்தாள்.அந்த வீட்டிற்கு வரும்போதெல்லாம் மதியுடன் பழகிய நாட்கள் நினைவிற்கு வந்தது. “சீனியர்..” மதி அவளை அழைப்பதைப் போன்றதொரு பிரமை. மறுநாள் காலையிலேயே கிளம்ப தயாரானவளின் அருகில் வந்து நின்றாள் சாவித்திரி. “இது வரைக்கும் நான் கேட்டபோதெல்லாம் நீ பதில் சொல்லவே இல்ல,மதி இறந்து சரியா ஒரு வருடம் முடிஞ்சிருச்சி,இன்னைக்காச்சும் சொல்லும்மா,மதியோட விருப்பப்படி கௌசிகனைக் கல்யாணம் பண்ணிக்கலாமே?” ராமுலம்மாவின் கேள்விக்குப் பதில் சொல்ல வேண்டிய நேரம் நெருங்கிவிட்டதை உணர்ந்தாள் பூங்குழலி. “ஒரு வேளை மதி உயிரோடு இருந்திருந்தா இந்தக் கல்யாணம் நடந்திருக்கலாம்,அவன் இல்லாத இந்த வீட்ல என்னால இருக்கமுடியாதும்மா,உங்க வீட்டுக்கு வரப்பல்லாம் மதி இல்லையே என்ற எண்ணம்தான் எனக்கு வருது.அவன் இல்லாத வீட்ல ஒரு நாள் கூட என்னால இருக்கமுடியலையே? எப்படி காலம் பூரா இருக்கப்போறேன்?இந்த வீடு எனக்கு அவனை ஞாபகப்படுத்திக்கிட்டே இருக்கும்மா.அதனாலதான் வேண்டாம்கிறேன்,” அவள் சொன்னதை கேட்ட கௌசிகன் தன் அம்மாவை நெருங்கினான். “அம்மா, எனக்கும் பூங்குழலியைக் கல்யாணம் பண்ணிக்கனும் என்ற எண்ணம் எப்பவுமே இருந்ததில்லம்மா,நான் வாழ்க்கைல நிறைய சாதிக்கனும்னு இருக்கேன்மா.கல்யாணத்தைப் பத்தி எல்லாம் நான் நெனச்சி பாக்கறதே இல்ல.பூங்குழலி சொன்னமாதிரி ஒரு வேளை மதி இருந்திருந்தா அவனுக்காக நானும் இந்த கல்யாணத்துக்கு ஒரு வேளை சம்மதிச்சிருப்பேனோ என்னவோ?” என்றவன் பூங்குழலியின் பக்கம் திரும்பினான். “நான் உங்களுக்கு எப்பவுமே ஒரு நல்ல நண்பனா இருப்பேன் பூங்குழலி. வாங்க போலாம்.உங்களுக்கு மணியாகிடப் போகுது,” கார் சாவியை எடுத்துக்கொண்டு போனவனைப் பின்தொடர்ந்தாள் பூங்குழலி. * * * * * பூங்குழலி வீட்டை அடைந்தபோது புகழ் அவள் இல்லாத இரண்டு தினங்களாக எதையுமே சாப்பிடவில்லை என்றார் பூரணியின் அப்பா.புகழுடைய அறைக்குள் நுழைந்தாள் பூங்குழலி.சக்கர வண்டியில் அமர்ந்து எங்கோ வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்த புகழ் அவள் குரல் கேட்டதும் திரும்பி பார்த்தான்.அவனைப் பார்க்கும்போது வேதனையாக இருந்தது அவளுக்கு.அவனுடைய தலையில் பலமாக அடிபட்டிருந்ததால் அவனுடைய மூளை நரம்புகள் கொஞ்சம் பாதிப்படைந்திருந்தன.எதையும் சுயமாக செய்யவியலாத நிலையில் இருந்தான் அவன். நாட்டில் எத்தனையோ கெட்டவர்கள் இருக்கிறார்கள்.எத்தனையோ பேர் பொறுப்பில்லாமல் பல அட்டுழியங்கள் செய்து கொண்டு இருக்கிறார்கள்.அவர்கள் எல்லாரும் நன்றாக இருக்கும்போது தன் அண்ணனுக்கு மட்டும் ஏன் இந்த நிலமை? அம்மா, அப்பா, மனைவி, கருவறையிலேயே சமாதியாகிப் போன முகமறியா குழந்தை எல்லாரையும் பறிகொடுத்துவிட்டு நினைவிழந்த நிலையில்… ஆரம்பத்தில் அவனை நினைத்து வருத்தப்படாத நாளே இல்லை.அடிக்கடி பழையபடி எல்லாரும் வீட்டிலிருப்பதைப் போன்று கனவு காண்பாள்.எழுந்து பார்த்தால் யாரும் இருக்கமாட்டார்கள்.கனவென்று அறிந்து அழுவாள்.ஆனால் நாளடைவில் கொஞ்சம் தேறிவிட்டாள்.ஒரே மகளையும் பறிகொடுத்துவிட்டு துயரத்தில் இருந்த பூரணியின் பெற்றோரையும் தன்னுடன் அழைத்து வந்து வைத்துக்கொண்டாள்.மருத்துவர்கள் சொல்வது மாதிரி என்றாவது ஒரு நாள் தன் அண்ணன் எழுந்து நடப்பான் என்ற நம்பிக்கை அவளுக்கு இருந்தது.அதுவரையில் அவளுடைய வாழ்க்கையில் வேறு எதற்கும் அவள் இடம் கொடுக்கப் போவதில்லை. பழைய நினைவுகளுக்கு தற்காலிகமாக விடைகொடுத்துவிட்டு, புகழுக்கு உணவு ஊட்டி மெத்தையில் படுக்கவைத்தாள் பூரணி,அவனுடைய வாழ்க்கைதான் இருண்டு போயிருக்கிறது,அறையாவது வெளிச்சமாக இருக்கட்டுமே என்று விளக்கை அணைக்காமலேயே விட்டுவிட்டு தனது அறைக்குப் போனாள் பூங்குழலி, * * * * * வானம் மெல்ல விடிய தொடங்கியிருந்தது,பூங்குழலியின் வாழ்வும் என்றாவது ஒரு நாள் விடியும் என்ற நம்பிக்கையில் தான் எழுதிய கதைக்கு ‘உன்னால்தானே நானே வாழ்கிறேன்’ என தலைப்பிட்டுவிட்டு கணினியை அடைத்துவிட்டு படுத்தாள் சரளா. முற்றும்…
உன்னால்தானே நானே வாழ்கிறேன் - அத்தியாயம் 10 இரண்டு தினங்களில் தீபாவளி என்பதால் கோலாலம்பூர் பட்டணமே களை கட்டியிருந்தது.புகழ் பூங்குழலியை பிரிக்பீல்ட்ஸ் அழைத்துப் போனான்.வாங்க மறந்திருந்த சில பொருட்களை வாங்கினான். “அவனுக்கு இவ்வருடம் தலை தீபாவளியல்லவா?” பூங்குழலிக்கு அப்போதுதான் ஞாபகம் வந்தது.புகழ் தீபாவளியன்று தங்களுடன் இருக்கமாட்டான் என எண்ணும்போது கவலையாக இருந்தது. ஆனால் அவனுடைய மாமனாரும், மாமியாரும் மிக நல்லவர்கள்.புகழை குடும்பத்தோடு சன்வே வந்து அவர்களுடைய வீட்டில் தீபாவளித் திருநாளைக் கொண்டாட பணித்தார்கள்.பூரணியின் அன்பும், பொறுமையும், பணிவும் எங்கிருந்து வந்தது என அவனால் உணர முடிந்தது, தீபாவளிக்கு முதல்நாள் தாத்தா, பாட்டிக்குப் படையல் போட்டுவிட்டு உடனே சன்வே கிளம்பிவிட்டார்கள் எல்லாரும்,அவ்வருட தீபாவளி மிகமிக சந்தோஷமாக இருந்தது அவர்களுக்கு.அவளுடைய குடும்பத்தைப் போலவே பூரணியின் குடும்பமும் ஜாலியான குடும்பமாக இருந்தது. இந்த சமயத்தில் மதியும் தன்னோடு இருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் என எண்ணினாள் பூங்குழலி.கல்லூரியின் கடைசி நாள் மதி மிகவும் அமைதியாக இருந்தான். “உங்களை கண்டிப்பா ரொம்ப மிஸ் பண்னுவேன் சீனியர்,” என்றான் வருத்தத்துடன்.கடைசி நாளன்று அவன் தன்னுடைய ஆசையை அவளிடம் சொல்லியிருந்தான்.அவள் கொஞ்சம் வேலையாக இருந்ததால் அவனுடன் சரியாக பேசவில்லை.அவன் அவள் கோபித்துக்கொண்டதாக எண்ணிவிட்டான்.ஆனால் பூங்குழலிக்கு அவனுடைய எண்ணம் கோபத்தை ஏற்படுத்தவில்லை.இவனுக்குள் இப்படி ஓர் ஆசை இருந்திருக்கிறதா என வியந்தாள். எதற்காக அவன் மேல் கோபப்பட வேண்டும்? அவன் அவளிடம் பழகிய வரையில் ஒரு தடவை கூட அவளிடம் அத்துமீறி பேசியதில்லை.சினிமாவில் வருவதுபோல் நட்பு என்று சொல்லிக்கொண்டு அவளுடைய கையை எல்லாம் பற்றிக்கொண்டு சுற்றியதேயில்லை.தன்னுடைய மோட்டார் சைக்கிளில் கூட அவளை ஏற சொன்னதில்லை.அவளுடைய கைவிரல்களை கூட அவன் தொட்டதில்லை.அந்த அளவுக்கு அவன் அவளிடம் கண்ணியமாக நடந்து கொண்டான்.அவன் அவளை அண்ணி என்ற ஸ்தானத்தில் வைத்து வணங்கியதே இதற்கு காரணம் என்று அவளால் புரிந்து கொள்ள முடிந்தது. ஒரு வேளை அவளுடன் சகோதரியைப் போல் பழகியிருந்தால் அவளுடைய தலைமுடியை எல்லாம் பிடித்து இழுத்து குறும்பு செய்திருப்பானாம்.அவனுடைய பெரியம்மா மகள்களிடம் இப்படிதான் நடந்து கொள்வானாம்.இதை அவனே அவளிடம் சொன்னான்.அவன் மேல் கோபம் வரவில்லை என்றாலும் கௌசிகன் மீது அவளுக்கு அப்படிப்பட்ட எண்ணமே வரவில்லை.சிறுவயதிலிருந்து தனக்கு வேண்டியதை எல்லாம் தெரிவு செய்து கொடுத்தவன் புகழ்தான்.அவனே முடிவு செய்யட்டும் என விட்டுவிட்டாள்.அதே வேளையில் அவசரப்பட்டு இளையவன் மதியின் மனதைக் காயப்படுத்தவும் அவளுக்கு விருப்பமில்லை. * * * * * மெத்தையில் அமர்ந்திருந்த பூரணி தன் வயிற்றை ஆசையாக தடவிப் பார்த்தாள்.புகழுடன் வாழ்ந்த அழகான வாழ்க்கையின் அடையாளச் சின்னம் அவள் வயிற்றில் இரண்டு மாத கருவாய் முளைவிட்டிருந்தது.அவளை இரசித்துப் பார்த்தான் புகழ்.இவளே குழந்தை மாதிரி இருக்கிறாள்.இவளுக்குள் ஒரு குழந்தையா என அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது.அவளுடைய முகத்தில் தாய்மையின் பூரிப்பு தெரிந்தது.புதுவித வெட்கம் வேறு.மருத்துவர் அவள் கர்ப்பமுற்றிருப்பதாக சொன்ன இரண்டு நாட்கள் அவனுடைய முகத்தை அவள் நிமிர்ந்து பார்க்கவே இல்லை. புகழுக்கு கர்ப்பமாக பெண்களை அதிகம் பிடிக்கும்.அவனுடன் வேலை செய்யும் சக ஆசிரியைகள் வயிற்றைத் தள்ளிக்கொண்டு நடந்து வருவதை அவன் பெரிதும் இரசிப்பான்.அந்தத் தாய்மையை அவன் இரசித்தான்.இனி தன்னுடைய பூரணியும் அப்படிதான் இருக்கப்போகிறாள். நீண்ட கவுன் அணிந்துகொண்டு, களைத்துப் போன முகத்துடன்,மாணவர்களிடம் புத்தகங்களை எடுத்து வரச் சொல்லிவிட்டு வயிற்றைத் தள்ளிக்கொண்டு நடக்கப் போகிறாள்.நினைக்கும்போதே அவனுக்கு ஆசையாக இருந்தது.மெல்ல பூரணியின் தலையைக் கோதி நெற்றியில் முத்தமிட்டான். தான் நேசித்தவனையே கணவனாக அடைந்து, அவனுக்குத் தன்னை முழுவதுமாய் அர்ப்பணித்து, இனி நான் உனக்கு மட்டுமே சொந்தம் என்ற நிலையில் அவனுடம் ஒன்றற கலந்துவிட்டது அவளுக்கு அதிக சுகத்தைத் தந்தது.அதைவிட அவனுக்குத் ‘தந்தை’ என்ற அந்தஸ்தையும் கொடுக்க முடிந்ததை எண்ணியபோது அவளுடைய காதலோடு சேர்ந்து பெண்மையும் பூரணமாய் மலர்ந்தது.பூரணி ஆத்ம திருப்தியில் உறங்கினாள். >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>> “புகழ், நான் சொன்னதுக்கு நீ இன்னும் ஒன்னும் சொல்லலியே? என்றபடி அவன் முன் வந்து நின்றாள் பூங்குழலி.மதிவதனனுக்கு கிறிஸ்துமஸ் தினத்தன்றுதான் பிறந்த நாள்.அவனுடைய பிறந்தநாளை தன் வீட்டில் கொண்டாடலாம் என நினைத்திருந்தாள் பூங்குழலி.கடலில் குளிக்க போகலாம் எனவும் ஏற்பாடு.புகழ் அத்திட்டத்திற்குச் சம்மதித்தான். அன்றைய தினம் அவர்களுக்கு மிக மிக சந்தோஷமாக இருந்தது.கடைசி நேரம் வரை தன்னுடைய பிறந்த நாள் கொண்டாட்டத்தைப் பற்றி மதிக்கு எதுவுமே தெரியாது.பூங்குழலி வேண்டுமென்றே அவனுடைய பிறந்தநாளை மறந்துவிட்டது போல் இருந்தாள். மதியின் பிறந்தநாளைக் கொண்டாடிவிட்டு உடனே கூலிமிற்கு கிளம்பலாமென திடீர் யோசனை ஒன்றை உதிர்த்தான் புகழ்.அங்கு மதியின் அம்மா, அண்ணனையும் அழைத்துக்கொண்டு லங்காவி கடற்கரைக்குப் போகலாமென சொன்னான்.அவனுக்கு கௌசிகனைப் பார்க்க வேண்டும் போலிருந்தது,அதன்படி எல்லாரும் கிளம்பினார்கள். கௌசிகன் அவசரமாக எங்கோ போகவேண்டி இருந்ததால் பிறகு வந்து அவர்களுடன் கலந்து கொள்வதாக சொன்னான்.அவன் அம்மாவும் கௌசிகனுடன் வந்து இணைந்து கொள்வதாக சொல்லி மறுத்துவிட்டாள். ஏதோ தன் குடும்பத்தினரிடமாவது கௌசிகன் நன்றாக பழகுகிறானே என்ற விதத்தில் பூங்குழலிக்கு கொஞ்சம் மகிழ்ச்சியாக இருந்தது.மதியின் வீட்டிலேயே சமைத்து எடுத்துக் கொண்டு போனார்கள். பள்ளி விடுமுறை சமயமென்பதால் கடற்கரையில் நிறைய பேர்.வழக்கமாக ஒவ்வொரு பள்ளி விடுமுறைக்கும் புகழ் அவர்களையெல்லாம் கடற்கரைக்குதான் அழைத்து வருவான். பூங்குழலிக்குக் கடலைப் பார்த்ததும் கல்லு}ரி ஞாபகம் வந்தது.ஆசிரியத் தன்மை பயிற்சியின்போதும் (BIG). சுற்றிப் பார்க்கப் போகும்போதும் கடல்தானே அவர்களின் முக்கிய இடமாக இருந்து வந்தது?தோழிகள் எல்லாரும் பள்ளி வாழ்க்கையை எதிர்கொள்ள தயாராகி கொண்டிருப்பதால் அவர்களைத் தொந்தரவு செய்ய வேண்டாமென பூங்குழலி அவர்களை அழைக்கவில்லை. “வா மதி. கடலுக்குப் போகலாம்,” களைத்து உட்கார்ந்திருந்த மதிவதனனை வற்புறுத்தி அழைத்தாள். “ஐயோ, நான் இப்பதான் கடலுக்குள்ள இருந்து வர்றேன்.நீங்க போங்க சீனியர். நான் கொஞ்ச நேரம் கழிச்சி வர்றேன்,”அவளை அனுப்பிவிட்டு மணலில் மல்லாந்து படுத்தான் மதி.பூங்குழலி கடலுக்குள் இறங்கியிருந்தாள். அப்போதுதான் அந்த ஆரவாரம் எழுந்தது.திடுக்கிட்டு எழுந்தான் மதி.கடல் அலை மிக உயரத்திற்கு எழுந்து ஆர்ப்பரிக்கத் தொடங்கியிருந்தது.சிலர் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டார்கள்.அந்த விபரீதம் உறைத்ததும் மதி கடலை நோக்கி ஓடினான். கரையில் இருந்த சிலர் தங்கள் உறவினர்களைக் காப்பாற்ற முயன்று கொண்டிருந்தார்கள்.ஆனால் சீற்றம் கொண்டு எழுந்த கடல் அலைகளை எதிர்த்துப் போராட முடியாமல் தோற்றுப்போயினர் சிலர்.சிலர் உறவினர்களைக் காப்பாற்ற போய் அவர்களும் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டார்கள். மதி பூரணியைக் கண்டுபிடித்துவிட்டான்.கஷ்டப்பட்டு அவளைக் கரைக்கு இழுத்து வந்தான். “மதி,என்னாச்சு மதி? என் அம்மா, அப்பா, அண்ணி, புகழ் எல்லாரும் எங்க மதி?” அழுது அரற்றியவளை பலங்கொண்ட மட்டும் பிடித்து இழுத்து கரைக்குத் தள்ளினான் மதிவதனன். தொடரும் ……..
உன்னால்தானே நானே வாழ்கிறேன் - அத்தியாயம் 9 பூங்குழலியை அமர சொல்லிவிட்டு ‘பீஷ்ஷா’ ஆர்டர் செய்யப் போயிருந்தான் மதி.அவனுடைய கைத்தொலைபேசி ஒலிக்கவே எடுத்து ‘ஹலோ’ சொன்னாள்.கௌசிகன்தான் அழைத்திருந்தான்.மதி ‘பீஷ்ஷா’ ஆர்டர் செய்து கொண்டிருப்பதாக சொன்னாள். “பரீட்சை நெருங்கி கிட்டிருக்கற சமயத்துல பீஷ்ஷா சாப்பிடறது ரொம்ப முக்கியமா போச்சா அவனுக்கு?’ திட்டிக்கொண்டே அழைப்பைத் துண்டித்துவிட்டான். மதி வந்ததும் கௌசிகன் திட்டியதைச் சொன்னாள். “அவருக்கு நான் பீஷ்ஷா சாப்பிட வந்ததால கோபமா இருக்காது சீனியர்.அவரை விட்டுட்டு என்கூட சாப்பிட வந்திருக்கீங்கன்னு கோபமா இருக்கலாம்,” சொல்லிவிட்டு அவள் என்ன சொல்கிறாள் என்று பார்த்தான்.அவள் அவன் சொன்னதைப் பொருட்படுத்தியதாகவே தெரியவில்லை.எதையோ நினைத்து புன்னகைத்தாள். “என்ன? பீஷ்ஷா’வைக் கத்தியால் துண்டாக்கிக் கொண்டே வினவினான். “அன்னிக்கு ஒரு நாளு நீயின்னு நெனச்சி உன் அண்ணனைத் திட்டினதை நெனச்சேன்,” என்றாள். மதி வீட்டுக்குப் போனபொழுது கைத்தொலைபேசியை வீட்டில் வைத்துவிட்டு வந்துவிட்டான்.பூங்குழலியிடம் வேண்டுமென்றே சொல்லவில்லை.அவள் அழைத்தபோது கௌசிகன் எடுக்க, குரலை அடையாளம் காண முடியாமல் மதி என்று நினைத்து என்னென்னவோ பேசிவிட்டாள்.போதாக்குறைக்கு,”உன் அண்ணனை மாதிரியே உனக்கும் ரொம்ப திமிர்,” என்று வேறு திட்டிவிட்டாள்.அவளுடைய நல்ல நேரம் கௌசிகனிடம் பெரிதாக வாங்கி கட்டிக்கொள்ளவில்லை. “நான் மதியோட திமிர் பிடிச்ச அண்ணன்தான் பேசறேன்,” என்று சொல்லிவிட்டு தொடர்பைத் துண்டித்துவிட்டான் கௌசிகன். “ஆனா மதி உன் அண்ணன்னு முன்னமே தெரிஞ்சிருந்தா இன்னும் கொஞ்சம் அதிகமா திட்டியிருப்பேன்,” அவள் சொன்னபோது அவன் கொஞ்சம் பயந்துதான் போனான்.தான் ஆசைப்படுவது நடக்காமல் போய்விடுமோ என்று. “சரி விடுங்க. உங்க கோர்ஸ் பத்தி எதுவும் நியூஸ் வந்ததா?” மதி பேச்சை மாற்றினான். “கீதாவும், சரளாவும்தான் அதிகமா புலம்பிக்கிட்டு இருக்காங்க,அந்த ‘இண்ட்டெல்’ கோர்ஸ் நடக்கக் கூடாதுன்னு வேண்டிக்கிட்டு இருக்காங்க,” “உங்களுக்கு எப்படி சீனியர்?” “எனக்கு கோர்ஸ் சீக்கிரமா முடிஞ்சிட்டாலும் பரவால்லன்னு தோனுது,ஆனா எனக்கென்னவோ அநேகமா இண்ட்டல் கோர்ஸ் கண்டிப்பா நடக்கும்னுதான் தோனுது மதி. அவள் நினைத்த மாதிரியே இண்ட்டல் பயிற்சி நவம்பர் ஒன்பதாம் தேதி வரை நடப்பது உறுதி செய்யப்பட்டது.முதலில் நவம்பர் பத்தாம் தேதி வரை நடப்பதாக இருந்தது.தீபாவளி சமயமென்பதால் வெகு தொலைவில் இருக்கும் இந்திய மாணவர்களின் நிலையை கருத்தில் கொண்டு பயிற்சியை ஒன்பதாம் தேதி மதியமே முடித்துவிட திட்டமிட்டிருந்தது கல்லூரி நிர்வாகம். “போறப்ப கூட நிம்மதியா விடமாட்டாங்களா?” ஸ்டூடண்ட் வெப்சைட் செய்யறதுக்குள்ள தலையே வலிக்குது் வழக்கம்போல,” கீதாதான் முதலில் தன் புலம்பலை ஆரம்பித்தாள். ‘இண்ட்டல்’ என்பது கணினி சம்பந்தப்பட்ட பயிற்சி என்பதால் கணினிக்கூடத்திலேயே நடந்தது,’பவர்பொயிண்ட்’ முறையைப் பயன்படுத்தி மாணவர்களுக்காக இணையத்தில் ஒரு சிப்பம் தயாரிக்க வேண்டும்.மணிக்கணக்காக கணினியின் முன் அமர்ந்திருந்ததால் தலை வலித்தது.ஆனால் கேரலின் உற்சாகமாக செய்தாள்.அவளும் சரளாவும் நான்காம் ஆண்டிற்கான அறிவியல் பாடத்தை எடுத்துக் கொண்டார்கள்.இணையத்திலிருந்து விதவிதமான மிருகங்களின் படத்தை எடுத்து அகப்பக்கத்தைச் சிறப்பான முறையில் செய்திருந்தார்கள்.பூங்குழலியும் கீதாவும் உலக அதிசயங்கள் என்ற தலைப்பை எடுத்திருந்தார்கள்.கணினித்திரையில் தாஜ்மஹாலை அழகாக ஜொலிக்கவிட்டிருந்தார்கள்.சோனியாவோ எதையும் செய்யாமல் இணையத்தில் ஆட்டம் போட்டுக்கொண்டும், மற்றவர்கள் செய்வதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டும் இருந்தாள். “இன்னைக்குதான் ஒரு மணிக்கெல்லாம் முடிஞ்சிடுமே,பட்டர்வொர்த் போலாமா? எனக்கு ரெயின்போ காலனி பாக்கனும்னு ஆசையா இருக்கு,படம் ரொம்ப டச்சிங்கா இருக்காம்” - சோனியா, மதி ஏற்கனவே அந்தப் படத்தைப் பார்க்கப்போகலாமென அவளை வற்புறுத்திக்கொண்டே இருந்தான்.அதனால் அவனையும் அழைத்தாள். “வேண்டாம் சீனியர். நீங்க அந்தப் படத்தை என்கூட பாக்க வேண்டாம்,”அவன் மறுத்துவிட்டான். தியேட்டருக்குப் போய் அந்தப் படத்தைப் பார்த்தபோதுதான் அவன் வர மறுத்தன் காரணம் அவளுக்குப் புரிந்தது.எவ்வளவு நல்ல கதையம்சமுள்ள படமென்றாலும் இப்படிப்பட்ட காட்சிகளை வைத்து வீணடித்துவிடுகிறார்கள்,” என நொந்துபோனாள். “பினாங்குல கண்டிப்பா தீபாவளி களை கட்டியிருக்கும்,வெள்ளிக்கிழமை போலாமா?” சரளாவுக்கு பூங்குழலி சொன்னதில் அவ்வளவாக உடன்பாடில்லை.இன்னும் சில தினங்களில் கல்லூரி வாழ்க்கை நிறைவடைய போகிறது.எஞ்சியிருக்கும் நாட்களில் சுங்கைப் பட்டாணியை நன்றாக வலம் வந்துவிட வேண்டும் என நினைத்தாள்.அவள் கருத்துக்கு யாரும் மறுப்பு சொல்லவில்லை.நீலா அவர்களுக்கென்றே ஒன்பதாம் தேதி கிளம்புவதாக சொல்லிவிட்டாள்.மாலை நேரங்களில் கோயில், இந்திய உணவகங்கள்,துணிக்கடைகள் என்று எல்லா இடத்திற்கும் போய் வந்தார்கள்,எட்டாம் தேதி இரவு கடைசி கடைசியாக சுங்கைப் பட்டாணியின் ஒட்டுமொத்த அழகையும் இரசித்துவிட்டு வரவேண்டும் என்று மதியமே கிளம்பிவிட்டார்கள்,மதி தேர்வின் காரணமாக அவர்களுடன் வரவில்லை, ‘சென்ட்ரல் ஸ்குவேர்’ விற்பனை மையத்தில் இதுநாள் வரை தாங்கள் சுற்றிய இடங்களையெல்லாம் ஏக்கத்தோடு மனதில் பதிய வைத்துக் கொண்டார்கள்.இறுதியாக முத்தையாஸ் நிறுவனத்திற்கு வந்தார்கள்.நிறைய மத்தாப்பு வாங்கினார்கள்.முத்தையாஸ் நிறுவனத்தில் சிறப்பு விற்பனை நடைபெற்றுக்கொண்டிருந்தது.இந்திய இளைஞர்கள் கடையின் முன்புறம் ஒரு நவீன நடனத்தையும் வழங்கினார்கள்.தீப்பெட்டி வாங்குவதற்காக மீண்டும் கடைக்குள் நுழைந்த சரளா வெளியே வரும்போது அறிவிப்பு செய்து கொண்டிருந்த ஓர் அறிவிப்பாளர் அவளை அழைத்து ஒலிபெருக்கியில் பேச சொன்னார்.பதட்டத்தின் காரணமாக சரளா ஓரிரு வார்த்தைகளை மட்டும் பேசிவிட்டு வந்துவிட்டாள்.கேரலினுக்கு திடீரென ஒரு யோசனை எழ அறிவிப்பாளரை நோக்கிப் போய் அவரிடம் என்னவோ சொன்னாள்.மறுகணம் அந்த அறிவிப்பாளர் கேரலினுடைய கைகளில் மைக்கை கொடுத்தார். “எல்லாருக்கும் வணக்கம்.நாங்க எம்.பி.சா-ல இருந்து வந்திருக்கோம்.இன்னைக்குதான் எங்களுக்கு கடைசி நாளு.எங்களோட படிப்பு முடியுது.நாளைக்கு நாங்க எல்லாரும் கிளம்பறோம்.இந்த ஊரை விட்டு போறதுக்கு ரொம்ப வருத்தமா இருக்கு.எம்.பி.சா மக்கள் எல்லாருக்கும் எங்களோட தீபாவளி வாழ்த்துக்களை சொல்லிக்கறோம்,குட் பை சுங்கைப் பட்டாணி்!” பேசி முடித்துவிட்டு வந்த கேரலினை சூழ்ந்து கொண்டு பாராட்டினார்கள் மற்ற ஐந்து பெண்களும். அன்றிரவு அவர்கள் கல்லூரிக்குத் திரும்பி குளித்து நைட்டியை அணிந்துகொண்டு கீழே இறங்கியபோது நள்ளிரவு பன்னிரண்டு மணியாகியிருந்தது.விடுதியில் பாதி பெண்கள் உறங்கிவிட்டிருந்த வேளையில் மத்தாப்புக்களைக் கொளுத்தி குழந்தைகளைப் போன்று குதூகலித்தார்கள்.அவர்களுடைய தீபாவளி கொண்டாட்டம் அன்றே தொடங்கிவிட்டிருந்தது.நிறைய புகைப்படம் எடுத்துக்கொண்டார்கள். “அக்கா, அடுத்த வருசம் நீங்க எல்லாம் இல்லாம நான் எப்படிக்கா தனியா இருப்பேன்?நீலா கண்கலங்கியபோது அவர்களுக்கும் அழுகை வந்துவிட்டது.இனி மீண்டும் எப்போது இந்த ஆட்டம் பாட்டம் கொண்டாட்டமெல்லாம்? இனிமேல் அவர்கள் ஆசிரியர்கள்.விளையாட்டுத் தனத்தையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு இளைய சமுதாயத்தின் வளர்ச்சியில் பங்காற்ற வேண்டிய பெரும் பொறுப்பை சுமக்க போகிறவர்கள்.இதுவரை அனுபவித்த சந்தோஷமான, இனிமையான கல்லூரி வாழ்க்கை இனி மீண்டும் எப்போது? மறுநாள் காலை பதினோரு மணிக்குமேல்தான் அவர்களுடைய பயிற்சி முடிந்தது.கட்டியணைத்து குட்பை சொல்லிக்கொள்ள கூட அவகாசமின்றி கைநிறைய பொருட்களையும், மனம் நிறைய வேதனைகளையும் சமந்து கொண்டு எம்.பி.சாவை விட்டு வெளியேறினார்கள் அந்தக் கல்லூரி மலர்கள்.
உன்னால்தானே நானே வாழ்கிறேன் - அத்தியாயம் 8 கௌசிகன் ஏறத்தாழ மதிவதனனுடைய சாயலில்தான் இருந்தான்.அவனுடைய குரலும் மதிவதனனுடைய குரலோடு ஒத்துப் போனது.ஆனால் மதியைக் காட்டிலும் நிறம் கொஞ்சம் கம்மியாக இருந்தான்.அவன் பிரபல ஆங்கில நாளேடான ‘ஸ்டார்’ பத்திரிகையின் நிருபராக இருந்தான்.பூங்குழலிக்கு அத்துறையில் நிறையவே ஆர்வம் இருந்தது.அவனிடம் அந்த வேலையைப் பற்றி கேட்டுத் தெரிந்து கொள்ள துடித்தாள்.ஆனால் கௌசிகன் அவள் பக்கமே திரும்பவில்லை. கௌசிகனுக்குப் பெண்களிடத்தில் அவ்வளவாக ஈடுபாடு இல்லையாம்.மதிவதனன்தான் சொன்னான்.அவளிடம் பேசாவிட்டாலும் மதிவதனனுக்கு என்ன வாங்கி வந்தாலும் அவளுக்கும் சேர்த்தே வாங்கி வந்து கொடுத்தான்.அவன் பேசாவிட்டால் என்ன?தானாவது பேசிப் பார்க்கலாமே என்று ஒரு நாள் இரவு அவளாக அவனைத் தேடிப்போனாள்.அவன் ஹாலில் அமர்ந்திருந்தான். “என்ன செய்துக்கிட்டு இருக்கீங்க?’ எப்படி பேச்சை ஆரம்பிப்பதென்று தெரியாததால் அவ்விதம் கேட்டாள். “திடீர்னு வந்து என்ன செஞ்சிக்கிட்டு இருக்கீங்கன்னா என்ன அர்த்தம்?” அவன் அப்படி முகத்தில் அறைந்தாற்போல் கேட்பானென்று அவள் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. பொதுவாக ஆண்கள் தங்களுக்குப் பிடிக்காத பெண்களை அல்லது தப்பான பெண்கள் என்று நினைப்பவர்களிடம்தான் இப்படி அலட்சியமாக பேசுவார்கள்.இதில் தான் என்ன ரகம் என்று பூங்குழலியால் ஊகிக்க முடியவில்லை.ஒரு வேளை தானாக போய் அவனிடம் பேசியதால் தன்னைத் தப்பாக நினைத்துவிட்டானோ என்று கூட தோன்றியது அவளுக்கு.பேசாமல் இருந்திருக்கலாம்.கடைசி நாளும் அதுவுமாக தேவையா இந்த அவமானம்?”அவள் படுக்கப் போய்விட்டாள்.ஆனால் உறங்க முடியவில்லை.கௌசிகன் பேசிய விதம் அவள் மனதைக் காயப்படுத்தியிருந்தது. நடந்ததை மதியும் அறிந்திருந்தான்.கௌசிகன் மிக நல்லவன்.மதியின் மீது உயிரையே வைத்திருப்பவன்.மிக மிக பொறுப்பானவன்.ஆனால் அவனுக்குப் பெண்களிடத்தில் எப்படி பேசுவதென்று தெரியாது.அவனுக்குத் தொழில் பக்தி அதிகம்.வீட்டில் இருக்கும்போது இணையமும், பத்திரிக்கைகளும்தான் அவனுடைய பொழுதுபோக்கு.அவ்வளவாக படம் கூட பார்க்கமாட்டான். மதிக்கு தன் அண்ணன் சராசரி ஆண்களைப் போல் இல்லாமல் மிகவும் சீரியஸாக இருப்பதில் அதிக வருத்தம்.அவனுக்கென்று ஒரு வாழ்க்கைத் துணை இருந்தால் அவனும் மற்றவர்களைப் போன்று சந்தோஷமாக இருப்பானோ என்று யோசித்தான். பூங்குழலியை முதன்முதலில் பார்த்தபோதே கௌசிகனுக்கு சகல விதத்திலும் பொருத்தமானவள் இவள்தான் என்று அவனுக்குள் ஒரு வெளிச்சம்.அவளுடன் பழக ஆரம்பித்த பிறகு தனக்கேற்ற சரியான அண்ணி இவள்தான் என்று அவனுக்குத் தோன்றியது.அவளுடைய கோபம், குறும்பு எல்லாமே அவனுக்குப் பிடித்திருந்தது.அவன் மீது அவள் எடுத்துக் கொள்ளும் அக்கறை அவனுக்குப் பிடித்திருந்தது.மாலை வேளைகளில் அவனுக்காக தே ‘ஓ’ கலக்கி, ‘கார்டினியா’ ரொட்டியில் பிளாந்தா தடவி எடுத்துப் போய்க் கொடுப்பாள். எந்தவித உறவும் இல்லாமலேயே இவ்வளவு அன்பாக கவனித்துக் கொள்பவள் தனக்கு அண்ணியாக வந்தால் எவ்வளவு அன்பாக இருப்பாள் என்று ஆசைப்பட்டான்.அதனால்தான் அவனுக்கு அவளைச் சகோதரியாக ஏற்றுக்கொள்வதில் விருப்பமில்லை.மனதில் உள்ளதை அவசரப்பட்டு சொல்லி அவளுடைய நட்பை இழந்துவிடக்கூடாதென்றுதான் பொறுமையாக காத்திருக்கிறான்.ஆனால் கௌசிகன் நடந்து கொள்வதைப் பார்த்தால் காரியமே கெட்டுவிடுமோ என்ற பயம் அவனுள் வந்தது.கூடிய சீக்கிரம் பூங்குழலியிடம் தன் எண்ணத்தைச் சொல்லிவிட வேண்டுமென்று நினைத்தான்.ஆனால் அது அவ்வளவு சுலபமானதாக இருக்கவில்லை.பயிற்றுப் பணியின்போது பூங்குழலியைச் சந்திப்பதே பெரும் பாடாய் இருந்தது. பூங்குழலி அலோர்ஸ்டாரில் பயிற்றுப் பணியை மேற்கொண்டிருந்தாள்.தினமும் பாடத்திட்டம் தயார் செய்து அதற்கேற்ற பயிற்றுத் துணைப் பொருட்களையெல்லாம் செய்து வைத்துவிட்டு அவள் படுக்கவே தினமும் மூன்று,நான்கு மணியாகிவிடும்.சில சமயங்களில் விடிய விடிய பாடம் தயாரித்துவிட்டு தூங்காமல் அப்படியே பள்ளிக்குப் போயிருக்கிறாள்.அதனாலேயே வார விடுமுறை நாட்களில் அவள் எங்கும் போகாமல் வீட்டிலேயே ஓய்வெடுத்தாள்.தன் வீட்டிற்கு கூட மூன்று வாரத்திற்கொருமுறைதான் போனாள்.ஆனால் அவளுக்கு அந்த அலைச்சலும்,அசதியும் பிடித்திருந்தது, பயிற்றுப் பணியை முடித்துக்கொண்டு கல்லூரிக்குத் திரும்பியபோது அவளுக்கு எதையோ தொலைத்ததைப் போலிருந்தது.பள்ளி வாழ்க்கை கூட இனிமையாகதான் இருக்கிறதென்று தோன்றியது.ஆனால் அவளுடைய தோழிகள் நொந்து கொண்டார்கள்.ஒரு சிலர் சென்றிருந்த பள்ளிகளில் வாட்டி எடுத்துவிட்டார்களாம். “அப்பாடா, இனிமே இந்த பிராக்டிக்கம் தொல்லை எல்லாம் இல்லப்பா. நல்லா தூங்கலாம்,” கீதா சந்தோஷப்பட்டாள். “ரொம்ப அலையாத. ‘கிஸம்’ கோர்ஸ் சாயந்திரம் நாலரை மணி வரைக்கும் இருக்கு.சனிக்கிழமை கூட இருக்கு,” சரளா இடைமறித்தாள். “பரவால இருபத்தேழாம் தேதி வரைதானே? அதுக்கப்புறம் ரெண்டு மாசம் ஜாலியா இருக்கலாம்.” “ஐயோ அக்கா. உங்களுக்கெல்லாம் இருபத்தேழாம் தேதியோட முடிஞ்சிடுமா? நீங்கள்லாம் சீக்கிரமா போயிடுவீங்களா?” நீலா நிஜமான வருத்தத்தோடு சொன்னாள்.பாவம் அவள் எப்போதும் தன் சீனியர்களுடனேயே சுற்றிக்கொண்டிருப்பவள்.பருமனாக, கருப்பாக இருக்கும் அவளுக்கு இலேசான தாழ்வு மனப்பான்மை இருந்தது.தன் அத்தைப் பையன் தன்னை நிராகரித்தபோது “ஒரு வேளை நான் சிவப்பா, ரொம்ப அழகாக பிறந்திருந்தா என்னை வேண்டாம்னு சொல்லியிருப்பாரா அக்கா?” என்று அவள் கதறி அழுதபோது அவளைக் கட்டியணைத்து ஆறுதல் கூறி தேற்றியவர்கள் அவர்கள்தான்.அதனால்தான் தன் பிறந்த நாளன்று அவர்கள் அப்படி செய்வார்கள் என்று தெரிந்தும் வேண்டுமென்றே மறந்ததுபோல் நடித்தாள் அவள். கல்லூரி வாழ்க்கை சீக்கிரமாக முடியப்போவதை எண்ணி கவலைப்படுவதா இல்லை புகழுடன் ஒன்றாக இருக்கப்போவதையெண்ணி சந்தோஷப்படுவதா?” பூங்குழலி யோசிக்க முடியாத நிலையில் இருந்தாள். இருக்கப்போகும் மூன்று வாரத்தில் கல்லூரி வாழ்க்கையில் எஞ்சியிருக்கும் எல்லா சந்தோஷங்களையும் அனுபவித்துவிட வேண்டுமென்று பல திட்டங்களைப் போட்டார்கள் அந்த ஐந்து பெண்களும்.இருபத்தேழாம் தேதியோடு இறுதியாண்டு மாணவர்களுக்குப் பயிற்சிக் காலம் முடிகிறதென்பதால் வருடந்தோறும் தனித்தனியாக நடத்தப்படும் இறுதியாண்டு மாணவர்களுக்கான பிரியாவிடை விருந்தையும்,தீபாவளி கலைநிகழ்ச்சியையும் ஒரே தேதியில் நடத்த வேண்டிய கட்டாயத்தில் இருந்தது தமிழ்த்துறை. முன்னோடி மாணவர்கள் நொந்து போனார்கள்.நடனம் ஆடவிருந்த மாணவர்கள் கூட இறுதி நேரத்தில் நடனத்தை ரத்து செய்துவிட்டார்கள்.பூங்குழலியின் வகுப்பு மாணவிகள் இவ்வாண்டு வித்தியாசமாக அறுபதாம் ஆண்டு ‘ரோக் எண்ட் ரோல்’ பாடலுக்கு பெரிய கொண்டையெல்லாம் போட்டுக்கொண்டு பழைய பாணியில் தலையை ஆட்டி ஆட்டி நடனம் ஆட இருந்தார்கள்.கடைசி நேரத்தில் எல்லா திட்டமும் வீணாய்ப் போனது. பிரியாவிடை விருந்தில் சிறப்பு செய்யப்படுபவர்களே இவர்கள்தான்.வியர்த்து வடியும் முகத்தோடு எப்படி அங்கே இருக்கமுடியும்? ஆனாலும் இது வேண்டுமென்றே நடக்கவில்லையே? இன்னும் பத்து தினங்களே எஞ்சியிருக்கும் சமயத்தில் மண்டபமும் கிடைக்காத வேளையில் வேறு என்னதான் செய்யமுடியும்? அதனால் நொந்து போயிருந்த மாணவர்களும் தங்களைத் தேற்றிக்கொள்ள வேண்டியதாயிற்று.மதி அந்நிகழ்ச்சியில் பாடல் பாடுவதாக இருந்தான். “என்கூட நீங்களும் சேர்ந்து பாடுங்களேன் சீனியர்,” மதி அவளையும் வற்புறுத்தினான்.பூங்குழலி முடியவே முடியாதென மறுத்துவிட இறுதியில் தனக்கு மிகப் பிடித்தமான “நினைத்து நினைத்து பார்த்தேன்” என்ற பாடலைப் பாடினான் மதி.ஏனோ அவனுக்கு அநதப் பாடல் என்றால் கொள்ளை ஆசை.பல தடவை கேட்டு, பாடி பழகிவிட்டதாலோ என்னவோ அவன் மிக இனிமையாகப் பாடினான்.அவனுக்கு ஏகப்பட்ட பூக்கள் கிடைத்தன. அன்றைய நிகழ்ச்சி மிகச் சிறப்பாகவே நடைபெற்றது.எந்த ஒரு நிகழ்விலும் தமிழ்த்துறை மாணவர்கள் தனித்தன்மை பெற்று திகழ வேண்டும் என்பதில் தமிழ்விரிவுரைஞர்கள் மிகவும் கெட்டியானவர்கள்.இலக்கிய நிகழ்வுகளுக்கு தமிழ்த்துறை அதிக முக்கியத்துவம் கொடுத்து வந்தது.ஒவ்வொரு வருடமும் மூன்று முறை பயிற்சி ஆசிரியர்களின் படைப்புகளைத் தாங்கி மலரும் ‘இளவேனில்’ என்ற இதழ் வெளியீடுதான் தமிழ்த்துறையின் இலக்கியத் தாகத்திற்கு முத்தாய்ப்பாய் அமைந்து வந்தது’அதனாலேயே எம்’பி’சா கல்லூரி என்றால் வெளியில் நல்ல மதிப்பு இருந்தது. மதிப்பு தொடரும் …….
உன்னால்தானே நானே வாழ்கிறேன் - அத்தியாயம் 7 சாரதா கொண்டு வந்து கொடுத்த உணவுப் பொட்டலத்தைப் எடுத்துப் பார்த்தாள் பூங்குழலி.உணவுப்பொட்டலத்தில் ஒரு காகிதத்தில் எதையோ எழுதி வைத்திருந்தான்.எடுத்து படித்தாள். “சோரி சீனியர்,என் மேல இன்னும் பாசம் இருந்தால் உணவை வீணாக்காமல் சாப்பிடவும்,நாளை காலை சந்திப்போம்.” அவன் எழுதியதைப் படித்தவுடன் மனதுக்கு சந்தோஷமாய் இருந்தது.பத்தொன்பது வயதில் எவ்வளவு பக்குவமாய், முதிர்ச்சியாக நடந்து கொள்கிறான்.தனக்குதான் கொஞ்சம் அவசர புத்தி. மறுநாள் சபைகூடலின் போது அவளுக்காக காத்திருந்தான்.சிற்றுண்டிச்சாலையில் ஒன்றாக பசியாறினார்கள்.அதன்பிறகு அவர்களுடைய நட்பு வழக்கம்போலவே தொடர்ந்தது.அவர்களுடைய கூட்டத்தில் அவனும் ஒருவனாகிப் போனான்.ஆனால் எவ்வளவு பழகியும் அவன் அவளை ‘சீனியர்’என்றே அழைத்து வந்தான். புகழேந்தியின் திருமணத்திற்கு அவனும் வந்திருந்தான்.அவனைத் தன் வீட்டிலுள்ள எல்லாருக்கும் அறிமுகப்படுத்தி வைத்தாள்.அவன் அவளுடைய குடும்பத்தாரிடம் மிகவும் இயல்பாக பழகினான்.வீட்டுக்கு வந்தவர்களை வரவேற்றான்.கல்யாண வேலைகளை இழுத்துப் போட்டுக்கொண்டு செய்தான். “இன்னும் கொஞ்சம் சாம்பார் கொண்டு வாங்க.” பம்பரமாய் பரிமாறினான். மணமகளின் வீட்டு விருந்திலும் அவன் கலந்து கொண்டான்.பூங்குழலி விருந்துக்கு முதலில் சுடிதார் அணிவதாக இருந்தாள். “இன்னைக்காச்சும் அடக்க ஒடுக்கமா புடவை கட்டிட்டு வாங்களேன் சீனியர்,” சொல்லிவிட்டு அவள் முறைக்கவும் தூரப் போனான். “அடப்பாவி நில்லு ஓடாதே, எருமைமாடு்!” அவனைத் துரத்திக் கொண்டு ஓடினாள். “பரவால பூங்குழலி. எனக்குப் பதிலா உன்கிட்ட நல்லா வாங்கி கட்டிக்க இன்னொரு சகோதரன் கிடைச்சுட்டானே,” புகழும் சந்தோஷமாய்ச் சொன்னான்.ஆனால் அவன் சகோதரன் என்று சொன்னதும் மதிவதனனுடைய முகம் கொஞ்சம் மாறிப் போனது.பூங்குழலி அதைக் கவனிக்கத் தவறவில்லை.வந்திருந்தவர்கள் எல்லாரும் சாப்பிட்டுவிட்டுப் போனபிறகுதான் அவளும் மதியும் சாப்பிட உட்கார்ந்தார்கள். “மதி, நீ ஏன் என்னை அக்கான்னு கூப்பிட மாட்டேங்கற? எனக்கு நீ என்னை அக்கான்னு கூப்பிடறத கேக்க ஆசையா இருக்குப்பா,” என்று கெஞ்சினாள். மதியின் முகம் மாறிப்போனது.ஒன்றும் பேசாமல் இருந்தான். “நீ எதுவா இருந்தாலும் என்கிட்ட சொல்லலாம்,நான் உன்னைத் திட்டவோ, உன்கிட்ட கோபிக்கவோ மாட்டேன்,சத்தியமா,” அவன் கையில் சத்தியம் செய்தாள். அவன் அமைதியாகவே இருக்க, மீண்டும் நச்சரித்தாள். “ஐயோ சீனியர்,ஓர் ஆண் பெண்கிட்ட பழகுனா அந்த உறவு சகோதரியாவோ காதலியாவோ மட்டும்தான் இருக்கனுமா? அதுக்கெல்லாம் அப்பாற்பட்ட ஒரு பந்தமா அது இருக்கக் கூடாதா? எந்த உறவுக்குமே நட்புதான் முதல்ல தேவை.நட்பு நல்லா வளர்ந்த பிறகு அது எந்த உறவா மாறினா சிறப்பா இருக்கனும்னு நாமே தீர்மானிச்சிக்கலாம்.” அவனுடைய பதில் அவளுக்கு அவ்வளவு திருப்தியாக இல்லாவிட்டாலும் அவள் மேற்கொண்டு எதுவும் கேட்கவில்லை. “பூங்குழலி, இங்க வாம்மா” அம்மா அழைக்கவும் அவள் எழுந்து போனவளையே பார்த்தான் மதி. “என்னை மன்னிச்சிடுங்க சீனியர். உங்க கிட்ட என் மனசுல இருக்கறத சொல்ல முடியாம தவிச்சிக்கிட்டு இருக்கேன்,அவசரப்பட்டு சொல்லி உங்க நட்பை இழக்க விரும்பல,” பூங்குழலி அம்மாவின் முன் போய் நின்றாள். “நானும் அப்பாவும் கிளம்பறோம்,நீ உன் அண்ணிக்குத் துணையா படுத்துக்க” “சரிம்மா,” என்று பூரணியின் அறையை நோக்கிப் போனாள்.அவள் அண்ணன் எதிரே வந்தான். “பூங்குழலி, கொஞ்ச நேரம் பூரணியை வெளியே வரச்சொல்லேன்,பேசனும்” “அதெல்லாம் முடியாது, நீ இப்படியெல்லாம் செய்வேன்னுதான் அம்மா என்னை அண்ணிக்கு காவலா விட்டுட்டுப் போயிருக்காங்க,நாளைக்கு சேர்த்து பேசிக்க,” சிரித்துக் கொண்டே போய்விட்டாள். “மறுநாள் புறப்படுவதைப் பற்றி கேட்கலாமென நினைத்தால் பூங்குழலி தப்பாக எடை போட்டுவிட்டாளே,” என நொந்தபடி மெத்தையில் சாய்ந்தான் புகழேந்தி.நள்ளிரவில் பூரணி அவனைத் தேடி வந்தாள்.தூக்கம் வரவில்லையென அவனிடம் கதை அளந்தாள். “பூரணி, ஒரு பாட்டுப் பாடேன்,கேட்டுட்டே தூங்கறேன்,”அவன் கேட்க அவள் பாடினாள். “அணிலே அணிலே ஓடிவா” திடுக்கிட்டு அவளைப் பார்த்தான்.அவள் அங்கில்லை.உறவினர்களின் பேச்சு சத்தம் கேட்டது. “ச்சே கனவு,” சிரித்துக்கொண்டே உறங்கிவிட்டான். மறுநாள் பூரணியைப் பார்க்கும்போது கனவில் அவள் பாடியது நினைவிற்கு வந்தது.சிரிப்பை அடக்க பெரும்பாடு பட்டான் புகழ். பூரணியும் புகழும் வீட்டுக்கு வந்தபோது அம்மா வாசலில் ஆரத்தியோடு தயாராக இருந்தாள்.பூங்குழலி அவர்களைத் தொடர்ந்து உள்ளே நுழைந்தாள்.மதி அவளைப் பார்த்தான். “பூங்குழலி மருமகளாக வரும்போது அம்மாவும் இப்படிதானே அவளுக்கு ஆரத்தி எடுப்பார்கள்?” நினைத்துக்கொண்டே இருந்தவனைப் பார்த்துக்கொண்டே வீட்டுக்குள் நுழைந்தாள். “நேத்து நீ சொன்னதுல எனக்கும் சம்மதம்,எந்த உறவும் இல்லாம சாதாரண நட்போட பழகலாம்,” அவன் கையில் பழக்கூடையைக் கொடுத்து உள்ளே வைக்க சொல்லிவிட்டுப் போய்விட்டாள்.அவன் கையோடு சேர்த்து மனமும் கனத்தது. “உண்மையில் என் மனதில் இருப்பது என்னவென்று தெரிந்தால்…” “என்னா அங்கயே நிக்கற,சீக்கிரம் உள்ள வா” அவனை இழுத்துக்கொண்டு உள்ளே போனாள். “அண்ட்டி, நாளைக்கு நான் இவங்களை என் வீட்டுக்கு அழைத்துப் போகட்டா?” அவளுடைய அம்மாவிடம் தயங்கி தயங்கி கேட்டான். “கூட்டிட்டுப் போப்பா. புகழ் நாளைக்கு ‘ஹனிமூன்’போயிடுவான்.பூங்குழலிக்கும் போரடிக்கும்,” அவள் அம்மா உடனே சம்மதித்தாள். பூங்குழலி கல்லூரியில் படிக்கும்போது வீட்டுக்கு வராத வார இறுதி நாட்களில் அருகிலேயே உள்ள அவளது தோழிகளின் வீட்டுக்குச் சென்று வருவாள்.அவள் மீது இருக்கும் நம்பிக்கையால் அவளுடைய வீட்டில் யாரும் அவளுக்குத் தடை சொன்னதில்லை.எனவேதான் மதிவதனன் கேட்டபோதும் அவள் அம்மா மறுக்கவில்லை. மறுநாள் அவளுடைய தந்தை அவர்கள் இருவரையும் புடுராயாவில் ‘பஸ்’ ஏற்றிவிட்டார்,பட்டர்வர்த்தில் இறங்கி கூலிம் பேருந்து எடுத்து அவர்கள் வீடு போய்ச் சேர மாலை நான்கு மணியானது.பூங்குழலிக்கு திடீர் தயக்கம்.ஆனால் சாவித்திரியைப் பார்த்ததும் அந்த தயக்கம் காணாமல் போனது.மதியின் அம்மாவுக்கு இவளுடைய அம்மாவைப் போன்றே சாந்தமான முகம்.நன்றாக உபசரித்தார்.மதி ஏற்கனவே அவனுடைய குடும்பத்தைப் பற்றி சொல்லியிருக்கிறான்.சாவித்திரிக்கு இரண்டு மகன்கள் மட்டும்தான்.கணவர் பல வருடங்களுக்கு முன்பே மலேரியா காய்ச்சலில் இறந்துவிட்டார். “சாப்பிடும்மா,நீ வரேன்னு மதி நேத்தே கேசரி செஞ்சி வெக்க சொன்னான்.உனக்கு ரொம்ப பிடிக்குமாமே? வெக்கப்படாம சாப்பிடு்,” கேசரி தட்டை அவளிடம் கொடுத்துவிட்டுப் போனாள். அவர்கள் இருவரும் சமையலறையைவிட்டு ஹாலுக்கு வந்தபோது சாவித்திரி யாரோ ஓர் இளைஞனிடம் பேசிக்கொண்டிருந்தார். “என் அண்ணன் கௌசிகன்,” அவள் காதில் கிசுகிசுப்பாய் சொன்னான். பூங்குழலியை அம்மாவிடம் அழைத்துக் கொண்டு போனான் மதி.பூங்குழலியைப் பார்த்ததும் எழுந்து கொண்ட கௌசிகன் இறுகிய முகத்துடன் ஹாலை விட்டு வெளியேறினான். தொடரும் ……………
உன்னால்தானே நானும் வாழ்கிறேன் - அத்தியாயம் 6 முன்ஷி மண்டபத்திற்கு எதிரே இருந்த கல் நாற்காலியில் மதிவதனனுக்காக காத்திருந்தாள் பூங்கழலி.அவளுக்கு இரவு நேரங்களில் அங்கு அமர்ந்திருக்க மிகவும் பிடிக்கும்.பச்சை பசேலென்ற மரங்கள்,வெட்ட வெளியில் வானம் அழகாக தெரியும்.இரவு நேரங்களில் காற்று அங்கு சிலுசிலுவென வீசும்.அவளும் அவளுடைய தோழிகளும் பெரும்பாலான சமயங்களில் உணவு வாங்கி கொண்டு அங்கு அமர்ந்துதான் சாப்பிடுவார்கள்.காற்றோட்டமாக சாப்பிட்டுவிட்டு கதை அளக்கும்போது உள்ள சுகமே தனிதான். ஆரம்பத்தில் சுங்கைப் பட்டாணியை அவளுக்குப் பிடிக்கவேயில்லை.வெகு தூரமாக இருக்கிறதே என்ற வருத்தம்.ஆனால் நாளடைவில் அந்த ஊரின் அமைதி அவளுக்குப் பழகிவிட்டிருந்தது.வாரத்தில் ஒரு நாளாவது பட்டணத்திற்குப் போய்விடுவார்கள்.’சென்ட்ரல் ஸ்குவேர்’தான் அவர்கள் வழக்கமாக போகும் இடம்.அங்கு ஏதாவது தமிழ்ப்படம் திரையிடுகிறார்கள் என்றால் போதும். கூட்டமாக கிளம்பிவிடுவார்கள்.புதன்கிழமை அரை கட்டணம் என்பதால் மாலையில் சீருடை இயக்கம் முடிந்ததும் கிளம்பிவிடுவார்கள்.ஆறு மணி காட்சியைப் பார்த்துவிட்டு இரவில் சீனர்களின் ஒட்டுக்கடையில் இரவு உணவை முடித்துக்கொண்டு கிளம்பிவிடுவார்கள்.அந்த சந்தோஷம் எல்லாம் இன்னும் சில மாதங்களுக்கு மட்டும்தானே என்று அவள் ஏங்கி கொண்டிருக்கும்போதே அவளுடைய கைத்தொலைபேசி சிணுங்கியது,மதிதான் அழைத்திருந்தான்.இன்னும் ஐந்து நிமிடத்தில் வந்துவிடுவதாக சொன்னான். “வரட்டும். இன்று அவனிடம் உறுதியாக கேட்டுவிட வேண்டும்” எப்படி கேட்பது என்று ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்தாள். கடந்த சில நாட்களாகவே மதி அடிக்கடி அவளைத் தேடி வந்தான்.தினமும் காலையில் சபைகூடல் முடிந்ததும் அவளுக்காக காத்திருப்பான்.இரவிலும் அவள் உணவு வாங்க போகும்போது செயற்கை காளானருகே அவளுக்காக காத்திருந்தான். “இது எதுல போயி முடியப் போகுதோ தெரியல” - சோனியா “எல்லாம் எசைமெண்ட்காகதான் இருக்கும் வேற என்னா?”- சரளா “பூங்குழலி, எனக்கென்னவோ அந்தப் பையன் உன் மேல பிரியப்படறான் போல,எதுக்கும் பாத்து நடந்துக்கோ,”கேரலின் அவளை எச்சரித்தாள். “பூங்குழலி, எனக்கும் மதி உன்கூட நல்ல விதத்துல பழகறமாதிரி தெரியல,” என்றாள் கீதா. “எதை வெச்சி அப்படி சொல்லற?” “அவன் உன்னை ரொம்ப ரசிக்கிறான்,உனக்குத் தெரியுதோ இல்லையோ? பாக்கற எங்களுக்கு நல்லாவே தெரியுது,” மதி தன்னை இரசிக்கிறானோ என்ற எண்ணம் அவளுக்கும் ஏற்கனவே தோன்றியிருந்ததுதான்.ஏனென்றால் சில சமயங்களில் அவள் அவனிடம் பேசிக்கொண்டே இருக்கும்போது அவன் அவளை மௌனமாக பார்த்துக் கொண்டிருப்பான்.இன்று எப்படியும் அவனிடம் இது குறித்து விசாரித்துவிட வேண்டுமென்று நினைத்துதான் காத்திருக்கிறாள். “ஹாய் சீனியர், ரொம்ப நேரமா காத்திருக்கீங்களா?” கேட்டுக்கொண்டே அவளுடைய பக்கத்தில் அமர்ந்தான்.” அவள் ஒரு கணம் அமைதியாக இருந்தாள்.மதிவதனனுக்கு அவளைவிட இரண்டு வயது குறைவு.அவளை எப்போதும் ‘சீனியர்’ என்றுதான் அழைப்பான்.வயது குறைந்தவன்தானே என்ற தைரியத்தில்தான் அவள் அவனுடன் நன்றாகப் பழகினாள்.அவனுடைய பயில்பணிகளில் எல்லாம் உதவினாள்.ஆனால் அவளுடைய தோழிகள் சொல்வதை எல்லாம் கேட்கும்போதுதான் இந்த பயமே வந்துள்ளது. “என்னா சீனியர். ஒன்னுமே பேசமாட்டேங்கறீங்க?” “நீ என்கிட்ட எந்த அர்த்தத்துல பழகற மதி?” பட்டென்று கேட்டுவிட்டாள். “எனக்கு எப்படி உங்ககிட்ட சொல்றதுன்னு தெரியல,” என்றான். “நீ என்னை விரும்பறியா?” கோபப்பட்டாள். “நான் அப்படி சொல்லலியே?” என்றான் அவசரமாய். “அப்படின்னா என்னை அக்கான்னு கூப்பிடு,நான் உன்னைவிட வயசுல பெரியவதானே?” “என்னால உங்கள அக்கான்னு கூப்பிடமுடியாது சீனியர்,உங்கள அக்காவா ஏத்துக்கறதுல எனக்கு விருப்பமில்ல,” “அப்படின்னா நீ என்கூட தப்பான அர்த்தத்துலதானே பழகற? என்னை அக்கான்னு கூப்பிட முடியலன்னா இனிமே என்கிட்ட பேசாதே,” அவள் கோபமாய் எழுந்து போய்விட்டாள்.அதன்பிறகு அவன் அவள் கண்களில் படவேயில்லை. கோபப்பட்டு திட்டிவிட்டாலும் அவளால் மதியை மறக்க முடியவில்லை.சில நாட்கள்தான் பழகினாள் என்றாலும் மதியை அவளுக்கு அளவுக்கதிகமாய்ப் பிடித்திருந்தது.அவனுடைய கிண்டல் பேச்சு, குறும்புத் தனம் எல்லாவற்றையும் அவள் இரசித்தாள்.இரண்டு நாட்களாக அவன் கண்ணில் படாமல் அவள் எதையோ பறிகொடுத்ததைப் போலிருந்தாள். அன்று உணவு வாங்கும்போது அவன் அவள் எதிரே வந்தான்.அவளைப் பார்த்ததும் ஒதுங்கி நின்றான். “சோரி மதி,கொஞ்ச நேரம் எனக்காக காத்திரேன்,நான் உன்கூட பேசனும்,”என்று சொல்லிவிட்டு அண்ட்டியிடம் உணவு வாங்கப் போனாள். அவள் உணவு வாங்கிவிட்டு வரும்போது அவன் செயற்கை காளானருகே உட்கார்ந்திருந்தான். “எனக்குத் தெரியுது உனக்குக் கோபம்னு ஆனா புரிஞ்சுக்கோயேன்,எனக்கு உன்கூட பேசாம, பழகாம இருக்க முடியல,ஆனா நான் உன்னை ஒரு சகோதரன் மாதிரிதான் நேசிக்கிறேன் மதி.எனக்கு தம்பி இல்லையேங்கற ஏக்கமே உன்கூட பழகனப்புறம்தான் வந்தது,” “பயப்படாதீங்க. நானும் உங்ககிட்ட தப்பான அர்த்தத்துல பழகல,சந்தேகத்தோட நீங்க என்கூட பழகறது எனக்கு வேதனையா இருக்கு,அதுக்கு நீங்க என்கிட்ட பழகாமலேயே இருந்திடலாம்” சொல்லிவிட்டு எழுந்து போக முற்பட்டான். “பரவால போ,இன்னும் எத்தனை நாளு நீ என்கூட பேசப் போற? இப்பவே நாலாம் மாசம்,இன்னும் ரெண்டு மாசத்துல நாங்க பிராக்ட்டிக்கம் போயிடுவோம்.அது முடிஞ்சி வந்ததும் ஒரு மாசம் இருக்கப்போறேன்.அதுக்கப்புறம் உன்னை நான் பாக்கவா போறேன்?ரொம்ப பழகிட்டு பிரிஞ்சி போறதைவிட இப்பவே பிரியறது கொஞ்சம் பெட்டர் இல்லையா?” அழுதுக்கொண்டே சொல்லிவிட்டுப் போய்விட்டாள் அவள்.உணவை கூட அங்கேயே வைத்துவிட்டு ஓடிவிட்டாள். விடுதியை அடைந்தபிறகு ஜீன்ஸைக் கழற்றி நைட்டியை மாற்றிக்கொண்டு படுத்துவிட்டாள்.மதியிடம் என்னவோ இருப்பது உண்மைதான்.இல்லையென்றhல் அவன் பேசாமல் போனதற்காக இந்த அளவுக்கு வருத்தப்படுவாளா? “பூங்குழலி, உனக்கென்ன மதி மீது காதலா?’ குருட்டுத்தனமாய் கேள்வி கேட்ட கீதாவை எதை கொண்டாவது அடிக்க வேண்டும் போலிருந்தது. ஒரு பெண் ரத்த சம்பந்தமில்லாத ஓர் ஆணுக்காக உருகினால் அது காதலாகத்தான் இருக்க வேண்டுமா? இவர்களின் சிந்தனை மாறவே மாறாதா?மதிவதனன் மீது அவளுக்கு எப்படி இவ்வளவு பாசம் வந்ததென்று அவளுக்கே தெரியவில்லை.மதிவதனனைப் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும், அவனுடன் பேசிக்கொண்டே இருக்க வேண்டும் போல் இருக்கும் அவளுக்கு.ஆனால் இவர்கள் எல்லாம் நினைப்பது போன்று அவளுக்கு அவன் மீது ஈர்ப்போ காதலோ அல்ல.அதையெல்லாம் தாண்டிய ஏதோ ஒரு பந்தம்.அவளுக்கே புரியாத பந்தம்.மதிவதனனைப் பார்த்தால் அவளைவிட இளையவன் என்று யாரும் எண்ணமாட்டார்கள்தான். ஆனால் இவளுக்கு அவனைப் பார்க்கும்போதெல்லாம் ஒரு குழந்தையைப் பார்ப்பது போன்றதொரு எண்ணம்தானே ஏற்படுகிறது,அவனை அக்கறையாய் கவனித்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம்தானே அவளுள் மேலோங்கி நிற்கிறது,அவளுடைய அண்ணன் புகழ் அவளிடம் நண்பனைப் போல் பழகுவான்,அவனை நினைத்து உருகுவதைப் போல்தான் மதி மீதும் அவள் உயிராய் இருக்கிறாள். “சீனியர், மதி இதை உங்ககிட்ட கொடுக்க சொன்னாரு,” உணவுப்பொட்டலத்தை அவளிடம் கொடுத்துவிட்டுப் போனாள் சாரதா. தொடரும் ……………
உன்னால்தானே நானே வாழ்கிறேன் - அத்தியாயம் 5 ஒரு வழியாக காலை ஆறு மணிக்கு கேரலினை அனுப்பி வைத்துவிட்டு. கல்லு}ரிக்குக் கிளம்பினார்கள் நான்கு பெண்களும்,நீலா தன் வகுப்பு மாணவனிடம் சொல்லி ‘வேன்’ பேசியிருந்தாள்.மதியம் வகுப்பு முடிந்ததும் கிளம்பினார்கள்.பாவம் கேரலின்.அழுது அழுது வீங்கிய முகத்துடன் துவண்டு இருந்தாள்.அவர்களைப் பார்த்ததும் அழுது அரற்ற ஆரம்பித்துவிட்டாள்.அம்மாவின் புகைப்படத்தின் முன் கதறினாள். “பாருங்கம்மா. என்னோட கூட்டாளிங்க எல்லாரும் உங்கள பாக்க வந்திருக்காங்க” பூங்குழலி கேரலினைக் கட்டியணைத்துக் கொண்டாள். “மாசாமாசம் எங்கம்மாவ பாக்க ஓடிடுவேன்,இனிமே எங்க போயி அவங்கள பாக்கப் போறேன்?” “கேரலின், இது வாழ்க்கைல எல்லாரும் சமாளிக்க வேண்டிய கட்டம்,எல்லாருக்கும் வரும்,என்ன உனக்கு எங்களைவிட கொஞ்சம் சீக்கிரமா வந்துடுச்சி,எனக்கு உன்னோட வேதனை புரியுது,நீ ஏன் யாரும் இல்லன்னு நெனைக்கற? எங்களோட அம்மா,அப்பா எல்லாரும் உனக்காக இருக்காங்க,” என்னதான் அவளுக்கு ஆறுதல் சொல்லிவிட்டு வந்தாலும் அவளுடைய அடிமனதில் தனக்கு இப்படி ஒரு நிலை வந்தால் கண்டிப்பாக தாங்கி கொள்ள முடியாது என்று தெரியும்.அவளுக்கு எல்லாமே அவளுடைய குடும்பம்தான். அவ்வார வியாழக்கிழமை திடுதிப்பென வீட்டுக்கு வந்து நின்றவளைப் பார்த்து அதிர்ந்து போனான் புகழேந்தி.அவளுடைய அருமை அண்ணன்.பயில்பணி இருப்பதால் வரமாட்டேன் என்று சொன்னவள் திடுமென வந்ததில் அவனுக்கு ஒரே சந்தோஷம்.ஓடி வந்து அவளுடைய கையைப் பற்றி அவளை வீட்டுக்குள் அழைத்துப் போனான். “என்னடா? முகமெல்லாம் வாட்டமா இருக்கு?” அவள் தலையைக் கோதிக்கொண்டே விசாரித்தான் அவன். பூங்குழலி அவனிடம் கேரலினைப் பற்றி சொன்னாள். “தெரியல புகழ். எனக்கு அப்பவே உங்கள எல்லாம் பாக்கனும் போல இருந்துச்சி” தன் தங்கையை நினைத்து நெகிழ்ந்து போனான் அவன்.அவள் எப்பவும் இப்படிதான்.சில சமயங்களில் கல்லூரியில் பகல் நேரத்தில் தூங்கும்போது திடீரென விழிப்பு வந்தால் வீட்டை நினைத்து அழுவாள்.அதிலும் அம்மா,அப்பாவைவிட அவளுக்கு அவள் அண்ணன் மேல்தான் அதிகப் பிரியம்.அவள் உயிரே அவன்தான்.அவளைவிட அவன் ஐந்து வயது மூத்தவன்.ஆனால் அவனை அவள் அண்ணா என்று அழைத்ததே இல்லை.அவனுக்கும் அதுதான் பிடித்திருந்தது.அவனுடைய உலகமே பூங்குழலிதான்.அதனால்தான் தனக்குத் திருமணம் என்று ஒன்று நடந்தால் கூட பூங்குழலி பார்த்துக் கொடுக்கும் பெண்ணைத்தான் மணப்பேன் என்று அவளிடம் வாக்கு கொடுத்திருந்தான்.அவளும் அவன் பார்த்துக் கொடுக்கும் மாப்பிள்ளையைத்தான் மணப்பேன் என்று சொல்லிவிட்டாள். பூரணியை அவன் நேசிப்பது நிஜம் என்றாலும் தன் தங்கைக்குப் பிடிக்கவில்லை என்றால் அவளையும் மறந்துவிட தயாராக இருந்தான். பூங்குழலி அவளுடைய அம்மாவும், அப்பாவும் வந்ததும் ஓடிப்போய் அவர்களைக் கட்டியணைத்து அழ அரம்பித்துவிட்டாள், “ஐயையோ. என்ன சாயாங் இது?அழுது என் மானத்தையே வாங்கறியே? நான் உன்னை இப்படியா அழுமூஞ்சியா வளர்த்தேன்?’ அவளைத் தோளில் சாய்த்து வீட்டிற்கு வெளியே அழைத்துச் சென்றான் புகழேந்தி.அவளிடம் பூரணியைப் பற்றி சொன்னான்.அவளுக்குப் புகழைப் பற்றி நன்றாகத் தெரியும்.ஒரு நல்ல அண்ணனாக மட்டுமல்ல, நல்ல மகனாகவும் இருப்பவன்,அவன் கண்டிப்பாக தப்பான பெண்ணைத் தேர்ந்தெடுத்திருக்க மாட்டான் என்ற நம்பிக்கையில் அவன் பூரணியை மணக்க சம்மதம் சொன்னாள், அவனுக்கு அதிக சிரமத்தைக் கொடுக்காமல் மறுநாள் பூரணியின் தந்தை அவனிடம் வரன் பேச வரவே. திருமணம் நிச்சயமானது,ஆனால் பூரணியிடம் உடனே இந்த விசயத்தைச் சொல்ல வேண்டாமென கேட்டுக்கொண்டான், மறுநாள் பூரணியைப் பார்க்கும்போது அவனுடைய மனம் குறுகுறுத்தது,தன்னைப் போலவே இவளும் தன்னைத் திருட்டுத்தனமாக இரசித்திருக்கிறாளே என்ற வியப்பு அவனுள் தோன்றி மறைந்தது.வீட்டில் ஒரு விசேஷம் என்று பொய் சொல்லி அவளை வீட்டுக்கு அழைத்துப் போய் எல்லாரிடமும் அறிமுகப்படுத்தி வைத்தான்.பூங்குழலி அவனுடைய தங்கை என்று அறிந்தபோது தன் அவசர புத்தியை எதிலாவது அடிக்க வேண்டும் போலிருந்தது அவளுக்கு.மாலையில் அவளை அவனே அவளுடைய வீட்டில் கொண்டு போய் விடுவதாகச் சொன்னான்.காரில் போகும்போது கேட்டான். “உனக்கு என்னை மட்டும் பிடிச்சா பத்தாது பூரணி.என் வீட்ல உள்ளவங்களைப் பத்தியும் நீ தெரிஞ்சிக்கனும்னுதான் உன்னை மொதல்ல எங்க வீட்டுக்கு அழைச்சிட்டுப் போனேன்.உன்னால என் குடும்பத்துல உள்ளவங்களோடு ஒத்துப் போக முடியும்னு தோனுதா? எனக்கு எப்பவுமே என் அம்மா, அப்பா, தங்கை ரொம்ப முக்கியம்.உனக்கு அது வருத்தத்தைத் தராதுன்னு நீ நெனச்சா திங்க கிழம ஸ்கூலுக்குப் புடவை கட்டிட்டு வா” அவளை அவள் வீட்டில் இறக்கி விட்டுவிட்டு கிளம்பினான். வீட்டை அடைந்த பூரணி துள்ளிக் குதிக்க ஆரம்பித்திருந்தாள்.அவளுடைய புகழ் அவளை நேசிக்கிறான் என்பதில் பெரும் பூரிப்பு அவளுக்கு.இனி அவனைத் தயங்கி தயங்கி இரசிக்க வேண்டியதில்லை.அவனுடைய குழந்தைச் சிரிப்பை,உற்சாகமாக இருக்கும்போது ஒரு மாதிரி தலையைச் சாய்த்து நடக்கும் அவனுடைய நடையை எல்லாவற்றையும் அருகிலிருந்தே இரசிக்கலாம்.அவள் ஆசைப்பட்ட மாதிரி காலையில் சீக்கிரமாக எழுந்து அவன் வேலைக்குப் போகும்போது அவனுக்கு கழுத்துப் பட்டை கட்டிவிட்டு,செல்லமாக அவன் கன்ன்தில்…..எதையெதையோ நினைத்து பூரித்துக் கொண்டிருந்தாள் பூரணி. பூங்குழலியிடம் புகழ் பூரணியிடம் பேசியதை சொன்னபோது அவன் தலையிலேயே குட்டினாள். “அறிவிருக்கா உனக்கு? ஏன் இப்படி செஞ்ச? எப்படி பாத்தாலும் அவங்களுக்குதானே உன்மேல உரிமை அதிகம்?’ “எனக்கு அம்மா, அப்பாவை இருபத்தாறு வருசமா தெரியும்,உன்னை இருபத்தோரு வருசமா தெரியும்.பூரணியை ரெண்டு மாசமாதான் தெரியும்,” சொல்லிவிட்டு அவன் வெளியே கிளம்பி போய்விட. புகழை நினைத்து பெருமிதப்பட்டாள் அவள். “முருகா, யாராலயும் என் அண்ணாவை நான் இழந்துட கூடாது,எனக்கு வரப்போற அண்ணி நல்லவங்களா இருக்கனும்,”தன் இஷ்ட தெய்வத்திடம் மனமுருக பிரார்த்தித்தாள். அவளது பிரார்த்தனை வீண் போகவில்லை.குணத்திலும் அவனுக்கு ஈடாகவே இருந்தாள் பூரணி.புகழ் மீது அதிக பிரியம் அவளுக்கு.புகழ் ஒரு நாள் போன் செய்யாவிட்டாலும் கூட சாப்பிடாமல் அழுவாளாம்.புகழ் இதை வீட்டில் சொல்லி சொல்லி சிரிப்பான்.வேண்டுமென்றே அவளுக்குப் போன் செய்யாமல் விட்டுவிடுவான்.ஐந்தாம் மாத இறுதியில் பள்ளி விடுமுறையின்போது அவர்களின் திருமணத்தை நடத்திவிட தீர்மானித்தார்கள் பெரியவர்கள். * * * கேரலின் ஓரளவிற்கு பழைய நிலைக்குத் திரும்பியிருந்தாள்.சில சமயங்களில் அவள் சோகமாய் இருக்கும்போது ஏதாவது சேட்டைகள் செய்து அவளது கவலைகளை மறக்க வைத்துவிடுவார்கள்.அவளைத் தனியாக இருக்கவே விடமாட்டார்கள்.எப்போதும் போல் அவர்களுடைய சேட்டைகள் நான்கு சுவர்களுக்குள் அரங்கேறி கொண்டுதான் இருந்தன. பரபரப்பான ஐந்தாம் பருவத்தை மேலும் பரபரப்பாக்க கல்லூரியின் இருபத்தைந்தாம் ஆண்டு நிறைவு விழாவும்,பட்டமளிப்பு விழாவும் வந்து சேர்ந்து கொண்டது.அதைக் கொண்டாடும் வகையில் ஏப்ரல் மாதத்தில் நான்கு நாட்களுக்குக் கல்லூரியில் ஆடல்,பாடல் கொண்டாட்டங்கள் ஏற்பாடாகி வந்தன.பூங்குழலியும், கீதாவும் கலை கலாச்சார பிரிவில் இருந்ததால் தமிழ்த்துறை மாணவர்களின் சார்பாக நடனம் ஆடவிருந்தார்கள்.எப்போதும் ஏன் கோலாட்டமே ஆடிக்கொண்டிருக்க வேண்டுமென்று சற்று வித்தியாசமாக பங்கரா நடனத்தைப் படைக்க பயிற்சி செய்தார்கள்.காலையிலிருந்து ஒன்றரை மணி வரை வகுப்பு.திங்கள், புதன் கிழமைகளில் மதியம் இரண்டு முதல் நான்கு வரை புறப்பாட நடவடிக்கை. திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் மாலை ஐந்து முதல் ஆறு முப்பது வரை விளையாட்டு.சில சமயங்களில் இரவு நேரங்களில் ஏதாவது நிகழ்வுகள் இருக்கும்.அவற்றையெல்லாம் பார்த்துக்கொண்டே பங்கரா நடனப் பயிற்சியையும் மேற்கொண்டார்கள் அவர்கள். தினமும் மாலை ஏழு மணியிலிருந்து இரவு பத்து வரை நடனப் பயிற்சி செய்வார்கள்.பங்கரா நடனம் விறுவிறுப்பான நடன அசைவுகளைக் கொண்டிருப்பதால் ஆடி முடித்த பின் கால்கள் பயங்கரமாக வலிக்கும்.இரவில் படுக்கும்போதுதான் அந்த வலியின் வேதனையே தெரியும்.ஆனால் அவ்வளவு வலிகளையும் மீறி ஏதோ ஒரு சந்தோஷம் இந்த ஐந்தாம் பருவத்தில் நிறைந்திருப்பதாகவே தெரிந்தது.