Sunday, February 27, 2011

தேன்மொழி எந்தன் தேன்மொழி அத்தியாயம் 3

தேன்மொழி எந்தன் தேன்மொழி - அத்தியாயம் 3





 

எங்கெங்கு நீ சென்ற போதும்
என் நெஞ்சமே உன்னைத் தேடும்
ஆனந்த கீதம் ஆரம்பமாகும்….
காலங்கள் யாவும் நம்மோடு பாடும்….

     தேன்மொழிக்கு நடந்ததை எல்லாம் நினைக்க ஆச்சரியமாகவே இருந்தது,எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாத தன் வாழ்வில் இந்த பிரியன் எங்கிருந்து வந்தான்? அவனுக்கும் தனக்கும் இடையில் இருப்பது என்ன உறவு?அந்தப் புதிருக்கான விடை தெரியவில்லை என்பதைவிட அவள் தேட முயற்சிக்கவில்லை என்பதே நிஜம்.
     தேனு,நாளைக்குக் காலையில சீக்கிரமா வந்திடு்,” அவள் போகுமுன் பிரியன் அவளிடம் விண்ணப்பம் விடுத்தான்.
     ஆனால் தேன்மொழி மறுநாள் சற்று தாமதமாகதான் கோயிலுக்கு வந்தாள்.பிரியன் முதலிலேயே வந்துவிட்டிருந்தான்.வந்ததுமே அவன் கண்கள் முதலில் தேடியது தேன்மொழியைத்தான்.அவளைப் பார்த்தவுடன்தான் அவனுக்கு நிம்மதியாக இருந்தது.அவள் சிறிய பார்டர் போடப்பட்ட சந்தன நிற சேலையை அணிந்து வந்திருந்தாள்.அவளுடைய அப்பாவும், தங்கையும் காலையிலேயே ஆற்றங்கரைக்குப் போய்விட்டார்கள்.தேன்மொழி அர்ச்சனை தட்டை வாங்கிகொண்டு சுவரோரமாய் முதுகைச் சாய்த்து அமர்ந்தாள்.
     பிரியன் அன்று முழுவதும் அவள் அருகிலேயே இருந்தான்.அவள் தன்னை விட்டு எங்கும் போவதை அவன் விரும்பவில்லை.கச்சான் பூத்தே கடையில், கோயிலில்,பந்தி பரிமாறப்படும் இடத்தில் இப்படி எல்லா இடத்திலும் அவன் மனம் அவளைத் தேடி ஏங்கியது.தேன்மொழிக்கு அப்படியெல்லாம் ஒன்றுமில்லை.அவள் இயல்பாகத்தான் இருந்தாள்.
    ஒரு வழியாக திருவிழா, மஞ்சள் நீராட்டு, ரத ஊர்வலம் எல்லாம் முடிந்து பிரியன் ஈப்போவுக்குத் திரும்பும் நாளும் வந்தது,தேன்மொழியிடம் தனியாக பேச வாய்ப்பு ஏதும் கிடைக்காமல் போய் ஏக்கத்தோடு திரும்பினான்,

* * *
     பிரியன் ஈப்போவிற்குத் திரும்பி ஐந்தாறு மாதங்களுக்குப் பிறகு ஒரு நாள்
    தேன்மொழி ரசம் வைப்பதற்காக இடிக்கல்லில் பூண்டையும், மிளகையும் இடித்துக் கொண்டிருந்தாள்.வாசலில் ஒரு கார் வந்து நின்றது.யாரென்று எட்டிப் பார்த்துவிட்டு மீ்ண்டும் சமையலைத் தொடர்ந்தாள்.
    ஹாலில் உட்கார்ந்திருந்த பிரியனுக்கோ இருப்பு கொள்ளவில்லை.ஆசையாய்ப் பார்க்க வந்தால் முகம் காட்டமாட்டேன் என்கிறாளே என்று தேன்மொழியின் மீது கோபம்.தேன்மொழி வேண்டுமென்றே காப்பியைக் கூட கயல்விழியிடம்தான் கொடுத்து அனுப்பினாள்.பிரியன் இனி ஒரு வினாடி கூட காத்திருக்க முடியாது என்பதுபோல முகம் கழுவிவிட்டு வருவதாக பொய்ச் சொல்லிவிட்டு சமையலறையினுள் நுழைந்தான்.
    புளியைக் கரைத்துக் கொண்டிருந்த தேன்மொழி எதார்த்தமாக திரும்பியபோதுதான் பிரியன் தன்னைக் கோபத்தோடு வெறிப்பதைப் பார்த்தாள்.என்ன ஏது என்று விசாரிப்பதற்குள் பிரியன் அவளுடைய கரங்களைப் பற்றினான்.
    ஒனக்கு நெஜமா ஒன்னும் புரியலியா..இல்லை புரியாத மாதிரி நடிக்கிறியா?நான் தானா ஒரு பொண்ணுக்கிட்ட போயி பேசறேன்னா அது நீதான், என்றான்.சம்பந்தமில்லாததைப் போல் அவன் ஏதேதோ உளற,அவள் திகைத்து நிற்க. பிரேமா உள்ளே நுழைந்தாள்.
   தேனு, நான் உன்னைக் கூட்டிட்டுப் போகத்தான் வந்தேன்.சீக்கிரம் கிளம்பு.பிரேமா அவளை அவசரப்படுத்தினாள்.
   அதன்பிறகுதான் தேன்மொழிக்கு விசயமே தெரிந்தது.பிரியனுடைய அக்கா கோமதிக்குக் குழந்தை பிறந்திருக்கிறது.தலைப்பிரசவம் என்பதால் பிரேமாதான் பார்த்துக் கொள்கிறாள்.தேன்மொழி எஸ்.பி.எம் தேர்வெழுதிவிட்டு வீட்டில் இருப்பதால் இரண்டு மாதத்திற்கு அவளை வீட்டு வேலைகளுக்கு உதவியாக அழைத்துப் போகலாம் என்றுதான் பிரேமா வந்திருக்கிறாள்.
   தேன்மொழியால் உடனே எந்த முடிவும் சொல்ல இயலவில்லை.பிரியன் ஒரு விதத்தில் அவளை ஈர்த்து வைத்திருப்பது உண்மைதான் என்றாலும் எப்படி தன் அப்பாவையும். தங்கையையும் விட்டுவிட்டு பழக்கமில்லாத வீட்டில் இருப்பது?
    இராமசாமிக்கு முதலில் அவளை அனுப்புவதில் அவ்வளவாக விருப்பமில்லை.காரணம் அவள் எளிதில் உணர்ச்சிவசப்படுபவள்.ஒரு சாதாரண சின்ன விசயம் கூட அவளை எளிதில் காயப்படுத்திவிடும்.ஆனால் இரண்டு மாதம்தானே சீக்கிரம் ஓடிவிடும் என்று பிரேமாதான் அவரை வற்புறுத்தி பணிய வைத்தாள்.

* * *
     தேன்மொழி பிரியனின் வீட்டுக்கு வந்து இரண்டு வாரமாகிவிட்டிருந்தது.இதுவரை பிரியனின் வீட்டில் எல்லாரும் அவளை நன்றாகத்தான் பார்த்துக் கொண்டார்கள்.ஆனாலும் தேன்மொழிக்குத் தன் வீட்டின் மீதான ஏக்கம் மேலும் மேலும் வலுத்ததே தவிர குறையவில்லை.முருகம்மா பாட்டி இரண்டு மாதத்திற்கு தான் சமைத்துக் கொடுப்பதாக சொன்னார்தான் இருந்தாலும் அவளுக்கு மனது கேட்கவில்லை.
      பிரியனின் வீட்டில் மீன்,கோழி என்று விதவிதமான உணவு வகைகள்.ஆனால் அவளால்தான் சாப்பிட முடியவில்லை.அங்கே அப்பாவும்,தங்கையும் சாதாரண காய்கறிகளை மட்டுமே சாப்பிட்டுக் கொண்டிருக்க தன்னால் மட்டும் எப்படி கோழியும், மீனும் சாப்பிட முடியும்?எப்போது இரண்டு மாதம் முடியும்? தன் வீட்டுக்குப் போகலாம் என்றுதான் அவள் மனம் ஏங்கியது.
     அவளுக்குப் பிரியனின் குடும்பத்தைப் பிடித்த அளவுக்கு அவனுடைய வீட்டையும், பட்டணத்து வாழ்க்கையையும் பிடிக்கவில்லை,தோட்டப்புற சூழலிலேயே வாழ்ந்து பழகிவிட்ட அவளுக்குச் சில விசயங்கள் புரியாமலும்,பிடிக்காமலும் இருந்தன.
    நினைத்த நேரத்தில் சில பொருட்களைத் தூக்கிப் போட்டுவிட்டு புதிய பொருட்களை வாங்கி போட்டுக்கொண்டு பெருமையடித்த  அவர்களின் ஆடம்பரத்தனம் பிடிக்கவில்லை.ஒரு தடவை மழை வந்து அவள் அம்மா பயன்படுத்திய பழைய குடை சாக்கடையில் அடித்துப் போனபோது அந்தக் குடைக்காக அவள் அப்படிதான் அழுதாள்.உயிரில்லாத பொருட்களுக்குக் கூட உணர்வுகள் இருப்பதாக அவளுக்குத் தோன்றும்.பிரியன் அதனாலேயே அவளைக் கிண்டல் செய்வான்.
    இப்படியே கிண்டலும், கேலியுமாக அவர்களின் உறவு இயல்பாக வளர்ந்தது.பிரியன் அவளைப் பல இடங்களுக்கு அழைத்துப் போனான்,அவ்வாரம் வெள்ளிக்கிழமை அவளை முதன்முதலாக தாமான் பொர்த்தாமாவிலுள்ள நாகம்மா கோயிலுக்கு அழைத்துப் போனான்.அந்தக் கோயில் பார்க்க சிறியதாக இருந்தாலும் கலையம்சத்தோடு உள்ளத்தைக் கொள்ளைக் கொள்ளும் வகையில் அமைந்திருந்தது.அங்கிருந்த அம்மன் சிலைகள் யாவும் நேரில் பார்ப்பது போன்று தத்ரூபமாக அமைந்திருந்தன.தேன்மொழிக்கு அந்தக் கோயிலை மிகவும் பிடித்துப் போனது.
    மறுவாரம் பிரியன் கோலாலம்பூருக்குப் போய்விட்டதால் தேன்மொழி அக்கோயிலுக்குத் தனியாக வந்தாள்.அர்ச்சனை செய்துவிட்டு கையில் தேங்காயை எடுத்துக்கொண்டு கோயிலை வலம் வந்தாள்.தலையைக் குனிந்து கொண்டே வந்ததால் எதிரே சில்வர் வாளிகளில் கச்சான் மற்றும் பொங்கல் சோற்றைத் தூக்கிக்கொண்டு வந்து கொண்டிருந்த ஹரியையும், வருணனையும் கவனிக்காமல் வருண் மீது மோதினாள்,அவள் மோதிய வேகத்தில் அவள் கையிலிருந்த தேங்காய் ஹரியின் காலில் விழுந்தது.காலைப் பிடித்துக் கொண்டு வலியால் துடித்த அவன் நிமிர்ந்தபோது அவள் அங்கில்லை.
   எல்லாமே நொடிப்பொழுதில் நடந்து முடிந்துவிட்டதால்  அவர்கள் இருவரும் தன்னைச் சரியாக கவனித்திருக்க மாட்டார்கள் என்றே அவள் நம்பினாள்.ஆனால் கச்சானைப் பரிமாறிக்கொண்டே வந்த ஹரி அவளைப் பார்த்ததும் உடனே அடையாளம் கண்டுகொண்டான்.
   ஏ பொண்ணு, நீதானே என் காலுல தேங்காயைப் போட்ட? என் கால் விரல்ல ஒரு விரலு துண்டா போச்சி தெரியுமா?” ஹரி கோபமாக கேட்டதும் அவள் பயந்து போய் அவனுடைய கால்விரல்களைப் பார்த்தாள்.
  என்னா அஞ்சி வெரலும் அப்படியே இருக்குன்னு பாக்கறீங்களா? அவனுக்கு ஆறு வெரலுங்க வருண் தன் பங்கிற்கு அவளைப் பயமுறுத்தினான்.
   வருண் எதுக்கும் கையில் தேங்காய் எதுனா வெச்சிருக்கான்னு பாத்துடு,”
   அவர்கள் இருவரும் விளையாட்டுக்காகதான் அப்படி சொன்னார்கள்.ஆனால் தேன்மொழி அதை நிஜமென்று நம்பி பயந்து போனாள்,அவளுடைய கண்களிலிருந்து ஒரு சொட்டு கண்ணீர்த் துளி வாழையிலையில் வருண் வைத்துவிட்டுப் போன  பொங்கல் சோற்றில் கலந்தது.வருண் அதைப் பார்த்துவிட்டான்,
    பொங்கல் சோறு உப்பு கரிச்சா என் தப்பில்லைங்க,” பொங்கி வந்த சிரிப்பைக் கட்டுப்படுத்திக்கொண்ட வருண் அவளிடம் அப்படி சொல்லிவிட்டு பின்னால் திரும்பி சிரித்துக் கொண்டே போனான்.
  
                                                   தொடரும் ,,,,,,,,,,,,,,,


தேன்மொழி எந்தன் தேன்மொழி - அத்தியாயம் 3












Friday, February 25, 2011

தேன்மொழி எந்தன் தேன்மொழி - அத்தியாயம் 2

தேன்மொழி எந்தன் தேன்மொழி - அத்தியாயம் 2



 

பாவாடை தாவணியில்
பார்த்த உருவமா இது?
பாலாடை போன்ற முகம் மாறியதேனோ?
பனி போல நாணம் அதில் கூடியதேனோ?

    முருகம்மா பாட்டி முருங்கை கீரையை அதன் தண்டிலிருந்து உருவி ஒரு பெரிய பாத்திரத்தில் போட்டுக்கொண்டிருந்தாள்.தேன்மொழி பாட்டிக்குத் துணையாக கீரையை உருவிக்கொண்டே அவளுடன் பேசிக்கொண்டிருந்தாள்.
      எப்படி இருக்கீங்க? சௌரியமா?” மிக அருகில் ஒரு பெண்குரல் கேட்கவும் இருவரும் திடுக்கிட்டு நிமிர்ந்தார்கள்.ஆறு வருடங்களுக்கு முன் தோட்டத்தை விட்டு போன பிரேமா வந்திருந்தாள்.அவளுடன்….
      ஐயோ இவனா?இவன் எப்படி?” கோயிலில் அவளைக் காப்பாற்றிய இளைஞனைப் பார்த்து அவள் குழம்பி கொண்டிருந்தாள்.
      பிரேமாவைக் கண்டுபிடிக்க முடிந்த பாட்டியால் பிரியனை அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை.தன் சிறுத்துப் போன கண்களால் அவனையே உற்றுப் பார்த்தாள்.
     என்னாங்க இப்படி பாக்கறீங்க? இவன அடையாளம் தெரியலையா?என் ரெண்டாவது பையன் பிரியன்.”
     பிரியனா?பெரிய ஆம்பளையாயிட்டானே?” என்ற பாட்டி தேன்மொழியிடம் திரும்பினாள்.
    அம்மாடி, கடைக்காரர்கிட்ட போயி நான் கேட்டேன்னு ஒரு சின்ன பாக்கெட்டு எவரிடே மாவு வாங்கிட்டு வா.கணக்குல எழுதிக்கச் சொல்லு. சம்பளம் போட்டதும் காசு வந்துடறேன்
     துளி கூட யோசிக்காமல் அந்த இடத்தைவிட்டு ஓடினாள் தேன்மொழி, கடைக்காரரிடம் மாவு வாங்கி பின்னபக்க வழியாக கொடுத்துவிட்டு தன் வீட்டுக்கு ஓடிவிட்டாள்.
     பிரியன்தான் தன்னைத் தாங்கி பிடித்து காப்பாற்றியவன் என்பதை அவளால் நம்பவே முடியவில்லை.முன்தினம் கோயிலிலிருந்து வீட்டுக்குப் போகும்போது எதிரில் வந்தவன் அவளிடம் என்னவோ பேசவந்தான்.அவள்தான் பயந்து போய் ஓடிவிட்டாள்.ஒரு வேளை தான் யார் என்பதை சொல்லத்தான் வந்தானோ என்னவோ?
    பிரியனுக்கு அவளைவிட நான்கு வயது அதிகம்.பத்து வயதிலிருந்தே அவன் ஈப்போவிலுள்ள பாட்டி வீட்டில்தான் வளர்ந்தான்.பள்ளி விடுமுறை என்றால் உடனே வந்துவிடுவான்.ஐந்து வருடங்களுக்கு முன் ஒரு நாள் அவன் பாட்டி இறந்து போனாள்.அதிலிருந்து அவனுடைய குடும்பமே ஈப்போவிற்கு இடம் மாறிவிட்டது.
    முருகம்மா பாட்டியின் வீட்டிலிருந்து அவர்கள் நேராக இவளுடைய வீட்டிற்குதான் வந்தார்கள்.பாட்டி வீட்டிலேயே தேநீர் குடித்துவிட்டு வந்தது நல்லதாகப் போய்விட்டது.தேன்மொழியின் வீட்டில் மாவு,தேத்தூள் எல்லாம் முடிந்து போயிருந்தது.
    ராமசாமி அவர்களிடம் பேசிக்கொண்டிருக்க, தேன்மொழி ஓர் ஓரமாக அமர்ந்து கொண்டிருந்தாள்.பிரியன் தன்னைப் பார்ப்பது போன்றதொரு பிரமை அவளுக்கு உண்டானது.ஏறிட்டுப் பார்க்கவும் பயமாக இருந்தது.ஐந்து வருடங்களாக கண்ணில் படாதவனாயிற்றே
    ஆறு வருடங்களுக்கு முன் ஒரு செவ்வாய்க்கிழமை மழை பெய்து கொண்டிருந்த சாயங்கால வேளையில்தான் அவள் பெரிய மனுஷியானாள்,அவளுக்கு மாமன் முறை மாலை போட்டவன் பிரியன்தான்.வெட்கப்பட்டு நாணி, கோணி உட்கார்ந்திருந்த அவளை அடிக்கொரு தரம் அதிசயமாய்ப் பார்த்து மேலும் வெட்கப்பட வைத்தவனாயிற்றே?
   அதன்பிறகு அவள் முருகன் கோயில் திருவிழாவிற்கு முதன்முதலாய் தாவணி அணிந்து போனபோது தன் நண்பர்களுடன் எதிரே வந்த பிரியன் அவளை பிரமிப்பாய்ப் பார்த்ததும், பார்த்துக்கொண்டே இருந்ததும் அவள் மனதில் இன்னும் சர்க்கரையாய் இனிக்கவே செய்தது.அதுதான் அவள் அவனைக் கடைசியாய்ப் பார்த்தது.அவள் அம்மா இறந்தபோது கூட அவன் வரவில்லை,ஒரு வேளை அவன் வந்திருந்தாலும் வந்திருக்கலாம்.அவள் என்ன பார்க்கும் நிலையிலா இருந்தாள்?
   போயிட்டு வரேன்மா தேனு,” பிரேமா அவளை இறந்த காலத்திலிருந்து மீட்டு வந்து அவளிடம் விடைபெற்று போனாள்.பிரியன் அவளைப் பார்த்து இலேசாக புன்முறுவல் பூத்தான்.கடைசியாக பார்த்தபோது இலேசான அரும்பு மீசை, மெலிந்த உடலோடு, உயரமாக, வெடவெடவென இருந்தவன் இப்போது பார்ப்பதற்கு வாட்டசாட்டமாக,அழகாக இருந்தான்.மீசையின்றி வழவழவென முகமும்,கோதுமை நிறமும் அவன் வடகத்தி இளைஞனோ என்ற ஐயத்தை ஏற்படுத்தும் விதத்தில் இருந்தது.அவன் அணிந்திருந்த கண்ணாடி அவனுடைய அமைதியான தோற்றத்திற்கு நன்கு பொருந்தியது.

     திருவிழாவிற்கு முதல்நாள்  காலை.நல்ல மழை.வேலைக்குப் போயிருந்தவர்கள் மழையில் நனைந்து போய் வந்தார்கள்.இராமசாமி தலையில் பிளாஸ்டிக் பையைப் போட்டுக்கொண்டு வந்தார்.ஒரு சிலர் வாழை இலையைத் தலைக்கு மேல் பிடித்துக்கொண்டு வந்தார்கள்.சீவிய மரத்திலிருந்து பாலை எடுக்கும் முன்பே மழை வந்து கெடுத்துவிட்டது என்று ஒரு சிலர் புலம்பினாலும் பெரும்பாலோருக்குச் சந்தோஷம்தான்.காரணம் திருவிழாவை முன்னிட்டு சம்பளத்தை முன்கூட்டியே கொடுக்க இருந்தார்கள்.மழைத்திட்டி கிடைத்துவிட்டால் காலையிலேயே சம்பளம் கிடைத்துவிடும்,பட்டணத்திற்குப் போய் வரலாமே..
      சம்பளம் போட்டுவிட்டதால் வழக்கமாக வந்து போகும் துணிவியாபாரிகள் வந்திருந்தார்கள்.பழைய கடனை வசூலித்துவிட்டு அப்படியே திருவிழாவைக் காரணம் காட்டி விற்பதற்கு கொலுசு, வளையல் எல்லாம் எடுத்து வந்திருந்தார்கள்.ராமசாமி தன் சக்திக்கு ஏற்றவாறு தேன்மொழிக்கும்,கயல்விழிக்கும் கண்ணாடி வளையலும், பிளாஸ்டிக் முத்து மாலையும் வாங்கி கொடுத்தார்.கயல்விழிக்கு ஒரே சந்தோஷம்.அன்றிரவு கோயிலுக்குப் போகும்போதே அதை அணிந்துகொண்டாள்.
    மறுநாள் திருவிழாவை முன்னிட்டு கோயிலில் நிறைய வேலைகள் இருந்தன.தேன்மொழியும் அங்குதான் இருந்தாள்.ஆண்களில் சிலர் காவடியை ஜோடித்துக்கொண்டிருக்க, இளம்பெண்கள் மாலை தொடுத்துக் கொண்டும். காய்கறிகளை வெட்டிக் கொடுத்து கொண்டும் இருந்தார்கள்.கிழவட்டங்கள் ஒன்றாக சேர்ந்து கொண்டு யார் யார் வீட்டில் என்ன நடந்தது என்ற ஊர்கதை பேசினார்கள்.சின்ன சின்ன வாண்டுகள் அழகாக உடுத்திக் கொண்டு குறுக்கும் நெடுக்கும் ஓடிக்கொண்டிருந்தன.பெரிய திரை கட்டி பக்திப் படம் வேறு திரையிடப்பட்டிருந்தது.
   அக்கா, வீட்டுக்குப் போலாமா?தூக்கம் வருது,”அரைத்தூக்கத்தில் கெஞ்சிய தங்கையை வீட்டில் விட்டுவிட்டு மீண்டும் கோயிலுக்குக் கிளம்பினாள்.பழகிப் போன பாதை என்பதால் அவளுக்குப் பயமில்லை.மழை பெய்திருந்ததால் பாதையெங்கிலும் சேறு.பாவாடையைத் தூக்கிப் பிடித்தவாறு நடந்தாள்.
   தேனு, கொஞ்சம் நில்லேன்,” யார் அழைத்தது என்று திரும்பி பார்த்தாள்.பிரியன்தான் அவளை அழைத்திருந்தான்.நிற்பதா போவதா என்று அவள் தடுமாறிக்கொண்டிருக்கும்போதே பிரியன் அவள் அருகில் வந்து நின்றான்.
   எப்படி வளந்துட்ட தேனு?முன்ன பாவாடை தாவணியில பாத்ததுக்கும்,இப்ப பாக்கறதுக்கும் ரொம்ப வித்தியாசம் உன்கிட்ட.அன்னிக்கு நான் கோயிலுக்கு உன்ன பாக்கத்தான் வந்தேன்.உன் பின்னால நின்னுக்கிட்டு இருந்ததும் ஒரு வகையில நல்லதா போச்சி பாத்தியா?” என்றான்,பிறகு ஏதேதோ விசாரித்தான்.அவள் ஒவ்வொரு வார்த்தையாக யோசித்து யோசித்து உதிர்த்தாள்.இருவரும் பேசிக்கொண்டே(?) நடந்தார்கள்.
    கோயிலை அடைந்ததும் அவன் விலகிப் போய்விட்டான்.அவளால் அவனைப் புரிந்து கொள்ளவே முடியவில்லை.யாரும் இல்லையென்றால் நன்றாக பேசுகிறான்.யாரேனும் இருந்தால் தெரியாத மாதிரி இருக்கிறான்.இருந்த போதிலும் சிறுவயதில் தன்னுடன் ஒன்றாக கைபிடித்து விளையாடிய பிரியன்தான் தன்னைத் தொட்டுத் தூக்கினான் என்று தெரிந்தபின் அவள் மனம் கொஞ்சம் நிம்மதியடைந்தது.
    தேன்மொழி இருந்ததால் பிரியனும் விடிய விடிய கோயிலிலேயே இருக்க தீர்மானித்தான்.ஆனால் தேன்மொழிக்கு அதிகாலை மூன்று மணிக்கெல்லாம் தூக்கம் வந்துவிட்டது.கத்தரிக்காயை மட்டும் வெட்டிக் கொடுத்துவிட்டு வந்துவிடலாம் என்று ஒரு பாத்திரத்தை எடுத்துக்கொண்டு குழாயடியில் தண்ணீர் பிடிக்கப் போனாள்.
    அவள் குழாயடியில் தனியாக இருப்பதைப் பார்த்த பிரியன் அவளை நெருங்கினான்.அவள் தான் வீட்டுக்குக் கிளம்பப் போவதாக கூறியதும் அவனும் துணைக்கு வருவதாக சொன்னான்.
     அவள் வரும்வரை காத்திருந்தவன் அவள் மறுத்தும் கேளாமல் அவளுக்குத் துணையாக வந்தான்.அவளுக்குப் பயம் வேறு.யாராவது பார்த்தால் என்னாவது என்று சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டே அவனுடன் நடந்தாள்.



                                                   தொடரும் ….

தேன்மொழி எந்தன் தேன்மொழி - அத்தியாயம் 1

தேன்மொழி எந்தன் தேன்மொழி - அத்தியாயம் 1



 

கையில் மிதக்கும் கனவா நீ?
கைகால் முளைத்த காற்றா நீ?
கையில் ஏந்தியும் கனக்கவில்லையே?!

    1997 - ஆம் வருடத்து நள்ளிரவு நேரம். சத்தம் போடாமல் வெளியே வந்து வானத்தை வேடிக்கைப் பார்த்தாள் தேன்மொழி.வைரக்கற்களாய் மின்னிய நடசத்திரங்களுக்கிடையே பருவ நிலா வெட்கப்பட்டு தன் முகத்தை மேகத்தில் மறைத்திருந்தது,
   சற்று நேரம் வானத்தை வேடிக்கைப் பார்த்த தேன்மொழி வீட்டுக்குள் போய்விட்டாள்,
   காலை ஐந்து மணிக்கெல்லாம் சுப்ரமணி தண்டலின் மணி சத்தம்தான் அவளை எழுப்பியது.மணியடிப்பதில் அவரை மிஞ்ச யாரும் இல்லை.அவரது கை பட்டு எழும்பும் மணியின் சத்தமே வேறு.எப்பேர்ப்பட்ட கும்பகர்ணனையும் வாரி சுருட்டி எழ செய்யும் சக்தி அவரது மணி சத்தத்திற்கு மட்டுமே உரித்தானது.
   தேன்மொழி அவிழ்ந்திருந்த கூந்தலை ஒன்றாக சேர்த்து கொண்டை முடிந்துக்கொண்டே சமையலறைக்குள் நழைந்தாள்,முடிந்து போய் வரமாட்டேன் என்று அடம்பிடித்த பற்பசையை இரண்டாக வெட்டி,தூரிகையை உள்ளே விட்டு எடுத்தாள்.பல்லைத் துலக்கிவிட்டு முன்தினம் வைத்த கீரைக்கறியை அடுப்பில் வைத்து சூடு காட்டினாள்,பிறகு அரிசியைக் களைந்து வேகப்போட்டாள்.
   அவள் வீட்டைக் கூட்டி வாசலைக் கழுவிவிட்டு வருவதற்குள் சோறு வெந்துவிட்டிருந்தது.சாதத்தை வடித்து கஞ்சித்தண்ணியை வேறொரு பானையில் ஊற்றிவைத்தாள்,அவள் அப்பா ராமசாமிக்கு சாதத்தை வடிகட்டினால்தான் பிடிக்கும்,கஞ்சித்தண்ணியும் வீணாகாது அல்லவா? மாதக் கடைசியில் வீட்டில் மாவு, தேத்தூள் எல்லாம் முடிந்து போனால் தேநீருக்குப் பதில் கஞ்சித்தண்ணிதானே?
   தேன்மொழி குளித்துவிட்டு வருவதற்குள் அவள் அப்பா வெளிக்காட்டு வேலைக்குப் போகத் தயாராக இருந்தார்.பள்ளிக்குப் போக கிளம்பிவிட்ட தேன்மொழி வீட்டுக்கு வெளியே வந்து நின்று வேடிக்கைப் பார்த்தாள்.பக்கத்து வீட்டு மீனாவின் குழந்தை ஆயாக்கொட்டகைக்கு வரமாட்டேன் என்று அடம்பிடித்து அழுதது.வாயில் எந்நேரமும் வெற்றிலையை மென்று கொண்டு வளளவென பேசிக்கொண்டிருக்கும் ஆயம்மாவை ஏனோ குழந்தைகளுக்குப் பிடிப்பதேயில்லை.சிறுவயதில் அவளும் அப்படிதானே...
   என்னா தேனு, இன்னும் ஸ்கூல் பஸ் வரலியா?” நெற்றியில் விளக்கைக் கட்டியிருந்த எதிர்வீட்டு கோமளம் காண்டாவைத் தோளில் மாட்டியபடி விசாரித்தாள்.அவளுக்குப் பதில் சொல்வதற்குள் அவளுடைய தங்கை கயல்விழி ஓடிவந்தாள்.
   அக்கா,எனக்கு பூரான் சடை போட்டுவிடுக்கா,” சீப்பை அவளிடம் நீட்டினாள்.அவளுக்குத் தலைசீவி விட்டுவிட்டு தன் புத்தகப்பையை எடுத்துக்கொண்டு பள்ளிக்குக் கிளம்பினாள் தேன்மொழி.
   அவள் பள்ளி முடிந்து வருவதற்குள் மாலை மணி ஐந்தாகிவிட்டிருந்தது.ஐந்தாம் படிவத்தில் பயில்வதால் அவளுக்குப் பிரத்தியேக வகுப்பு இருக்கும்.பள்ளி முடிந்து வந்ததும் சீருடையை மாற்றிக்கொண்டு உடனே சமையல் வேலையில் இறங்க வேண்டும்.அம்மா இருந்தவரை தேன்மொழி இவ்வளவு சிரமப்பட்டதில்லை.எல்லாவற்றையும் அவளே பார்த்துக்கொள்வாள்,அதனால்தானோ என்னவோ சீக்கிரமே நோய்வாய்ப்பட்டு இறந்து போனாள்.புத்தகப்பையைச் சுமக்க வேண்டிய வயதில் குடும்ப பொறுப்பைச் சுமக்க வேண்டிய நிலை அவளுக்கு.
   தேனு, கொஞ்சம் தைலம் எடுத்து வாம்மா,இன்னிக்கு ஒரம் போட வெச்சுட்டாங்க. ஒடம்பெல்லாம் வலிக்குது, ராமசாமிதான் அவளை அழைத்தார்.
   அப்பாவை நினைக்கையில் அவளுக்குப் பாவமாகதான் இருந்தது.அம்மாவின் இழப்பு அவரைப் பெருமளவில் பாதித்துவிட்டிருந்தது.அவளுக்கு ஒரு அண்ணன் இருந்திருந்தாலாவது அப்பாவின் பளு கொஞ்சம் குறைந்திருக்கும்.
   தேன்மொழி தைலத்தை எடுத்துக்கொண்டு வாசலுக்குப் போனாள்.அப்பா பக்கத்துவீட்டு முருகம்மா பாட்டியிடம் பேசிக்கொண்டிருந்தார்.பாட்டியின் முகத்தில் வழக்கத்திற்கு மாறான களிப்பைப் பார்க்க முடிந்தது.இன்னும் ஒரு வாரத்தில் தோட்டத்து முருகன் கோவிலில் திருவிழா வரப்போவதால் முருகம்மா பாட்டியின் மகன் தன் மனைவி, பிள்ளைகளுடன் வந்திருந்தார்.அதுதான் அவளுடைய சந்தோஷத்திற்கான காரணம்.
   அவருடைய மகனைப் போலவே முன்பு தோட்டத்தைவிட்டுப் போயிருந்த பலரும் திருவிழாவைப் பார்ப்பதற்காக அவரவர் உறவினர் வீட்டில் வந்து தங்கியிருந்தார்கள்.அவளுடைய வீட்டிற்குதான் யாரும் வருவதில்லை.
   ஏன்க்கா நம்ம வீட்டுக்கு மட்டும் யாரும் வரதில்ல? லதா வீட்டுக்கு நெறய பேரு வந்திருக்கறதால அது என்கிட்ட பேசறதேயில்ல,,” தன் பன்னிரண்டு வயது தங்கையின் கேள்விக்கு அவளால் பதில் கூற இயலவில்லை.
    அம்மா இறந்தபிறகு அவளுடைய உறவுகளும் உடன்கட்டை ஏறிவிட்டன.பெரிய அத்தை மட்டும் அவ்வப்போது வந்து போனாள்.ஆனால் வரும்போதெல்லாம் தன் பிள்ளைகள் உடுத்தி பழையதாகிப் போன துணிகளைக் கொண்டுவந்து கொடுப்பாள்.அவள் அப்பாவுக்கு அது பிடிக்கவில்லை.புது துணிமணிகள் வாங்கி கொடுக்க முடியாவிட்டாலும் பரவாயில்லை,ஏன் பழையதைக் கொடுத்து அவமானப்படுத்த வேண்டும் என்று திட்டிவிட்டார்.அன்றிலிருந்து அவளும் வருவதில்லை.

* * *
     கோயில் திருவிழாவிற்கு இன்னும் முன்று நாட்களே இருந்தன.கோயில் புதிதாக சாயம் பூசப்பட்டு வெகு அழகாக இருந்தது.பக்தி பாடல்கள். ஆண் பெண் கூட்டங்களுடன் திருவிழா களை கட்டியிருந்தது,தேன்மொழிக்குத் திருவிழா என்றால் மிகவும் பிடிக்கும்.அதுவும் அவள் அம்மா இருந்தபோது அவளுடைய புடவை முந்தானையைப் பிடித்துக்கொண்டு அவளுடன் கோயிலைச் சுற்றி வருவதில் அவளுக்கு அலாதிப்பிரியம்.அங்கே விற்கப்படும் அவல், கடலை எல்லாம் இழூ;டம் போல் வாங்கி கொரித்துக் கொண்டிருப்பாள்.
   திருவிழா வருடந்தோறும் வந்து கொண்டேதான் இருக்கிறது.ஆனால் அம்மா….
   அம்மாவைப் பற்றி நினைக்கும்போதெல்லாம் அவளுக்கு ஏக்கமாக இருந்தது.அவள் ஏன் இவ்வளவு சீக்கிரம் செத்துப்போனாள்டூ அவள் இல்லாத திருவிழா இனிக்கவேயில்லை.தேன்மொழியை அவள் அம்மாவின் ஞாபகம் பாடாய்ப் படுத்தியது,
   அவள் அம்மா மிக அழகானவள்.வேலை முடிந்து வந்ததுமே தலையோடு குளித்துவிட்டு மஞ்சள் பூசிக்கொள்வாள்.அம்மாவின் மேல் வீசும் அந்த மஞ்சள் வாசம் கூட அவளுக்கு இன்னும் நினைவிலிருந்தது.
   தேன்மொழி அவள் அம்மா அளவுக்கு இல்லையென்றாலும் ஓரளவுக்கு அழகிதான்.தங்க நிறம்.வட்ட வடிவ முகத்தில் கண், காது. மூக்கு அனைத்தும் கச்சிதமான அளவில் அமைந்திருந்தது.நீண்ட அடர்த்தியான சுருட்டை முடி அவள் அம்மாவைப் போலவே.
   தேனு, இந்தப் பையனைக் கொஞ்ச நேரம் பிடிச்சுக்கம்மா. முருகம்மா பாட்டி தன்னுடைய இரண்டு வயது பேரனை அவளிடம் கொடுத்துவிட்டு புடவையைச் சரிசெய்து கொண்டாள்.அன்று அவளுடைய உபயம் என்பதால் புது புடவை கட்டியிருந்தாள்.அவளுடைய மகன் வாங்கி கொடுத்திருப்பார் போலும்.பாவம் அவளுக்கு வேறு யார்தான் இருக்கிறார்கள்?
   பாட்டி பேரனை வாங்கி கொண்டு போனதும் தேன்மொழி படியின் ஓரமாய் வந்து நின்றாள்.கோயிலில் கூட்டம் நிறைந்து கொண்டே இருந்தது. திடீரென எவனோ ஒருவன் தேன்மொழியை இடித்துத் தள்ளிவிட்டு ஓடினான்.தேன்மொழி நிலைதடுமாறி படியிலிருந்து கீழே விழப்போனாள்.அதற்குள் படியின் கீழிருந்து ஒரு வலிமையான ஆண்கரம் அவளைத் தாங்கி பிடித்தது.அவள் உடல் சிலிர்த்துப் போனது.ஒரே நிமிடம்தான்,அவனிடமிருந்து தன்னை விடுவித்து விலகி நின்றாள்,அவனோ எதுவும் நடவாததுபோல் அங்கிருந்து நகர்ந்தான்.
   அவன் மட்டும் பிடிக்காமல் விட்டிருந்தால் அவளுக்கு நிச்சயம் பலத்த அடி பட்டிருக்கும்.ஆனால் தன்னைக் காப்பாற்றிய அந்த இளைஞன் மீது அவளுக்குக் கோபம்தான் வந்தது.
   எத்தனை பேர் பார்த்திருப்பார்கள்?” ஏன் இப்படி செய்தான்?எவ்வளவு பெரிய அவமானம்?அவனைக் கண்டபடி கருவியவள் மீண்டும் அவன் தன் கண்ணில் படவே கூடாதென்று வேண்டிக்கொண்டாள்.அவளால் நிம்மதியாக சாமி கும்பிடவே முடியவில்லை.
   பூஜை முடிந்ததும் பிரசாதம் கூட வாங்காமல் தன் தங்கையை அழைத்துக்கொண்டு செம்மண் சாலையில் இறங்கி விடுவிடுவென நடக்கத் தொடங்கினாள்.எதிரே அவன் வந்து கொண்டிருந்தான்.

                                                   தொடரும் …….