அப்பாதான்
நமக்கு அறிமுகமாகும் முதல் கதாநாயகன் என்பார்கள்.அந்தக் கூற்றுக்கு நானும்
விதிவிலக்கல்ல.எனக்கு என் அப்பாதான் என்றென்றும் போற்றும் நற்பண்புகளும்,வீரமும் நிறைந்த
நிகரில்லாத கதாநாயகன்.அதற்குப் பல சம்பவங்கள் நான் வளர்ந்து நின்ற பருவம் வரையில்
சான்றாக அமைந்திருந்தன என்றபோதிலும் முதல் சம்பவமானது கொஞ்சம் அமானுஷ்யம்
நிறைந்தது.
எனக்கு அப்போது ஏறக்குறைய ஏழு
வயதிருக்கும்.எனக்கு அந்தத் தோட்டப்புறத்தில் ஓடியாடி விளையாடுவது என்றால் கொள்ளை
விருப்பம்.அந்தத் தோட்டப்புறம் என் பார்வையில் வெகு இரசனையாக இருந்தது.
அப்பா கங்காணியாக பணிபுரிந்துவந்தார்.ரப்பர்
பால் நிறுக்குமிடம் ஒன்று இருந்தது.அங்கேதான் அப்பா ரப்பர் பாலை நிறுப்பார்.அந்த
நேரத்தில் அங்கே போவேன்.பழைய முருகன் கோயில் இருக்கும் இடத்தையொட்டி ஓர் ஆலமரமும்,அரசமரமும்
ஒன்றாக பின்னி வளர்ந்திருந்தது.காற்று வீசும் பொழுதுகளில் அரசமரத்து இலைகள் வெகு
உயரத்திலிருந்து பறந்துவரும்.அப்பாவின் வேலை முடியும்வரை அந்த இலைகளை ஓடி ஓடி
பிடித்துக்கொண்டிருப்பேன்.சில வேளைகளில் சக நண்பர்களும் எங்களோடு சேர்ந்து
கொள்வார்கள்.அப்படி ஒரு சமயத்தில்தான் ரப்பர் பால் ஆலையின் அருகில் ஓர் இடத்தைக்
கண்டு பிடித்தோம்.சுரங்கம் மாதிரி இருக்கும்.நான்கைந்து படிகளில் இறங்கினால் அங்கே சிறு பாதாள அறை
இருக்கும்.அங்கு சில வினோதமான கருவிகள் எல்லாம் இருந்தன.அவை ரப்பர் ஆலையோடு
சம்பந்தப்பட்ட பொருள்கள் போலும்.ரப்பர் பாலை பட்டணத்தில் கொண்டு போய் அங்குள்ள
ஆலையில் வைத்து சில உற்பத்தி வேலைகள் நடைபெற்றதால் எங்கள் தோட்டப்புறத்திலுள்ள ஆலை
பயன்படுத்தப்படாமல் அப்படியே இருந்தது.அங்கு விளையாடுவது ஒரு வித்தியாசமான
அனுபவமாக இருந்ததால் தினமும் அங்கே விளையாட ஆரம்பித்தோம்.
ஒருநாள் என் அம்மா நாங்கள் அங்கு விளையாடுவதைப்
பார்த்துவிட்டார்.இனி அந்தப் பக்கம் போகவே கூடாது என மிரட்டினார்.அப்போதும்
கேளாமல் ஒருநாள் திருட்டுத்தனமாக அங்கு விளையாட போய்விட்ட நாங்கள் மலை ஏழுவரையில்
அந்த இடத்தில் விளையாடினோம்,அப்போது அங்கு அப்பா இல்லை.
இரவு ஏழு மணிக்கு இருட்ட தொடங்கியதும் ஒரு பயம்
வந்து வீட்டுக்குத் திரும்பிவிட்டோம்.அன்றிரவு படுத்து தூங்கும்போது நான் கட்டிலின்
வலது புறத்தில் கடைசியாக படுத்திருந்தேன்.ஏனோ என்னால் அன்று சரியாக
தூங்கமுடியவில்லை.
சுவரோரமாய் திரும்பி படுத்தபோது சுவரில் ஒரு
வித்தியாசமான உருவம் தோன்றியது.அந்த உருவத்தைச் சரியாக வர்ணிக்க கூட தெரியவில்லை
எனக்கு.அதற்கு முழுமையான வடிவம் இல்லை.முகம் மட்டும் அந்தச் சுவரில்
தெரிந்தது.சிறு சிறு கருப்புப் புள்ளிகள் சேர்ந்து ஒரு மனித முகம் மாதிரி
தோன்றியது.அது என்னைப் பார்த்து சிரித்தது.நான் அரண்டு போனேன்.எப்படியோ சத்தமாக
முனகிவிட்டேன்.என் அம்மா நான் தூக்கத்தில் உளறுகிறேன் போலும் என
நினைத்துவிட்டார்.நான் அம்மாவின் பக்கமாக திரும்பிகொண்டாலும் சுவரில் அந்த முகம்
என் முதுகுக்குப் பின்னால் சிரித்துக்கொண்டிருந்ததை உணரமுடிந்தது.அப்போது என்
அப்பா திடீரென எழுந்தார்.
சாமி மேடையில் அருகே சென்றவர் சூடத்தை
ஏற்றுக்கொண்டு வந்தார்.அம்மாவிடம் என்னை எழுப்ப சொன்னவர் என் முகத்துக்கு நேரே
மூன்று முறை சூடம் சுற்றி என் நெற்றியில் திருநீறு இட்டார்.அதன்பிறகு என்னைத்
தனக்கும்,அம்மாவுக்கும் மத்தியில் படுக்கவைத்தார்.அதன்பிறகு நான் நிம்மதியாக
உறங்கிப்போனேன்.
அந்தச் சம்பவத்திற்குப் பிறகு என் மனதில் அப்பா
கதாநாயகனாகிப் போனார்.எவ்வளவு பயங்கரமான பேயாக இருந்தாலும் சரி அப்பா வந்தால்
பயந்து ஓடிவிடும் என்ற பிம்பம் எனக்குள் தோன்றியது.அப்பா வீட்டில் இருந்தால்
எந்தப் பேயும் என்னை நெருங்கவே முடியாது என்ற இறுமாப்பு தோன்றியது.அப்பா என்னுடன்
இருக்கும் இரவுப்பொழுதுகள் எனக்குப் பாதுகாப்பானவையாக இருந்தன.
எனக்கும் என்
அப்பாவுக்கும் இடையிலான பாசப்பொழுதுகளை மையமாகக் கொண்டு எழுத விரும்பும்
இத்தொடரின் முதல் அத்தியாயத்தை நான் பிறப்பதற்கு முன்பிருந்தே ஆரம்பித்தால்
சிறப்பாக இருக்கும் காரணம் என் அப்பா என்னை நான் பிறப்பதற்கு முன்பே நேசிக்க
தொடங்கியவர்.
ஜாதகத்தில் நம்பிக்கை இல்லாத என் அப்பா எப்படியோ
யார் சொல்லியோ ஏதோ ஒரு நம்பிக்கையில் ஒரு புகழ்ப்பெற்ற ஜோதிடரிடம் ஒரு தடவை ஜாதகம்
பார்த்திருக்கிறார்.அவருக்கு ஜாதகம் பார்த்த அந்த ஜோதிடர் அப்பாவிடம்,“உனக்குப் பிடித்துப்போன பெண்ணை நீ திருமணம் செய்வாய்,அந்த மனைவியின் மூலம் உனக்கொரு பெண்குழந்தை பிறக்கும்.அந்தப் பெண்குழந்தை
உன் வாழ்வையே மாற்றியமைக்கும்.அந்தப் பெண்குழந்தை வந்தபிறகு உன் வாழ்க்கை
வசந்தமாகும்.அவள் உன்மீது மிகுந்த அன்பு கொண்டிருப்பாள்.உன் கடைசிக்காலத்தில்
அந்தப் பெண்பிள்ளையின் கையால் தண்ணீர் குடித்து,அவளது
கையில்தான் உன் உயிர் போகும்,”என்றாராம் அந்த ஜோதிடர்.என்
அப்பாவின் வாழ்க்கையில் படிப்படியாக நடந்த அனைத்துமே அந்த ஜோதிடர் சொன்னபடிதான்
நடந்தது.என் அப்பாவின் மரணமும் அவர் சொன்னமாதிரிதான் நடந்தது; என் கையால் தண்ணீர் குடித்து,என் கையில்தான்
அப்பாவின் உயிர் பிரிந்தது.
அந்த ஜோதிடரின் வார்த்தைகளை அப்பா ஏனோ
பெரிதும் நம்பியதால் என் பிறப்புக்கு ஆவலாக காத்திருந்திருக்கிறார்.எல்லா
பிள்ளைகளையும்விட என் மீது அவருக்கு அதீத அன்பு இருந்தது.
அம்மா சொன்ன கதைகளிலிருந்து கேட்ட விசயங்கள்
அவை.என்னைத் தூக்கி தோளில் சாய்த்துக்கொண்டு நடந்தபடியே தூங்கவைப்பாராம்.கைக்குழந்தையாக
இருந்தபோதே நான் அப்பாவைதான் அதிகம் தேடுவேனாம்.அப்பா மதியம் வேலை முடிந்து
வந்ததும் குளித்து சாப்பிட்டுவிட்டு மீண்டும் இன்னொரு வேலைக்குப் போய்விடுவார்.
மாலையில் குளித்து முடித்ததும் முருகன்
கோயிலுக்குத் தவறாமல் போய்விடுவார்.அந்தக் கோயிலின் தலைவராக இருந்ததால் சில
வேளைகளில் ஐயர் இல்லாமல் போனால் அப்பாதான் விளக்கேற்றி பூஜை செய்வார்.அவர் வேலை
முடிந்து வீடு திரும்பும் நேரத்தையும்,இரவில் கோயிலிலிருந்து திரும்பும்
நேரத்தையும் நான் அதிக ஆர்வதோடு எதிர்பார்த்து காத்திருப்பேனாம்.அந்த நேரத்தில்
முட்டிப்போட்டு தவழ்ந்து வந்து,வாசல்படியோரம் அமர்ந்து
கொள்வேனாம்.அவ்வப்போது தலையை நீட்டி அப்பா வருகிறாரா என பார்த்துக்கொண்டே
இருப்பேனாம்.
நான் குழந்தையாக இருந்தபோது அப்பா என்னை
எப்படியெல்லாம் கொஞ்சினார் என்பதை நானே கேட்டு இன்புறும் வகையில் என் அம்மா ஓர்
உன்னதமான வேலையைச் செய்திருக்கிறார்.
நான் இரண்டு வயதிற்குள்ளாகவே திருத்தமாக பேச
ஆரம்பித்துவிட்டேனாம்.அந்த வயதிலும் எனக்குக் கீச்சுக்குரல்தான்.நான் மழலைமொழியில்
பேசுவது கேட்பதற்கு இனிமையாகவும்,நகைச்சுவையாகவும் இருக்கிறது என என்
அம்மா ஒருநாள் என்னைப் பேசவைத்து வானொலி ஒலிநாடாவில் பதிவு செய்துவிட்டார்.அந்த
வேளையில் அப்பாவும் வீட்டில் இருந்திருக்கிறார்.பேச்சின் ஊடே அம்மா வேண்டுமென்றே
அப்பாவைப் பற்றிய பேச்சையும் ஆரம்பித்திருக்கிறார்.அம்மா செல்லமாய்
அதட்டியபோதெல்லாம் நான் அப்பாவை அழைத்திருக்கிறேன்.
“என்னம்மா?” என
அப்பா வாஞ்சையோடு கேட்பது அந்த ஒலிநாடாவில் பதிவாகிவிட்டிருந்தது.அதன்பிறகு என்னை
அப்பாவின் அருகில் அமரவைத்து அப்பாவுடன் பேசியதையும் அம்மா பதிவு செய்திருந்தார்.மின்சாரம்
இல்லாத சமயமென்பதால் நான் அப்பாவுக்கு நாளிதழில் காற்று வீசியது,அவரது முகத்தில் உள்ள உறுப்புகளைப் பார்வையிட்டது,அப்பாவுக்கு
பாட்டு பாடி காத்தடி,” என அப்பா சொல்ல,கொஞ்சமாய்
பாடிவிட்டு செல்லமாய் சிணுங்கிய என் சிணுங்கல் யாவும் என் அம்மா,அப்பாவின் குரலோடு சேர்ந்து பதிவாகியிருந்தது.
அன்பு வழிந்து ஓடும்,அப்பாவின்
அந்தக் கரகரப்பான குரல் அவர் இறக்கும் வரையில் மாறவேயில்லை.இப்போது கூட எப்போதாவது
அவரது ஞாபகம் வரும்போதெல்லாம் அந்த குறுவட்டை வானொலியில் போட்டு கேட்பேன்.என்னைக்
கொஞ்சும் அப்பாவின் அந்தக் கரகரப்பான குரலைக் கேட்கும்போதெல்லாம் மீண்டும் சிறு
குழந்தையாகி,அப்பாவின் அருகிலேயே இருக்கும் வரம் கிடைக்குமா
என்ற ஏக்கம் பிறந்து என்னை வாட்டி வதைக்கிறது.
ஐந்தாண்டுகளுக்கு முன் என் அன்புத் தந்தையின்
இறுதிக்காரியங்களை முடித்துவிட்டு கண்ணீர் வற்றிய நிலையில் தாப்பா சாலையில்
பயணித்துக்கொண்டிருந்த பொழுது எதிரில் ஒரு பழக்கப்பட்ட நண்பருக்காக அண்ணன் காரை
நிறுத்தினார்.மரியாதை நிமித்தம் காரை விட்டு இறங்கியபோது துடிதுடித்துப்போனேன்.என்
கால் அந்தச் சாலையில் பட்டபோது என் மனதில் அப்படியொரு வலி.அந்தக் கணத்தில்தான்
அப்பாவின் மறைவு எத்தனை பெரிய இழப்பு என்பதை உணர்ந்தேன்.நினைவு தெரிந்த
நாள்முதலாய் அப்பாவின் கையைப் பற்றிக்கொண்டு சுற்றிவந்த சாலை அது.அந்தச் சாலையில்
அப்பாவின் பாதம் படாத இடமே இல்லை எனலாம்.அப்பாவின் பாதச்சுவடுகள் அந்தச்
சாலையெங்கிலும் வியாபித்திருப்பதால் ஏற்பட்ட வலி அது என்பதை புரிந்து
கொள்ளமுடிந்தது.அதன்பிறகு பூச்சோங் வந்து சேரும் வரையில் அதே நினைவுதான் என்னை
ஆக்கிரமித்துக்கொண்டிருந்தது.
அப்பாவை மீண்டும் எங்காவது
பார்த்துவிடமுடியாதா என ஏங்கி தவித்த பொழுதுகள் பல..முதியோர் இல்லத்தில்,நெடுஞ்சாலைகளில்
கடந்து போன மரங்களின் ஊடே,வானத்தில் தோன்றிய முகில்களின் பின்னே,சேர்த்து வைத்திருந்த அப்பாவின் உடைகளில்,கனவுகளில்
இப்படி அப்பாவை ஒவ்வொருநாளும் தேடிக்கொண்டேதான் இருந்தேன்.அவரது மரணத்திலிருந்து
மீண்டு வருவது அவ்வளவு இலகுவானதாக இல்லை எனக்கு.
அப்பா தாப்பாவிலுள்ள தொங் வா தோட்டத்து மண்ணை
வெகுவாய் நேசித்தவர்.அந்தத் தோட்டத்து முருகன் கோயிலும்,ரப்பர்
மரங்களும்,செம்பனைக் காடுகளும்தான் அப்பாவின் உயிர்.மரணத்திற்குப்
பின் வந்து போன கனவுகளில் எல்லாம் அப்பா அந்தத் தோட்டத்தில்தான் இருந்தார்.
அப்பாவைத் தேடித்தேடி களைத்துப்போன பிறகு,அவர்
இன்னும் அந்தத் தோட்டத்தில் உயிரோடு இருப்பதாக ஒரு பிம்பம் கானலாய் தோன்றியது
எனக்கு.அந்த இடத்திற்குச் சென்றால் அந்தப் பிம்பம் உடைந்து போய்,அப்பா இறந்துவிட்ட உண்மையை மீண்டும் எதிர்கொள்ள நேரிடும்.என் கற்பனையில்
அவர் அங்கு உயிரோடு இருக்கட்டும் என்ற எண்ணத்தால் நான் அவரது மறைவுக்குப் பிறகு
அந்த மண்ணை மிதிக்கவேயில்லை.
நயனம் பொறுப்பாசிரியர் ராஜகுமாரன் ஐயாவிடம் ஓர்
இலக்கிய நிகழ்ச்சியில் என் அப்பாவை அறிமுகப்படுத்தியிருக்கிறேன்.அப்பா
இறந்துவிட்டதாக சொன்னபோது அவரால் நம்பவே முடியவில்லை.அப்பாவின் சாந்தமான முகம்
இன்னும் தன் கண்களுக்குள் அப்படியே இருப்பதாக சொன்னார்.அப்போதுதான் அப்பாவுடனான
என் அனுபவங்களைத் தொடராக எழுத எண்ணம் கொண்டுள்ளதைச் சொன்னேன்.உடனே எழுதும்மா
என்றார்.
ஒவ்வொரு முறையும் இந்தத் தொடரை எழுதலாம் என
நினைப்பேன்.ஆனால் முடியாது.எழுதும்போதெல்லாம் மீண்டும் மீண்டும் அப்பாவின் மரணம்
கண்முன் வந்து நின்று கொண்டே இருந்தது.என் மனதில் ஆறாமல் இருக்கும் இந்தக் காயத்தை
எழுத்தின்மூலம்தான் ஆற்றமுடியும் என்ற பக்குவம் இப்போதுதான் எனக்கு வந்துள்ளது.
எனது எழுத்தின் மூலம்,இந்தத்
தொடரின் மூலம் மீண்டும் அப்பாவை உயிரோடு கொண்டுவந்து அவருடனான இனிமையான,சோகமான,சுவாரசியமான பொழுதுகளை எல்லாம் பகிர
விழைகிறேன்.அடுத்த வாரம் முதல் நயனத்தில் எதிர்பாருங்கள்...
அவனை நாயகனாக
வைத்து கதை எழுத வருகிறாள் அவள்.கடைசியில் அவளே அக்கதையின்
நாயகியாகிப்போகிறாள்.அதுதான்‘ராஜபார்வை’படத்தின் கதை.
ஒரு மோதலில் தொடங்கும் அவர்களது உறவு காதலாக
தருணமிக்கும் இடம் வெகு அழகானது;உணர்ச்சிப்பூர்வமானது;இரசனை
மிக்கது.அந்தப் படம் நெடுக தூவப்பட்டிருக்கும் சிறு சிறு விசயங்களில் கூட இரசனை இழைந்தோடுகிறது.கதாபாத்திரங்கள்
ஒன்றுக்கொன்று முரண்பட்டிருந்தாலும் இயல்பாக,எவ்வித
மிகைத்தன்மையுமின்றி நம் மனதில் பதியும் வண்ணம் இருக்கின்றன.எல்லாவற்றுக்கும்
முத்தாய்ப்பாக ஜேசுதாஸ் ஐயாவின் குரலில் ஒலிக்கும் ‘அழகே அழகு தேவதை’என்ற பாடல்.
எனக்குப் பிடித்தமான நடிகரின் படமாக
இருந்தாலும் சரி,பாடலாக இருந்தாலும் சரி ஒவ்வொரு கட்டத்தையும்
அணு அணுவாக இரசித்துப் பார்க்கும் என இரசனைக்குத் தீனிபோட்ட படங்களுள் ஒன்றுதான் ‘ராஜபார்வை’.வெள்ளிவிழாகாணும் இவ்வார‘உதயகீதங்கள்’தொகுப்பில் இரசனையான ஒரு படத்திலிருந்து இரசனையான ஒரு பாடலை
எனது இரசனையோடு ஒத்துப்போகும் என் அன்பிற்குரிய நண்பன் ஒருவனுக்குச் சமர்ப்பணமாய்
எழுதுவதில் மகிழ்ச்சியடைகிறேன்.
ஒரு நள்ளிரவுப் பொழுதில் வானொலி கேட்டுக்கொண்டே
இப்படத்தைப் பார்த்தபோது நான் இரசித்தவிதத்தில் இப்படத்தைப் பற்றி பகிர
விழைகிறேன்.
ரகு (கமல்)பார்வையற்றவன். அவன் அற்புதமான வயலின்
இசைக்கலைஞன்.ஒருநாள் அவன் லிப்ட்டில் இருக்கும்போதுநான்சி (மாதவி)தன்
தாத்தாவுடன் லிப்ட் ஏற வருகிறாள்.அவள் ஏறுவதற்குள் லிப்ட்டின் கதவு சொந்தமாக
சாத்திக்கொள்ள,ரகுதான் வேண்டுமென்றே அப்படி செய்திருக்கிறான்
என தப்பாக எண்ணிக்கொள்கிறாள்.கமல் சொந்தமாக சிரித்தபடி நிற்க,தன்னைப் பார்த்துதான் அப்படி புன்னகைக்கிறானோ என அவள் கோபத்துடன் தன்
ஆடையைச் சரி செய்து கொள்கிறாள்.லிப்ட் நிற்கும்போது அது ஆறாவது மாடிதானா என
பார்த்து சொல்லும்படி ரகு சொல்ல,அவன் வேண்டுமென்றே தன்னிடம்
வழிவதாக எண்ணிக்கொண்டு நான்சி பொரிந்து தள்ளுகிறாள்.
லிப்டிலிருந்து தடி,கருப்புக் கண்ணாடி சகிதம் வெளியே வரும் ரகுவை அவனது நண்பன்சீனு (ஒய்.ஜி.மகேந்திரன்)கைதாங்கலாய்
அழைத்துக்கொண்டு போக,அவன் நிஜமாகவே குருடன் தான் என்பதை அறிந்து
நான்சி வருத்தம் அடைகிறாள்.
தன் பாட்டியின் பிறந்தநாள் விருந்தில்,”வெற்றிகரமா உன் நூறாவது கதை பத்திரிக்கை ஆப்பிஸ்ல இருந்து
திரும்பி வந்ததுக்கு வாழ்த்துகள்”என அவள் அண்ணன் சீண்ட,அவளோ ரகு எங்கே என
தேடுவதில் முனைப்பைக் காட்டுகிறாள்.ஒரு மூலையில் தன் நண்பனோடு அமர்ந்து
சாப்பிட்டுக்கொண்டிருக்கும் ரகுவையே பார்த்துக்கொண்டிருக்கிறாள்.அவனிடம்
எப்படிதான் மன்னிப்பு கேட்பது என அவள் தவிக்கிறாள்.அவளது தாத்தா அவனது நிகழ்ச்சி
நடக்கும் விளம்பரத்தைக் கொண்டுவந்து கொடுக்க,அவள்
அங்குப்போகிறாள்.அவன் வயலின் வாசிப்பதை இரசித்து கேட்கிறாள்.
மறுநாள் நான்சி ரகுவைத் தேடிப்போகிறாள்.தன்னை
அறிமுகப்படுத்திக்கொண்டு பேச்சு கொடுக்கிறாள்.அவன் அவளிடம் கோபமாக பேச,அவள் அவனது கண்பார்வையற்றோர் பள்ளியின் தலைமையாசிரியை கொடுத்து அனுப்பிய
கடிதத்தைக் கொடுக்கிறாள்.அவரின் பெயரைக் கேட்டதும் அவன் முகம் மலர்கிறது.உள்ளே
அழைத்துப் பேசுகிறான்.
“எப்படி நடக்கறீங்க?”என அவள் கேட்க,“காலால்தான்.எங்களுக்கு
இல்லாதது கண்ணு மட்டும்தான்,”என்கிறான்
குறும்பாய்.அவள் மீண்டும் மன்னிப்பு கேட்கிறாள்.பின்னர் தான் அவனை வைத்து கதை
எழுதப்போவதாக சொல்கிறாள்.
“என்னமாதிரி கதை
எழுதுவீங்க?உங்க கதையில நான் எப்படி?ஹீரோவா?வில்லனா?”என்கிறான்.அந்நேரத்தில் அவனது வீட்டு உரிமையாளர் அழைக்கவே
வெளியே போய்விட்டு வருகிறான்.அதற்குள் அவள் அவனது வீட்டிலுள்ள பொருள்களையெல்லாம்
அழகாக ஒழுங்குப்படுத்துகிறாள்.அதன் காரணமாகவே அவன் நாற்காலியில் இடித்துக்கொண்டு
கீழே விழுகிறான்.மீண்டும் மன்னிப்பு கேட்டுவிட்டு பொருள்களைப் பழையபடி இருந்த இடத்திலேயே
வைக்கிறாள்.அவன் அவளுக்குக் காப்பி கலக்க செல்கிறான்.
“ஸ்ட்ராங்கா,லைட்டா?”என கேட்க,அவள்,“லைட்டா”என
சொல்லிமுடிப்பதற்குள் மின்சாரம் தடைப்பட்டு போகிறது.அவள் தடுமாறிப்போகிறாள்.
“எங்கள் பகல்கூட உங்கள் ராத்திரியைவிட இருட்டா
இருக்கும்,”என்கிறான்.
அவளுக்கு அவன் மீது பரிவு என்பதைத் தாண்டி ஒரு
பாசம் பிறக்கிறது.வீட்டில் கண்களைக் கட்டிக்கொண்டு அவனை மாதிரி நடந்து
பார்க்கிறாள்.
கதை எழுதுவதற்காக அவனோடு நெருங்கி பழகும்
அவள் ஒருநாள் அவனோடு கண்பார்வையற்ற குழந்தைகளின் பள்ளிக்குச் செல்கிறாள்.அவனது
குரலைக் கேட்டவுடன்,“ரகு அண்ணாவா?”என கேட்டபடி குழந்தைகள் கூட்டமொன்று அவர்களை நெருங்கி
வருகிறது.”எங்களைப் பார்க்க வந்திருக்கீங்களா?”என நான்சியை ஆசையாய் தொட்டுப் பார்க்கும் குழந்தைகளிடம்,“பிறகு வந்து விளையாடுவார்,”என
சொல்லி ரகு அவர்களை அனுப்பி வைக்கிறான்.அவர்களில் ஒரு குழந்தை அவனை அருகில்
அழைக்கிறது.”என்னம்மா?”என கேட்டபடி குனியும் ரகுவின் கன்னத்தில் அந்தக் குழந்தை முத்தம்
இடுகிறது.அந்தக் காட்சி நான்சியின் மனதை நெகிழவைக்கிறது.அந்தப் பள்ளியில்
எல்லாரும் சேர்ந்து சந்தோசமாக பாடுகிறார்கள்.
பனிவிழும்
பொழுதினில் இருவிழி நனைந்தது நேற்று
மலர்களின்
இமைகளைத் திறந்தது மெல்லிய காற்று
இரவின்
பிள்ளைகள் நாங்களே
காதுகளே
எம் கண்களே
நிறங்களின்
பேதம் இல்லையே......
தங்கள் குறையை
மறந்து அவர்கள் எல்லாரும் சந்தோசமாக சேர்ந்து பாடியது நான்சியை
நெகிழவைக்கிறது.அன்றிரவு ரகு அவள் மனதில் வேறொரு பரிமாணத்தில் தெரிகிறான்.அவர்களை
நினைத்து கவிதையொன்றை வடிக்கிறாள் அவள்.
நீங்கள்
அழக்கூடாது
உங்களைத்
தோற்கடித்த இயற்கையை
ஜெயித்தவர்கள்
நீங்கள்
கண்கள்
என்ன கண்கள்?
எங்கள்
கண்களை நாங்கள் பார்ப்பதற்கு விட
உறங்குவதற்குதானே
அதிகம் பயன்படுத்தினோம்?
நீங்களோ
உங்கள் பிஞ்சு விரல்களின் ஸ்பரிசத்தில்
பிரபஞ்சத்தையே
படைத்து விடுகிறீர்களே?
உண்மையில்
உங்களுக்கு இருப்பது இருபது கண்கள்..
நகக்கண்கள்...
கல்லறையைப்
பார்க்கவரும் சொந்தக்காரன் மாதிரி
அந்தக்
கண்களில் கண்ணீர்த்துளியும் வருவது உண்டு
அதைப்
பார்க்கும்போது
என்
அத்தனை ரத்தமும் ஆவியாகிவிடுகிறது.
நீங்கள்
இந்த உலகத்தைக் கண்களைத் தவிர
எல்லா
உறுப்புகளாலும் பார்க்கிறீர்கள்
இந்த
உலகமோ உங்களின்
கண்களை
மட்டுமே பார்க்கிறது.
உங்கள்
பார்வை அந்தகப் பார்வையல்ல..அந்தரப் பார்வை
கனவுகளுக்கு
இரகசிய கட்டளையிடும் ராஜபார்வை
அந்தக் கவிதையை
எழுதிமுடித்தவள் ரகுவை வைத்து தான் எழுதப்போகும் கதைக்கு‘ராஜபார்வை’என பெயர் சூட்டுகிறாள்.
ரகுவிடம் சொல்லும்போது,”ராஜபார்வையா?அதென்னாங்க அப்படி ஒரு டைட்டல்?குருடனுக்கு
எப்படிங்க ராஜபார்வை?”என்கிறான்.
“ராஜநீதிக்கு
எப்படி பாரபட்சம் கிடையாதோ அதேமாதிரி உங்க பார்வைக்கும் பாரபட்சம் கிடையாது,அதான் ராஜபார்வை,”என்கிறாள்.அவன்
அவளிடம் தன் சிறுபிராயத்து காயங்களைப் பகிர்கிறான்.அம்மா இறந்தபிறகு ஆயாவிடம்,ஆயா இறந்தபிறகு தந்தையிடம் என வளர்ந்து,தந்தை
இறந்ததும் காய்ச்சலில் கண்பார்வை பறிபோக,சித்தி தன்னைப்
பார்வையற்றோர் பள்ளிக்கு அனுப்பிவிட்டதைச் சொல்கிறான்.அவனது கதையைக் கேட்டபிறகு
அவனிடம் இன்னும் நெருங்கிவிட்டமாதிரி தோனுவதாக அவள் சொல்லிவிட்டுப் போகிறாள்.
அவள் அவன் வீட்டுக்கும் வந்து அவனோடு உரிமையாக,அக்கறையாக பழகுகிறாள்.இரவில் வீட்டுக்குத் தாமதமாக போய் தன் தந்தையிடம்
திட்டும் வாங்குகிறாள்.
மறுநாள் அவனுக்குப் பிறந்தநாள்.நான்சி அவனைத்
தன் வீட்டுக்கு அழைத்துப்போகிறாள்.அவள் அண்ணனுடன் சேர்ந்து அவள் அப்பாவும் அவனைத்
திட்ட,அவன் மிகுந்த வலியோடு அங்கிருந்து
புறப்படுகிறான்.விட்டுவிட்ட பொருளை எடுக்க வந்தபோது நான்சியின் அப்பா ‘குருட்டு கபோதி’ என தன்னைத் திட்டுவதைக் கேட்டு உடைந்து
போகிறான்.மனதில் வலியோடு பார்வையற்ற குழந்தைகளின் பள்ளியைத் தேடிப்போக,அந்தக் குழந்தைகள் அவனுக்கு வாழ்த்து சொல்வதற்காக காத்திருந்து தூங்கிவிட்டதாக
அறிந்து வருத்தமடைகிறான்.கயல்விழிஎன்ற
குழந்தை தனக்கு கொடுத்த இரண்டு மிட்டாய்களில் ஒன்றை அவனுக்காக எடுத்து வைத்தாக
சொல்லி,அவனிடம் கொடுத்து அவன் கன்னத்தில் முத்தம் கொடுக்க,”குழந்தைகளுக்கு இருக்கும் மனசு பெரியவங்களுக்கு இல்லையே,”என கண்கள்
கலங்குகிறான்.
அவன் தன் வீட்டை அடையும்போது நான்சி பரிசோடு
காத்திருக்கிறாள்.கோபமாய் அவளைத் திட்டும் ரகு,”இனிமே குருடனைப் பத்தி கதை எழுதறேன்,நொண்டியைப்
பத்தி நாடகம் எழுதறேன் என சொல்லிக்கிட்டு இங்கே வராதீங்க,”குருடனுக்கு
எதுக்குங்க ராஜபார்வை?”என
விடாப்பிடியாக துரத்துகிறான்.அவள் போனதும் அந்தப் பரிசைப் பிரிக்கிறான்.அவள்
தன்னையே ஓவியமாக வரைந்து தந்திருக்க,பெரும் ஆசையோடு அந்த
ஓவியத்தின் முகத்திற்கு முத்தம் கொடுக்கிறான்.அப்போது அவனது தலையை அன்பாக
கோதுகிறாள் அவள்.இதற்கு மேல் தன்னை மறைக்கமுடியாது என அவன் அவளது மடி சாய்கிறான்.
அவனைக் காதலிப்பதாய் சொல்கிறாள் அவள்.அவன்
தன் உடல்குறையைச் சுட்டிக்காட்டி என்னென்னவோ சொல்லிக்கொண்டு போக,அவள் அவனை மேற்கொண்டு எதுவும் பேசவிடாமல் முத்தமிடுகிறாள்.அவனது எல்லா
தயக்கத்தையும் அந்த முத்தம் உடைத்தெறிய,அவனும் அவளைத்
தழுவிக்கொள்கிறான்.இருவரும் காதல் மயக்கத்தில் திளைக்கிறார்கள்.
நாளுக்கு நாள் அவளுக்கு அவன் மீதான அன்பு
கூடுகிறது.அவனது சிறுவயது காயத்திற்கெல்லாம் மருந்தாக,அவனது வாழ்க்கையை மகிழ்ச்சிகரமாக அமைக்க எண்ணுகிறாள்.ஒரு தடவை அவன் சில
சிறுவர்களுடன் கண்ணாமூச்சி விளையாடுகிறான்.அவன் குருடன் என அறியாத சிறுவர்கள்
அவனது கண்களை ஒரு துணியால் இறுக்கமாக கட்டிவிடுகிறார்கள்.கடைசிவரையில் அவன்
குருடன் என்பது அந்தக் குழந்தைகளுக்குத் தெரியாமலேயே போகிறது.நான்சிக்கு அது
வேதனையாக இருக்கிறது.அழுதுவிடுகிறாள்.அந்தச் சம்பவத்தைக் கண்டிப்பாக கதையில்
இணைப்பேன் என்கிறாள்.
“கதையில் நீயும்
இருக்கியா?”என்கிறான்.
அவள் “ஆம்என்கிறாள்.
கதையை
எப்படி முடிக்கப்போறே?”
“என்னைக் கல்யாணம் பண்ணிக்கறீங்களா?”
“அருமையான முடிவு,கதை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு,”
ரகுவுக்கும் அவளது
காதல் அளவிலாத இன்பத்தைத் தருகிறது.அவளை ஒருநாள் காணாவிட்டால் கூட
ஏங்கிப்போகிறான்.அவளைத் தொலைபேசியில் அழைத்து,“ஏன் நேத்து வரல?”என உரிமையாக
விசாரிக்கிறான்.அவனைச் சமாதானப்படுத்தும் அவள் தன் தந்தை வெளியூர் போவதால் தான்
அங்கு வந்து ஒருநாள் முழுக்க அவனுடனேயே இருக்கப்போவதாக சொல்கிறாள்.மதியம்
அவனுக்காக தானே சமைக்கப்போவதாகவும் சொல்கிறாள்.அந்தக் கணத்திற்காக இருவரும் ஆவலோடு
காத்திருக்கிறார்கள்.படத்தில் என் கண்களுக்கு மிகவும் இரசனையான தோன்றிய காட்சிகள்
இத்தருணத்தில்தான் வந்து போகின்றன.
தந்தை கிளம்பியதும் வீட்டை விட்டு வெளியேறும் நான்சி
ரகுவோடு சந்தைக்குச் சென்று சமைப்பதற்கு வேண்டிய காய்கறிகளையெல்லாம் வாங்கி கொண்டு
போகிறாள்.சமையல் குறிப்புப் புத்தகத்தைப் பார்த்து சமைக்க
எத்தனிக்கிறாள்.அவள் புளியைக் கரைத்து ஒரு பாத்திரத்தில் வைத்திருக்கிறாள்.ரகு
தவறுதலாக அந்தப் பாத்திரத்தில் கையை விட்டுவிட புளி கொஞ்சம் கீழே
ஊற்றிவிடுகிறது.புத்தகத்தைப் பார்த்து சமைத்துக்கொண்டிருக்கும் நான்சி,”அச்சச்சச்சோ,புளி எல்லாம் ஊத்தியாச்சா?”என கோபமாக கேட்கிறாள்.”எதுக்கு புளி?என அவன் கேட்க,கோபத்தோடு,”ம்ம் எதுக்கு புளி? கறியில போடறதுக்கு”என்கிறாள்.
அவள் சமைக்கும் நேரத்தில் அவளுடன் இருக்கும்
ரகுவின் சேட்டைகள் இரசிக்கும்படி இருக்கும்.ஒரு கட்டத்தில் புளியை அப்படியே அவளது
தலையில் கவிழ்க்க,அவள் கோபமாகிவிடுவாள்.குளியலறைக்குள் சென்று
தலையை அலசிக்கொண்டு வர சொல்ல,”ஐயே
இங்கே தாழ்ப்பாளே இருக்காதே?”என்பாள்.அவன்,”நான் வேனும்னா என் கண்ணை மூடிக்கொள்கிறேன்,”என்பான்.அவன்
உடனே அவனிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு குளியலறைக்குள் நுழைவாள்.உடைகளைக்
களைந்துவிட்டு தண்ணீரை மொண்டு தலையோடு ஊற்றுவாள்.அவனிடம் சமையல் குறிப்புப்
புத்தகத்தைக் கொண்டு வந்து தரும்படி கேட்க,அவன் சடாரென குளியலறைக்குள் நுழைந்துவிட,அவள்
ஒருகணம்‘ஆ’என அதிர்ச்சியாகிவிடுவாள்.கைகள் அனிச்சையாய்
உடலின் குறுக்கே மறைத்துக்கொள்ள,நாணம் அவளைக் கௌவிக்கொள்ளும்.அவனுக்குக் கண் தெரியாது என்றாலும் கூட,தன் உடலை ஓர் ஆண் பார்த்துவிட்டதாக அவளுக்குள் தோன்றும் அந்த வெட்கத்தை
வெளிப்படுத்தும் காட்சியில் மாதவியின் பெண்மையும்,அழகும்
நன்கு வெளிப்படும்.
“நீங்க போங்க,”வெட்கத்திலிருந்து இன்னும் வெளிவராத அவளின் குரலில் ஒரு
குழைவும்,அமைதியும் கலந்து ஒலிக்கும்.அவள் சொல்ல சொல்ல
அவன் சமைப்பான்.
அவள் குளித்துவிட்டு தலையில் துண்டைக்
கட்டிக்கொண்டு வெளிவரும்போது அவன் வயலின் வாசித்துக்கொண்டே இருப்பான்.அவள் அதை
இரசித்துக்கொண்டே ரசத்தை ருசி பார்த்துவிட்டு நிமிரும்போது அவன் பக்கவாட்டில்
பின்புறமாய் நின்றபடி வயலின் வாசிக்கும் காட்சி அவளுக்கு வெகு இரசனையானதாய்
தோன்றும்.
“அசையாதீங்க!”என்பாள்.
“ஏன் கையில் துப்பாக்கி கிப்பாக்கி
வெச்சிருக்கியா?”என்பான்.
அவள் அவனை வரையப்போவதாய் சொன்னதும் உடனே திரும்பி
நின்று போஸ் கொடுக்கிறேன் பேர்வழி என காலைப் பரப்பிக்கொண்டு நிற்க,அவளுக்குக் கோபம் வரும்.பிறகு அவள் சொன்னமாதிரி அவன் நிற்க,அவள் அவனை தத்ரூபமாய் வரைவாள்.அவனது விரல்களைப் பிடித்து அந்த ஓவியத்தின்
மீது வைத்து காட்டுவாள்.
“இது வேனா,நான் ஒரு நல்ல ஐடியா தரேன்,நீ உன்னை வரியேன்,”என்பான்.
“நான் நிறைய
வரஞ்சிட்டேன்,”என அவள் சொல்ல,
“இல்ல,இப்ப நான் சொல்லறேன்;வர்ணிக்கிறேன்,கேட்டுட்டு வரி”என்கிறான்.
அவன் ஆ என இழுக்க,“என்ன ஆ ஊ ன்னுக்கிட்டு,இதுதான் வர்ணனையா?”என அவள் கேலியாய் சிரிக்கிறாள்.அவன் அவளுக்கு அருகில்
படிக்கட்டில் அமர்ந்து ம்ம்ம் என்ற ஹம்மிங்கோடு,தாத ராரேரா என
இழுக்க,”என்னா ஒன்னும் வரலையா?”என கேட்டபடி
அவனது காதைப் பிடித்து திருகுகிறாள்.
மறுகணமே அவன் ‘அழகே அழகு தேவதை’என வர்ணித்துப் பாட ஆரம்பிக்கிறான்.
இந்தப் பாடலில் அவள் அங்கங்களை ஒவ்வொன்றாக
வருடிப் பார்த்து அவன் வர்ணிப்பதாய் அழகியல் ததும்ப எழுதியிருப்பார் கவியரசு
கண்ணதாசன்.
ஜேசுதாஸ்குரலில்
பாடலை ம்ம்ம்ம் என்ற ஹம்மிங்கில் ஆரம்பிக்கும்போதே மனதை என்னவோ செய்யும்.இப்பாடல்
காட்சியில் மாதவியின் முக பாவனைகள் வெகு அழகு.கோபம்,காதல்,வெட்கம் அனைத்தையும் அழகாக தனது நீண்ட
விழிகளில் வெளிப்படுத்துவார்.அவன் கண் தெரியாதவன்;அவளது
உடலைத் தொட்டுப்பார்க்கும்போது அவனது கை தவறுதலாக எங்கேனும் பட்டுவிடக்கூடிய
சாத்தியம் உண்டு.பெண்மைக்கே உரிய அந்தத் தவிப்பையும் மாதவி அழகாக
வெளிப்படுத்தியிருப்பார்.தனது விழிகளிலேயே அனைத்து உணர்ச்சிகளையும் அழகாக
வெளிப்படுத்துவார்.அவன் அவளது இடையைப் பிடித்து அழுத்தும்போது கோபமாய் திமுறுவது,ஒருமாதிரி முறைப்பது,அவன் தொடையில் கைவக்கும்போது
ஒருவித எச்சரிக்கையுடன் அவனைப் பார்ப்பது,அவன் அவளது
தொடையில் தன் தலையைச் சாய்த்துக்கொண்டதும்,தாய்மையின்
பரிவோடு அவனது தலையைக் கோதுவது,அவன் கைகளை நீட்டியபடி வர,ஒளிந்து விளையாடுவது,அவனது விரல்களைக் கடிப்பது என
மாதவியின் சேட்டைகள் அற்புதம்.அவளது தோள்பட்டையிலிருந்து அவளது விரலைத் தொடும்
அவனது கைகள் அவளது நெஞ்சுப்பகுதிக்குச் செல்லும்போது‘ஒரு அங்கம் கைகள் அறியாதது,”என
அவன் தன் கைகளைப் பின்னுக்கு இழுத்துக்கொண்டு பாடும்போது ஒரு நொடிக்குள் அவள்
முகத்தில் வழியும் வெட்கம்,ஒசையின்றி உதடுகளில்
வெளிப்படும் சிணுங்கல் எல்லாமே அற்புதம்.
அந்த ஒரே ஒரு வரியில் கூட நிறைய விசயங்கள்
புதைந்துள்ளன.காதலனாக இருந்தாலும் கூட ஓர் ஆணுக்கு ஒரு பெண்ணின் உடல் மீது முழு
உரிமை இல்லை.அதுதான் நம் பண்பாடு.காதலியின் அங்கங்களில் எதைத் தொடலாம்,எதைத் தொடக்கூடாது என ஒரு வரையறை உண்டு.அந்த வரையறையை மீறாமல் நடந்து
கொள்வதுதான் கண்ணியமான நன்மகனுக்கு அழகு.இப்படத்தில் அவனுக்குக் கண்
தெரியாது.அப்பெண்ணைத் தொட்டுப் பார்த்து வர்ணிக்கும் வேளையில் அவனது கை
அவனையறியாமல் தவறுதலாகவேனும் அவளது அங்கத்தில் வரம்பு மீறி பட்டுவிடக்கூடும்.அவளது
நெஞ்சுப்பகுதியை நோக்கி கை நீளும்போது தனிச்சையாய் ஒரு பிரக்ஞை தோன்றி அவனே தன்
கையை இழுத்துக்கொண்டு அவ்வாறு பாடுகிறான்.அவனுடைய கண்ணியத்தை,பெண்மையைப் போற்றும் குணத்தை அந்த ஒரே வரியில் எவ்வளவு அற்புதமாய்,கவித்துவமாய் சொல்லிவிட்டார் கவியரசு.
இப்பாடலில்
ஒளிப்பதிவு மிக அருமையாக உள்ளது.அந்தச் சிறு வீட்டில் நடக்கும் விசயங்களை
மிகத்துல்லியமாய் படம் பிடித்து காட்டியிருக்கிறார்கள்.கமலின் அலட்டிக்கொள்ளாத
இயல்பான பாவனையும் சொல்வதற்கு வார்த்தையில்லை.மாதவியைச் சீண்டும் இடத்தில் அவரது
குறும்புத்தனம் வெகு எதார்த்தமாக அமைந்துள்ளது.
இப்பாடல் முடியும்வேளையில் சமையல்
தீய்ந்துவிடும்.
“என்
சமையலையெல்லாம் பாடியே கெடுத்துட்டீங்களே”என
புலம்பிவிட்டு ரகுவின் சட்டையை எடுத்து மாட்டிகொண்டு கூடையை வாயில் கௌவிக்கொண்டு,”உதைப்பேன்”என
திட்டிவிட்டு அவள் புறப்பட்டுப்போவது ரசனை தெரிக்கும் எதார்த்தம்.
இப்படத்தின் இயக்குனர்சிங்கீதம் ஸ்ரீனிவாசராவ்,ஒளிப்பதிவாளர்பரூண் முகர்ஜி,தாத்தா
பாத்திரத்தில் அசத்தியிருக்கும் பிரபல இயக்குனர்எல்.வி.பிரசாத்,சித்தியாக வரும்லலிதா,எப்போதும் டென்ஷன் நிறைந்தவராக,மாதவியின் அப்பாவாக வரும்தனுஷ்கோடி,ரகுவின் நண்பனாக வரும்ஒய்.ஜி.மகேந்திரன்,கண்பார்வையற்றவனின் தொடுதலில் தெரியும் பிம்பத்தை
வார்த்தைகளால் வடித்த கவியரசுகண்ணதாசன்,வயலின்
இசையோடு அற்புதமான பின்னனி இசையை வழங்கியஇளையராஜா,செவிகளுக்குள்
இதமாய் இறங்கும் ஜேசுதாஸ் ஐயாவின் குரல்,படத்தில் நடித்த பார்வையற்ற பள்ளி மாணவர்களின் நடிப்பு இப்படி பல
அற்புதங்கள் ஒன்றிணைந்த காவியமாக இப்படம் என் இரசனையில் நிறைந்துவிட்டது.
என் பாடல் இரசனைகளோடு ஒன்றிப்போகும் என் இனிய
நண்பன் ராஜ்அவர்களும் என்னை மாதிரியேகமலின்தீவிர
ரசிகர்.அவரை இதுவரையில் நேரில் பார்த்ததில்லை.ஆனால் முகம் தெரியும்.அவரது
கடைகளில்தான் நான் பெரும்பாலான இளையராஜாவின் பாடல்களை வாங்கியுள்ளேன்.ஏதாவது
பொருள்களைப் பரிமாறிக்கொள்வதென்றால் அவரது கடையில்தான் பரிமாறிக்கொள்வோம்.சில
வேளைகளில் அவரது பணியிடத்தில் கொடுத்துவிட்டு ஒளிந்துவிடுவேன்.இந்த வித்தியாசமான
நட்பு எனக்கு சுவாரஸ்யமானதாய் தோன்றுகிறது.இந்தக் கண்ணாமூச்சி ஆட்டம் என்
வாழ்க்கையில் ஓர் இன்பத்தைத் தருவதாய் உணர்கிறேன்.என்னை மாதிரி ராஜ்க்கும் பெரும்பாலான
பாடல்களின் வரிகள் அத்துப்படி.என்னை மாதிரியே பாடலின் ஒவ்வொரு வரியையும் ஆழ்ந்து
இரசிப்பவர்.அவருடன் பாடலைப் பற்றி பேசும்போது என் இரசனைகளும் பன்மடங்கு
பெருகுவதாய் உணர்கிறேன்.
இந்த வார‘உதயகீதங்கள்’தொகுப்பில் இடம்பெறும்
பாடலைராஜ், என் மாயலோகத்து அன்பிற்கினியவன்,மற்றும்
அனைத்து வாசகர்களுக்கும் சமர்ப்பிக்க ஆசைப்படுகிறேன்.வாருங்கள் மனக்கண்கள் சொன்ன அந்த
இனிய கானத்தை நாமும் பாடிப்பார்க்கலாம்.