சிறுகதை : நாசிலெமாக்
காவியாவின்
வலது கை நாசிலெமாக் பொட்டலங்களை இறுக பற்றியிருந்தது.அவள் முகத்தில் எதையோ
சாதித்துவிட்ட திருப்தி இழையோடியது.நீண்டு பெரிதாக இருந்த கபில நிற விழிகளில் ரசனை
நிரம்பி வழிந்தது.எதிரில் தென்பட்ட மனிதர்களையும்,அவர்களின் செய்கைகளையும் ஒரு
கதாசிரியைக்கே உரிய கவனத்தோடு கூர்ந்து கவனித்துக்கொண்டே நாசிலெமாக்
அங்காடியைவிட்டு நடந்தாள்.
உயர்ந்து,குள்ளமாய்,தடித்து,மெலிந்து,சற்றே பெரிய கண்களோடு,சப்பை மூக்கோடு இப்படி பல பரிமாணங்களில் கூட்டத்தில் கலந்திருந்த
மனிதர்கள் யாவரும் தங்களுக்குள் ஓராயிரம் கதைகளைப் பதுக்கிவைத்திருப்பதாய்
அவளுக்குத் தோன்றியது.தனக்குள் சிரித்துக்கொண்டே நடந்தாள்.
வழியெங்கிலும் பலவித
உணவுக்கடைகள்.எல்லாவற்றையும் ஒரு பார்வை பார்த்துக்கொண்டே நடந்தாள்.நாசிலெமாக்வைக்
காட்டிலும் வேறெதுவும் அவளது கவனத்தை ஈர்ப்பதாக இல்லை.வீட்டிலிருக்கும்
குழந்தைகளுக்கும்,சற்றே பெரிய குழந்தையான பாட்டிக்கும் சில தின்பண்டங்கள்
வாங்கவேண்டியிருந்ததால் சில உணவு அங்காடிகளைப் பார்த்துக்கொண்டே நடந்தாள்.
நடந்து கொண்டிருந்தவளின் கண்களில் கரும்புத்
துண்டுகள் பட்டதும் நின்று வாங்கினாள்.அங்கேயே ஓர் ஓரமாக நின்று கரும்புச் சாறைப்
பருகிய காவியாவை எதிரில் வந்த இளைஞர் பட்டாளமொன்று விழிகளால் பருகிக்கொண்டே
கடந்தது.
காவ்யா உயரமான,மெலிந்த தேகத்தோடு துருதுருவென
இருந்தாள்.இளஞ்சிவப்பு நிற சட்டையும்,வெள்ளை நிற
கால்சட்டையும் அணிந்திருந்தாள்.காதுகளில் பூனைக்குட்டி வடிவிலான இளஞ்சிவப்பு நிற
காதணிகள் தொங்கி கொண்டிருந்தன.அவற்றை வியப்பாய் பார்த்த குழந்தையொன்று அவளது
காதணிகளை ஆசையாய் தொட்டுப் பார்த்தது.அந்தக் குழந்தையின் கன்னத்தில் செல்லமாய் ஒரு
தட்டு தட்டிவிட்டு மீண்டும் நடக்க ஆரம்பித்தாள்.பக்கத்தில் இருந்த அங்காடியில் வீட்டிலிருக்கும்
அண்ணனின் குழந்தைகளுக்கு அப்பம்பாலும்,அவித்த சோளமும் வாங்கி
கொண்டாள்.
வடை பொரியும் வாசம் அவளது மூக்கைத்
துளைத்தது.அந்த அங்காடிக்குள் நுழைந்தாள்.பெரிய இருப்புச் சட்டியில் அந்த வயதான
மாது மின்னல் வேகத்தில் வடை மாவைத் தட்டிப்போட்டுக்கொண்டிருந்ததை வழக்கம்போல்
வியப்பாக பார்த்துக்கொண்டே அம்மாவுக்கும்,பாட்டிக்கும் கொஞ்சம் வடைகளை வாங்கி
கொண்டாள்.இவள் எப்படி நாசிலெமாக் பைத்தியமோ,அதேமாதிரி
அவளுடைய பாட்டி வடை பைத்தியம்.பல்லெல்லாம் விழுந்துவிட்ட நிலையில் ஒரு வடையைச்
சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரம் எடுத்துக்கொண்டாலும் பாட்டி வடை கேட்பதை
நிறுத்துவதேயில்லை.
வடை வாங்கிகொண்டு திரும்பியபோது அதே
வரிசையில் சில அங்காடிகளில் நாசிலெமாக் பொட்டலங்கள் இருந்ததைக் கவனித்தாள்.ஆனால்
கபில நிற வழுவழுப்பான காகிதத்தில் மடித்துவைக்கப்பட்டிருந்த அந்த நாசிலெமாக் வகைகளில் எதுவுமே அவளது
சிந்தையை ஈர்க்கவில்லை.ஆலேங் கடை போடாத ஒரு நாளில் அவள் இங்கு வாங்கி சுவைத்துப்
பார்த்து வெறுத்திருக்கிறாள்.ஏனோ நாசிலெமாக் சுவையாக இல்லையென்றால் வாழ்க்கையின்
விரக்தி நிலையை எட்டிவிட்டாற் போன்றதொரு எண்ணம் அவளை அலைக்கழிக்கும்.
அப்படி நாசிலெமாக் சாப்பிடுவதையே ஒரு கலையாக
வைத்திருந்ததால் அவளுக்குத் தன் ஏழு வயதில் தோட்டத்து தமிழ்ப்பள்ளியில் இலவச
உணவுத் திட்டத்தில் சாப்பிட்ட நாசிலெமாக் முதல்,கடந்த நான்கு தினங்களுக்கு
முன் சக ஆசிரியை ஒருவர் சமைத்துக்கொடுத்த இறால் சம்பல் நாசிலெமாக் வரை ஒவ்வொரு
வயதிலும் அவள் சாப்பிட்ட நாசிலெமாக் எந்தெந்த சுவையில்,எந்தெந்த
வடிவத்தில் இருந்தன என்பதை உடனே கற்பனையில் கொண்டு வந்துவிட முடிந்தது.
சம்பாதிக்க ஆரம்பித்து மகிழுந்து வாங்கிய
பிறகு அவள் செய்த முதல் வேலை எந்தெந்த கடையில் நாசிலெமாக் விற்கிறார்கள் என
ஆராய்ந்ததுதான்.அப்படி ஆராய்ந்து கண்டுபிடித்ததில் பூச்சோங் பட்டணத்தில் இரண்டு
இடங்களில் விற்கப்படும் நாசிலெமாக்தான் அதீத சுவை கொண்டவை என
கண்டுபிடித்திருந்தாள்.ஒன்று பூச்சோங் பெருமாள் கோவில் வளாகத்தில் சனிக்கிழமைகளில்
குணா அண்ணன் விற்கும் சைவ நாசிலெமாக்.இரண்டாவது பதினான்காவது மைல் இரவுச்
சந்தையில் ஆலெங் விற்கும் நாசிலெமாக்.
இரவுச் சந்தைக்கு வந்தால் அவளுக்கு எப்போதும்
ஆலெங் விற்கும் நாசிலெமாக்தான் பிடிக்கும்.அவளது கடையில்தான் விதவிதமான சம்பல்
வைத்து நாசிலெமாக் கிடைக்கும்.நெத்திலி,கோழி,இறால்,இரட்டைச் சிப்பி நத்தை,பித்தாய் என பல வகையறாக்களில்
கண்ணாடிப் பாத்திரத்தில் மூடி வைக்கப்பட்டிருக்கும் சம்பல் வகையைப் பார்க்கும்போதே
இவளுக்கு நாவில் எச்சில் ஊறும்.
பழைய நாளிதழில் வாழை இலையை வைத்து,ஒரு சிறிய
கோப்பையில் தேங்காய்ப்பால் சாதத்தை அளந்து அள்ளிப்போட்டு,அதன்
நடுவில் சம்பலை வைத்து,ஓரத்தில் பொரித்த நெத்திலியோடு
கச்சான்களைத் தூவி,அவித்த முட்டையை அதன்மேல் கவிழ்த்துவைத்து,ஓர் ஓரமாய் வெள்ளரித்துண்டுகளை அடுக்கி,வெகு லாவகமாக
அந்த நாளிதழைக் கூம்பு வடிவில் அவள் மடித்துக்கொடுப்பதே ஒரு கலையாக தோன்றும்
காவியாவுக்கு.எப்போதடா அந்த நாசிலெமாக்வைச் சாப்பிடுவோம் என்ற ஆவலைச் சுமந்தபடி
வீட்டுக்கு விரைவாள்.வீட்டுக்குப் போய் பிரிக்கும்போது பார்ப்பதற்கே ஆசையைத்
தூண்டும் ஆலேங் நாசிலெமாக்வுக்கு ஈடாக அந்த இரவுச் சந்தையில் மலாய்க்காரர்களின்
நாசிலெமாக் கூட இருக்கமுடியாது என்பது காவியாவின் கணிப்பு.
காவியா தன் கையில் இருந்த நாசிலெமாக்
பொட்டலங்களைப் பெருமை பொங்க பார்த்தாள்.
“சீக்கிரமாய் என்னைப் பிரித்து
சாப்பிடேன்” என அவை அழைப்பு விடுத்ததுபோல் தோன்றியது.
இரவுச் சந்தையில் வாங்குவதற்கு வேறெதுவும்
இருக்கவில்லை அவளுக்கு.வெறும் நாசிலெமாக் வாங்குவதற்காகவே வீட்டிலிருந்து அரைமணி
நேரத்திற்கு மகிழுந்தைச் செலுத்தி,பத்து சமிக்ஞை விளக்குகளைக் கடந்து
இந்த இரவுச் சந்தைக்கு வருவதில் அவளுக்கு அலுப்பேதும் தோன்றியதேயில்லை.
காவியா தனது மகிழுந்தை சாலையின்
எதிர்ப்புறத்தில் கடைவீடுகளின் வரிசையில் நிறுத்தியிருந்தாள்.பரபரப்பாக ஓடிக்கொண்டிருந்த
வாகனங்களை வெகு கவனத்தோடு கவனித்து சாலையைக் கடந்தாள்.காரை அடைந்ததும் மணி
பார்ப்பதற்காக வலது கையை உயர்த்தினாள்.அப்போது நாசியருகே நெருங்கி வந்த நாசிலெமாக்
பொட்டலங்களிலிருந்து எழுந்த சுகமான வாசம் அவளைக் கிறங்கடித்த வைத்தது.அரைமணி
நேரத்தில் வீட்டையடைந்து,கை கால் அலம்பிவிட்டு அந்தப் பொட்டலத்தைப் பிரித்து
உண்ணும்போது கிடைக்கக்கூடிய இன்பத்தைக் கற்பனையில் வரித்தவாறு கார்க்கதவைத்
திறந்தாள்.வடைகள்,அப்பம்பால்,சோளம்
போன்றவற்றை மகிழுந்தின் பின்புற இருக்கைக்குக் கீழே வைத்தவள் நாசிலெமாக்
பொட்டலங்களை மட்டும் மேலும் இறுக்கமாகக் கட்டி தனது இருக்கைக்குப் பக்கத்து
இருக்கையில் வைத்துவிட்டு மகிழுந்தைச் செலுத்தினாள்.
முன் தினம் நாசிலெமாக்வுக்காக நடந்த சண்டையை
எண்ணிப்பார்த்தாள்.முன் தினம் ஏனோ காலையில் எழுந்ததுமுதல் அவளுக்கு நாசிலெமாக்
சாப்பிடவேண்டும் போலிருந்தது.ஆனால் நாசிலெமாக் வாங்க அவளுக்கு நேரமே
கிடைக்கவில்லை.சரி இரவில் வாங்கி கொள்ளலாம் என ‘லக்ஷ்மிமித்ரா’ உணவகத்துக்குப் போனாள்.நாசிலெமாக் முடிந்துவிட்டதாய் சொன்னமாத்திரத்தில்
பொசுக்கென்று அழுகை எட்டிப் பார்த்தது.கண்களில் கண்ணீர் வழிந்தோட கோபத்தோடு
வீட்டுக்கு வந்தவள் யாரிடமும் பேசாமல் இருந்தாள்.அவளது நிலைமை புரியாமல்
நண்பனொருவன் கைபேசியில் சீண்டிவிட,அவனைத் திட்டிவிட்டு அதே
கோபத்தோடு கைபேசியை கட்டிலுக்கடியில் வீசிவிட்டு படுத்து உறங்கியும்விட்டாள்.
மற்றவர்களுக்கு வேண்டுமானால் நாசிலெமாக்
உணவுப்பொருளாக இருக்கலாம்.ஆனால் காவியாவைப் பொருத்தவரையில் நாசிலெமாக் என்பது
உணர்வுப்பொருள்.கிடைக்கவில்லையென்றால் அவளைப் பட்டென்று அழவைத்துவிடவும்,கிடைத்துவிட்டால்
உற்சாகத்தில் துள்ளிக்குதிக்கவைக்கும் ஆற்றலும் நாசிலெமாக்வுக்கு மட்டும்தான்
இருந்தது.
ஏதேதோ சிந்தனையில் மகிழுந்தைச்
செலுத்திக்கொண்டிருந்த காவியா எதிர்பாரா தருணத்தில் குருட்டுத்தனமாய் அவளை
முந்திக்கொண்டு விரைந்த மோட்டார்சைக்கிளை மோதிவிடாமலிருக்க,திடீரென
காரை நிறுத்தினாள். அப்போது பக்கத்து இருக்கையிலிருந்த நாசிலெமாக் பொட்டலங்கள்
கீழே விழப்போக,அதைக் கைகளால் பற்றியவள் தன்னையறியாமல்
எண்ணெய்யை மிதிக்கவே,மகிழுந்து பாய்ந்து போய் சாலைத் தடுப்பு
சுவரில் மோதியது.
அவசர சிகிச்சைப் பிரிவில்
அனுமதிக்கப்பட்டிருந்த காவியாவின் தலையில் பட்ட அடி பலமாக இருந்ததால் அவள்
சுயநினைவின்றி இருப்பதாக சொன்னார்கள்.அவள் கோமா நிலையை அடையும் சாத்தியமும்
இருப்பதாக சொன்னவர்கள் இருபத்து நான்கு மணி நேரம் காலக்கெடுவும்
கொடுத்திருந்தார்கள்.
அந்த அறைக்குள் தன்னைப் பார்ப்பதற்காக
நுழைபவர்கள் பேசிக்கொள்ளும் எல்லாவற்றையும் காவியாவால் கேட்க முடிந்தது.ஆனால்
அவளால் கண்களைத் திறக்கவோ,உதடுகளை அசைக்கவோ இயலவில்லை.”எத்தனையோ
முறை சொல்லிட்டேன்,மெதுவா ஓட்டுன்னு,கேட்டால்தானே” அவள் அம்மாவின் அழுகுரல் கேட்டது.
இவள் வேகமாக காரைச் செலுத்தியதால்தான் விபத்து
நேர்ந்திருப்பதாக எண்ணியிருக்கிறார்கள் போலும்.அதுவும் நல்லதுதான்.நாசிலெமாக்வுக்காகதான்
இந்த விபத்து நடந்தது என அறிந்தால் அவளது உறவினர்களும்,நண்பர்களும்
அவளை மட்டமாக பேசக்கூடும்.ஒரு நாசிலெமாக்வுக்காகவா இப்படி என ஏதும்
நினைத்துவிட்டால் அது அவமானம்தானே?
நாசிலெமாக்வுக்காக அவமானப்படுவது ஒன்றும்
அவளுக்குப் புதிதில்லைதான்.
இடைநிலைப்பள்ளியில் கால் எடுத்துவைத்த
பருவத்தில் பள்ளியின் அருகே ஒரு மலாய்க்கார பெண்மணி நாசிலெமாக் விற்பாள்.மாணவர்கள்
என்பதால் அவள் அம்பது சென்னுக்கு விற்பாள்.ஆனால் அந்த ஐம்பது சென் கொடுத்து கூட
அந்த நாசிலெமாக்வை வாங்கமுடியாமல் இருக்கும் சமயங்களில் அவளுக்கு ஏனோ வெகு
அவமானமாக இருக்கும்.
மாதக்கடைசியில் அவளது அப்பாவிடம் கொடுப்பதற்கு
காசிருக்காது.அது மாதிரி தருணங்களில் அவள் அந்த நாசிலெமாக் கடையை வெகு ஏக்கத்தோடு
பார்த்துவிட்டு நகர்வாள்.சில வேளைகளில் காசு வைத்திருக்கும் மற்ற தோழிகள்
வாங்கும்போது இவளும் உடன் இருக்கவேண்டியிருக்கும்.’நீ
வாங்கலையா?ஏன் காசில்லையா?” என அம்மாது
விசாரிப்பாள்.அப்போதெல்லாம் இவள் அவமானத்தால் கூனிக்குறுகிப்போவாள்.இப்படி
நாசிலெமாக்வுக்காக அவள் பட்ட அவமானங்கள் அதிகம்.
தமிழ்ப்பள்ளியில் ஆறாமாண்டில் பயின்றபோதே
அவமானங்கள் அவளுக்குப் பழகிவிட்டிருந்தனதான்.நாசிலெமாக்வின் மீதிருந்த மோகத்தால்
அவள் அந்த வயதிலேயே சம்பல் செய்ய கற்றுக்கொண்டாள்.அம்மியில் மிளகாய் அரைத்து
செய்யும் சம்பலில்தான் ருசி அதிகம் என பக்கத்துவீட்டு லில்லி அக்காள் சொல்லிவைக்க,அவள்
மிளகாயை ஊறவைத்து எடுத்துக்கொண்டு தன் பெரியம்மாளின் வீட்டுக்கு வருவாள்.அவள்
வீட்டில் அம்மி இருந்தாலும் பெரியம்மாள் வீட்டு அம்மியில் அரைத்தால்தான் ருசி என
அவள் நம்பியிருந்தாள்.
அவளுடைய வீட்டில் சமையலுக்கு தேங்காய்
எண்ணெய்யைதான் பயன்படுத்தினார்கள்.கச்சான் எண்ணெய்யில் சம்பல் செய்தால் இன்னும்
சுவையாக இருக்கும் எனவும் லில்லி அக்காள் சொல்லியிருந்ததால் மிளகாயை
அரைத்துக்கொண்டு கிளம்பும்போது பெரியம்மாவிடம் ஒரு கண்ணாடிக்குவளையில் கொஞ்சம்
கச்சான் எண்ணெய்யும் கேட்டு வாங்கி கொண்டு எடுத்துப்போவாள்.அப்போதெல்லாம் கொஞ்சம்
அவமானமாக இருக்கும்.இருந்தாலும் நாசிலெமாக்வுக்காக எல்லா அவமானத்தையும் தாங்கி
கொள்வாள் அவள்.
அவளுக்கும்,நாசிலெமாக்வுக்கும் உள்ள
பந்தத்தை அடுத்தவர்களால் புரிந்து கொள்ளவே முடியாது.அதனால்தான் நாசிலெமாக்வை
வைத்தே அவளைக் கிண்டல் செய்வார்கள்.சில கேலிகள் அவளை அழவைத்திருக்கின்றன.
காவியா எந்நேரம்
வேண்டுமானாலும் மூளைச்சாவை அடையலாம் என்ற நிலையிலிருந்தாள்.அப்படி ஒன்று
நடப்பதற்குள் நாசிலெமாக்வுடனான தருணங்கள் அனைத்தையும் நினைவில் கொண்டுவந்து
நிறுத்திவிடவேண்டும் என்ற போராட்டத்தில் இருந்தாள் காவியா.அவளது நினைவுகள்
தாறுமாறாக ஓடிக்கொண்டிருந்தன.
தமிழ்ப்பள்ளியில் புதன்கிழமைகளில் நாசிலெமாக்
கொடுப்பர்கள் என்பதால் அன்று மட்டும் விடுமுறை எடுக்காமல் போனது,செவ்வாய்க்கிழமைகளில்
பள்ளிமுடிந்து இலவச உணவு சமைக்கும் மாதுவுக்கு களிப்போடு நெத்திலி ஆய்ந்து
கொடுத்தது,இவள் பூச்சோங் வந்துவிட்டபிறகு,வேலையின் காரணமாக மாதத்திற்கொரு முறை மட்டும் வந்து போகும் அப்பா
தாப்பாவிலிருந்து அவளுக்குப் பிடித்தமான நாசிலெமாக்வை அலுக்காமல் வாங்கி வந்து
கொடுத்தது,கடைசியாக இவள் நாசிலெமாக் சமைத்தபோது அதைச்
சாப்பிடும் முன்னமே அப்பா திடீரென மரணமடைந்தது அனைத்தும் அவளது நினைவில்
முட்டிமோதி நின்றது.இவள் நாசிலெமாக்வை விரும்பி சாப்பிடுவதற்கு அப்பாதானே
முழுக்காரணம்.
.காவியா ஒரு பிரபலத்தை நேர்காணல் செய்தபோது
நாசிலெமாக் கிடைக்காமல் இருந்த வருத்தத்தையும் இணைத்திருந்தாள்.அதை அவள் தோழி கேலி
செய்து நட்பு வலைத்தளத்தில் எல்லாரும் பார்க்கும்படி எழுதியிருந்தாள்.அவள் தந்தை
இன்னமும் உயிரோடிருப்பதால் இவளது வலியை அவளால் அறியமுடியாதுதான்.
நாசிலெமாக் என்பது இவள் அப்பாவின் அன்பு
கலந்திருக்கும் உணவு என்பது அவளுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லைதான்.அதே
நாசிலெமாக்வுக்காக இன்று சாகும் நிலையை அடைவாள் என்பதும் அவளுக்குத் தெரிந்திருக்க
வாய்ப்பில்லைதான்.
அவள் மீண்டும் நாசிலெமாக் பற்றி சிந்திக்க
ஆரம்பித்தாள்.காரிலிருந்த நாசிலெமாக் என்னவாகியிருக்கும்?அதை
சாப்பிடும் முன்னமே இப்படி ஒரு விபத்து நிகழ்ந்தது நியாயமில்லையே என அவளுக்குப்
பட்டது.தனக்கு எதுவும் நேர்வதற்குள் நாசிலெமாக் சாப்பிட்டுவிடவேண்டும் போலிருந்தது
அவளுக்கு.
எந்த நாசிலெமாக்வுக்காக அந்த விபத்து நடந்ததோ அதே நாசிலெமாக்வைப் பற்றி அவள் நினைவில் இருந்த விசயங்கள் கொஞ்சங்கொஞ்சமாய் மங்கி கொண்டிருந்தன.இருப்பினும் அவள் மனம்
நாசிலெமாக்வுக்காக ஏங்க ஆரம்பித்தது.சிறுவயது முதல் சாப்பிட்ட நாசிலெமாக் யாவும்
நினைவில் வந்து நின்றது.அவளது ஆசையைப் புரிந்துகொண்டு யாரேனும் நாசிலெமாக் வாங்கி வந்து ஊட்டினால் தேவலாம் போலிருந்தது.தட்டுத்தடுமாறியாவது
தன் ஆசையை சொல்லிவிட நினைத்தாள்.ஆனால் எவ்வளவு முயன்றும்
கண்களைத் திறக்கவோ,உதடுகளை அசைக்கவோ அவளால் இயலவில்லை.
திடீரென அவளது விழிகளுக்குள் ஏதோ வெளிச்சம்
பாய்வதைப் போலிருந்தது.தூரத்தே கண்கூசும் ஒளி படர்ந்திருக்க,நடுவில் அவளது தந்தை கையில் நாசிலெமாக் பொட்டலங்களோடு நின்று கொண்டிருப்பதை அவளால் காணமுடிந்தது. அவள் ஆசைப்படுவதை எல்லாம் அந்தத் தீர்க்கதரிசியால் மட்டும்தானே உடனே குறிப்பறிந்து நிறைவேற்ற முடியும்.அதனால்தான்
அவளுக்குப் பிடித்தமான நாசிலெமாக்வோடு வந்து நிற்கிறார் போலும்.மனதில் ஆவல் பொங்க அவரை நோக்கி கைகளை நீட்டினாள் அவள்.
கணினித் திரையில் அவளது நாடித்துடிப்பு வெகுவாக குறைய ஆரம்பித்தது.......
முற்றும்.
ஆக்கம் :
உதயகுமாரி கிருஷ்ணன்,பூச்சோங்