Sunday, June 29, 2014

சிறுகதை : நாசிலெமாக்



      காவியாவின் வலது கை நாசிலெமாக் பொட்டலங்களை இறுக பற்றியிருந்தது.அவள் முகத்தில் எதையோ சாதித்துவிட்ட திருப்தி இழையோடியது.நீண்டு பெரிதாக இருந்த கபில நிற விழிகளில் ரசனை நிரம்பி வழிந்தது.எதிரில் தென்பட்ட மனிதர்களையும்,அவர்களின் செய்கைகளையும் ஒரு கதாசிரியைக்கே உரிய கவனத்தோடு கூர்ந்து கவனித்துக்கொண்டே நாசிலெமாக் அங்காடியைவிட்டு நடந்தாள்.

   உயர்ந்து,குள்ளமாய்,தடித்து,மெலிந்து,சற்றே பெரிய கண்களோடு,சப்பை மூக்கோடு இப்படி பல பரிமாணங்களில் கூட்டத்தில் கலந்திருந்த மனிதர்கள் யாவரும் தங்களுக்குள் ஓராயிரம் கதைகளைப் பதுக்கிவைத்திருப்பதாய் அவளுக்குத் தோன்றியது.தனக்குள் சிரித்துக்கொண்டே நடந்தாள்.

  வழியெங்கிலும் பலவித உணவுக்கடைகள்.எல்லாவற்றையும் ஒரு பார்வை பார்த்துக்கொண்டே நடந்தாள்.நாசிலெமாக்வைக் காட்டிலும் வேறெதுவும் அவளது கவனத்தை ஈர்ப்பதாக இல்லை.வீட்டிலிருக்கும் குழந்தைகளுக்கும்,சற்றே பெரிய குழந்தையான பாட்டிக்கும் சில தின்பண்டங்கள் வாங்கவேண்டியிருந்ததால் சில உணவு அங்காடிகளைப் பார்த்துக்கொண்டே நடந்தாள்.

   நடந்து கொண்டிருந்தவளின் கண்களில் கரும்புத் துண்டுகள் பட்டதும் நின்று வாங்கினாள்.அங்கேயே ஓர் ஓரமாக நின்று கரும்புச் சாறைப் பருகிய காவியாவை எதிரில் வந்த இளைஞர் பட்டாளமொன்று விழிகளால் பருகிக்கொண்டே கடந்தது.

  காவ்யா உயரமான,மெலிந்த தேகத்தோடு துருதுருவென இருந்தாள்.இளஞ்சிவப்பு நிற சட்டையும்,வெள்ளை நிற கால்சட்டையும் அணிந்திருந்தாள்.காதுகளில் பூனைக்குட்டி வடிவிலான இளஞ்சிவப்பு நிற காதணிகள் தொங்கி கொண்டிருந்தன.அவற்றை வியப்பாய் பார்த்த குழந்தையொன்று அவளது காதணிகளை ஆசையாய் தொட்டுப் பார்த்தது.அந்தக் குழந்தையின் கன்னத்தில் செல்லமாய் ஒரு தட்டு தட்டிவிட்டு மீண்டும் நடக்க ஆரம்பித்தாள்.பக்கத்தில் இருந்த அங்காடியில் வீட்டிலிருக்கும் அண்ணனின் குழந்தைகளுக்கு அப்பம்பாலும்,அவித்த சோளமும் வாங்கி கொண்டாள்.

   வடை பொரியும் வாசம் அவளது மூக்கைத் துளைத்தது.அந்த அங்காடிக்குள் நுழைந்தாள்.பெரிய இருப்புச் சட்டியில் அந்த வயதான மாது மின்னல் வேகத்தில் வடை மாவைத் தட்டிப்போட்டுக்கொண்டிருந்ததை வழக்கம்போல் வியப்பாக பார்த்துக்கொண்டே அம்மாவுக்கும்,பாட்டிக்கும் கொஞ்சம் வடைகளை வாங்கி கொண்டாள்.இவள் எப்படி நாசிலெமாக் பைத்தியமோ,அதேமாதிரி அவளுடைய பாட்டி வடை பைத்தியம்.பல்லெல்லாம் விழுந்துவிட்ட நிலையில் ஒரு வடையைச் சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரம் எடுத்துக்கொண்டாலும் பாட்டி வடை கேட்பதை நிறுத்துவதேயில்லை.

     வடை வாங்கிகொண்டு திரும்பியபோது அதே வரிசையில் சில அங்காடிகளில் நாசிலெமாக் பொட்டலங்கள் இருந்ததைக் கவனித்தாள்.ஆனால் கபில நிற வழுவழுப்பான காகிதத்தில் மடித்துவைக்கப்பட்டிருந்த  அந்த நாசிலெமாக் வகைகளில் எதுவுமே அவளது சிந்தையை ஈர்க்கவில்லை.ஆலேங் கடை போடாத ஒரு நாளில் அவள் இங்கு வாங்கி சுவைத்துப் பார்த்து வெறுத்திருக்கிறாள்.ஏனோ நாசிலெமாக் சுவையாக இல்லையென்றால் வாழ்க்கையின் விரக்தி நிலையை எட்டிவிட்டாற் போன்றதொரு எண்ணம் அவளை அலைக்கழிக்கும்.

   
காவியா நாசிலெமாக்வைச் சுவைக்கும் விதம் வேறு மாதிரியானது.ஒவ்வொரு பருக்கையையும் ரசித்து உண்பவள் அவள்.முதலில் கச்சான்,வெள்ளரித்துண்டுகளையெல்லாம் சாப்பிட்டுவிடுவாள்.அடுத்து முட்டையின் வெள்ளைக்கருவைச் சாப்பிடுவாள்.பிறகு கொஞ்சம் சம்பலை மட்டும் எடுத்து சோற்றில் வைத்து சாப்பிடுவாள்.கடைசியாக ஒரு பிடி சோறு மட்டும் எஞ்சியிருக்கும்போது நிறைய சம்பலைப் போட்டு,அதில் முட்டையின் மஞ்சள் கருவையும் சேர்த்து பிசைந்து சாப்பிட்டுமுடிப்பாள்.சாப்பிட்டு முடித்தபிறகும் அந்த நாசிலெமாக்வின் சுவையைக் கற்பனையில் வரித்தவாறு இருப்பாள்.

   அப்படி நாசிலெமாக் சாப்பிடுவதையே ஒரு கலையாக வைத்திருந்ததால் அவளுக்குத் தன் ஏழு வயதில் தோட்டத்து தமிழ்ப்பள்ளியில் இலவச உணவுத் திட்டத்தில் சாப்பிட்ட நாசிலெமாக் முதல்,கடந்த நான்கு தினங்களுக்கு முன் சக ஆசிரியை ஒருவர் சமைத்துக்கொடுத்த இறால் சம்பல் நாசிலெமாக் வரை ஒவ்வொரு வயதிலும் அவள் சாப்பிட்ட நாசிலெமாக் எந்தெந்த சுவையில்,எந்தெந்த வடிவத்தில் இருந்தன என்பதை உடனே கற்பனையில் கொண்டு வந்துவிட முடிந்தது.

    சம்பாதிக்க ஆரம்பித்து மகிழுந்து வாங்கிய பிறகு அவள் செய்த முதல் வேலை எந்தெந்த கடையில் நாசிலெமாக் விற்கிறார்கள் என ஆராய்ந்ததுதான்.அப்படி ஆராய்ந்து கண்டுபிடித்ததில் பூச்சோங் பட்டணத்தில் இரண்டு இடங்களில் விற்கப்படும் நாசிலெமாக்தான் அதீத சுவை கொண்டவை என கண்டுபிடித்திருந்தாள்.ஒன்று பூச்சோங் பெருமாள் கோவில் வளாகத்தில் சனிக்கிழமைகளில் குணா அண்ணன் விற்கும் சைவ நாசிலெமாக்.இரண்டாவது பதினான்காவது மைல் இரவுச் சந்தையில் ஆலெங் விற்கும் நாசிலெமாக்.

   இரவுச் சந்தைக்கு வந்தால் அவளுக்கு எப்போதும் ஆலெங் விற்கும் நாசிலெமாக்தான் பிடிக்கும்.அவளது கடையில்தான் விதவிதமான சம்பல் வைத்து நாசிலெமாக் கிடைக்கும்.நெத்திலி,கோழி,இறால்,இரட்டைச் சிப்பி நத்தை,பித்தாய் என பல வகையறாக்களில் கண்ணாடிப் பாத்திரத்தில் மூடி வைக்கப்பட்டிருக்கும் சம்பல் வகையைப் பார்க்கும்போதே இவளுக்கு நாவில் எச்சில் ஊறும்.

  பழைய நாளிதழில் வாழை இலையை வைத்து,ஒரு சிறிய கோப்பையில் தேங்காய்ப்பால் சாதத்தை அளந்து அள்ளிப்போட்டு,அதன் நடுவில் சம்பலை வைத்து,ஓரத்தில் பொரித்த நெத்திலியோடு கச்சான்களைத் தூவி,அவித்த முட்டையை அதன்மேல் கவிழ்த்துவைத்து,ஓர் ஓரமாய் வெள்ளரித்துண்டுகளை அடுக்கி,வெகு லாவகமாக அந்த நாளிதழைக் கூம்பு வடிவில் அவள் மடித்துக்கொடுப்பதே ஒரு கலையாக தோன்றும் காவியாவுக்கு.எப்போதடா அந்த நாசிலெமாக்வைச் சாப்பிடுவோம் என்ற ஆவலைச் சுமந்தபடி வீட்டுக்கு விரைவாள்.வீட்டுக்குப் போய் பிரிக்கும்போது பார்ப்பதற்கே ஆசையைத் தூண்டும் ஆலேங் நாசிலெமாக்வுக்கு ஈடாக அந்த இரவுச் சந்தையில் மலாய்க்காரர்களின் நாசிலெமாக் கூட இருக்கமுடியாது என்பது காவியாவின் கணிப்பு.

   காவியா தன் கையில் இருந்த நாசிலெமாக் பொட்டலங்களைப் பெருமை பொங்க பார்த்தாள்.

  சீக்கிரமாய் என்னைப் பிரித்து சாப்பிடேன் என அவை அழைப்பு விடுத்ததுபோல் தோன்றியது.

  இரவுச் சந்தையில் வாங்குவதற்கு வேறெதுவும் இருக்கவில்லை அவளுக்கு.வெறும் நாசிலெமாக் வாங்குவதற்காகவே வீட்டிலிருந்து அரைமணி நேரத்திற்கு மகிழுந்தைச் செலுத்தி,பத்து சமிக்ஞை விளக்குகளைக் கடந்து இந்த இரவுச் சந்தைக்கு வருவதில் அவளுக்கு அலுப்பேதும் தோன்றியதேயில்லை.

   காவியா தனது மகிழுந்தை சாலையின் எதிர்ப்புறத்தில் கடைவீடுகளின் வரிசையில் நிறுத்தியிருந்தாள்.பரபரப்பாக ஓடிக்கொண்டிருந்த வாகனங்களை வெகு கவனத்தோடு கவனித்து சாலையைக் கடந்தாள்.காரை அடைந்ததும் மணி பார்ப்பதற்காக வலது கையை உயர்த்தினாள்.அப்போது நாசியருகே நெருங்கி வந்த நாசிலெமாக் பொட்டலங்களிலிருந்து எழுந்த சுகமான வாசம் அவளைக் கிறங்கடித்த வைத்தது.அரைமணி நேரத்தில் வீட்டையடைந்து,கை கால் அலம்பிவிட்டு அந்தப் பொட்டலத்தைப் பிரித்து உண்ணும்போது கிடைக்கக்கூடிய இன்பத்தைக் கற்பனையில் வரித்தவாறு கார்க்கதவைத் திறந்தாள்.வடைகள்,அப்பம்பால்,சோளம் போன்றவற்றை மகிழுந்தின் பின்புற இருக்கைக்குக் கீழே வைத்தவள் நாசிலெமாக் பொட்டலங்களை மட்டும் மேலும் இறுக்கமாகக் கட்டி தனது இருக்கைக்குப் பக்கத்து இருக்கையில் வைத்துவிட்டு மகிழுந்தைச் செலுத்தினாள்.

  முன் தினம் நாசிலெமாக்வுக்காக நடந்த சண்டையை எண்ணிப்பார்த்தாள்.முன் தினம் ஏனோ காலையில் எழுந்ததுமுதல் அவளுக்கு நாசிலெமாக் சாப்பிடவேண்டும் போலிருந்தது.ஆனால் நாசிலெமாக் வாங்க அவளுக்கு நேரமே கிடைக்கவில்லை.சரி இரவில் வாங்கி கொள்ளலாம் என லக்‌ஷ்மிமித்ரா உணவகத்துக்குப் போனாள்.நாசிலெமாக் முடிந்துவிட்டதாய் சொன்னமாத்திரத்தில் பொசுக்கென்று அழுகை எட்டிப் பார்த்தது.கண்களில் கண்ணீர் வழிந்தோட கோபத்தோடு வீட்டுக்கு வந்தவள் யாரிடமும் பேசாமல் இருந்தாள்.அவளது நிலைமை புரியாமல் நண்பனொருவன் கைபேசியில் சீண்டிவிட,அவனைத் திட்டிவிட்டு அதே கோபத்தோடு கைபேசியை கட்டிலுக்கடியில் வீசிவிட்டு படுத்து உறங்கியும்விட்டாள்.

    மற்றவர்களுக்கு வேண்டுமானால் நாசிலெமாக் உணவுப்பொருளாக இருக்கலாம்.ஆனால் காவியாவைப் பொருத்தவரையில் நாசிலெமாக் என்பது உணர்வுப்பொருள்.கிடைக்கவில்லையென்றால் அவளைப் பட்டென்று அழவைத்துவிடவும்,கிடைத்துவிட்டால் உற்சாகத்தில் துள்ளிக்குதிக்கவைக்கும் ஆற்றலும் நாசிலெமாக்வுக்கு மட்டும்தான் இருந்தது.


  ஏதேதோ சிந்தனையில் மகிழுந்தைச் செலுத்திக்கொண்டிருந்த காவியா எதிர்பாரா தருணத்தில் குருட்டுத்தனமாய் அவளை முந்திக்கொண்டு விரைந்த மோட்டார்சைக்கிளை மோதிவிடாமலிருக்க,திடீரென காரை நிறுத்தினாள். அப்போது பக்கத்து இருக்கையிலிருந்த நாசிலெமாக் பொட்டலங்கள் கீழே விழப்போக,அதைக் கைகளால் பற்றியவள் தன்னையறியாமல் எண்ணெய்யை மிதிக்கவே,மகிழுந்து பாய்ந்து போய் சாலைத் தடுப்பு சுவரில் மோதியது.


   அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த காவியாவின் தலையில் பட்ட அடி பலமாக இருந்ததால் அவள் சுயநினைவின்றி இருப்பதாக சொன்னார்கள்.அவள் கோமா நிலையை அடையும் சாத்தியமும் இருப்பதாக சொன்னவர்கள் இருபத்து நான்கு மணி நேரம் காலக்கெடுவும் கொடுத்திருந்தார்கள்.

  அந்த அறைக்குள் தன்னைப் பார்ப்பதற்காக நுழைபவர்கள் பேசிக்கொள்ளும் எல்லாவற்றையும் காவியாவால் கேட்க முடிந்தது.ஆனால் அவளால் கண்களைத் திறக்கவோ,உதடுகளை அசைக்கவோ இயலவில்லை.எத்தனையோ முறை சொல்லிட்டேன்,மெதுவா ஓட்டுன்னு,கேட்டால்தானே அவள் அம்மாவின் அழுகுரல் கேட்டது.

   இவள் வேகமாக காரைச் செலுத்தியதால்தான் விபத்து நேர்ந்திருப்பதாக எண்ணியிருக்கிறார்கள் போலும்.அதுவும் நல்லதுதான்.நாசிலெமாக்வுக்காகதான் இந்த விபத்து நடந்தது என அறிந்தால் அவளது உறவினர்களும்,நண்பர்களும் அவளை மட்டமாக பேசக்கூடும்.ஒரு நாசிலெமாக்வுக்காகவா இப்படி என ஏதும் நினைத்துவிட்டால் அது அவமானம்தானே?

   நாசிலெமாக்வுக்காக அவமானப்படுவது ஒன்றும் அவளுக்குப் புதிதில்லைதான்.

  இடைநிலைப்பள்ளியில் கால் எடுத்துவைத்த பருவத்தில் பள்ளியின் அருகே ஒரு மலாய்க்கார பெண்மணி நாசிலெமாக் விற்பாள்.மாணவர்கள் என்பதால் அவள் அம்பது சென்னுக்கு விற்பாள்.ஆனால் அந்த ஐம்பது சென் கொடுத்து கூட அந்த நாசிலெமாக்வை வாங்கமுடியாமல் இருக்கும் சமயங்களில் அவளுக்கு ஏனோ வெகு அவமானமாக இருக்கும்.

  மாதக்கடைசியில் அவளது அப்பாவிடம் கொடுப்பதற்கு காசிருக்காது.அது மாதிரி தருணங்களில் அவள் அந்த நாசிலெமாக் கடையை வெகு ஏக்கத்தோடு பார்த்துவிட்டு நகர்வாள்.சில வேளைகளில் காசு வைத்திருக்கும் மற்ற தோழிகள் வாங்கும்போது இவளும் உடன் இருக்கவேண்டியிருக்கும்.நீ வாங்கலையா?ஏன் காசில்லையா?” என அம்மாது விசாரிப்பாள்.அப்போதெல்லாம் இவள் அவமானத்தால் கூனிக்குறுகிப்போவாள்.இப்படி நாசிலெமாக்வுக்காக அவள் பட்ட அவமானங்கள் அதிகம்.

   தமிழ்ப்பள்ளியில் ஆறாமாண்டில் பயின்றபோதே அவமானங்கள் அவளுக்குப் பழகிவிட்டிருந்தனதான்.நாசிலெமாக்வின் மீதிருந்த மோகத்தால் அவள் அந்த வயதிலேயே சம்பல் செய்ய கற்றுக்கொண்டாள்.அம்மியில் மிளகாய் அரைத்து செய்யும் சம்பலில்தான் ருசி அதிகம் என பக்கத்துவீட்டு லில்லி அக்காள் சொல்லிவைக்க,அவள் மிளகாயை ஊறவைத்து எடுத்துக்கொண்டு தன் பெரியம்மாளின் வீட்டுக்கு வருவாள்.அவள் வீட்டில் அம்மி இருந்தாலும் பெரியம்மாள் வீட்டு அம்மியில் அரைத்தால்தான் ருசி என அவள் நம்பியிருந்தாள்.

     அவளுடைய வீட்டில் சமையலுக்கு தேங்காய் எண்ணெய்யைதான் பயன்படுத்தினார்கள்.கச்சான் எண்ணெய்யில் சம்பல் செய்தால் இன்னும் சுவையாக இருக்கும் எனவும் லில்லி அக்காள் சொல்லியிருந்ததால் மிளகாயை அரைத்துக்கொண்டு கிளம்பும்போது பெரியம்மாவிடம் ஒரு கண்ணாடிக்குவளையில் கொஞ்சம் கச்சான் எண்ணெய்யும் கேட்டு வாங்கி கொண்டு எடுத்துப்போவாள்.அப்போதெல்லாம் கொஞ்சம் அவமானமாக இருக்கும்.இருந்தாலும் நாசிலெமாக்வுக்காக எல்லா அவமானத்தையும் தாங்கி கொள்வாள் அவள்.

   அவளுக்கும்,நாசிலெமாக்வுக்கும் உள்ள பந்தத்தை அடுத்தவர்களால் புரிந்து கொள்ளவே முடியாது.அதனால்தான் நாசிலெமாக்வை வைத்தே அவளைக் கிண்டல் செய்வார்கள்.சில கேலிகள் அவளை அழவைத்திருக்கின்றன.

    காவியா எந்நேரம் வேண்டுமானாலும் மூளைச்சாவை அடையலாம் என்ற நிலையிலிருந்தாள்.அப்படி ஒன்று நடப்பதற்குள் நாசிலெமாக்வுடனான தருணங்கள் அனைத்தையும் நினைவில் கொண்டுவந்து நிறுத்திவிடவேண்டும் என்ற போராட்டத்தில் இருந்தாள் காவியா.அவளது நினைவுகள் தாறுமாறாக ஓடிக்கொண்டிருந்தன.

    தமிழ்ப்பள்ளியில் புதன்கிழமைகளில் நாசிலெமாக் கொடுப்பர்கள் என்பதால் அன்று மட்டும் விடுமுறை எடுக்காமல் போனது,செவ்வாய்க்கிழமைகளில் பள்ளிமுடிந்து இலவச உணவு சமைக்கும் மாதுவுக்கு களிப்போடு நெத்திலி ஆய்ந்து கொடுத்தது,இவள் பூச்சோங் வந்துவிட்டபிறகு,வேலையின் காரணமாக மாதத்திற்கொரு முறை மட்டும் வந்து போகும் அப்பா தாப்பாவிலிருந்து அவளுக்குப் பிடித்தமான நாசிலெமாக்வை அலுக்காமல் வாங்கி வந்து கொடுத்தது,கடைசியாக இவள் நாசிலெமாக் சமைத்தபோது அதைச் சாப்பிடும் முன்னமே அப்பா திடீரென மரணமடைந்தது அனைத்தும் அவளது நினைவில் முட்டிமோதி நின்றது.இவள் நாசிலெமாக்வை விரும்பி சாப்பிடுவதற்கு அப்பாதானே முழுக்காரணம்.

 

    கையில் காசிருக்கும்போதெல்லாம் எந்தக் கடையில் நாசிலெமாக் சுவையாக இருக்கும் என ஆராய்ந்து வங்கி தந்தவராயிற்றே.அது அப்பாவின் அன்பு கலந்த உணவாயிற்றே.நகைச்சுவைக்கு செய்வதாய் எண்ணிக்கொண்டு நாசிலெமாக்வை வைத்து அவளை மிக மட்டமாக வர்ணித்த அவள் தோழிக்கு அது தெரிந்திருக்க வாய்ப்பில்லையே?

  .காவியா ஒரு பிரபலத்தை நேர்காணல் செய்தபோது நாசிலெமாக் கிடைக்காமல் இருந்த வருத்தத்தையும் இணைத்திருந்தாள்.அதை அவள் தோழி கேலி செய்து நட்பு வலைத்தளத்தில் எல்லாரும் பார்க்கும்படி எழுதியிருந்தாள்.அவள் தந்தை இன்னமும் உயிரோடிருப்பதால் இவளது வலியை அவளால் அறியமுடியாதுதான்.

    நாசிலெமாக் என்பது இவள் அப்பாவின் அன்பு கலந்திருக்கும் உணவு என்பது அவளுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லைதான்.அதே நாசிலெமாக்வுக்காக இன்று சாகும் நிலையை அடைவாள் என்பதும் அவளுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லைதான்.

     அவள் மீண்டும் நாசிலெமாக் பற்றி சிந்திக்க ஆரம்பித்தாள்.காரிலிருந்த நாசிலெமாக் என்னவாகியிருக்கும்?அதை சாப்பிடும் முன்னமே இப்படி ஒரு விபத்து நிகழ்ந்தது நியாயமில்லையே என அவளுக்குப் பட்டது.தனக்கு எதுவும் நேர்வதற்குள் நாசிலெமாக் சாப்பிட்டுவிடவேண்டும் போலிருந்தது அவளுக்கு.

     எந்த நாசிலெமாக்வுக்காக அந்த விபத்து நடந்ததோ அதே நாசிலெமாக்வைப் பற்றி அவள் நினைவில் இருந்த விசயங்கள் கொஞ்சங்கொஞ்சமாய் மங்கி கொண்டிருந்தன.இருப்பினும் அவள் மனம் நாசிலெமாக்வுக்காக ஏங்க ஆரம்பித்தது.சிறுவயது முதல் சாப்பிட்ட நாசிலெமாக் யாவும் நினைவில் வந்து நின்றது.அவளது ஆசையைப் புரிந்துகொண்டு யாரேனும் நாசிலெமாக் வாங்கி வந்து ஊட்டினால் தேவலாம் போலிருந்தது.தட்டுத்தடுமாறியாவது தன் ஆசையை சொல்லிவிட நினைத்தாள்.ஆனால் எவ்வளவு முயன்றும் கண்களைத் திறக்கவோ,உதடுகளை அசைக்கவோ அவளால் இயலவில்லை.

     திடீரென அவளது விழிகளுக்குள் ஏதோ வெளிச்சம் பாய்வதைப் போலிருந்தது.தூரத்தே கண்கூசும் ஒளி படர்ந்திருக்க,நடுவில் அவளது தந்தை கையில் நாசிலெமாக் பொட்டலங்களோடு நின்று கொண்டிருப்பதை அவளால் காணமுடிந்தது. அவள் ஆசைப்படுவதை எல்லாம் அந்தத் தீர்க்கதரிசியால் மட்டும்தானே உடனே குறிப்பறிந்து நிறைவேற்ற முடியும்.அதனால்தான் அவளுக்குப் பிடித்தமான நாசிலெமாக்வோடு வந்து நிற்கிறார் போலும்.மனதில் ஆவல் பொங்க அவரை நோக்கி கைகளை நீட்டினாள் அவள்.

     கணினித் திரையில் அவளது நாடித்துடிப்பு வெகுவாக குறைய ஆரம்பித்தது.......


முற்றும்.


          ஆக்கம் : உதயகுமாரி கிருஷ்ணன்,பூச்சோங்

Saturday, June 28, 2014

வளையல் பெண்ணின் உதயகீதங்கள் 32:பார் மகளே பார் (1963)

வளையல் பெண்ணின் உதயகீதங்கள் 32
தந்தையர் தின சிறப்பு கீதம்
பார் மகளே பார் (பார் மகளே பார் 1963)




      அறுபதாம் ஆண்டு பாடல்களில் காதல் பாடல்களைக் காட்டிலும் சோகப்பாடல்களும்,தத்துவ பாடல்களும் அதிகமாய் அன்றைய மக்களால் கொண்டாடப்பட்டு வந்தன.அந்தக் காலக்கட்டத்தில் இடம்பெற்ற பல பாடல்கள் பலருக்கும் மன ஆறுதலாய் இருந்திருக்கின்றன.அந்தக் காலக்கட்டத்தில் வெளியான சோகப்பாடல்களைக் கேட்கும்போதெல்லாம் நாம் கடந்து வந்த சோகத்தை எண்ணி நம் கண்களும் கலங்குவது திண்ணம்.

   எனக்கு அறுபதாம் ஆண்டு பாடல்களை இரவில் மிக சன்னமான ஒலியில் என் காதுக்கருகில் ஒலிக்கவிட்டு கேட்க பிடிக்கும்.இருளின் இரகசியத்தையும்,நிசப்தத்தையும் கிழித்துக்கொண்டு என் செவிகளுக்கு அருகே ஒலிக்கும் அவ்வகைப் பாடல்கள் என்னைச் சுகமாய்த் தாலாட்டி உறங்கவைத்திருக்கின்றன.அப்படி என்னைக் கவர்ந்த பாடல்களில் ஒன்றுதான் பார் மகளே பார் படத்தில் ஒலித்த ஒரு பாடல்.

  மூத்த தலைமுறையினரை என் தந்தையின் ஸ்தானத்தில் இருப்பவர்களாக வணங்குவதால் தந்தையர் தின சிறப்பு கீதமாக மூத்த தலைமுறையினர் அதிகம் விரும்பி கேட்கும் பாடல்களில் ஒன்றை அவர்களுக்குச் சமர்ப்பணமாக எழுத விரும்பியபோது என் மனதில் வந்து நின்ற பாடல் இதுதான்.

  வரிசையாக வரிசை படங்களைக் கொடுத்த வெற்றிப்பட இயக்குனர் பீம்சிங் அவர்களின் இயக்கத்தில் வெளிவந்த படமான பார் மகளே பார் திரைப்படம் 1963-ஆம் ஆண்டு நடிகர் திலகம் சிவாஜி கணேசன்,சௌகார் ஜானகி,முத்துராமன்,விஜயகுமாரி,புஸ்பலதா,ஏ.வி.எம் ராஜன் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்தது. பட்டு அவர்கள் எழுதிய பெற்றால்தான் பிள்ளையா என்ற நாடகத்தைத் தழுவி எடுக்கப்பட்ட இப்படத்தில் விஸ்வநாதன்,ராமமூர்த்தி இணையரின் இசையில் நீரோடும் வைகையிலே,வெட்கமா இருக்குதடி தோழி,மதுரா நகரில் தமிழ்ச்சங்கம்,துயில்கொண்டாள்,பூச்சூடும் நேரத்திலே போய்விட்டாயே,அவள் பறந்து போனாளே,பார் மகளே பார் ஆகிய பாடல்கள் இடம்பெற்றிருந்தன.அவள் பறந்து போனாளே என்ற ஒரே பாடலை நாயகியின் காதலனும்,அப்பாவும் பாடுவதாய் காட்டியிருப்பது புத்திசாலித்தனமான யுத்தி.

   இப்படத்தில் அந்தஸ்து,பணம் என்ற அகங்காரம் நிறைந்த வித்தியாசமான தந்தை பாத்திரத்தில் நடித்திருப்பார் சிவாஜி ஐயா.படத்தின் கதையும் புதுமையானதுதான்.

   ஜமீன்தார் சிவலிங்கத்தின்(சிவாஜி) மனைவி லக்ஷ்மி (சௌகார் ஜானகி)பிரசவலி வலியின் காரணமாக கஸ்தூரிபாய் நர்ஸிங் ஹோமில் அனுமதிக்கப்படுகிறார்.அவருக்கு ஒரு பெண்குழந்தை பிறக்கும் அதேவேளையில் சுலோசனா என்ற நாட்டியக்கார பெண் ஒருத்திக்கும் பெண்குழந்தை பிறக்கிறது.

 இரு குழந்தைகளையும் கழுவுவதற்காக எடுத்துப்போன இரு தாதிகளும் மின்சாரம் தாக்கி இறந்துபோக,கழற்றிவைக்கப்பட்டிருந்த எண் அட்டைகளில் எது எந்தக் குழந்தையினது என கண்டுபிடிக்க முடியாமல் போகிறது.

   தன் கணவன் தன்னைக் கைவிட்டுவிட்டுப்  போய்விட்டதால் தன்னால் இந்தக் குழந்தையை வளர்க்கமுடியாது என கடிதம் எழுதிவிட்டு சுலோசனா எங்கோ போய்விடுகிறாள்.ல‌ஷ்மியம்மாளுக்கும் தன் குழந்தை எது என அறியமுடியாததால் அங்கு ஒரு குழப்பமான சூழ்நிலை உருவாகிறது.

  இப்படி ஒரு விசயம் நடந்தது வெளியில் தெரிந்தால் தங்கள் மருத்துவமனையின் பெயருக்கு களங்கம் ஏற்படும் என அஞ்சும் தலைமை மருத்துவர் ல‌ஷ்மியம்மாளிடம் நடந்த உண்மையைச் சொல்கிறாள்.‌அவர் தன் கணவரின் நண்பர் ராமசாமியின் ஆலோசனைப்படி தனக்கு இரட்டைப் பெண்குழந்தை பிறந்திருப்பதாக கணவரிடம் பொய் சொல்கிறாள்.அதை உண்மையென நம்பிவிடும் சிவலிங்கத்திற்குப் பெருமை பிடிபடவில்லை.ஒருத்திக்கு சந்திரா(விஜயகுமாரி) என்றும்,இன்னொருத்திக்கு காந்தா([புஷ்பகுமாரி) என்றும் ஒரே பெயராக வைக்கிறார் சிவலிங்கம்.

  குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களாகிவிடுவார்கள்.பெரியவள் காந்தா தன்னை மாதிரியே கொஞ்சம் திமிர்ப்பிடித்த கோபக்காரியாகவும்,இளையவள் சந்திரா அவள் அம்மாவைப் போல் சாதுவானவளாக இருக்கிறாள் எனவும் சொல்லும் சிவலிங்கம் குழந்தைகளை மிகவும் பாசத்தோடு வளர்க்கிறார்.

   இளையவள் சந்திராவின் கழுத்தில் இருக்கும் பச்சை மச்சம் சிவலிங்கத்தைக் குபேரராக்கும் என வீட்டோடு இருந்து குழந்தைகளைப் பார்த்துக்கொள்ளும் சுலோசனாவின் அண்ணன் எம்.ஆர்.ராதா சொன்னபடி சிவலிங்கத்தின் வியாபாரம் விருத்தியடைந்து அவரது செல்வம் பெருக,ஏற்கனவே தான் பணக்காரர் என்ற அகம்பாவத்தில் இருக்கும் சிவலிங்கத்தின் செருக்கு அதிகரிக்கிறது.

    காலம் உருண்டோட,இரண்டு குழந்தைகளில் எந்தக் குழந்தை சிவலிங்கத்தினுடையது என்ற மர்மம் உடையாமலேயே குழந்தைகள் இருவரும் வளர்ந்து பதினெட்டு வயது மங்கையாகிறார்கள்.இருவரையும் தங்கள் சொந்தமகள் போன்றே பாகுபாடு காட்டாமல் வளர்க்கிறாள் லக்ஷ்மி.

   சந்திராவுக்கும்,சேகருக்கும் (முத்துராமன்) திருமண நிச்சயதார்த்த விழாவுக்கு  தன் சொத்தையெல்லாம் குதிரைப் பந்தயத்தில் இழந்து ஏழையாகிவிட்ட பழைய நண்பர் ராமசாமியை சிவலிங்கம் அழைக்கவில்லை.விசயமறிந்த அவர் அழையா விருந்தாளியாய் மனைவியோடு வந்து சேர,அவரிடத்தில் நின்று பேசுவது கூட தன் கௌரவத்திற்கு இழுக்கு என நினைத்து அவரைப் புறக்கணிக்கிறார் சிவலிங்கம்.

 அவரது ஆணவத்தால் அவமானமடைந்த சிவலிங்கம் கோபத்தில் குழந்தைகள் பற்றிய விசயத்தைப் போட்டு உடைக்கிறார்.

  சிவலிங்கத்தைப் பிடித்து ஆட்டும் அந்தஸ்து என்ற பேய் விலகட்டும் என்ற எண்ணத்தில் ராமசாமி சொல்லும் அந்த உண்மை குடும்பத்தில் பெரிய பிரச்சனையை ஏற்படுத்துகிறது.திருமணமும் நின்று போகிறது.

   மனைவி தன்னிடம் ஒரு பெரிய உண்மையை மறைத்துவிட்டாள் என்ற கோபமும் அத்தனை பேரின் முன் பட்ட அவமானமும் சிவலிங்கத்தின் கோபத்தைத் தூண்ட,இருவரில் யார் தன் மகள் என்ற உண்மை தெரியும்வரை தான் யாரிடமும் பேசப்போவதில்லை என வீம்பு செய்கிறார்;மனைவியும்,மகளும் கொண்டுவரும் உணவை உண்ண மறுக்கிறார்.மனைவியோடு பேச மறுக்கிறார்.

  தன் பெற்றோரின் நிலையை எண்ணி வேதனையடையும் சந்திரா குடும்பத்தில் நிலவும் பிரச்சனையைத் தீர்ப்பதற்காக தன் உயிரைத் தியாகம் செய்ய முடிவெடுக்கிறாள்.தான்தான் நாட்டியக்காரி சுலோசனாவின் மகள் என துப்பறிந்து கண்டுபிடித்துவிட்டதாய் பொய்யாய் ஒரு கடிதம் எழுதிவிட்டு வீட்டைவிட்டுப் புறப்படுகிறாள்.தான் சொன்ன பொய்யை வலுப்படுத்துவதற்காக ஒரு பெண்ணிடம் தனது மோதிரத்தைக் கொடுத்து,தன் வீட்டுக்கு சுலோசனா என்ற பெயரில் சென்று தான் சொன்னமாதிரி சொல்ல சொல்கிறாள்.

   கழுத்தில் இருந்த பச்சை மச்சத்தைப் பற்றி குறிப்பிட்டு பேச,அவள் சொன்னது உண்மை என சிவலிங்கம் நம்பிவிடுகிறார்.சந்தரா ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டதாக காவல்துறையினர் சொல்ல,தன் பிரச்சனை தீர்ந்துவிட்டதென,தன் உண்மையான மகள் காந்தாதான் என குதூகலிக்கிறார்  சிவலிங்கம்.சந்தராவின் புகைப்படத்தை வீட்டிலிருந்து எடுத்து கொண்டுபோய் உடைத்துப்போட சொல்கிறார்.காந்தாவும்,லக்ஷ்மியும் சந்தராவுக்கு பதினாறாவது நாள் சடங்குகள் செய்யும்போது கூட அவரிடத்தில் எந்தச் சலனமும் இல்லை.தன் அந்தஸ்து மட்டுமே பெரிதென தோன்றுகிறது அவருக்கு.

   தந்தையின் செல்வசெருக்கு காந்தாவுக்குக் கோபத்தை உண்டாக்க,தந்தையைப் பழிவாங்குவதற்காக ராமசாமியின் மகனையே மணக்கப்போவதாக சொல்கிறாள் அவள்.

   அவ்வேளையில்தான் தன் குடும்ப கௌரவத்தைக் காப்பாற்ற சந்திரா ஆடிய நாடகம் தெரியவருகிறது.அவள்தான் தன் உண்மை மகளாக இருக்கக்கூடும்,தன்னையே பழிவாங்குவதாய்ச் சொன்ன காந்தா தன் மகளாய் இருக்கமுடியாது என்பவர் நாளடைவில் குற்ற உணர்ச்சியால் கொஞ்சம் புத்தி பேதலித்துப் போகிறார்.அவரது ஆணவம் அழிகிறது.

   சந்திராதான் தான் மகளாக இருக்கக்கூடும் என்றபோதிலும் காந்தாவின் படத்தை எடுக்க சொல்லமாட்டேன் என சந்தராவின் படத்தை எடுத்து நெஞ்சோடு அணைத்துக்கொண்டு புலம்புகிறார்.அப்போது படத்தில் ஒலிக்கிறது இப்பாடல்.

    இந்தப் பாடலைச் சமீபத்தில் என் தோழியோடு இணைந்து கேட்டபோது அவள் ஒரு விசயத்தைப் பகிர்ந்து கொண்டாள்.அவளது தந்தையின் நெருங்கிய நண்பரின் மகன் ஒருவர் பதினெட்டு வயதில் மரணமடைந்துவிட்டிருக்கிறார்.இறுதிச் சடங்குக்குச் சென்றுவந்த தோழியின் பெற்றோர் அன்றிரவு தொலைக்காட்சியில் இப்பாடல் ஒளிபரப்பானபோது அந்தப் பையனை நினைத்து அழுதார்களாம்.

    படத்தில் பெண்பிள்ளையின் மறைவுக்காக ஒரு தந்தை பாடும் பாடல் நண்பரின் மகனின் இறப்பையும் ஏற்படுத்தி அழவைக்கிறதென்றால் அது எவ்வளவு ஆத்மார்த்தமாக புனையப்பட்டிருக்கிறது?அப்படியென்றால் பெண்பிள்ளைகளைப் பெற்ற எத்தனை தந்தைமார்களின் கண்களில் கண்ணீரை வரவழைத்திருக்கும் இப்பாடல்?

    இப்பாடலைப் பாடிய ஐயா திரு.சௌந்தர்ராஜன் அவர்கள் என்றைக்குமே மறக்கமுடியாதவர்.அவர் பாடிய பல பாடல்கள் சிவாஜி ஐயாவுக்கு வெகு பொருத்தமாக அமைந்துவிடும்.இப்பாடலும் அப்படியே.அழுதுக்கொண்டே பாடுவதுபோல்,சிவாஜி ஐயாவின் உணர்ச்சிப்பூர்வமான நடிப்புக்கு அற்புதமாய் பொருந்திப்போகிறது.

  எம்.எஸ்.விஸ்வநாதன்,ராமமூர்த்தி இணையரின் இசை நெஞ்சைப் பிழிகிறது,இப்பாடலில் பார் மகளே பார் என்ற வரிகள் பல தொனிகளில் ஒலிக்கின்றன.படத்தில் பெயர் ஓடும்போதும் இதே வரிகளை முதன்மையாகக் கொண்டு ஒரு பாடல் ஒலிக்கும்.

  இப்பாடலைப் புனைந்தவர் கவியரசு கண்ணதாசன்.ஒவ்வொரு வரிகளும் உயிரோட்டமாக வருடுகின்றன.

  எவ்வளவு கம்பீரமான,ஆளுமை நிறைந்த தந்தையாகவே இருந்தாலும் சொந்த மகளைப் பறிகொடுக்கும்போது குழந்தையைப் போன்று உடைந்துபோய்விடுவார்கள்.அவர்களது மனநிலையிலிருந்து இப்பாடலைப் புனைந்திருக்கிறார் கவியரசு.ஒரு மகளின் இருப்பை மட்டுமல்ல..தந்தையின் இருப்பும் ஒரு குடும்பத்துக்கு குறிப்பாக அந்தத் தாய்க்கும் எத்துணை அவசியம் என்பதையும் வரிகள் உணர்த்துகின்றன.

  மகளை நினைத்தே நோய்வாய்ப்பட்ட தாய் முன்பு அந்தப் படுக்கையில் படுத்த நிலை வேறு.இப்போது நோயின் பிடியில் அவள் படுத்திருக்கும் நிலை வேறு.அதைத்தான் தாய் படுத்த படுக்கையினை பார் மகளே பார் என குறிப்பிட்டுச் சொல்கிறார் அந்தத் தந்தை.பெரும் துயரத்தில் இருக்கும்போது உண்ணவும் முடியாமல்,உறங்கவும் முடியாமல் தவிப்பது என பலரும் கடந்து போகும் வலியையும் நெகிழவைக்கும் வகையில் சொல்கின்றன வரிகள்.

  கண்ணிழந்த தந்தை தனையே
  என்ன செய்ய எண்ணுகிறாய்?

 அந்த வரிகள் இயலாமையில் இருக்கும் அந்தத் தந்தையின் வேதனையின் உச்சத்தைச் சொல்கின்றன.

தந்தை வாழ்வு முடிந்து போனால்
தாயின் மஞ்சள் நிலைப்பதில்லை
தாயின் வாழ்வு மறைந்துபோனால்
தந்தைக்கென்று யாருமில்லை

இரண்டாம் சரணத்தில் வரும் இந்த வரிகள் எனக்குள் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய நிதர்சன வரிகள்.

   என் அம்மாவுக்கு மஞ்சள் பூசிக்கொள்வதென்றால் கொள்ளைப்பிரியம்.தினமும் ரப்பர்க்காட்டில் வேலை முடிந்து வந்ததும்,தலையோடு குளித்துவிட்டு மஞ்சளை உரசிப் பூசிக்கொள்வார்.அந்த வாசம் எனக்கு அதிகம் பிடிக்கும்.அப்பா மறைந்தபிறகு அம்மா மஞ்சளை எல்லாம் தூக்கி வீசிவிட்டார்.அதனால் அந்தக் குறிப்பிட்ட வரி என்னைக் கலங்கவைக்கும்.

  கணவன் இன்றி ஒரு மனைவியால் தனித்து வாழ்ந்துவிட முடியும்.ஆனால் மனைவியின்றி பெரும்பாலான வயதான ஆண்களால் வாழமுடிவதில்லை.சொந்தமாக எதையும் செய்யமுடியாமல் உடைந்துபோய் குழந்தையாக மாறிவிடுவார்கள் என்பது நான் கண்கூடாக கண்ட உண்மை.இதைக் காரணம் காட்டி
தாய் இறந்தபிறகு எத்தனையோ தந்தைமார்களைப் பராமரிப்பது கடினம் என முதியோர் இல்லத்தில் கொண்டுபோய் விட்டுவிடுகிறார்கள்.இது நியாயமா?

   சில தந்தைமார்களுக்கு மனதில் இருக்கும் பாசத்தை வெளிப்படுத்த தெரியாது.குடும்பத்துக்காக உழைக்கவேண்டும் என்பதை முன்னிறுத்தியே ஓய்வின்றி சுழல்பவர்கள் அவர்கள்.அவர்கள் இல்லையென்றால் நாம் கருவில் ஜனித்திருக்கவே முடியாது.அந்த நன்றிக்காகவேனும் தந்தையர்களையும் அவர்களின் கடைசிக்காலத்தில் பராமரிப்பது பிள்ளைகளின் கடமையாகும்.

  இன்று தந்தையர் தினம்.இந்த உலகம் தோன்றிய நாள்முதல் வாழ்ந்து,மடிந்து போன தந்தைமார்களுக்கும்,இப்போது வாழ்ந்து கொண்டிருக்கும் தந்தைமார்களுக்கும்,தந்தையாகப்போகும் தருணத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் தந்தைமார்களுக்கும் என் இனிய தந்தையர் தின நல்வாழ்த்துகள்.இப்பாடலை உங்கள் அனைவருக்கும் சமர்ப்பிக்கிறேன்.
 

பார் மகளே பார்
பார் மகளே பார்
நீயில்லாத மாளிகையை பார் மகளே பார்
உன் நிழலில்லாமல் வாடுவதை நீ
பார் மகளே பார்
பார் மகளே பார்
தாய் படுத்த படுக்கையினை
பார் மகளே பார்
அவள் தங்கமுகம் கருகுவதை
பார் மகளே பார்
பார் மகளே பார்
பார் மகளே பார்
பார் மகளே பார்
நீயில்லாத மாளிகையை பார் மகளே பார்
உன் நிழலில்லாமல் வாடுவதை
பார் மகளே பார்
பார் மகளே பார்

உண்பதென்று உணவை வைத்தால்
உன் முகத்தைக் காட்டுகிறாய்
உறக்கமென்று படுக்கை போட்டால்
ஓடிவந்து எழுப்புகிறாய்
கண்மணியில் ஆடுகிறாய்
புன்னகையில் வாட்டுகிறாய்
கண்ணிழந்த தந்தை தனையே
என்ன செய்ய எண்ணுகிறாய்?
என்ன செய்ய எண்ணுகிறாய்?
பார் மகளே பார்
பார் மகளே பார்

தந்தை வாழ்வு முடிந்து போனால்
தாயின் மஞ்சள் நிலைப்பதில்லை
தாயின் வாழ்வு மறைந்துபோனால்
தந்தைக்கென்று யாருமில்லை
தந்தை வாழ்வு முடிந்து போனால்
தாயின் மஞ்சள் நிலைப்பதில்லை
தாயின் வாழ்வு மறைந்துபோனால்
தந்தைக்கென்று யாருமில்லை
ஒருவராக வாழுகின்றோம் பிரிவதற்கோ இதயமில்லை
யாருமில்லை உனக்கே என்று
ஓடிவிட்டாய் என் மகளே
ஓடிவிட்டாய் என் மகளே
நீயில்லாத மாளிகையை
பார் மகளே பார்
உன் நிழலில்லாமல் வாடுவதை
பார் மகளே பார்
பார் மகளே பார்
பார் மகளே பார்

பார் மகளே பார்


Sunday, June 1, 2014

வளையல் பெண்ணின் உதயகீதங்கள்:கீதம் 30:அஞ்சலி அஞ்சலி(டூயட் 1994)



   தாப்பா பட்டணத்தில் கோகுலன் திரேடிங் என்ற கடை எனக்கு மிகவும் பிடித்தமான கடையாக இருந்தது.பட்டணத்திற்குச் செல்லும்போதெல்லாம் அந்தக் கடையை வேடிக்கை பார்ப்பேன்.அந்தக் கடையில் துணிமணிகள்,அலங்காரப்பொருள்கள் ஆகியவற்றோடு சினிமாப்பட வீடியோக்களும்,சினிமாப்பாடல் ஒலிநாடாக்களும் விற்கப்பட்டன.தீபாவளி சமயத்தில் வீட்டை அலங்கரிக்கும் தோரணங்களும்,வண்ண வண்ண விளக்குகளும் அந்தக் கடைக்கு கூடுதல் கவர்ச்சியைத் தந்தன.ஆனால் அவை எல்லாவற்றையும் விட,அங்கு சினிமாப்பாடல்களைப் பதிவு செய்து தருவதுதான் எனக்குப் பெரிய விசயமாக இருந்தது.

    இசைஞானிக்கு அடுத்து ஏ.ஆர்.ரகுமானும் புகழடைந்து கொண்டிருந்த காலம் அது.என் அம்மாவால் இளையராஜா ஐயாவின் ரசிகையாக இருந்த எனக்கு ஏ.ஆர்.ரகுமானின் பாடல்களும் பிடித்துப்போயின.எனக்கு அப்பாதான் ஏ.ஆர்.ரகுமான் பாடல்களை வாங்கித் தருவார்.

    பெரும்பாலான பொழுதுகளில் எங்கள் வீட்டில் வானொலி ஒலித்துக்கொண்டே இருக்கும் என்பதால் எனக்குப் பிடித்த பாடல்களையெல்லாம் நான் குறித்து வைத்துக்கொள்வேன்.பத்துப் பாடல்கள் சேர்ந்தவுடன் என் அப்பாவிடம் அந்தப் பாடல் பட்டியலைக் கொடுத்து கோகுலன் அண்ணாவின் கடையில் கொடுக்க சொல்வேன்.இரண்டு வாரம் கழித்து ஒலிநாடாவை எடுத்துக்கொள்ளலாம் என சொல்லிவிடுவார் கோகுலன் அண்ணன்.

     அச்சமயத்தில்தான் ஒரு பாடல் என்னை வெகுவாய் ஈர்த்தது.பாடலின் அர்த்தம் புரியவில்லை.அந்தளவுக்கு அதை ஆராய்ச்சி செய்யவுமில்லை.ஆனால் அந்தப் பெண்குரலில் இருந்த கவர்ச்சி என்னை வசியப்படுத்தியது.அந்தப் பாடலை மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டே இருக்கவேண்டும் என்ற ஆதங்கம் தோன்றவே பாடல் பட்டியலில் அந்தப் பாடலையும் இணைத்து அப்பாவிடம் கொடுத்தனுப்பினேன்.

  அந்தப் பாடல் எப்போது என் வசம் வந்து சேரும் என ஆவலாய் நாள்களை எண்ணினேன்.அந்த நாளும் வந்தது.அப்பாவின் சம்பள தினம்.அப்பாவோடு கோகுலன் திரேடிங் கடைக்குப் போனேன்.அந்தப் பாடல் ஒலிநாடாவை ரப்பர் கயிறு போட்டு கட்டி,கீறல் படாமலிருக்க ஒரு பழைய நாளிதழில் அழகாய் சுற்றி கொடுத்தார் கோகுலன் அண்ணன்.மிகவும் பத்திரமாக அந்தப் பொட்டலத்தை வீட்டுக்கு எடுத்துவந்தபோது பெருமிதமாக இருந்தது.

  எங்கள் வீட்டு வானொலியில் அந்தப் பாடலைத் தினமும் ஒலிக்கவிட்டு கேட்டு கேட்டு பூரித்துப்போனேன்.வானொலியின் அருகிலேயே கண்மூடி அமர்ந்து அந்தக் குரலைக் கூர்ந்து கேட்டேன் பலமுறை.ஒரு தடவை லில்லி அக்காள் கூட என்னிடம் அந்த ஒலிநாடாவை இரவல் வாங்கி கொண்டு போனார்.அவ்வருட தீபாவளியின்போது அப்பாடலை வானொலியில் ஒலிக்கவிட்டபோது அதீத மகிழ்ச்சியாகவும்,பெருமையாகவும் இருந்தது.

     அந்தப் பாடல் டூயட் திரையில் இடம்பெற்ற அஞ்சலி அஞ்சலி என்ற பாடல்.இவ்வாரம் உதயகீதங்களுக்கு 30-ஆவது வாரம்.வெள்ளிவிழாவைக் கடந்து பயணித்துக்கொண்டிருக்கும் உதயகீதங்கள் தொகுப்பில் நான் புதிதாய் கொண்டுவர எண்ணிய சில அம்சங்களில் ஒன்று தொன்னூறுகளின் பிற்பகுதியில் வெளிவந்த பாடல்களையும் இணைப்பதாகும்.

   அவ்வகையில் இவ்வார உதயகீதங்கள் தொகுப்பில் அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி என்ற பாடலைப் பற்றி பகிர்வதில் பெருமையடைகிறேன்.
  டூயட் திரைப்படம் பிரபு,ரமேஷ் அரவிந்த்,மீனாட்சி சேஷாத்திரி நடிப்பில்,கே.பாலச்சந்தரின் இயக்கத்தில் 1995-ஆம் ஆண்டு வெளிவந்த முக்கோண காதல் கதையை மையமாகக் கொண்ட படம்.ஏ.ஆர்.ரகுமான் இசையில்,கவிஞர் வைரமுத்துவின் வரிகளில் இப்படத்தில் நான் பாடும் சந்தம்’,’தங்கமே தமிழுக்கில்லை தட்டுப்பாடு’,’குளிச்சா குத்தாலம்’,’கத்திரிக்காய் கத்திரிக்காய்’,’அஞ்சலி அஞ்சலி’,’வெண்ணிலாவில் தேரில் ஏறி’,’என் காதலே என் காதலே என இப்படத்தின் அனைத்து பாடல்களுமே தனித்துவம் வாய்ந்தவை.மெட்டுப்போடு என்ற பாடலில் தமிழின் சிறப்பை சாக்சபோன் இசையோடு கலந்து கொடுத்து சாதனை படத்திருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான்.கேட்கும்போதே சிலிர்ப்பூட்டும் பாடல் இது.அதைப்போன்றே மனதில் அழமாய் நுழைந்து சுகராகம் மீட்டும் பாடல் அஞ்சலி அஞ்சலி’.

   அஞ்சலி அஞ்சலி பாடல் படத்துக்கே உயிர்நாடி எனலாம்.

    தாய்.தந்தையில்லாத குணாவும் (பிரபு),சிவாவும் (ரமேஷ் அரவிந்த்) அண்ணன் தம்பிகள்.அவர்களுக்கு ஒரு தங்கை.சிவாவை காதல் தோல்வியிலிருந்து மீட்பதற்காக குணா அவ்வூரில் இருந்த நிலபுலன்களை எல்லாம் விற்றுவிட்டு சென்னைக்கு அழைத்துவருகிறான்.இறக்கும் தருவாயில் தந்தை கேட்டுக்கொண்டபடி அவரது இரண்டாவது மனைவி சீத்தம்மாவையும் வீட்டுக்கு அழைத்துவந்து தன்னோடு வைத்துக்கொள்கிறான்.சீத்தம்மாள் தான் யாரென்ற உண்மையை அவனது தம்பி,தங்கையிடம் மறைத்து அவ்வீட்டில் வேலைக்காரியாய் இருக்கிறாள்.

  அண்ணன் குணா தமிழில் வல்லவன்.சிறப்பாக கவிதைகளையும்,பாடல்களையும் இயற்றக்கூடியவன்.சாக்சபோன் இசைக்கருவியை அற்புதமாய் வாசிக்கக்கூடியவன்.தம்பி சிவா நன்றாக பாடக்கூடியவன்.இருவரும் இணைந்து நடத்தும் இசைநிகழ்ச்சிகள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெறுகின்றன.

      பருமனான உடல் அமைப்பைக் கொண்ட குணாவைக் காதலிக்க எந்தப் பெண்ணும் முன்வருவதில்லை.ஒரு தடவை அவனது பழைய ஊரில் ஒரு பெண்,”நீங்க எந்தக் கடையில அரிசி வாங்கறீங்க?” என கேலி செய்ய அவமானமாய் உணரும் குணா பெண்களை நேரடியாக அணுக தயங்குகிறான்.இந்நிலையில் ஒரு தடவை பேரங்காடியில் ஓர் அழகான பெண்ணைப் பார்த்து மயங்கிப்போகிறான்.அவளின் ஐம்பது ரூபாய் பறந்து வந்து அவன் வாயில் ஒட்டிக்கொள்ள,அதை எடுப்பதற்குள் எங்கெங்கோ பறந்து போகிறது.பெரும்பாடுபட்டு அப்பணத்தை அவளிடம் கொண்டுவந்து சேர்ப்பவன்,கிழிந்திருந்த சிறு பகுதியை அவள் நினைவாக கண்ணாடியில் ஒட்டி வைக்கிறான்.

    அந்த அழகுப்பெண் அஞ்சலி தன் பக்கத்து வீட்டில்தான் இருக்கிறாள் என்பதை அறிந்த பிறகு குணா மகிழ்கிறான்.மனதுக்குள் அவளை வெகு ஆழமாய் நேசிக்க தொடங்குகிறான்.அவளிடம் சொல்லலாம் என எண்ணிக்கொண்டிருந்த வேளையில் ஒருநாள் இவர்கள் வீட்டு பலகாரத்தைச் சாப்பிட்ட அஞ்சலி சீத்தம்மாவிடம்,”நீங்க எந்தக் கடையில அரிசி வாங்கறீங்க? என கேட்டுவைக்க,குணா துணுக்குறுகிறான்.

   தன் தம்பியும் அவளை நேசிப்பதை அறியாத குணா,அவளது தந்தையிடம் நெருங்கிப் பழக ஆரம்பித்து அவளிடமும் நட்பாக பழகுகிறான்.

  இவ்வேளையில் ஒருநாள் அவன் தன் வீட்டில் செக்சஃபோன் இசைக்கருவியை வாசித்துக்கொண்டிருக்க,அதன் இசையில் மயங்கிப்போகும் அஞ்சலி மனம் உருசி ரசித்தபடி அவனது வீட்டை எட்டிப்பார்க்கும்போது சிவா கையில் சாக்சபோன் வைத்திருப்பதைப் பார்த்துவிட்டு அவன்தான் வாசிக்கிறான் என தப்பாக எண்ணிக்கொள்கிறாள்.

   இவை ஏதும் அறியாத குணா ஒருநாள் தன் வீட்டிலிருந்து சாக்சபோன் வாசிக்க,குளியலறையில் குளித்துக்கொண்டிருக்கும் அஞ்சலி அந்த இசைக்கேற்றவாறு லாலலா லாலலா என பாட தொடங்குகிறாள்.மகிழ்ந்து போன குணா மேலும் தீவிரமாய் வாசிக்க,அஞ்சலியும் தொடர்ந்து ஹம்மிங் செய்தவாறு இருக்கிறாள்.

      தன் காதலின் முதல்படியில் ஜெயித்துவிட்டதாய் சந்தோசப்படும் குணா அதே ராகத்தில் அவளது பெயரை இணைத்து அஞ்சலி அஞ்சலி என பாடல் புனைகிறான்.அடுத்த நிகழ்ச்சியில் பாடுவதற்காக புனையப்பட்ட அந்தப் பாடலின் டியூன் எப்படி என சிவா கேட்க,குணா பாடிக்காட்டுகிறான்.அப்போது படத்தில் முழுமையாக ஒலிக்கிறது இப்பாடல்.

    இப்பாடலில் என்னை அதிகமாய் ஈர்த்தது சித்ராவின் குரல்தான்.கண்ணாளனே எனது கண்ணை என்ற பாடலைப்போன்றே இப்பாடலில் அவரது குரல் என்னை இன்னும் அதிகம் வசியப்படுத்தியது.ஆரம்பத்தில் ஒலிக்கும் சாக்சபோன் இசைக்கு ஏற்ப ஒலிக்கும் அந்த ஹம்மிங் ஆகட்டும்,முதல் சரணம் முடிந்தபிறகு ம்ம்,ஆஆஆஆ என ஒலிக்கும் ஹம்மிங்காகட்டும் அப்படியே மனதை வருடி நம்மையும் தொடர்ந்து முணுமுணுக்க செய்கிறது.

   இப்பாடலை சித்ராவுடன் இணைந்து பாடியவர் எஸ்.பி.பாலா எனும்போது சொல்லவே வேண்டாம்.பிரபு பாடும்போது அவருக்குப் பொருத்தமாக சற்று முரடான குரலாகவும்,ரமேஷ் அரவிந்த் பாடும்போது அவருக்குப் பொருத்தமாக சற்று குழைவாகவும் அந்த வித்தியாசம் தெரிகிறது.
  
  இப்பாடலின் இசையைப் பற்றி சிலாகித்துப் பேசும்போது சக்சபோன் இசைக்கலைஞரைப் பற்றியும் கட்டாயம் பகிரவேண்டும்.இப்படத்தின் பிரதான இசையாக விளங்கிய சக்சபோன் இசையை வழங்கியவர் கத்ரி கோபால்நாத் அவர்கள்.

  இப்படத்தின் இயக்குனர் திரு.கே.பாலச்சந்தர் அவர்களின் முயற்சியால் இப்படத்தில் ஏ.ஆர்.ரகுமானோடு இணைந்து பணியாற்றினார் பத்ரி கோபால்நாத்.

   ரகுமானுக்கு சுமார் 30 இராகங்களை வாசித்துக் காட்டியும் அவருக்கு திருப்தி ஏற்படவில்லை. கடைசியாக கல்யாண வசந்தம் வாசித்ததும் 'இதுதான்' என ரகுமான் மகிழ்ந்தார்.

  சாக்சபோன் இசையில் பல சாதனைகளைப் படத்த இவர் லண்டன் பிபிசி நடத்திய உல்லாசவீதி’ (BBC Promenade) எனும் இசைவிழாவில் 1994ஆம் ஆண்டு தனது இசையை வழங்கினார். பிபிசி நடத்தும் இசைவிழாவிற்கு அழைக்கப்பட்ட முதல் கருநாடக இசைக் கலைஞர் எனும் பெருமை இவருக்குக் கிடைத்தது.பல விருதுகளையும் வென்ற இவருக்கு இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றித்தந்தது.

    இப்படத்தில் எல்லா பாடல்களையும் எழுதி,இரண்டு கவிதைகளையும் எழுதியிருக்கும் வைரமுத்து இப்பாடலில் அசத்திவிட்டார்.நாயகியின் பெயர் அஞ்சலி என்பதால் வார்த்தைக்கு வார்த்தை அஞ்சலி என போட்டும் எழுதியிருப்பது வித்தியாசமான அதே சமயம் கவித்துவத்தின் உச்சம்.

    படத்தின் நாயகி அஞ்சலி ஈடு இணையற்ற அழகி என்பதால் அவளது குரல்,பாதம்,எல்லாவற்றுக்கும் அஞ்சலி செலுத்துவதாய் பாடலை அமைத்திருக்கிறார்.

     அவளின் அழகைவிட அதிசயமானது எதுவும் இல்லை என்றும்,அவளது பெயரைச் சொன்னவுடன் முல்லை மலர்ந்ததாகவும்,அவர் புனைந்திருப்பது அழகிய ரசனை.

    நீயென்ன நிலவோடு பிறந்தவளா?
    பூவுக்குள் கருவாகி வளர்ந்தவளா?

   அவளது அழகைப் புகழும் உச்சக்கட்ட வரிகள் அவை.படத்தில் அப்பெண்ணானவள் கலைகளை இரசிப்பவள்;தமிழையும்,இசையையும் நேசிப்பவள்.அவள் காதல் வயப்பட முதல் காரணமாக இருந்தது அவனது இசை.அடுத்தது தமிழ்.ஒன்றில் மனம் குளிர்ந்தவள் மற்றொன்றில் உயிர் கசிந்ததாய் அந்தச் சரணத்தில் எவ்வளவு அற்புதமாய் எழுதப்பட்டிருக்கிறது.

   கடலிலே மழைபெய்தபின் எந்தத்துளி மழைத்துளி
   காதலில் அதுபோல நான் கலந்துட்டேன் காதலி

ஒன்றர கலந்துவிட்ட காதலை கடலில் விழுந்த மழைத்துளியோடு ஒப்பிட்டிருப்பதும் அருமை.

   அண்ணலும் நோக்கினான்;அவளும் நோக்கினாள் என விழி பார்த்து வந்த சீதையின் காதலை செழி வழியாய் இசையாகவும்,தமிழாகவும் வந்து சேர்ந்த தன் காதலோடு ஒப்பிட்டு முரண்படுத்தியிருப்பது ரசிக்கத்தக்க சந்தம்.

  .ஆண் அப்பெண்ணின் புற அழகை மையப்படுத்தி பாடுவதுபோன்றும் அதே அப்பெண் பாடுவதாய் வரும்போது அவனது தமிழ்வளமையையும்,இசைத்திறமையையும்,
கவியாற்றலையும் அவள் வாழ்த்துவதாய் மையப்படுத்தி எழுதியிருப்பது அபாரம்.

    பாடல் காட்சியும் அழகியலோடு படமாக்கப்பட்டுள்ளது.ஒவ்வொரு அஞ்சலிக்கும் ரமேஷ் அரவிந்தும்,மீனாட்சியும் வெளிப்படுத்தும் அபிநயம் அற்புதம்.அவள் திரைப்பட நடிகர்களுக்கு நடனம் வடிவமைப்பவள் என்ற பாத்திரத்துக்கு ஏற்ப நடனக்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.

    ஆக மொத்தத்தில் குரல்,வரிகள்.இசை,அபிநயம்,ஹம்மிங் அனைத்திலும் சிறப்புக்குரிய வகையில் இருக்கும் பாடல் இது.அதனால்தான் லாலலா என்ற ஹம்மிங்கைக் கூட கணக்கிட்டு அதன்படி எழுதியுள்ளேன்.அனைத்து புதிய பார்வை ரசிகர்களுக்கும் சமர்ப்பணமாய் இதோ பாடல்.


பெ: லாலலா லாலலா லாலாலலாலா
    லாலலா லாலலா லாலாலலாலா
     சக்சபோன் இசை
    லாலலா லாலலா லாலாலலாலா
    லாலலா லாலலா லாலாலலாலா
    லலலல்ல லல்லலா லலலாலா லல
    லல்ல லலலா லலலாலா
    லலலல்ல லல்லலா லலலாலா லல
    லல்ல லாலா லலலாலா
    லாலலா லாலலா லாலாலலாலா
    லாலலா லாலலா லாலாலலாலா
   லலலல்ல லல்லலா லலலாலா லல
   லல்ல லலலா லலலாலா
   லலலல்ல லல்லலா லலலாலா லல
   லல்ல லாலா லலலாலா
  
ஆண் :அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி
      அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி
      பூவே உன் பாதத்தில் புஷ்பாஞ்சலி
      பொன்னே உன் பெயருக்கு பொன்னாஞ்சலி
      கண்ணே உன் குரலுக்கு கீதாஞ்சலி
      கண்காணா அழகுக்கு கவிதாஞ்சலி
      அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி
       அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி
       பூவே உன் பாதத்தில் புஷ்பாஞ்சலி
       பொன்னே உன் பெயருக்கு பொன்னாஞ்சலி
       கண்ணே உன் குரலுக்கு கீதாஞ்சலி
       கண்காணா அழகுக்கு கவிதாஞ்சலி

       காதல் வந்து தீண்டும் வரை
       இருவரும் தனித்தனி
       காதலின் பொன்சங்கிலி இணைத்தது கண்மணி
       கடலிலே மழை பெய்தபின் எந்தத்துளி மழைத்துளி
       காதலில் அதுபோல நான் கலந்துட்டேன் காதலி
       திருமகள் திருப்பாதம் பிடித்துவிட்டேன்
       தினம் ஒரு புதுப்பாடல் வடித்துவிட்டேன்
       அஞ்சலி அஞ்சலி என்னுயிர்க்காதலி
       பூவே உன் பாதத்தில் புஷ்பாஞ்சலி
       பொன்னே உன் பெயருக்கு பொன்னாஞ்சலி
       கண்ணே உன் குரலுக்கு கீதாஞ்சலி
       கண்காணா அழகுக்கு கவிதாஞ்சலி
       அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி
       அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி
       பூவே உன் பாதத்தில் புஷ்பாஞ்சலி
       பொன்னே உன் பெயருக்கு பொன்னாஞ்சலி
       கண்ணே உன் குரலுக்கு கீதாஞ்சலி
      கண்காணா அழகுக்கு கவிதாஞ்சலி

பெண் : சீதையின் காதல் அன்று விழிவழி நுழைந்தது
        கோதையின் காதல் இன்று செவிவழி புகுந்தது
        என்னவோ என் நெஞ்சினை
        இசை வந்து துளைத்தது
        இசை வந்த பாதைவழி
        தமிழ் மெல்ல நுழைந்தது
        இசை வந்த திசை பார்த்து மனம் குளிர்ந்தேன்
        தமிழ் வந்த திசை பார்த்து உயிர் கசிந்தேன்
       அஞ்சலி அஞ்சலி இவள் கலைக்காதலி
       அன்பே உன் அன்புக்கு புஷ்பாஞ்சலி
        நண்பா உன் கற்புக்கு நடனாஞ்சலி
        கண்ணா உன் இசை வாழ கீதாஞ்சலி
        கவியே உன் தமிழ் வாழ கவிதாஞ்சலி
 ஆண்:  அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி
        அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி
        பூவே உன் பாதத்தில் புஷ்பாஞ்சலி
        பொன்னே உன் பெயருக்கு பொன்னாஞ்சலி
        கண்ணே உன் குரலுக்கு கீதாஞ்சலி
        கண்காணா அழகுக்கு கவிதாஞ்சலி

        அழகிய உனைப்போலவே அதிசயம் இல்லையே
       அஞ்சலி பேரைச் சொன்னேன் அவிழ்ந்தது முல்லையே
       கார்த்திகை மாதம் போனால் கடும் மழை இல்லையே
       கண்மணி நீ இல்லையேல் கவிதைகள் இல்லையே
       நீயென்ன நிலவோடு பிறந்தவளா?
       பூவுக்குள் கருவாகி வளர்ந்தவளா?
       அஞ்சலி அஞ்சலி என்னுயிர்க்காதலி
       பூவே உன் பாதத்தில் புஷ்பாஞ்சலி
       பொன்னே உன் பெயருக்கு பொன்னாஞ்சலி
       கண்ணே உன் குரலுக்கு கீதாஞ்சலி
       கண்காணா அழகுக்கு கவிதாஞ்சலி
       அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி
       அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி
      பூவே உன் பாதத்தில் புஷ்பாஞ்சலி
      பொன்னே உன் பெயருக்கு பொன்னாஞ்சலி
       கண்ணே உன் குரலுக்கு கீதாஞ்சலி

       கண்காணா அழகுக்கு கவிதாஞ்சலி