Monday, December 31, 2012

சிறுகதை: ஹிட்லர் பாட்டியும் ஒரு சிண்டரெல்லா தேவதையும்

           ஹிட்லர் பாட்டியும் ஒரு சிண்டரெல்லா தேவதையும்....

         அந்த அறைக்குள் சிண்டரெல்லாவையும்,ஹிட்லர் பாட்டியையும் தவிர வேறு யாரும் இருக்கவில்லை.அரிவை சிண்டரெல்லாவின் பார்வை பழமை மாறாத ஹிட்லர் பாட்டியின் மேல் படிந்தது. ஹிட்லர் பாட்டி எந்த நேரத்திலும் தன் கடைசி மூச்சைவிட தயாராக இருந்தாள்.பெருமளவு தோலை எலும்பு விழுங்கியிருந்தது.எலும்புகள் துருத்திக்கொண்டு சற்றே அதிகப்படியாய் குழி விழுந்த கன்னங்களோடு இருந்த அவளைப் பார்க்கையில் மருத்துவத்துறை மாணவர்களுக்கு மத்தியில் கிடத்தப்பட்ட மனித எலும்புக்கூட்டுக்கு கைலி,இரவிக்கை போர்த்தி விட்டது போலிருந்தாள்.சிண்டரெல்லாவுக்கு அவளை அந்தக் கோலத்தில் பார்க்கும்போதும் பயம் எள்ளளவும் குன்றாமல்தான் இருந்தது.       
       “கொஞ்சநேரம் பாட்டி கூடவே இரு வந்துடறேன்,” சிண்டரெல்லாவின் அம்மா கேழ்வரகு கூழ் படிந்திருந்த கரண்டியோடு வந்து சொல்லிவிட்டுப் போனாள்.பாட்டிக்குக் கொஞ்சநாளாகவே கேழ்வரகு கூழ்தான் மூன்று வேளையும் உணவாகிறது.படுத்த நிலையிலேயே அவள் குடிப்பதற்கு ஏதுவாக இருக்கிறது என்பதைத் தாண்டி கூழ் கொடுத்து பாட்டியை மீண்டும் நடமாட வைத்துவிடலாம் என்ற அம்மாவின் நம்பிக்கையும் அதற்குக் காரணம்.ஏற்கனவே ஒரு தடவை இப்படி படுத்த படுக்கையாக இருந்த ஹிட்லர் பாட்டி தினமும் கேழ்வரகு கூழ் குடித்துதான் பழையபடி தெம்பாக எழுந்தாள்.      
        சிண்டரெல்லாவின் பார்வை மீண்டும் ஹிட்லர் பாட்டியின் மீது நிலைத்தது.திடீரென்று ஹிட்லர் பாட்டியின் உடலில் சிறு அசைவு தெரிந்தது.சரேலென்று ஒருக்களித்துப் பார்த்தவள் கண்களைத் திறந்து சிண்டரெல்லாவை ஒருகணம் முறைத்துப் பார்த்தாள்.அவள் முகம் கோபமாய் மாறியது.சட்டென்று எழுந்து அமர்ந்தவள் தலையணைக்கு அடியிலிருந்த முதுகு சொறியும் குச்சியை எடுத்துக்கொண்டு எழுந்து நின்றாள். அதிர்ச்சி மாறாத நிலையில் இருந்த சிண்டரெல்லா தன்னைச் சுதாகரித்துக்கொண்டு,வேகமாய் ஓடி, மாடிப்படிகளைத் தாண்டி, தன் அறைக்குள் நுழைந்தபோது அவளின் வயது குறைந்து பெதும்பையாக மாறியிருந்தாள்.ஹிட்லர் பாட்டியும் ஐம்பத்தைந்து வயது பெண்மணியாய் சற்றே ‘இளமையாய்’ மாறியிருந்தாள்.சிண்டரெல்லாவைத் தொடர்ந்து ஓடி வந்தவள் அறை வாசலுக்கு வெளியே கையில் முதுகு சொறியும் குச்சியோடு நின்றிருப்பதை சிண்டரெல்லாவால் சாவித் துவாரத்தின் வழியாக நன்கு பார்க்க முடிந்தது. ஹிட்லர் பாட்டி எப்படியாவது உள்ளே நுழைந்துவிடுவாள்.அதற்குள் அறைக்குள்ளிருந்து தப்பிக்கவேண்டும்.
      சிண்டரெல்லாவின் பார்வை அறையின் சன்னல் பக்கம் போனது.சன்னல் அருகே சென்றவள் இரண்டு கண்ணாடித் துண்டுகளைச் சத்தமின்றி கழற்றினாள்.பின் வெளியே எகிறி குதித்தவள் நஞ்சுட்டான் பூ மரத்தினருகே இருந்த வெள்ளை நிற ‘ஜப்பான்’ செருப்பை அவசர அவசரமாக மாட்டிக்கொண்டு தன் அப்பாவைத் தேடி ஓட ஆரம்பித்தாள்.நாயுடு தாத்தாவின் வெற்றிலைக் கொல்லை,ஆயக்கொட்டகையைத் தாண்டிதான் தோட்டத்து அலுவலகமும்,அதனையொட்டி ரப்பர் பால் நிறுக்குமிடமும் இருந்தது.மதியம் ஒரு மணிக்கு சிண்டரெல்லாவின் அப்பா அங்குதான் இருப்பார்.அவரிடம் போய்ச் சேர்ந்துவிட்டால் போதும்.ஹிட்லர் பாட்டியால் ஒன்றும் செய்யமுடியாது. சிண்டரெல்லா, நாயுடு தாத்தாவின் வெற்றிலைக் கொல்லையை அடைந்தபோது,பச்சைநிற, ஒற்றைச் சக்கர தள்ளுவண்டியில் குப்பைகளைச் சுமந்து கொண்டு வந்த ரங்கன் தாத்தா அவளை வழிமறித்து தன் வெற்றிலைக் கறை படிந்த பற்களைக் காட்டிச் சிரித்தார்.தோட்டத்தில் இருந்த சிறு பிள்ளைகளுக்கெல்லாம் அவர்தான் பூச்சாண்டி.சவரம் செய்யப்பட்டு, முள்மாதிரி தாடையில் ஆங்காங்கே எட்டிப் பார்க்கும் வெள்ளைத் தாடியும்,சிவப்பேறிய கண்களுமாய் இருக்கும் அவரைப் பார்த்தாலே குழந்தைகள் மிரண்டு அழுதுவிடும்.சிண்டரெல்லாவும் சில வேளைகளில் அவரைப் பார்த்து பதுங்கியிருக்கிறாள்.ஆனால் இன்று ஹிட்லர் பாட்டியிடமிருந்து தப்பிக்கவேண்டும் என்பதே அவளது பிரதான முயற்சியாக இருந்ததால் ரங்கன் தாத்தாவை ஒரு பொருட்டாகவே மதிக்காமல் அவரைக் கடந்து ஓடினாள். அதற்குள் ஹிட்லர் பாட்டியின் சிரிப்புச் சத்தம் முதுகுக்கு அருகில் கேட்கவே,தன் ஓட்டத்தை அதிகப்படுத்தினாள்.
       ஆயக்கொட்டகையைத் தாண்டி ஓடினாள்.பின்னால் துரத்திக்கொண்டே வந்த பாட்டியின் குரலோ,ஆயம்மாவுக்குப் பயந்து அழுதுக்கொண்டிருந்த குழந்தைகளின் அழுகையோ எதுவுமே காதில் விழாத தூரத்திற்கு ஓடிவிட்டிருந்தாள். ஒரு மணிக்கெல்லாம் அப்பா ரப்பர் பாலையும்,ஒட்டுப்பாலையும் ஏற்றிக்கொண்டு சிவப்பு நிற தலையும்,கபில நிற உடலும் கொண்ட கனவுந்தில் தாப்பா பட்டணத்திற்குப் புறப்பட்டுவிடுவார்.அதற்குள் அப்பாவைப் பிடித்தாக வேண்டும். சிண்டரெல்லா சிவப்புத் தலை கனவுந்து நிற்குமிடத்தை ஐந்தே நிமிடங்களில் அடைந்துவிட்டிருந்தாள்.எனினும் அவள் ஓட்டம் பயனற்றுதான் போனது.மழை பெய்ததால் தோட்டப்பாட்டாளிகள் கிடைத்த பாலை மட்டும் சுமந்து கொண்டு வந்துவிட, அப்பாவும் சீக்கிரமாக ரப்பர் பாலை ஏற்றிக்கொண்டு புறப்பட்டுவிட்டிருந்தார்.கனவுந்து போன பாதையை ஏமாற்றத்தோடு நோக்கினாள் சிண்டரெல்லா.அவளின் கண்களில் கண்ணீர் வந்துவிட்டிருந்தது.முதல் முறையாக மழையைச் சபித்தாள்.    
        அவள் அப்பாவைத் தேடி இங்கு இப்படி ஓடிவந்தது இது முதன்முறையல்ல. ஹிட்லர் பாட்டிக்கு சிண்டரெல்லாவைக் கண்டாலே பிடிக்காது.வீட்டு வேலைகளை சிண்டரெல்லா சரியாக செய்யவில்லை என்றால் கூட முதுகு சொறியும் குச்சியை எடுத்து வந்து விளாசிவிடுவாள்.ஒரு முழம் அளவிற்கு நீளமாய் நுனியில் ஐந்து விரல்கள் போன்ற அமைப்பில் இருக்கும் அந்த முதுகு சொறியும் குச்சியை முதுகு சொறிகிறாளோ இல்லையோ சிண்டரெல்லாவை அடித்தே உடைத்துவிடுவாள் ஹிட்லர் பாட்டி.அப்படி உடைந்து போன குச்சியில் அடிக்கும்போது வலி இன்னும் கூடுதலாக இருக்கும்.அந்த அடிக்கு பயந்து போய் அப்பாவைத் தேடி ஓடிவந்துவிடுவாள்.அப்பா அவளை வீட்டில் கொண்டு போய் விட்டுவிட்டு,”யாரும் பிள்ளையை அடிக்காதீங்க” என்று சொல்லிவிட்டு சிண்டரெல்லாவின் தலையை வருடிக்கொடுத்துவிட்டுப் போவார்.அந்தமாதிரி சமயங்களில் ஹிட்லர் பாட்டி அவளை அடிக்கமாட்டார்.பின்னொருநாள் சரியான சந்தர்ப்பம் வாய்க்கும்போது சேர்த்து வைத்து அடிப்பாள் என்றபோதிலும் அந்தக் கணத்தில் தப்பித்தால் போதும் என்று இருக்கும் சிண்டரெல்லாவுக்கு.    
          வழக்கமாக இங்கு வந்து அப்பாவுக்காக காத்திருக்கும் பொழுதுகளில் அப்பா தன் வேலையை முடித்துக்கொண்டு வரும்வரை சிண்டரெல்லா கனவுந்துகள் நிற்குமிடத்திற்கு அருகே இருந்த, ஆலமரத்தோடு இணைந்து வளர்ந்திருந்த அரசமரத்துக்கடியில் அமர்ந்து விளையாடிக்கொண்டிருப்பாள்.மரத்திலிருந்து கொட்டும் இலைகளை ஓடி ஓடி பிடிப்பதை ஒரு விளையாட்டாக கொண்டிருப்பாள்.ஆனால் இப்போது அரசமரத்தடிக்குப் போனால் ஹிட்லர் பாட்டியின் கையில் மாட்டிக்கொள்வது திண்ணமென்று தெரிந்ததால் அப்பா வரும்வரை பாட்டியின் கண்களுக்குத் தெரியாமல் அங்கேயே எங்காவது ஒளிந்து கொள்ள எண்ணினாள்.சுற்றும் முற்றும் பார்த்தவள் தோட்டத்து அலுவலகத்தை ஒட்டியிருந்த வெள்ளை நிற நஞ்சுட்டான் பூ மரத்தின் மேல் ஏறி பச்சைப்புழு இல்லாத பக்கமாய்ப் பார்த்து ஒரு கிளையில் அமர்ந்து கொண்டாள். மரக்கிளையில் இருந்து பார்வையைத் தாழ்த்தி கீழ் நோக்கினாள்.பாட்டியின் பிம்பம் எங்கும் தென்படவில்லை.போய்விட்டாளோ?நிச்சயம் அம்மாவிடம் வத்தி வைப்பாள். ஏற்கனவே ‘சார்டின் கறியால் நடந்த சண்டையால் முடப்பந்தாட்டம் ஆடிவிட்ட அம்மா இவள் மீது இன்னமும் கோபமாகத்தான் இருப்பாள்.          
            முன்தினம் நடந்த அந்தச் சம்பவம் அவள் நினைவில் வந்து போனது.அம்மா சாரதி தாத்தா கடையில் கடன் சொல்லிவிட்டு ‘சார்டின்’ மீன் வாங்கி வந்து கறி சமைத்திருந்தாள்.சிண்டரெல்லா ஆசையாய் அம்மாவை ஊட்ட சொன்னாள்.ஏற்கனவே சரியாக சாப்பிடாமல் சோற்றைக் கொண்டு போய் பக்கத்து வீட்டு நாய்க்குக் கொட்டிவிட்டாளே என்று கோபமாய் இருந்த அம்மா ஊட்ட மறுக்கவே,பாட்டியும் ஒத்து ஊத,அப்போது பார்த்து அங்கு வந்த அப்பா,அம்மாவை ஏசிவிட்டார். “உங்க ரெண்டு பேருக்கும் பிரச்சனை மூட்டிவிடற வயசா?” பாட்டி தூபம் போடவே,அம்மா தன் கையில் வைத்திருந்த வெள்ளிப் பாத்திரத்தைக் கோபமாய்த் தள்ளிவிட்டாள்.அது முடப்பந்தாட்டம் கணக்கில் சற்று தூரத்தில் இருந்த மூன்று வெள்ளிக் குவளைகளையும் அடித்து தரையில் வீழ்த்தியது. அப்பா இல்லாமல் வீட்டுக்குப் போய் இன்னொருமுறை அம்மாவின் முடப்பந்து ஆட்டத்தைக் காணும் தைரியம் அவளுக்கு இல்லை.காத்திருந்தாள்.
           கொஞ்சநேரம் ஆனது.காற்று வீசியதும் பக்கத்துக் கிளையிலிருந்த இலைகள் அவள் உட்கார்ந்திருந்த கிளையை நெருங்கி வர,ஒரு பச்சைப்புழு தன் முட்டைக்கண்களை உருட்டியபடி அவளைச் சமீபித்து வந்தது.பயத்தால் அலறிக் கத்தினாள் சிண்டரெல்லா. சிண்டரெல்லாவைப் பொருத்தவரையில் இந்த உலகத்தில் அவளைப் பயமுறுத்தக்கூடியது இரண்டே விசயங்கள்தான்.ஒன்று ஹிட்லர் பாட்டி,இன்னொன்று பச்சைப்புழு.இதற்குமேல் மரத்தின்மேல் இருப்பது ஆபத்து என்று நினைத்தவள் பூப்போட்ட பாவாடையை ஒரு கையால் பிடித்தபடி மரத்திலிருந்து அவசர அவசரமாக இறங்கினாள்.அவளுக்கு ஆச்சரியமளிக்கும் வகையில் சிவப்புத் தலை கனவுந்து ரப்பர் பாலை நிறுக்குமிடத்தில் நின்றிருந்தது. ஏகப்பட்ட சந்தோசத்தோடு அதை நோக்கி ஓடியவள் உள்ளே அப்பா இல்லாததைக் கண்டு அதிர்ச்சியடைந்தாள்.ரப்பர்பால் நிறுக்குமிடத்தில் இருப்பாரோ என திரும்பியவள் அங்கே ஹிட்லர் பாட்டி நிற்பதைக் கண்டு திடுக்கிட்டாள்.        
            ஹிட்லர் பாட்டி கடகடவென சிரித்தாள்;சிரித்துக்கொண்டிருக்கும்போதே பாட்டியின் உடம்பு மாறியது.சிண்டரெல்லாவும் இருபத்தோரு வயது அரிவையாய் மாறிப்போனாள். “உன் அப்பாவைத் தேடிக்கொண்டா இங்கு வந்தாய்?உன் அப்பா இறந்து நான்கு நாள்களாகிவிட்டன சிண்டரெல்லா,சாம்பலின் ஒரு பகுதியை இந்தத் தோட்டக்காட்டில்தான் தூவினார்கள், மறந்துவிட்டாயா? அங்கே பார்,” ஹிட்லர் பாட்டி சுட்டிக்காட்டிய இடத்தை நடுங்கும் இதயத்தோடு நோக்கினாள் சிண்டரெல்லா.மண்ணோடு கலந்திருந்த சாம்பலின் மத்தியில் முழுமையாய் வேகாத இருதயம்.அப்படியெனில் அது நிச்சயம் அப்பாவினுடைய சாம்பல்தான்.அவள்தான் பார்த்தாளே?இடுகாட்டில் சாம்பல் அள்ளியபோது இருதயம் சரியாக வேகவில்லை என்றுதானே பேசிக்கொண்டார்கள். “உன் அப்பா இனி உன்னைக் காக்க வரமாட்டார் முட்டாள் பெண்ணே,” ஹிட்லர் பாட்டியின் குரலில் மமதை நிறைந்திருந்தது.   
     “இல்லை!இல்லை!” கத்திக்கொண்டே ஓடினாள் சிண்டரெல்லா.தன்னைவிட்டு அப்பா வேறு எங்கும் போய்விடமாட்டார்.இந்த ரப்பர் தோட்டத்தைவிட்டும் அவரால் வேறு எங்கும் போய்விட முடியாது.அப்பாவின் பிரதிபிம்பம் இங்கேதான் எங்காவது இருக்கும்.அது எங்காவது தென்படுமா என ஓடினாள்.அப்பா வேலை செய்த ரப்பர் காட்டை நோக்கி ஓடினாள்.ரப்பர்காட்டை அடைந்தபோது அவளின் வயது கால் சதமாய் மாறியிருந்தது.அங்கே அப்பாவைப் போன்றே எந்த ரப்பர் மரங்களையும் காணவில்லை.ஏமாற்றத்தோடு மீண்டும் அந்தச் சிவப்புத் தலை கனவுந்து நின்றிருந்த இடத்திற்கு ஓடி வந்தாள். அந்தச் சிவப்புத் தலை கனவுந்து துருப்பிடித்துப் போய் பெரும்பகுதி மண்ணில் புதைந்திருந்தது.சற்று முன்னர் அவள் ஏறி அமர்ந்திருந்த பூ மரங்கள் முழங்காலுக்கு மேல் வெட்டப்பட்டு மடிந்து போயிருந்தன.அப்பாவின் சாம்பலும் காணாமல் போயிருந்தது. இடைவிடாமல் ஓடிக்கொண்டே இருந்ததில் சிண்டரெல்லாவுக்கு மேல்மூச்சு வாங்கியது.தன் கால்முட்டியில் கைவைத்து தன்னை ஸ்திரப்படுத்திக்கொண்டிருந்த வேளையில், ”சிண்டரெல்லா,என் செல்லமே” என்ற குரல் வாஞ்சையுடன் கேட்டது.நிமிர்ந்தாள்.
         எதிரில் சற்று தூரத்தில் அவளுடைய பிரியன் நின்றிருந்தான். “நான் இருக்கிறேன் உன்னை ஹிட்லர் பாட்டியிடமிருந்து காப்பாற்ற என் கண்ணே” என்று மிக மிக மென்மையாய் சொன்னான்.ஒரு கணம் பிரியனிடத்தில் அப்பாவைக் கண்டாள். சற்றே நிம்மதியோடு பிரியனை நோக்கி நடந்தாள்.அதற்குள் பிரியனுக்கு அறவே பிடிக்காத ரதிதேவி இருவருக்கும் குறுக்கே வந்து நின்றாள். "பிரியன் என் நண்பன்,உனக்கு அவன்மீது உரிமையில்லை" ரதிதேவி அதிகாரத் தோரணையில் அதட்டினாள்.சிண்டரெல்லா சற்றே குழம்பி நின்றாள். பிரியன் அவளை கைநீட்டி அழைத்தான்."ரதிதேவியை நம்பாதே சிண்டரெல்லா,அவள் என் மீது மோகம் கொண்டு அலைகிறாள்,நீ வா,அவள் உன்னைக் காயப்படுத்த ஒருபோதும் நான் விடமாட்டேன்" பிரியனின் வார்த்தைகளில் நிம்மதியடைந்த சிண்டரெல்லா ஓடிப்போய் பிரியனின் கைகளில் தஞ்சம் அடைந்தாள்.அவனை இறுக்கமாய்க் கட்டிக்கொண்டாள்.    
      பிரியன் சிண்டரெல்லாவைத் துளியும் காமம் இன்றி அணைத்தான்.மறுகணம் சிண்டரெல்லாவின் முதுகில் சுருக்கென்ற வலி பரவிட, நிமிர்ந்து பிரியனைப் பார்த்தாள்.பிரியனின் கையில் கூர்மையான கத்தி இருந்தது. அதற்குள் ரதிதேவி தோழமையுடன் பிரியனை நெருங்கிவிட்டிருந்தாள்.சிண்டரெல்லாவைப் பார்த்து எகத்தாளமாய்ச் சிரித்தாள்.சிண்டரெல்லாவுக்கு அதிகம் வலித்தது.ரதிதேவியின் முன் தன்னை அவமானமாய் உணர்ந்தாள்.ரதிதேவி பிரியனின் தோள் மீது உரிமையாய்க் கையைப் போட்டாள்.அதை அனுமதித்தபடி அவளுடன் இணைந்து நடக்கலானான் பிரியன். சிண்டரெல்லாவுக்கு அதிகம் வலித்தது.குழந்தையைப் போன்று அவளை அன்பால் குளிப்பாட்டிய பிரியன் முதுகில் குத்திய காயத்தின் வலியைத் தாங்கி கொள்ள இயலாமல் தரையில் மண்டியிட்டு அமர்ந்தாள்.வேறெங்கும் ஓடுவதற்கு அவளிடத்தில் தெம்பில்லாமல் போனது.    
       “சிண்டரெல்லா!ஏமாளிப் பெண்ணே!நீ அன்பினால் சபிக்கப்பட்டவள்,உன் அப்பாவும் இனி வரப்போவதில்லை,அந்தப் பிரியனும் இனி வரப்போவதில்லை,இனி உன்னை என்னிடமிருந்து யாரும் காப்பாற்ற முடியாது” கடகடவென சிரித்தாள் ஹிட்லர் பாட்டி. சிண்டரெல்லாவுக்குத் தன் நிலை புரிந்து போனது.ஹிட்லர் பாட்டி சொன்னதுபோல அவளை இனி ஹிட்லர் பாட்டியிடமிருந்து காப்பாற்ற யாருமே இல்லை.அவள் அன்பினால் சபிக்கப்பட்டவள்தான்.அப்பாவுக்கு மட்டும்தான் அவள் தேவதை,ஹிட்லர் பாட்டிக்கோ,பிரியனுக்கோ,ரதிதேவிக்கோ அல்ல. இதற்கு மேல் ஓட வழியிருந்தாலும் யாரைத் தேடி ஓடுவது?தோல்வியை ஒப்புக்கொண்டு ஹிட்லர் பாட்டியின் முதுகு சொறியும் குச்சியின் முன் அடங்கி போவதைத் தவிர வேறு வழியில்லை.முதுகில் குத்தப்பட்ட காயத்தோடு மனவலியும்,ஏமாற்றமும் சேர்ந்து கொள்ள,அவள் உடைந்துபோய் அழ ஆரம்பித்தாள்.அவளுடன் சேர்ந்து வேறு யாரோ ஒரு பெண்ணின் அழுகைச் சத்தமும் கேட்டது.இவள் அழுவதை நிறுத்தியபின்பும் அந்த இன்னொரு பெண்ணின் அழுகை நிற்கவில்லை.     
         நிமிடங்கள் கரைந்தன.ஹிட்லர் பாட்டியின் முதுகு சொறியும் குச்சி இன்னுமா தன் மீது படவில்லை?தன்னோடு சேர்ந்து அழுதவள் யார்?கேள்விகள் துளைக்க,தலையை நிமிர்த்திப் பார்த்தபோது மீண்டும் பழையபடி பாட்டியின் அறைக்குள் இருந்தாள். இப்போது அந்த அறைக்குள் சிண்டரெல்லா,ஹிட்லர் பாட்டி தவிர அவளின் உறவுக்கார பெண்ணொருத்தியும் இருந்தாள்.அவள்தான் அழுது கொண்டிருந்தாள்.சிண்டரெல்லா ஹிட்லர் பாட்டியைப் பார்த்தாள். அவளிடத்தில் மெல்லிய அசைவு தெரிந்தது. “ஒருக்களித்துப் படுத்து விடுவாளோ?” அதற்கு மேல் சிண்டரெல்லாவால் நினைத்துப் பார்க்க முடியவில்லை.ஒரே ஓட்டமாய் ஓடி,மாடிப்படிகளைத் தாவிக் கடந்து,தன் அறைக்குள் நுழைந்து கதவைச் சாத்திக்கொண்டாள்.அந்த அறையின் சன்னல் கண்ணாடிகள் வெகு சுலபத்தில் கழற்றமுடியாதபடி இரும்புக் கம்பி சட்டகத்தால் சிறைப்பிடிக்கப்பட்டிருந்தன.
 
ஆக்கம்: உதயகுமாரி கிருஷ்ணன், பூச்சோங். 26.08.2012, 03:30am

Saturday, September 15, 2012

உன்னால்தானே நானே வாழ்கிறேன் - அத்தியாயம் 11 பேருந்து பட்டர்வர்த்தை அடைந்தபோது மணி இரண்டாகிவிட்டது.கௌசிகன் அவளுக்கு முன்பே வந்து பட்டர்வர்த்தில் காத்திருந்தான்.அவளுடைய கையிலிருந்த பொருட்களை வாங்கி கொண்டு அவளுடன் நடந்தான். வீட்டை அடைந்தவள் சாவித்திரிக்கு உதவியாக சில இனிப்பு வகைகளைத் தயார் செய்தாள்.மாலை ஆறு மணிக்கெல்லாம் சமையல் வேலை முடிந்துவிட்டிருந்தது.ஒவ்வொருவராக வரத் தொடங்கியிருந்தார்கள்.வந்தவர்களை வரவேற்று ஹாலில் அமரச் செய்தாள் பூங்குழலி.மேசையில் கேக் எல்லாம் எடுத்து தயாராக வைத்தாள்.எல்லாம் தயாராக இருந்தது மதிவதனனைத் தவிர.அன்று நடந்த அந்த பயங்கரமான சம்பவம் மீண்டும் அவள் நினைவில் வந்தது. * * * * * பூங்குழலி கடலை நோக்கிப் போனபோது அவள் அண்ணனும், அண்ணியும் கரையோரத்தில் இருந்தார்கள்,அம்மாவும், அப்பாவும் மணலில் அமர்ந்திருந்தார்கள்.பூங்குழலி ஓடி வந்து அம்மாவையும், அப்பாவையும் அழைத்துப் போனாள்.கைநிறைய மணலை அள்ளிக்கொண்டு போய் புகழின் தலையில் கொட்டினாள்.அதோடு விட்டிருந்தால் அந்த விபரீதம் நடந்திருக்காது.ஆனால் அவளோ அம்மா, அப்பாவை கடலுக்குள் தள்ளிவிட்டதோடு புகழையும், அண்ணியையும் வேறு பிடித்து இழுத்தாள்.அப்போதுதான் அந்த பயங்கரம் நிகழ்ந்தது. கடல் திடீரென ஆர்ப்பரித்து எழ. பெரிய அலை ஒன்று வந்து அவள் அம்மா, அப்பா,அண்ணன், அண்ணி எல்லாரையும் கடலுக்குள் இழுத்துக்கொண்டு போனது,மக்கள் எல்லாரும் போட்ட கூச்சலில் ஓடிவந்த மதி அலறிக்கொண்டிருந்த பூரணியைக் கண்டுபிடித்து இழுத்து வந்தான்,மதி தன்னை இழுத்து வந்ததுதான் அவளுக்குத் தெரியும்,அதன்பிறகு அவள் இரண்டு நாட்கள் கழித்துதான் கண்விழித்தாள்,அவள் கண்விழித்தபோது கௌசிகன் அவள் அருகில் இருந்தான், “என் அம்மா, அப்பா, புகழ், அண்ணி, மதி,,,,எல்லாரும் எங்க?” கௌசிகன் பதில் பேசாமல் இருக்கவும் அவளுக்குப் புரிந்து போனது.இதற்கு மேல் மறைப்பது உசிதமல்ல என்று அவளிடம் உண்மையைச் சொன்னான் கௌசிகன்.கதறி கதறி அழுதாள் பூங்குழலி.அவளை மேலும் அழவிடாமல் தன் தோளில் சாய்த்து ஆறுதல் படுத்தினான் கௌசிகன். அன்று நடந்த சுனாமி தாக்குதலில் அவளுடைய அம்மா, அப்பா, அண்ணி எல்லாருமே பலியாகிவிட்டார்கள்,அவளைக் காப்பாற்ற முயற்சித்த வேளையில் மதியும் ஒரு பெரிய அலையில் மாட்டிக்கொண்டான்,அவனால் போராட இயலாத நிலையில் அவளைக் கரைக்குத் தள்ளிவிட்டு அலையிடம் சரணடைந்துவிட்டான் மதி,கரைக்கு மிக அருகில் வந்து விட்டவளை யாரோ இழுத்துப் போட்டிருக்கிறார்கள். அவ்வளவு பெரிய விபரீதம் நடந்தும் அவள் உயிரோடு இருப்பதற்கு ஒரே காரணம் அவளுடைய அண்ணன் புகழ்தான்,அந்தச் சம்பவத்தில் புகழ் மட்டும்தான் தப்பியிருந்தான்.அது ஒன்றுதான் அவளுக்குக் கொஞ்சம் ஆறுதலாக இருந்தது.பத்திரிக்கைகளில் சுனாமி பாதிப்பு பற்றி படிக்க நேர்ந்தபோது கலங்கிப் போனாள் அவள்.குவியல் குவியலாக மனித பிணங்கள்.அவள் அம்மா, அப்பா,அண்ணி, மதி எல்லாருமே இப்படிதான் பிணக்குவியலில் ஒருவராக இருந்திருப்பார்களோ? அவளால் நினைத்துப் பார்க்க முடியவில்லை.கரையோரத்தில் இருந்தவர்களைப் பிடித்து தண்ணீரில் தள்ளிவிட்டவளும் அவள்தானே அவளைக் காப்பாற்ற போய்தானே மதியும் இல்லாமல் போனான்.கௌசிகனிடம் அவள் எதையும் கேட்கவில்லை.அவன் சொல்வதைத் தாங்கி கொள்ளும் நிலையில் அவள் இல்லை.ஒரு மாதத்திற்கு எந்தப் பத்திரிக்கையையும் அவள் படிக்கவேயில்லை. ஏதோ புகழாவது அவளுக்குத் துணையாக இருக்கிறானே? எத்தனை பேர் எல்லாரையும் பறிகொடுத்துவிட்டு அனாதைகளாய் நின்றிருந்தார்கள்.அவளுக்கு அண்ணனாவது இருக்கிறானே? அப்போதுதான் அவள் அந்த முடிவை எடுத்தாள்.அவர்கள் எல்லாரும் இறந்துவிட்டதாக ஏன் எண்ண வேண்டும்?அவர்கள் எல்லாரும் உயிரோடு இருப்பதாகவே அவளாக நினைத்துக் கொண்டாள்.மதியின் பிறந்தநாளை அவன் இருப்பதாக நினைத்துக் கொண்டாட எண்ணினாள்.மதியின் பிறந்தநாளன்று யாரும் அழக்கூடாது என்று சொன்னாள்.அன்றைய தினத்தில் ஆதரவற்றோர் இல்லத்திலிருந்து குழந்தைகளையும், பெரியவர்களையும் அழைத்து அன்னதானமிட முடிவு செய்தாள். விருந்து முடிந்து எல்லாரும் போனபிறகு அழ ஆரம்பித்தவள் அழுதுக்கொண்டே இருந்தாள்.அந்த வீட்டிற்கு வரும்போதெல்லாம் மதியுடன் பழகிய நாட்கள் நினைவிற்கு வந்தது. “சீனியர்..” மதி அவளை அழைப்பதைப் போன்றதொரு பிரமை. மறுநாள் காலையிலேயே கிளம்ப தயாரானவளின் அருகில் வந்து நின்றாள் சாவித்திரி. “இது வரைக்கும் நான் கேட்டபோதெல்லாம் நீ பதில் சொல்லவே இல்ல,மதி இறந்து சரியா ஒரு வருடம் முடிஞ்சிருச்சி,இன்னைக்காச்சும் சொல்லும்மா,மதியோட விருப்பப்படி கௌசிகனைக் கல்யாணம் பண்ணிக்கலாமே?” ராமுலம்மாவின் கேள்விக்குப் பதில் சொல்ல வேண்டிய நேரம் நெருங்கிவிட்டதை உணர்ந்தாள் பூங்குழலி. “ஒரு வேளை மதி உயிரோடு இருந்திருந்தா இந்தக் கல்யாணம் நடந்திருக்கலாம்,அவன் இல்லாத இந்த வீட்ல என்னால இருக்கமுடியாதும்மா,உங்க வீட்டுக்கு வரப்பல்லாம் மதி இல்லையே என்ற எண்ணம்தான் எனக்கு வருது.அவன் இல்லாத வீட்ல ஒரு நாள் கூட என்னால இருக்கமுடியலையே? எப்படி காலம் பூரா இருக்கப்போறேன்?இந்த வீடு எனக்கு அவனை ஞாபகப்படுத்திக்கிட்டே இருக்கும்மா.அதனாலதான் வேண்டாம்கிறேன்,” அவள் சொன்னதை கேட்ட கௌசிகன் தன் அம்மாவை நெருங்கினான். “அம்மா, எனக்கும் பூங்குழலியைக் கல்யாணம் பண்ணிக்கனும் என்ற எண்ணம் எப்பவுமே இருந்ததில்லம்மா,நான் வாழ்க்கைல நிறைய சாதிக்கனும்னு இருக்கேன்மா.கல்யாணத்தைப் பத்தி எல்லாம் நான் நெனச்சி பாக்கறதே இல்ல.பூங்குழலி சொன்னமாதிரி ஒரு வேளை மதி இருந்திருந்தா அவனுக்காக நானும் இந்த கல்யாணத்துக்கு ஒரு வேளை சம்மதிச்சிருப்பேனோ என்னவோ?” என்றவன் பூங்குழலியின் பக்கம் திரும்பினான். “நான் உங்களுக்கு எப்பவுமே ஒரு நல்ல நண்பனா இருப்பேன் பூங்குழலி. வாங்க போலாம்.உங்களுக்கு மணியாகிடப் போகுது,” கார் சாவியை எடுத்துக்கொண்டு போனவனைப் பின்தொடர்ந்தாள் பூங்குழலி. * * * * * பூங்குழலி வீட்டை அடைந்தபோது புகழ் அவள் இல்லாத இரண்டு தினங்களாக எதையுமே சாப்பிடவில்லை என்றார் பூரணியின் அப்பா.புகழுடைய அறைக்குள் நுழைந்தாள் பூங்குழலி.சக்கர வண்டியில் அமர்ந்து எங்கோ வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்த புகழ் அவள் குரல் கேட்டதும் திரும்பி பார்த்தான்.அவனைப் பார்க்கும்போது வேதனையாக இருந்தது அவளுக்கு.அவனுடைய தலையில் பலமாக அடிபட்டிருந்ததால் அவனுடைய மூளை நரம்புகள் கொஞ்சம் பாதிப்படைந்திருந்தன.எதையும் சுயமாக செய்யவியலாத நிலையில் இருந்தான் அவன். நாட்டில் எத்தனையோ கெட்டவர்கள் இருக்கிறார்கள்.எத்தனையோ பேர் பொறுப்பில்லாமல் பல அட்டுழியங்கள் செய்து கொண்டு இருக்கிறார்கள்.அவர்கள் எல்லாரும் நன்றாக இருக்கும்போது தன் அண்ணனுக்கு மட்டும் ஏன் இந்த நிலமை? அம்மா, அப்பா, மனைவி, கருவறையிலேயே சமாதியாகிப் போன முகமறியா குழந்தை எல்லாரையும் பறிகொடுத்துவிட்டு நினைவிழந்த நிலையில்… ஆரம்பத்தில் அவனை நினைத்து வருத்தப்படாத நாளே இல்லை.அடிக்கடி பழையபடி எல்லாரும் வீட்டிலிருப்பதைப் போன்று கனவு காண்பாள்.எழுந்து பார்த்தால் யாரும் இருக்கமாட்டார்கள்.கனவென்று அறிந்து அழுவாள்.ஆனால் நாளடைவில் கொஞ்சம் தேறிவிட்டாள்.ஒரே மகளையும் பறிகொடுத்துவிட்டு துயரத்தில் இருந்த பூரணியின் பெற்றோரையும் தன்னுடன் அழைத்து வந்து வைத்துக்கொண்டாள்.மருத்துவர்கள் சொல்வது மாதிரி என்றாவது ஒரு நாள் தன் அண்ணன் எழுந்து நடப்பான் என்ற நம்பிக்கை அவளுக்கு இருந்தது.அதுவரையில் அவளுடைய வாழ்க்கையில் வேறு எதற்கும் அவள் இடம் கொடுக்கப் போவதில்லை. பழைய நினைவுகளுக்கு தற்காலிகமாக விடைகொடுத்துவிட்டு, புகழுக்கு உணவு ஊட்டி மெத்தையில் படுக்கவைத்தாள் பூரணி,அவனுடைய வாழ்க்கைதான் இருண்டு போயிருக்கிறது,அறையாவது வெளிச்சமாக இருக்கட்டுமே என்று விளக்கை அணைக்காமலேயே விட்டுவிட்டு தனது அறைக்குப் போனாள் பூங்குழலி, * * * * * வானம் மெல்ல விடிய தொடங்கியிருந்தது,பூங்குழலியின் வாழ்வும் என்றாவது ஒரு நாள் விடியும் என்ற நம்பிக்கையில் தான் எழுதிய கதைக்கு ‘உன்னால்தானே நானே வாழ்கிறேன்’ என தலைப்பிட்டுவிட்டு கணினியை அடைத்துவிட்டு படுத்தாள் சரளா. முற்றும்…
உன்னால்தானே நானே வாழ்கிறேன் - அத்தியாயம் 10 இரண்டு தினங்களில் தீபாவளி என்பதால் கோலாலம்பூர் பட்டணமே களை கட்டியிருந்தது.புகழ் பூங்குழலியை பிரிக்பீல்ட்ஸ் அழைத்துப் போனான்.வாங்க மறந்திருந்த சில பொருட்களை வாங்கினான். “அவனுக்கு இவ்வருடம் தலை தீபாவளியல்லவா?” பூங்குழலிக்கு அப்போதுதான் ஞாபகம் வந்தது.புகழ் தீபாவளியன்று தங்களுடன் இருக்கமாட்டான் என எண்ணும்போது கவலையாக இருந்தது. ஆனால் அவனுடைய மாமனாரும், மாமியாரும் மிக நல்லவர்கள்.புகழை குடும்பத்தோடு சன்வே வந்து அவர்களுடைய வீட்டில் தீபாவளித் திருநாளைக் கொண்டாட பணித்தார்கள்.பூரணியின் அன்பும், பொறுமையும், பணிவும் எங்கிருந்து வந்தது என அவனால் உணர முடிந்தது, தீபாவளிக்கு முதல்நாள் தாத்தா, பாட்டிக்குப் படையல் போட்டுவிட்டு உடனே சன்வே கிளம்பிவிட்டார்கள் எல்லாரும்,அவ்வருட தீபாவளி மிகமிக சந்தோஷமாக இருந்தது அவர்களுக்கு.அவளுடைய குடும்பத்தைப் போலவே பூரணியின் குடும்பமும் ஜாலியான குடும்பமாக இருந்தது. இந்த சமயத்தில் மதியும் தன்னோடு இருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் என எண்ணினாள் பூங்குழலி.கல்லூரியின் கடைசி நாள் மதி மிகவும் அமைதியாக இருந்தான். “உங்களை கண்டிப்பா ரொம்ப மிஸ் பண்னுவேன் சீனியர்,” என்றான் வருத்தத்துடன்.கடைசி நாளன்று அவன் தன்னுடைய ஆசையை அவளிடம் சொல்லியிருந்தான்.அவள் கொஞ்சம் வேலையாக இருந்ததால் அவனுடன் சரியாக பேசவில்லை.அவன் அவள் கோபித்துக்கொண்டதாக எண்ணிவிட்டான்.ஆனால் பூங்குழலிக்கு அவனுடைய எண்ணம் கோபத்தை ஏற்படுத்தவில்லை.இவனுக்குள் இப்படி ஓர் ஆசை இருந்திருக்கிறதா என வியந்தாள். எதற்காக அவன் மேல் கோபப்பட வேண்டும்? அவன் அவளிடம் பழகிய வரையில் ஒரு தடவை கூட அவளிடம் அத்துமீறி பேசியதில்லை.சினிமாவில் வருவதுபோல் நட்பு என்று சொல்லிக்கொண்டு அவளுடைய கையை எல்லாம் பற்றிக்கொண்டு சுற்றியதேயில்லை.தன்னுடைய மோட்டார் சைக்கிளில் கூட அவளை ஏற சொன்னதில்லை.அவளுடைய கைவிரல்களை கூட அவன் தொட்டதில்லை.அந்த அளவுக்கு அவன் அவளிடம் கண்ணியமாக நடந்து கொண்டான்.அவன் அவளை அண்ணி என்ற ஸ்தானத்தில் வைத்து வணங்கியதே இதற்கு காரணம் என்று அவளால் புரிந்து கொள்ள முடிந்தது. ஒரு வேளை அவளுடன் சகோதரியைப் போல் பழகியிருந்தால் அவளுடைய தலைமுடியை எல்லாம் பிடித்து இழுத்து குறும்பு செய்திருப்பானாம்.அவனுடைய பெரியம்மா மகள்களிடம் இப்படிதான் நடந்து கொள்வானாம்.இதை அவனே அவளிடம் சொன்னான்.அவன் மேல் கோபம் வரவில்லை என்றாலும் கௌசிகன் மீது அவளுக்கு அப்படிப்பட்ட எண்ணமே வரவில்லை.சிறுவயதிலிருந்து தனக்கு வேண்டியதை எல்லாம் தெரிவு செய்து கொடுத்தவன் புகழ்தான்.அவனே முடிவு செய்யட்டும் என விட்டுவிட்டாள்.அதே வேளையில் அவசரப்பட்டு இளையவன் மதியின் மனதைக் காயப்படுத்தவும் அவளுக்கு விருப்பமில்லை. * * * * * மெத்தையில் அமர்ந்திருந்த பூரணி தன் வயிற்றை ஆசையாக தடவிப் பார்த்தாள்.புகழுடன் வாழ்ந்த அழகான வாழ்க்கையின் அடையாளச் சின்னம் அவள் வயிற்றில் இரண்டு மாத கருவாய் முளைவிட்டிருந்தது.அவளை இரசித்துப் பார்த்தான் புகழ்.இவளே குழந்தை மாதிரி இருக்கிறாள்.இவளுக்குள் ஒரு குழந்தையா என அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது.அவளுடைய முகத்தில் தாய்மையின் பூரிப்பு தெரிந்தது.புதுவித வெட்கம் வேறு.மருத்துவர் அவள் கர்ப்பமுற்றிருப்பதாக சொன்ன இரண்டு நாட்கள் அவனுடைய முகத்தை அவள் நிமிர்ந்து பார்க்கவே இல்லை. புகழுக்கு கர்ப்பமாக பெண்களை அதிகம் பிடிக்கும்.அவனுடன் வேலை செய்யும் சக ஆசிரியைகள் வயிற்றைத் தள்ளிக்கொண்டு நடந்து வருவதை அவன் பெரிதும் இரசிப்பான்.அந்தத் தாய்மையை அவன் இரசித்தான்.இனி தன்னுடைய பூரணியும் அப்படிதான் இருக்கப்போகிறாள். நீண்ட கவுன் அணிந்துகொண்டு, களைத்துப் போன முகத்துடன்,மாணவர்களிடம் புத்தகங்களை எடுத்து வரச் சொல்லிவிட்டு வயிற்றைத் தள்ளிக்கொண்டு நடக்கப் போகிறாள்.நினைக்கும்போதே அவனுக்கு ஆசையாக இருந்தது.மெல்ல பூரணியின் தலையைக் கோதி நெற்றியில் முத்தமிட்டான். தான் நேசித்தவனையே கணவனாக அடைந்து, அவனுக்குத் தன்னை முழுவதுமாய் அர்ப்பணித்து, இனி நான் உனக்கு மட்டுமே சொந்தம் என்ற நிலையில் அவனுடம் ஒன்றற கலந்துவிட்டது அவளுக்கு அதிக சுகத்தைத் தந்தது.அதைவிட அவனுக்குத் ‘தந்தை’ என்ற அந்தஸ்தையும் கொடுக்க முடிந்ததை எண்ணியபோது அவளுடைய காதலோடு சேர்ந்து பெண்மையும் பூரணமாய் மலர்ந்தது.பூரணி ஆத்ம திருப்தியில் உறங்கினாள். >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>> “புகழ், நான் சொன்னதுக்கு நீ இன்னும் ஒன்னும் சொல்லலியே? என்றபடி அவன் முன் வந்து நின்றாள் பூங்குழலி.மதிவதனனுக்கு கிறிஸ்துமஸ் தினத்தன்றுதான் பிறந்த நாள்.அவனுடைய பிறந்தநாளை தன் வீட்டில் கொண்டாடலாம் என நினைத்திருந்தாள் பூங்குழலி.கடலில் குளிக்க போகலாம் எனவும் ஏற்பாடு.புகழ் அத்திட்டத்திற்குச் சம்மதித்தான். அன்றைய தினம் அவர்களுக்கு மிக மிக சந்தோஷமாக இருந்தது.கடைசி நேரம் வரை தன்னுடைய பிறந்த நாள் கொண்டாட்டத்தைப் பற்றி மதிக்கு எதுவுமே தெரியாது.பூங்குழலி வேண்டுமென்றே அவனுடைய பிறந்தநாளை மறந்துவிட்டது போல் இருந்தாள். மதியின் பிறந்தநாளைக் கொண்டாடிவிட்டு உடனே கூலிமிற்கு கிளம்பலாமென திடீர் யோசனை ஒன்றை உதிர்த்தான் புகழ்.அங்கு மதியின் அம்மா, அண்ணனையும் அழைத்துக்கொண்டு லங்காவி கடற்கரைக்குப் போகலாமென சொன்னான்.அவனுக்கு கௌசிகனைப் பார்க்க வேண்டும் போலிருந்தது,அதன்படி எல்லாரும் கிளம்பினார்கள். கௌசிகன் அவசரமாக எங்கோ போகவேண்டி இருந்ததால் பிறகு வந்து அவர்களுடன் கலந்து கொள்வதாக சொன்னான்.அவன் அம்மாவும் கௌசிகனுடன் வந்து இணைந்து கொள்வதாக சொல்லி மறுத்துவிட்டாள். ஏதோ தன் குடும்பத்தினரிடமாவது கௌசிகன் நன்றாக பழகுகிறானே என்ற விதத்தில் பூங்குழலிக்கு கொஞ்சம் மகிழ்ச்சியாக இருந்தது.மதியின் வீட்டிலேயே சமைத்து எடுத்துக் கொண்டு போனார்கள். பள்ளி விடுமுறை சமயமென்பதால் கடற்கரையில் நிறைய பேர்.வழக்கமாக ஒவ்வொரு பள்ளி விடுமுறைக்கும் புகழ் அவர்களையெல்லாம் கடற்கரைக்குதான் அழைத்து வருவான். பூங்குழலிக்குக் கடலைப் பார்த்ததும் கல்லு}ரி ஞாபகம் வந்தது.ஆசிரியத் தன்மை பயிற்சியின்போதும் (BIG). சுற்றிப் பார்க்கப் போகும்போதும் கடல்தானே அவர்களின் முக்கிய இடமாக இருந்து வந்தது?தோழிகள் எல்லாரும் பள்ளி வாழ்க்கையை எதிர்கொள்ள தயாராகி கொண்டிருப்பதால் அவர்களைத் தொந்தரவு செய்ய வேண்டாமென பூங்குழலி அவர்களை அழைக்கவில்லை. “வா மதி. கடலுக்குப் போகலாம்,” களைத்து உட்கார்ந்திருந்த மதிவதனனை வற்புறுத்தி அழைத்தாள். “ஐயோ, நான் இப்பதான் கடலுக்குள்ள இருந்து வர்றேன்.நீங்க போங்க சீனியர். நான் கொஞ்ச நேரம் கழிச்சி வர்றேன்,”அவளை அனுப்பிவிட்டு மணலில் மல்லாந்து படுத்தான் மதி.பூங்குழலி கடலுக்குள் இறங்கியிருந்தாள். அப்போதுதான் அந்த ஆரவாரம் எழுந்தது.திடுக்கிட்டு எழுந்தான் மதி.கடல் அலை மிக உயரத்திற்கு எழுந்து ஆர்ப்பரிக்கத் தொடங்கியிருந்தது.சிலர் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டார்கள்.அந்த விபரீதம் உறைத்ததும் மதி கடலை நோக்கி ஓடினான். கரையில் இருந்த சிலர் தங்கள் உறவினர்களைக் காப்பாற்ற முயன்று கொண்டிருந்தார்கள்.ஆனால் சீற்றம் கொண்டு எழுந்த கடல் அலைகளை எதிர்த்துப் போராட முடியாமல் தோற்றுப்போயினர் சிலர்.சிலர் உறவினர்களைக் காப்பாற்ற போய் அவர்களும் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டார்கள். மதி பூரணியைக் கண்டுபிடித்துவிட்டான்.கஷ்டப்பட்டு அவளைக் கரைக்கு இழுத்து வந்தான். “மதி,என்னாச்சு மதி? என் அம்மா, அப்பா, அண்ணி, புகழ் எல்லாரும் எங்க மதி?” அழுது அரற்றியவளை பலங்கொண்ட மட்டும் பிடித்து இழுத்து கரைக்குத் தள்ளினான் மதிவதனன். தொடரும் ……..
உன்னால்தானே நானே வாழ்கிறேன் - அத்தியாயம் 9 பூங்குழலியை அமர சொல்லிவிட்டு ‘பீஷ்ஷா’ ஆர்டர் செய்யப் போயிருந்தான் மதி.அவனுடைய கைத்தொலைபேசி ஒலிக்கவே எடுத்து ‘ஹலோ’ சொன்னாள்.கௌசிகன்தான் அழைத்திருந்தான்.மதி ‘பீஷ்ஷா’ ஆர்டர் செய்து கொண்டிருப்பதாக சொன்னாள். “பரீட்சை நெருங்கி கிட்டிருக்கற சமயத்துல பீஷ்ஷா சாப்பிடறது ரொம்ப முக்கியமா போச்சா அவனுக்கு?’ திட்டிக்கொண்டே அழைப்பைத் துண்டித்துவிட்டான். மதி வந்ததும் கௌசிகன் திட்டியதைச் சொன்னாள். “அவருக்கு நான் பீஷ்ஷா சாப்பிட வந்ததால கோபமா இருக்காது சீனியர்.அவரை விட்டுட்டு என்கூட சாப்பிட வந்திருக்கீங்கன்னு கோபமா இருக்கலாம்,” சொல்லிவிட்டு அவள் என்ன சொல்கிறாள் என்று பார்த்தான்.அவள் அவன் சொன்னதைப் பொருட்படுத்தியதாகவே தெரியவில்லை.எதையோ நினைத்து புன்னகைத்தாள். “என்ன? பீஷ்ஷா’வைக் கத்தியால் துண்டாக்கிக் கொண்டே வினவினான். “அன்னிக்கு ஒரு நாளு நீயின்னு நெனச்சி உன் அண்ணனைத் திட்டினதை நெனச்சேன்,” என்றாள். மதி வீட்டுக்குப் போனபொழுது கைத்தொலைபேசியை வீட்டில் வைத்துவிட்டு வந்துவிட்டான்.பூங்குழலியிடம் வேண்டுமென்றே சொல்லவில்லை.அவள் அழைத்தபோது கௌசிகன் எடுக்க, குரலை அடையாளம் காண முடியாமல் மதி என்று நினைத்து என்னென்னவோ பேசிவிட்டாள்.போதாக்குறைக்கு,”உன் அண்ணனை மாதிரியே உனக்கும் ரொம்ப திமிர்,” என்று வேறு திட்டிவிட்டாள்.அவளுடைய நல்ல நேரம் கௌசிகனிடம் பெரிதாக வாங்கி கட்டிக்கொள்ளவில்லை. “நான் மதியோட திமிர் பிடிச்ச அண்ணன்தான் பேசறேன்,” என்று சொல்லிவிட்டு தொடர்பைத் துண்டித்துவிட்டான் கௌசிகன். “ஆனா மதி உன் அண்ணன்னு முன்னமே தெரிஞ்சிருந்தா இன்னும் கொஞ்சம் அதிகமா திட்டியிருப்பேன்,” அவள் சொன்னபோது அவன் கொஞ்சம் பயந்துதான் போனான்.தான் ஆசைப்படுவது நடக்காமல் போய்விடுமோ என்று. “சரி விடுங்க. உங்க கோர்ஸ் பத்தி எதுவும் நியூஸ் வந்ததா?” மதி பேச்சை மாற்றினான். “கீதாவும், சரளாவும்தான் அதிகமா புலம்பிக்கிட்டு இருக்காங்க,அந்த ‘இண்ட்டெல்’ கோர்ஸ் நடக்கக் கூடாதுன்னு வேண்டிக்கிட்டு இருக்காங்க,” “உங்களுக்கு எப்படி சீனியர்?” “எனக்கு கோர்ஸ் சீக்கிரமா முடிஞ்சிட்டாலும் பரவால்லன்னு தோனுது,ஆனா எனக்கென்னவோ அநேகமா இண்ட்டல் கோர்ஸ் கண்டிப்பா நடக்கும்னுதான் தோனுது மதி. அவள் நினைத்த மாதிரியே இண்ட்டல் பயிற்சி நவம்பர் ஒன்பதாம் தேதி வரை நடப்பது உறுதி செய்யப்பட்டது.முதலில் நவம்பர் பத்தாம் தேதி வரை நடப்பதாக இருந்தது.தீபாவளி சமயமென்பதால் வெகு தொலைவில் இருக்கும் இந்திய மாணவர்களின் நிலையை கருத்தில் கொண்டு பயிற்சியை ஒன்பதாம் தேதி மதியமே முடித்துவிட திட்டமிட்டிருந்தது கல்லூரி நிர்வாகம். “போறப்ப கூட நிம்மதியா விடமாட்டாங்களா?” ஸ்டூடண்ட் வெப்சைட் செய்யறதுக்குள்ள தலையே வலிக்குது் வழக்கம்போல,” கீதாதான் முதலில் தன் புலம்பலை ஆரம்பித்தாள். ‘இண்ட்டல்’ என்பது கணினி சம்பந்தப்பட்ட பயிற்சி என்பதால் கணினிக்கூடத்திலேயே நடந்தது,’பவர்பொயிண்ட்’ முறையைப் பயன்படுத்தி மாணவர்களுக்காக இணையத்தில் ஒரு சிப்பம் தயாரிக்க வேண்டும்.மணிக்கணக்காக கணினியின் முன் அமர்ந்திருந்ததால் தலை வலித்தது.ஆனால் கேரலின் உற்சாகமாக செய்தாள்.அவளும் சரளாவும் நான்காம் ஆண்டிற்கான அறிவியல் பாடத்தை எடுத்துக் கொண்டார்கள்.இணையத்திலிருந்து விதவிதமான மிருகங்களின் படத்தை எடுத்து அகப்பக்கத்தைச் சிறப்பான முறையில் செய்திருந்தார்கள்.பூங்குழலியும் கீதாவும் உலக அதிசயங்கள் என்ற தலைப்பை எடுத்திருந்தார்கள்.கணினித்திரையில் தாஜ்மஹாலை அழகாக ஜொலிக்கவிட்டிருந்தார்கள்.சோனியாவோ எதையும் செய்யாமல் இணையத்தில் ஆட்டம் போட்டுக்கொண்டும், மற்றவர்கள் செய்வதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டும் இருந்தாள். “இன்னைக்குதான் ஒரு மணிக்கெல்லாம் முடிஞ்சிடுமே,பட்டர்வொர்த் போலாமா? எனக்கு ரெயின்போ காலனி பாக்கனும்னு ஆசையா இருக்கு,படம் ரொம்ப டச்சிங்கா இருக்காம்” - சோனியா, மதி ஏற்கனவே அந்தப் படத்தைப் பார்க்கப்போகலாமென அவளை வற்புறுத்திக்கொண்டே இருந்தான்.அதனால் அவனையும் அழைத்தாள். “வேண்டாம் சீனியர். நீங்க அந்தப் படத்தை என்கூட பாக்க வேண்டாம்,”அவன் மறுத்துவிட்டான். தியேட்டருக்குப் போய் அந்தப் படத்தைப் பார்த்தபோதுதான் அவன் வர மறுத்தன் காரணம் அவளுக்குப் புரிந்தது.எவ்வளவு நல்ல கதையம்சமுள்ள படமென்றாலும் இப்படிப்பட்ட காட்சிகளை வைத்து வீணடித்துவிடுகிறார்கள்,” என நொந்துபோனாள். “பினாங்குல கண்டிப்பா தீபாவளி களை கட்டியிருக்கும்,வெள்ளிக்கிழமை போலாமா?” சரளாவுக்கு பூங்குழலி சொன்னதில் அவ்வளவாக உடன்பாடில்லை.இன்னும் சில தினங்களில் கல்லூரி வாழ்க்கை நிறைவடைய போகிறது.எஞ்சியிருக்கும் நாட்களில் சுங்கைப் பட்டாணியை நன்றாக வலம் வந்துவிட வேண்டும் என நினைத்தாள்.அவள் கருத்துக்கு யாரும் மறுப்பு சொல்லவில்லை.நீலா அவர்களுக்கென்றே ஒன்பதாம் தேதி கிளம்புவதாக சொல்லிவிட்டாள்.மாலை நேரங்களில் கோயில், இந்திய உணவகங்கள்,துணிக்கடைகள் என்று எல்லா இடத்திற்கும் போய் வந்தார்கள்,எட்டாம் தேதி இரவு கடைசி கடைசியாக சுங்கைப் பட்டாணியின் ஒட்டுமொத்த அழகையும் இரசித்துவிட்டு வரவேண்டும் என்று மதியமே கிளம்பிவிட்டார்கள்,மதி தேர்வின் காரணமாக அவர்களுடன் வரவில்லை, ‘சென்ட்ரல் ஸ்குவேர்’ விற்பனை மையத்தில் இதுநாள் வரை தாங்கள் சுற்றிய இடங்களையெல்லாம் ஏக்கத்தோடு மனதில் பதிய வைத்துக் கொண்டார்கள்.இறுதியாக முத்தையாஸ் நிறுவனத்திற்கு வந்தார்கள்.நிறைய மத்தாப்பு வாங்கினார்கள்.முத்தையாஸ் நிறுவனத்தில் சிறப்பு விற்பனை நடைபெற்றுக்கொண்டிருந்தது.இந்திய இளைஞர்கள் கடையின் முன்புறம் ஒரு நவீன நடனத்தையும் வழங்கினார்கள்.தீப்பெட்டி வாங்குவதற்காக மீண்டும் கடைக்குள் நுழைந்த சரளா வெளியே வரும்போது அறிவிப்பு செய்து கொண்டிருந்த ஓர் அறிவிப்பாளர் அவளை அழைத்து ஒலிபெருக்கியில் பேச சொன்னார்.பதட்டத்தின் காரணமாக சரளா ஓரிரு வார்த்தைகளை மட்டும் பேசிவிட்டு வந்துவிட்டாள்.கேரலினுக்கு திடீரென ஒரு யோசனை எழ அறிவிப்பாளரை நோக்கிப் போய் அவரிடம் என்னவோ சொன்னாள்.மறுகணம் அந்த அறிவிப்பாளர் கேரலினுடைய கைகளில் மைக்கை கொடுத்தார். “எல்லாருக்கும் வணக்கம்.நாங்க எம்.பி.சா-ல இருந்து வந்திருக்கோம்.இன்னைக்குதான் எங்களுக்கு கடைசி நாளு.எங்களோட படிப்பு முடியுது.நாளைக்கு நாங்க எல்லாரும் கிளம்பறோம்.இந்த ஊரை விட்டு போறதுக்கு ரொம்ப வருத்தமா இருக்கு.எம்.பி.சா மக்கள் எல்லாருக்கும் எங்களோட தீபாவளி வாழ்த்துக்களை சொல்லிக்கறோம்,குட் பை சுங்கைப் பட்டாணி்!” பேசி முடித்துவிட்டு வந்த கேரலினை சூழ்ந்து கொண்டு பாராட்டினார்கள் மற்ற ஐந்து பெண்களும். அன்றிரவு அவர்கள் கல்லூரிக்குத் திரும்பி குளித்து நைட்டியை அணிந்துகொண்டு கீழே இறங்கியபோது நள்ளிரவு பன்னிரண்டு மணியாகியிருந்தது.விடுதியில் பாதி பெண்கள் உறங்கிவிட்டிருந்த வேளையில் மத்தாப்புக்களைக் கொளுத்தி குழந்தைகளைப் போன்று குதூகலித்தார்கள்.அவர்களுடைய தீபாவளி கொண்டாட்டம் அன்றே தொடங்கிவிட்டிருந்தது.நிறைய புகைப்படம் எடுத்துக்கொண்டார்கள். “அக்கா, அடுத்த வருசம் நீங்க எல்லாம் இல்லாம நான் எப்படிக்கா தனியா இருப்பேன்?நீலா கண்கலங்கியபோது அவர்களுக்கும் அழுகை வந்துவிட்டது.இனி மீண்டும் எப்போது இந்த ஆட்டம் பாட்டம் கொண்டாட்டமெல்லாம்? இனிமேல் அவர்கள் ஆசிரியர்கள்.விளையாட்டுத் தனத்தையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு இளைய சமுதாயத்தின் வளர்ச்சியில் பங்காற்ற வேண்டிய பெரும் பொறுப்பை சுமக்க போகிறவர்கள்.இதுவரை அனுபவித்த சந்தோஷமான, இனிமையான கல்லூரி வாழ்க்கை இனி மீண்டும் எப்போது? மறுநாள் காலை பதினோரு மணிக்குமேல்தான் அவர்களுடைய பயிற்சி முடிந்தது.கட்டியணைத்து குட்பை சொல்லிக்கொள்ள கூட அவகாசமின்றி கைநிறைய பொருட்களையும், மனம் நிறைய வேதனைகளையும் சமந்து கொண்டு எம்.பி.சாவை விட்டு வெளியேறினார்கள் அந்தக் கல்லூரி மலர்கள்.
உன்னால்தானே நானே வாழ்கிறேன் - அத்தியாயம் 8 கௌசிகன் ஏறத்தாழ மதிவதனனுடைய சாயலில்தான் இருந்தான்.அவனுடைய குரலும் மதிவதனனுடைய குரலோடு ஒத்துப் போனது.ஆனால் மதியைக் காட்டிலும் நிறம் கொஞ்சம் கம்மியாக இருந்தான்.அவன் பிரபல ஆங்கில நாளேடான ‘ஸ்டார்’ பத்திரிகையின் நிருபராக இருந்தான்.பூங்குழலிக்கு அத்துறையில் நிறையவே ஆர்வம் இருந்தது.அவனிடம் அந்த வேலையைப் பற்றி கேட்டுத் தெரிந்து கொள்ள துடித்தாள்.ஆனால் கௌசிகன் அவள் பக்கமே திரும்பவில்லை. கௌசிகனுக்குப் பெண்களிடத்தில் அவ்வளவாக ஈடுபாடு இல்லையாம்.மதிவதனன்தான் சொன்னான்.அவளிடம் பேசாவிட்டாலும் மதிவதனனுக்கு என்ன வாங்கி வந்தாலும் அவளுக்கும் சேர்த்தே வாங்கி வந்து கொடுத்தான்.அவன் பேசாவிட்டால் என்ன?தானாவது பேசிப் பார்க்கலாமே என்று ஒரு நாள் இரவு அவளாக அவனைத் தேடிப்போனாள்.அவன் ஹாலில் அமர்ந்திருந்தான். “என்ன செய்துக்கிட்டு இருக்கீங்க?’ எப்படி பேச்சை ஆரம்பிப்பதென்று தெரியாததால் அவ்விதம் கேட்டாள். “திடீர்னு வந்து என்ன செஞ்சிக்கிட்டு இருக்கீங்கன்னா என்ன அர்த்தம்?” அவன் அப்படி முகத்தில் அறைந்தாற்போல் கேட்பானென்று அவள் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. பொதுவாக ஆண்கள் தங்களுக்குப் பிடிக்காத பெண்களை அல்லது தப்பான பெண்கள் என்று நினைப்பவர்களிடம்தான் இப்படி அலட்சியமாக பேசுவார்கள்.இதில் தான் என்ன ரகம் என்று பூங்குழலியால் ஊகிக்க முடியவில்லை.ஒரு வேளை தானாக போய் அவனிடம் பேசியதால் தன்னைத் தப்பாக நினைத்துவிட்டானோ என்று கூட தோன்றியது அவளுக்கு.பேசாமல் இருந்திருக்கலாம்.கடைசி நாளும் அதுவுமாக தேவையா இந்த அவமானம்?”அவள் படுக்கப் போய்விட்டாள்.ஆனால் உறங்க முடியவில்லை.கௌசிகன் பேசிய விதம் அவள் மனதைக் காயப்படுத்தியிருந்தது. நடந்ததை மதியும் அறிந்திருந்தான்.கௌசிகன் மிக நல்லவன்.மதியின் மீது உயிரையே வைத்திருப்பவன்.மிக மிக பொறுப்பானவன்.ஆனால் அவனுக்குப் பெண்களிடத்தில் எப்படி பேசுவதென்று தெரியாது.அவனுக்குத் தொழில் பக்தி அதிகம்.வீட்டில் இருக்கும்போது இணையமும், பத்திரிக்கைகளும்தான் அவனுடைய பொழுதுபோக்கு.அவ்வளவாக படம் கூட பார்க்கமாட்டான். மதிக்கு தன் அண்ணன் சராசரி ஆண்களைப் போல் இல்லாமல் மிகவும் சீரியஸாக இருப்பதில் அதிக வருத்தம்.அவனுக்கென்று ஒரு வாழ்க்கைத் துணை இருந்தால் அவனும் மற்றவர்களைப் போன்று சந்தோஷமாக இருப்பானோ என்று யோசித்தான். பூங்குழலியை முதன்முதலில் பார்த்தபோதே கௌசிகனுக்கு சகல விதத்திலும் பொருத்தமானவள் இவள்தான் என்று அவனுக்குள் ஒரு வெளிச்சம்.அவளுடன் பழக ஆரம்பித்த பிறகு தனக்கேற்ற சரியான அண்ணி இவள்தான் என்று அவனுக்குத் தோன்றியது.அவளுடைய கோபம், குறும்பு எல்லாமே அவனுக்குப் பிடித்திருந்தது.அவன் மீது அவள் எடுத்துக் கொள்ளும் அக்கறை அவனுக்குப் பிடித்திருந்தது.மாலை வேளைகளில் அவனுக்காக தே ‘ஓ’ கலக்கி, ‘கார்டினியா’ ரொட்டியில் பிளாந்தா தடவி எடுத்துப் போய்க் கொடுப்பாள். எந்தவித உறவும் இல்லாமலேயே இவ்வளவு அன்பாக கவனித்துக் கொள்பவள் தனக்கு அண்ணியாக வந்தால் எவ்வளவு அன்பாக இருப்பாள் என்று ஆசைப்பட்டான்.அதனால்தான் அவனுக்கு அவளைச் சகோதரியாக ஏற்றுக்கொள்வதில் விருப்பமில்லை.மனதில் உள்ளதை அவசரப்பட்டு சொல்லி அவளுடைய நட்பை இழந்துவிடக்கூடாதென்றுதான் பொறுமையாக காத்திருக்கிறான்.ஆனால் கௌசிகன் நடந்து கொள்வதைப் பார்த்தால் காரியமே கெட்டுவிடுமோ என்ற பயம் அவனுள் வந்தது.கூடிய சீக்கிரம் பூங்குழலியிடம் தன் எண்ணத்தைச் சொல்லிவிட வேண்டுமென்று நினைத்தான்.ஆனால் அது அவ்வளவு சுலபமானதாக இருக்கவில்லை.பயிற்றுப் பணியின்போது பூங்குழலியைச் சந்திப்பதே பெரும் பாடாய் இருந்தது. பூங்குழலி அலோர்ஸ்டாரில் பயிற்றுப் பணியை மேற்கொண்டிருந்தாள்.தினமும் பாடத்திட்டம் தயார் செய்து அதற்கேற்ற பயிற்றுத் துணைப் பொருட்களையெல்லாம் செய்து வைத்துவிட்டு அவள் படுக்கவே தினமும் மூன்று,நான்கு மணியாகிவிடும்.சில சமயங்களில் விடிய விடிய பாடம் தயாரித்துவிட்டு தூங்காமல் அப்படியே பள்ளிக்குப் போயிருக்கிறாள்.அதனாலேயே வார விடுமுறை நாட்களில் அவள் எங்கும் போகாமல் வீட்டிலேயே ஓய்வெடுத்தாள்.தன் வீட்டிற்கு கூட மூன்று வாரத்திற்கொருமுறைதான் போனாள்.ஆனால் அவளுக்கு அந்த அலைச்சலும்,அசதியும் பிடித்திருந்தது, பயிற்றுப் பணியை முடித்துக்கொண்டு கல்லூரிக்குத் திரும்பியபோது அவளுக்கு எதையோ தொலைத்ததைப் போலிருந்தது.பள்ளி வாழ்க்கை கூட இனிமையாகதான் இருக்கிறதென்று தோன்றியது.ஆனால் அவளுடைய தோழிகள் நொந்து கொண்டார்கள்.ஒரு சிலர் சென்றிருந்த பள்ளிகளில் வாட்டி எடுத்துவிட்டார்களாம். “அப்பாடா, இனிமே இந்த பிராக்டிக்கம் தொல்லை எல்லாம் இல்லப்பா. நல்லா தூங்கலாம்,” கீதா சந்தோஷப்பட்டாள். “ரொம்ப அலையாத. ‘கிஸம்’ கோர்ஸ் சாயந்திரம் நாலரை மணி வரைக்கும் இருக்கு.சனிக்கிழமை கூட இருக்கு,” சரளா இடைமறித்தாள். “பரவால இருபத்தேழாம் தேதி வரைதானே? அதுக்கப்புறம் ரெண்டு மாசம் ஜாலியா இருக்கலாம்.” “ஐயோ அக்கா. உங்களுக்கெல்லாம் இருபத்தேழாம் தேதியோட முடிஞ்சிடுமா? நீங்கள்லாம் சீக்கிரமா போயிடுவீங்களா?” நீலா நிஜமான வருத்தத்தோடு சொன்னாள்.பாவம் அவள் எப்போதும் தன் சீனியர்களுடனேயே சுற்றிக்கொண்டிருப்பவள்.பருமனாக, கருப்பாக இருக்கும் அவளுக்கு இலேசான தாழ்வு மனப்பான்மை இருந்தது.தன் அத்தைப் பையன் தன்னை நிராகரித்தபோது “ஒரு வேளை நான் சிவப்பா, ரொம்ப அழகாக பிறந்திருந்தா என்னை வேண்டாம்னு சொல்லியிருப்பாரா அக்கா?” என்று அவள் கதறி அழுதபோது அவளைக் கட்டியணைத்து ஆறுதல் கூறி தேற்றியவர்கள் அவர்கள்தான்.அதனால்தான் தன் பிறந்த நாளன்று அவர்கள் அப்படி செய்வார்கள் என்று தெரிந்தும் வேண்டுமென்றே மறந்ததுபோல் நடித்தாள் அவள். கல்லூரி வாழ்க்கை சீக்கிரமாக முடியப்போவதை எண்ணி கவலைப்படுவதா இல்லை புகழுடன் ஒன்றாக இருக்கப்போவதையெண்ணி சந்தோஷப்படுவதா?” பூங்குழலி யோசிக்க முடியாத நிலையில் இருந்தாள். இருக்கப்போகும் மூன்று வாரத்தில் கல்லூரி வாழ்க்கையில் எஞ்சியிருக்கும் எல்லா சந்தோஷங்களையும் அனுபவித்துவிட வேண்டுமென்று பல திட்டங்களைப் போட்டார்கள் அந்த ஐந்து பெண்களும்.இருபத்தேழாம் தேதியோடு இறுதியாண்டு மாணவர்களுக்குப் பயிற்சிக் காலம் முடிகிறதென்பதால் வருடந்தோறும் தனித்தனியாக நடத்தப்படும் இறுதியாண்டு மாணவர்களுக்கான பிரியாவிடை விருந்தையும்,தீபாவளி கலைநிகழ்ச்சியையும் ஒரே தேதியில் நடத்த வேண்டிய கட்டாயத்தில் இருந்தது தமிழ்த்துறை. முன்னோடி மாணவர்கள் நொந்து போனார்கள்.நடனம் ஆடவிருந்த மாணவர்கள் கூட இறுதி நேரத்தில் நடனத்தை ரத்து செய்துவிட்டார்கள்.பூங்குழலியின் வகுப்பு மாணவிகள் இவ்வாண்டு வித்தியாசமாக அறுபதாம் ஆண்டு ‘ரோக் எண்ட் ரோல்’ பாடலுக்கு பெரிய கொண்டையெல்லாம் போட்டுக்கொண்டு பழைய பாணியில் தலையை ஆட்டி ஆட்டி நடனம் ஆட இருந்தார்கள்.கடைசி நேரத்தில் எல்லா திட்டமும் வீணாய்ப் போனது. பிரியாவிடை விருந்தில் சிறப்பு செய்யப்படுபவர்களே இவர்கள்தான்.வியர்த்து வடியும் முகத்தோடு எப்படி அங்கே இருக்கமுடியும்? ஆனாலும் இது வேண்டுமென்றே நடக்கவில்லையே? இன்னும் பத்து தினங்களே எஞ்சியிருக்கும் சமயத்தில் மண்டபமும் கிடைக்காத வேளையில் வேறு என்னதான் செய்யமுடியும்? அதனால் நொந்து போயிருந்த மாணவர்களும் தங்களைத் தேற்றிக்கொள்ள வேண்டியதாயிற்று.மதி அந்நிகழ்ச்சியில் பாடல் பாடுவதாக இருந்தான். “என்கூட நீங்களும் சேர்ந்து பாடுங்களேன் சீனியர்,” மதி அவளையும் வற்புறுத்தினான்.பூங்குழலி முடியவே முடியாதென மறுத்துவிட இறுதியில் தனக்கு மிகப் பிடித்தமான “நினைத்து நினைத்து பார்த்தேன்” என்ற பாடலைப் பாடினான் மதி.ஏனோ அவனுக்கு அநதப் பாடல் என்றால் கொள்ளை ஆசை.பல தடவை கேட்டு, பாடி பழகிவிட்டதாலோ என்னவோ அவன் மிக இனிமையாகப் பாடினான்.அவனுக்கு ஏகப்பட்ட பூக்கள் கிடைத்தன. அன்றைய நிகழ்ச்சி மிகச் சிறப்பாகவே நடைபெற்றது.எந்த ஒரு நிகழ்விலும் தமிழ்த்துறை மாணவர்கள் தனித்தன்மை பெற்று திகழ வேண்டும் என்பதில் தமிழ்விரிவுரைஞர்கள் மிகவும் கெட்டியானவர்கள்.இலக்கிய நிகழ்வுகளுக்கு தமிழ்த்துறை அதிக முக்கியத்துவம் கொடுத்து வந்தது.ஒவ்வொரு வருடமும் மூன்று முறை பயிற்சி ஆசிரியர்களின் படைப்புகளைத் தாங்கி மலரும் ‘இளவேனில்’ என்ற இதழ் வெளியீடுதான் தமிழ்த்துறையின் இலக்கியத் தாகத்திற்கு முத்தாய்ப்பாய் அமைந்து வந்தது’அதனாலேயே எம்’பி’சா கல்லூரி என்றால் வெளியில் நல்ல மதிப்பு இருந்தது. மதிப்பு தொடரும் …….
உன்னால்தானே நானே வாழ்கிறேன் - அத்தியாயம் 7 சாரதா கொண்டு வந்து கொடுத்த உணவுப் பொட்டலத்தைப் எடுத்துப் பார்த்தாள் பூங்குழலி.உணவுப்பொட்டலத்தில் ஒரு காகிதத்தில் எதையோ எழுதி வைத்திருந்தான்.எடுத்து படித்தாள். “சோரி சீனியர்,என் மேல இன்னும் பாசம் இருந்தால் உணவை வீணாக்காமல் சாப்பிடவும்,நாளை காலை சந்திப்போம்.” அவன் எழுதியதைப் படித்தவுடன் மனதுக்கு சந்தோஷமாய் இருந்தது.பத்தொன்பது வயதில் எவ்வளவு பக்குவமாய், முதிர்ச்சியாக நடந்து கொள்கிறான்.தனக்குதான் கொஞ்சம் அவசர புத்தி. மறுநாள் சபைகூடலின் போது அவளுக்காக காத்திருந்தான்.சிற்றுண்டிச்சாலையில் ஒன்றாக பசியாறினார்கள்.அதன்பிறகு அவர்களுடைய நட்பு வழக்கம்போலவே தொடர்ந்தது.அவர்களுடைய கூட்டத்தில் அவனும் ஒருவனாகிப் போனான்.ஆனால் எவ்வளவு பழகியும் அவன் அவளை ‘சீனியர்’என்றே அழைத்து வந்தான். புகழேந்தியின் திருமணத்திற்கு அவனும் வந்திருந்தான்.அவனைத் தன் வீட்டிலுள்ள எல்லாருக்கும் அறிமுகப்படுத்தி வைத்தாள்.அவன் அவளுடைய குடும்பத்தாரிடம் மிகவும் இயல்பாக பழகினான்.வீட்டுக்கு வந்தவர்களை வரவேற்றான்.கல்யாண வேலைகளை இழுத்துப் போட்டுக்கொண்டு செய்தான். “இன்னும் கொஞ்சம் சாம்பார் கொண்டு வாங்க.” பம்பரமாய் பரிமாறினான். மணமகளின் வீட்டு விருந்திலும் அவன் கலந்து கொண்டான்.பூங்குழலி விருந்துக்கு முதலில் சுடிதார் அணிவதாக இருந்தாள். “இன்னைக்காச்சும் அடக்க ஒடுக்கமா புடவை கட்டிட்டு வாங்களேன் சீனியர்,” சொல்லிவிட்டு அவள் முறைக்கவும் தூரப் போனான். “அடப்பாவி நில்லு ஓடாதே, எருமைமாடு்!” அவனைத் துரத்திக் கொண்டு ஓடினாள். “பரவால பூங்குழலி. எனக்குப் பதிலா உன்கிட்ட நல்லா வாங்கி கட்டிக்க இன்னொரு சகோதரன் கிடைச்சுட்டானே,” புகழும் சந்தோஷமாய்ச் சொன்னான்.ஆனால் அவன் சகோதரன் என்று சொன்னதும் மதிவதனனுடைய முகம் கொஞ்சம் மாறிப் போனது.பூங்குழலி அதைக் கவனிக்கத் தவறவில்லை.வந்திருந்தவர்கள் எல்லாரும் சாப்பிட்டுவிட்டுப் போனபிறகுதான் அவளும் மதியும் சாப்பிட உட்கார்ந்தார்கள். “மதி, நீ ஏன் என்னை அக்கான்னு கூப்பிட மாட்டேங்கற? எனக்கு நீ என்னை அக்கான்னு கூப்பிடறத கேக்க ஆசையா இருக்குப்பா,” என்று கெஞ்சினாள். மதியின் முகம் மாறிப்போனது.ஒன்றும் பேசாமல் இருந்தான். “நீ எதுவா இருந்தாலும் என்கிட்ட சொல்லலாம்,நான் உன்னைத் திட்டவோ, உன்கிட்ட கோபிக்கவோ மாட்டேன்,சத்தியமா,” அவன் கையில் சத்தியம் செய்தாள். அவன் அமைதியாகவே இருக்க, மீண்டும் நச்சரித்தாள். “ஐயோ சீனியர்,ஓர் ஆண் பெண்கிட்ட பழகுனா அந்த உறவு சகோதரியாவோ காதலியாவோ மட்டும்தான் இருக்கனுமா? அதுக்கெல்லாம் அப்பாற்பட்ட ஒரு பந்தமா அது இருக்கக் கூடாதா? எந்த உறவுக்குமே நட்புதான் முதல்ல தேவை.நட்பு நல்லா வளர்ந்த பிறகு அது எந்த உறவா மாறினா சிறப்பா இருக்கனும்னு நாமே தீர்மானிச்சிக்கலாம்.” அவனுடைய பதில் அவளுக்கு அவ்வளவு திருப்தியாக இல்லாவிட்டாலும் அவள் மேற்கொண்டு எதுவும் கேட்கவில்லை. “பூங்குழலி, இங்க வாம்மா” அம்மா அழைக்கவும் அவள் எழுந்து போனவளையே பார்த்தான் மதி. “என்னை மன்னிச்சிடுங்க சீனியர். உங்க கிட்ட என் மனசுல இருக்கறத சொல்ல முடியாம தவிச்சிக்கிட்டு இருக்கேன்,அவசரப்பட்டு சொல்லி உங்க நட்பை இழக்க விரும்பல,” பூங்குழலி அம்மாவின் முன் போய் நின்றாள். “நானும் அப்பாவும் கிளம்பறோம்,நீ உன் அண்ணிக்குத் துணையா படுத்துக்க” “சரிம்மா,” என்று பூரணியின் அறையை நோக்கிப் போனாள்.அவள் அண்ணன் எதிரே வந்தான். “பூங்குழலி, கொஞ்ச நேரம் பூரணியை வெளியே வரச்சொல்லேன்,பேசனும்” “அதெல்லாம் முடியாது, நீ இப்படியெல்லாம் செய்வேன்னுதான் அம்மா என்னை அண்ணிக்கு காவலா விட்டுட்டுப் போயிருக்காங்க,நாளைக்கு சேர்த்து பேசிக்க,” சிரித்துக் கொண்டே போய்விட்டாள். “மறுநாள் புறப்படுவதைப் பற்றி கேட்கலாமென நினைத்தால் பூங்குழலி தப்பாக எடை போட்டுவிட்டாளே,” என நொந்தபடி மெத்தையில் சாய்ந்தான் புகழேந்தி.நள்ளிரவில் பூரணி அவனைத் தேடி வந்தாள்.தூக்கம் வரவில்லையென அவனிடம் கதை அளந்தாள். “பூரணி, ஒரு பாட்டுப் பாடேன்,கேட்டுட்டே தூங்கறேன்,”அவன் கேட்க அவள் பாடினாள். “அணிலே அணிலே ஓடிவா” திடுக்கிட்டு அவளைப் பார்த்தான்.அவள் அங்கில்லை.உறவினர்களின் பேச்சு சத்தம் கேட்டது. “ச்சே கனவு,” சிரித்துக்கொண்டே உறங்கிவிட்டான். மறுநாள் பூரணியைப் பார்க்கும்போது கனவில் அவள் பாடியது நினைவிற்கு வந்தது.சிரிப்பை அடக்க பெரும்பாடு பட்டான் புகழ். பூரணியும் புகழும் வீட்டுக்கு வந்தபோது அம்மா வாசலில் ஆரத்தியோடு தயாராக இருந்தாள்.பூங்குழலி அவர்களைத் தொடர்ந்து உள்ளே நுழைந்தாள்.மதி அவளைப் பார்த்தான். “பூங்குழலி மருமகளாக வரும்போது அம்மாவும் இப்படிதானே அவளுக்கு ஆரத்தி எடுப்பார்கள்?” நினைத்துக்கொண்டே இருந்தவனைப் பார்த்துக்கொண்டே வீட்டுக்குள் நுழைந்தாள். “நேத்து நீ சொன்னதுல எனக்கும் சம்மதம்,எந்த உறவும் இல்லாம சாதாரண நட்போட பழகலாம்,” அவன் கையில் பழக்கூடையைக் கொடுத்து உள்ளே வைக்க சொல்லிவிட்டுப் போய்விட்டாள்.அவன் கையோடு சேர்த்து மனமும் கனத்தது. “உண்மையில் என் மனதில் இருப்பது என்னவென்று தெரிந்தால்…” “என்னா அங்கயே நிக்கற,சீக்கிரம் உள்ள வா” அவனை இழுத்துக்கொண்டு உள்ளே போனாள். “அண்ட்டி, நாளைக்கு நான் இவங்களை என் வீட்டுக்கு அழைத்துப் போகட்டா?” அவளுடைய அம்மாவிடம் தயங்கி தயங்கி கேட்டான். “கூட்டிட்டுப் போப்பா. புகழ் நாளைக்கு ‘ஹனிமூன்’போயிடுவான்.பூங்குழலிக்கும் போரடிக்கும்,” அவள் அம்மா உடனே சம்மதித்தாள். பூங்குழலி கல்லூரியில் படிக்கும்போது வீட்டுக்கு வராத வார இறுதி நாட்களில் அருகிலேயே உள்ள அவளது தோழிகளின் வீட்டுக்குச் சென்று வருவாள்.அவள் மீது இருக்கும் நம்பிக்கையால் அவளுடைய வீட்டில் யாரும் அவளுக்குத் தடை சொன்னதில்லை.எனவேதான் மதிவதனன் கேட்டபோதும் அவள் அம்மா மறுக்கவில்லை. மறுநாள் அவளுடைய தந்தை அவர்கள் இருவரையும் புடுராயாவில் ‘பஸ்’ ஏற்றிவிட்டார்,பட்டர்வர்த்தில் இறங்கி கூலிம் பேருந்து எடுத்து அவர்கள் வீடு போய்ச் சேர மாலை நான்கு மணியானது.பூங்குழலிக்கு திடீர் தயக்கம்.ஆனால் சாவித்திரியைப் பார்த்ததும் அந்த தயக்கம் காணாமல் போனது.மதியின் அம்மாவுக்கு இவளுடைய அம்மாவைப் போன்றே சாந்தமான முகம்.நன்றாக உபசரித்தார்.மதி ஏற்கனவே அவனுடைய குடும்பத்தைப் பற்றி சொல்லியிருக்கிறான்.சாவித்திரிக்கு இரண்டு மகன்கள் மட்டும்தான்.கணவர் பல வருடங்களுக்கு முன்பே மலேரியா காய்ச்சலில் இறந்துவிட்டார். “சாப்பிடும்மா,நீ வரேன்னு மதி நேத்தே கேசரி செஞ்சி வெக்க சொன்னான்.உனக்கு ரொம்ப பிடிக்குமாமே? வெக்கப்படாம சாப்பிடு்,” கேசரி தட்டை அவளிடம் கொடுத்துவிட்டுப் போனாள். அவர்கள் இருவரும் சமையலறையைவிட்டு ஹாலுக்கு வந்தபோது சாவித்திரி யாரோ ஓர் இளைஞனிடம் பேசிக்கொண்டிருந்தார். “என் அண்ணன் கௌசிகன்,” அவள் காதில் கிசுகிசுப்பாய் சொன்னான். பூங்குழலியை அம்மாவிடம் அழைத்துக் கொண்டு போனான் மதி.பூங்குழலியைப் பார்த்ததும் எழுந்து கொண்ட கௌசிகன் இறுகிய முகத்துடன் ஹாலை விட்டு வெளியேறினான். தொடரும் ……………
உன்னால்தானே நானும் வாழ்கிறேன் - அத்தியாயம் 6 முன்ஷி மண்டபத்திற்கு எதிரே இருந்த கல் நாற்காலியில் மதிவதனனுக்காக காத்திருந்தாள் பூங்கழலி.அவளுக்கு இரவு நேரங்களில் அங்கு அமர்ந்திருக்க மிகவும் பிடிக்கும்.பச்சை பசேலென்ற மரங்கள்,வெட்ட வெளியில் வானம் அழகாக தெரியும்.இரவு நேரங்களில் காற்று அங்கு சிலுசிலுவென வீசும்.அவளும் அவளுடைய தோழிகளும் பெரும்பாலான சமயங்களில் உணவு வாங்கி கொண்டு அங்கு அமர்ந்துதான் சாப்பிடுவார்கள்.காற்றோட்டமாக சாப்பிட்டுவிட்டு கதை அளக்கும்போது உள்ள சுகமே தனிதான். ஆரம்பத்தில் சுங்கைப் பட்டாணியை அவளுக்குப் பிடிக்கவேயில்லை.வெகு தூரமாக இருக்கிறதே என்ற வருத்தம்.ஆனால் நாளடைவில் அந்த ஊரின் அமைதி அவளுக்குப் பழகிவிட்டிருந்தது.வாரத்தில் ஒரு நாளாவது பட்டணத்திற்குப் போய்விடுவார்கள்.’சென்ட்ரல் ஸ்குவேர்’தான் அவர்கள் வழக்கமாக போகும் இடம்.அங்கு ஏதாவது தமிழ்ப்படம் திரையிடுகிறார்கள் என்றால் போதும். கூட்டமாக கிளம்பிவிடுவார்கள்.புதன்கிழமை அரை கட்டணம் என்பதால் மாலையில் சீருடை இயக்கம் முடிந்ததும் கிளம்பிவிடுவார்கள்.ஆறு மணி காட்சியைப் பார்த்துவிட்டு இரவில் சீனர்களின் ஒட்டுக்கடையில் இரவு உணவை முடித்துக்கொண்டு கிளம்பிவிடுவார்கள்.அந்த சந்தோஷம் எல்லாம் இன்னும் சில மாதங்களுக்கு மட்டும்தானே என்று அவள் ஏங்கி கொண்டிருக்கும்போதே அவளுடைய கைத்தொலைபேசி சிணுங்கியது,மதிதான் அழைத்திருந்தான்.இன்னும் ஐந்து நிமிடத்தில் வந்துவிடுவதாக சொன்னான். “வரட்டும். இன்று அவனிடம் உறுதியாக கேட்டுவிட வேண்டும்” எப்படி கேட்பது என்று ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்தாள். கடந்த சில நாட்களாகவே மதி அடிக்கடி அவளைத் தேடி வந்தான்.தினமும் காலையில் சபைகூடல் முடிந்ததும் அவளுக்காக காத்திருப்பான்.இரவிலும் அவள் உணவு வாங்க போகும்போது செயற்கை காளானருகே அவளுக்காக காத்திருந்தான். “இது எதுல போயி முடியப் போகுதோ தெரியல” - சோனியா “எல்லாம் எசைமெண்ட்காகதான் இருக்கும் வேற என்னா?”- சரளா “பூங்குழலி, எனக்கென்னவோ அந்தப் பையன் உன் மேல பிரியப்படறான் போல,எதுக்கும் பாத்து நடந்துக்கோ,”கேரலின் அவளை எச்சரித்தாள். “பூங்குழலி, எனக்கும் மதி உன்கூட நல்ல விதத்துல பழகறமாதிரி தெரியல,” என்றாள் கீதா. “எதை வெச்சி அப்படி சொல்லற?” “அவன் உன்னை ரொம்ப ரசிக்கிறான்,உனக்குத் தெரியுதோ இல்லையோ? பாக்கற எங்களுக்கு நல்லாவே தெரியுது,” மதி தன்னை இரசிக்கிறானோ என்ற எண்ணம் அவளுக்கும் ஏற்கனவே தோன்றியிருந்ததுதான்.ஏனென்றால் சில சமயங்களில் அவள் அவனிடம் பேசிக்கொண்டே இருக்கும்போது அவன் அவளை மௌனமாக பார்த்துக் கொண்டிருப்பான்.இன்று எப்படியும் அவனிடம் இது குறித்து விசாரித்துவிட வேண்டுமென்று நினைத்துதான் காத்திருக்கிறாள். “ஹாய் சீனியர், ரொம்ப நேரமா காத்திருக்கீங்களா?” கேட்டுக்கொண்டே அவளுடைய பக்கத்தில் அமர்ந்தான்.” அவள் ஒரு கணம் அமைதியாக இருந்தாள்.மதிவதனனுக்கு அவளைவிட இரண்டு வயது குறைவு.அவளை எப்போதும் ‘சீனியர்’ என்றுதான் அழைப்பான்.வயது குறைந்தவன்தானே என்ற தைரியத்தில்தான் அவள் அவனுடன் நன்றாகப் பழகினாள்.அவனுடைய பயில்பணிகளில் எல்லாம் உதவினாள்.ஆனால் அவளுடைய தோழிகள் சொல்வதை எல்லாம் கேட்கும்போதுதான் இந்த பயமே வந்துள்ளது. “என்னா சீனியர். ஒன்னுமே பேசமாட்டேங்கறீங்க?” “நீ என்கிட்ட எந்த அர்த்தத்துல பழகற மதி?” பட்டென்று கேட்டுவிட்டாள். “எனக்கு எப்படி உங்ககிட்ட சொல்றதுன்னு தெரியல,” என்றான். “நீ என்னை விரும்பறியா?” கோபப்பட்டாள். “நான் அப்படி சொல்லலியே?” என்றான் அவசரமாய். “அப்படின்னா என்னை அக்கான்னு கூப்பிடு,நான் உன்னைவிட வயசுல பெரியவதானே?” “என்னால உங்கள அக்கான்னு கூப்பிடமுடியாது சீனியர்,உங்கள அக்காவா ஏத்துக்கறதுல எனக்கு விருப்பமில்ல,” “அப்படின்னா நீ என்கூட தப்பான அர்த்தத்துலதானே பழகற? என்னை அக்கான்னு கூப்பிட முடியலன்னா இனிமே என்கிட்ட பேசாதே,” அவள் கோபமாய் எழுந்து போய்விட்டாள்.அதன்பிறகு அவன் அவள் கண்களில் படவேயில்லை. கோபப்பட்டு திட்டிவிட்டாலும் அவளால் மதியை மறக்க முடியவில்லை.சில நாட்கள்தான் பழகினாள் என்றாலும் மதியை அவளுக்கு அளவுக்கதிகமாய்ப் பிடித்திருந்தது.அவனுடைய கிண்டல் பேச்சு, குறும்புத் தனம் எல்லாவற்றையும் அவள் இரசித்தாள்.இரண்டு நாட்களாக அவன் கண்ணில் படாமல் அவள் எதையோ பறிகொடுத்ததைப் போலிருந்தாள். அன்று உணவு வாங்கும்போது அவன் அவள் எதிரே வந்தான்.அவளைப் பார்த்ததும் ஒதுங்கி நின்றான். “சோரி மதி,கொஞ்ச நேரம் எனக்காக காத்திரேன்,நான் உன்கூட பேசனும்,”என்று சொல்லிவிட்டு அண்ட்டியிடம் உணவு வாங்கப் போனாள். அவள் உணவு வாங்கிவிட்டு வரும்போது அவன் செயற்கை காளானருகே உட்கார்ந்திருந்தான். “எனக்குத் தெரியுது உனக்குக் கோபம்னு ஆனா புரிஞ்சுக்கோயேன்,எனக்கு உன்கூட பேசாம, பழகாம இருக்க முடியல,ஆனா நான் உன்னை ஒரு சகோதரன் மாதிரிதான் நேசிக்கிறேன் மதி.எனக்கு தம்பி இல்லையேங்கற ஏக்கமே உன்கூட பழகனப்புறம்தான் வந்தது,” “பயப்படாதீங்க. நானும் உங்ககிட்ட தப்பான அர்த்தத்துல பழகல,சந்தேகத்தோட நீங்க என்கூட பழகறது எனக்கு வேதனையா இருக்கு,அதுக்கு நீங்க என்கிட்ட பழகாமலேயே இருந்திடலாம்” சொல்லிவிட்டு எழுந்து போக முற்பட்டான். “பரவால போ,இன்னும் எத்தனை நாளு நீ என்கூட பேசப் போற? இப்பவே நாலாம் மாசம்,இன்னும் ரெண்டு மாசத்துல நாங்க பிராக்ட்டிக்கம் போயிடுவோம்.அது முடிஞ்சி வந்ததும் ஒரு மாசம் இருக்கப்போறேன்.அதுக்கப்புறம் உன்னை நான் பாக்கவா போறேன்?ரொம்ப பழகிட்டு பிரிஞ்சி போறதைவிட இப்பவே பிரியறது கொஞ்சம் பெட்டர் இல்லையா?” அழுதுக்கொண்டே சொல்லிவிட்டுப் போய்விட்டாள் அவள்.உணவை கூட அங்கேயே வைத்துவிட்டு ஓடிவிட்டாள். விடுதியை அடைந்தபிறகு ஜீன்ஸைக் கழற்றி நைட்டியை மாற்றிக்கொண்டு படுத்துவிட்டாள்.மதியிடம் என்னவோ இருப்பது உண்மைதான்.இல்லையென்றhல் அவன் பேசாமல் போனதற்காக இந்த அளவுக்கு வருத்தப்படுவாளா? “பூங்குழலி, உனக்கென்ன மதி மீது காதலா?’ குருட்டுத்தனமாய் கேள்வி கேட்ட கீதாவை எதை கொண்டாவது அடிக்க வேண்டும் போலிருந்தது. ஒரு பெண் ரத்த சம்பந்தமில்லாத ஓர் ஆணுக்காக உருகினால் அது காதலாகத்தான் இருக்க வேண்டுமா? இவர்களின் சிந்தனை மாறவே மாறாதா?மதிவதனன் மீது அவளுக்கு எப்படி இவ்வளவு பாசம் வந்ததென்று அவளுக்கே தெரியவில்லை.மதிவதனனைப் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும், அவனுடன் பேசிக்கொண்டே இருக்க வேண்டும் போல் இருக்கும் அவளுக்கு.ஆனால் இவர்கள் எல்லாம் நினைப்பது போன்று அவளுக்கு அவன் மீது ஈர்ப்போ காதலோ அல்ல.அதையெல்லாம் தாண்டிய ஏதோ ஒரு பந்தம்.அவளுக்கே புரியாத பந்தம்.மதிவதனனைப் பார்த்தால் அவளைவிட இளையவன் என்று யாரும் எண்ணமாட்டார்கள்தான். ஆனால் இவளுக்கு அவனைப் பார்க்கும்போதெல்லாம் ஒரு குழந்தையைப் பார்ப்பது போன்றதொரு எண்ணம்தானே ஏற்படுகிறது,அவனை அக்கறையாய் கவனித்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம்தானே அவளுள் மேலோங்கி நிற்கிறது,அவளுடைய அண்ணன் புகழ் அவளிடம் நண்பனைப் போல் பழகுவான்,அவனை நினைத்து உருகுவதைப் போல்தான் மதி மீதும் அவள் உயிராய் இருக்கிறாள். “சீனியர், மதி இதை உங்ககிட்ட கொடுக்க சொன்னாரு,” உணவுப்பொட்டலத்தை அவளிடம் கொடுத்துவிட்டுப் போனாள் சாரதா. தொடரும் ……………
உன்னால்தானே நானே வாழ்கிறேன் - அத்தியாயம் 5 ஒரு வழியாக காலை ஆறு மணிக்கு கேரலினை அனுப்பி வைத்துவிட்டு. கல்லு}ரிக்குக் கிளம்பினார்கள் நான்கு பெண்களும்,நீலா தன் வகுப்பு மாணவனிடம் சொல்லி ‘வேன்’ பேசியிருந்தாள்.மதியம் வகுப்பு முடிந்ததும் கிளம்பினார்கள்.பாவம் கேரலின்.அழுது அழுது வீங்கிய முகத்துடன் துவண்டு இருந்தாள்.அவர்களைப் பார்த்ததும் அழுது அரற்ற ஆரம்பித்துவிட்டாள்.அம்மாவின் புகைப்படத்தின் முன் கதறினாள். “பாருங்கம்மா. என்னோட கூட்டாளிங்க எல்லாரும் உங்கள பாக்க வந்திருக்காங்க” பூங்குழலி கேரலினைக் கட்டியணைத்துக் கொண்டாள். “மாசாமாசம் எங்கம்மாவ பாக்க ஓடிடுவேன்,இனிமே எங்க போயி அவங்கள பாக்கப் போறேன்?” “கேரலின், இது வாழ்க்கைல எல்லாரும் சமாளிக்க வேண்டிய கட்டம்,எல்லாருக்கும் வரும்,என்ன உனக்கு எங்களைவிட கொஞ்சம் சீக்கிரமா வந்துடுச்சி,எனக்கு உன்னோட வேதனை புரியுது,நீ ஏன் யாரும் இல்லன்னு நெனைக்கற? எங்களோட அம்மா,அப்பா எல்லாரும் உனக்காக இருக்காங்க,” என்னதான் அவளுக்கு ஆறுதல் சொல்லிவிட்டு வந்தாலும் அவளுடைய அடிமனதில் தனக்கு இப்படி ஒரு நிலை வந்தால் கண்டிப்பாக தாங்கி கொள்ள முடியாது என்று தெரியும்.அவளுக்கு எல்லாமே அவளுடைய குடும்பம்தான். அவ்வார வியாழக்கிழமை திடுதிப்பென வீட்டுக்கு வந்து நின்றவளைப் பார்த்து அதிர்ந்து போனான் புகழேந்தி.அவளுடைய அருமை அண்ணன்.பயில்பணி இருப்பதால் வரமாட்டேன் என்று சொன்னவள் திடுமென வந்ததில் அவனுக்கு ஒரே சந்தோஷம்.ஓடி வந்து அவளுடைய கையைப் பற்றி அவளை வீட்டுக்குள் அழைத்துப் போனான். “என்னடா? முகமெல்லாம் வாட்டமா இருக்கு?” அவள் தலையைக் கோதிக்கொண்டே விசாரித்தான் அவன். பூங்குழலி அவனிடம் கேரலினைப் பற்றி சொன்னாள். “தெரியல புகழ். எனக்கு அப்பவே உங்கள எல்லாம் பாக்கனும் போல இருந்துச்சி” தன் தங்கையை நினைத்து நெகிழ்ந்து போனான் அவன்.அவள் எப்பவும் இப்படிதான்.சில சமயங்களில் கல்லூரியில் பகல் நேரத்தில் தூங்கும்போது திடீரென விழிப்பு வந்தால் வீட்டை நினைத்து அழுவாள்.அதிலும் அம்மா,அப்பாவைவிட அவளுக்கு அவள் அண்ணன் மேல்தான் அதிகப் பிரியம்.அவள் உயிரே அவன்தான்.அவளைவிட அவன் ஐந்து வயது மூத்தவன்.ஆனால் அவனை அவள் அண்ணா என்று அழைத்ததே இல்லை.அவனுக்கும் அதுதான் பிடித்திருந்தது.அவனுடைய உலகமே பூங்குழலிதான்.அதனால்தான் தனக்குத் திருமணம் என்று ஒன்று நடந்தால் கூட பூங்குழலி பார்த்துக் கொடுக்கும் பெண்ணைத்தான் மணப்பேன் என்று அவளிடம் வாக்கு கொடுத்திருந்தான்.அவளும் அவன் பார்த்துக் கொடுக்கும் மாப்பிள்ளையைத்தான் மணப்பேன் என்று சொல்லிவிட்டாள். பூரணியை அவன் நேசிப்பது நிஜம் என்றாலும் தன் தங்கைக்குப் பிடிக்கவில்லை என்றால் அவளையும் மறந்துவிட தயாராக இருந்தான். பூங்குழலி அவளுடைய அம்மாவும், அப்பாவும் வந்ததும் ஓடிப்போய் அவர்களைக் கட்டியணைத்து அழ அரம்பித்துவிட்டாள், “ஐயையோ. என்ன சாயாங் இது?அழுது என் மானத்தையே வாங்கறியே? நான் உன்னை இப்படியா அழுமூஞ்சியா வளர்த்தேன்?’ அவளைத் தோளில் சாய்த்து வீட்டிற்கு வெளியே அழைத்துச் சென்றான் புகழேந்தி.அவளிடம் பூரணியைப் பற்றி சொன்னான்.அவளுக்குப் புகழைப் பற்றி நன்றாகத் தெரியும்.ஒரு நல்ல அண்ணனாக மட்டுமல்ல, நல்ல மகனாகவும் இருப்பவன்,அவன் கண்டிப்பாக தப்பான பெண்ணைத் தேர்ந்தெடுத்திருக்க மாட்டான் என்ற நம்பிக்கையில் அவன் பூரணியை மணக்க சம்மதம் சொன்னாள், அவனுக்கு அதிக சிரமத்தைக் கொடுக்காமல் மறுநாள் பூரணியின் தந்தை அவனிடம் வரன் பேச வரவே. திருமணம் நிச்சயமானது,ஆனால் பூரணியிடம் உடனே இந்த விசயத்தைச் சொல்ல வேண்டாமென கேட்டுக்கொண்டான், மறுநாள் பூரணியைப் பார்க்கும்போது அவனுடைய மனம் குறுகுறுத்தது,தன்னைப் போலவே இவளும் தன்னைத் திருட்டுத்தனமாக இரசித்திருக்கிறாளே என்ற வியப்பு அவனுள் தோன்றி மறைந்தது.வீட்டில் ஒரு விசேஷம் என்று பொய் சொல்லி அவளை வீட்டுக்கு அழைத்துப் போய் எல்லாரிடமும் அறிமுகப்படுத்தி வைத்தான்.பூங்குழலி அவனுடைய தங்கை என்று அறிந்தபோது தன் அவசர புத்தியை எதிலாவது அடிக்க வேண்டும் போலிருந்தது அவளுக்கு.மாலையில் அவளை அவனே அவளுடைய வீட்டில் கொண்டு போய் விடுவதாகச் சொன்னான்.காரில் போகும்போது கேட்டான். “உனக்கு என்னை மட்டும் பிடிச்சா பத்தாது பூரணி.என் வீட்ல உள்ளவங்களைப் பத்தியும் நீ தெரிஞ்சிக்கனும்னுதான் உன்னை மொதல்ல எங்க வீட்டுக்கு அழைச்சிட்டுப் போனேன்.உன்னால என் குடும்பத்துல உள்ளவங்களோடு ஒத்துப் போக முடியும்னு தோனுதா? எனக்கு எப்பவுமே என் அம்மா, அப்பா, தங்கை ரொம்ப முக்கியம்.உனக்கு அது வருத்தத்தைத் தராதுன்னு நீ நெனச்சா திங்க கிழம ஸ்கூலுக்குப் புடவை கட்டிட்டு வா” அவளை அவள் வீட்டில் இறக்கி விட்டுவிட்டு கிளம்பினான். வீட்டை அடைந்த பூரணி துள்ளிக் குதிக்க ஆரம்பித்திருந்தாள்.அவளுடைய புகழ் அவளை நேசிக்கிறான் என்பதில் பெரும் பூரிப்பு அவளுக்கு.இனி அவனைத் தயங்கி தயங்கி இரசிக்க வேண்டியதில்லை.அவனுடைய குழந்தைச் சிரிப்பை,உற்சாகமாக இருக்கும்போது ஒரு மாதிரி தலையைச் சாய்த்து நடக்கும் அவனுடைய நடையை எல்லாவற்றையும் அருகிலிருந்தே இரசிக்கலாம்.அவள் ஆசைப்பட்ட மாதிரி காலையில் சீக்கிரமாக எழுந்து அவன் வேலைக்குப் போகும்போது அவனுக்கு கழுத்துப் பட்டை கட்டிவிட்டு,செல்லமாக அவன் கன்ன்தில்…..எதையெதையோ நினைத்து பூரித்துக் கொண்டிருந்தாள் பூரணி. பூங்குழலியிடம் புகழ் பூரணியிடம் பேசியதை சொன்னபோது அவன் தலையிலேயே குட்டினாள். “அறிவிருக்கா உனக்கு? ஏன் இப்படி செஞ்ச? எப்படி பாத்தாலும் அவங்களுக்குதானே உன்மேல உரிமை அதிகம்?’ “எனக்கு அம்மா, அப்பாவை இருபத்தாறு வருசமா தெரியும்,உன்னை இருபத்தோரு வருசமா தெரியும்.பூரணியை ரெண்டு மாசமாதான் தெரியும்,” சொல்லிவிட்டு அவன் வெளியே கிளம்பி போய்விட. புகழை நினைத்து பெருமிதப்பட்டாள் அவள். “முருகா, யாராலயும் என் அண்ணாவை நான் இழந்துட கூடாது,எனக்கு வரப்போற அண்ணி நல்லவங்களா இருக்கனும்,”தன் இஷ்ட தெய்வத்திடம் மனமுருக பிரார்த்தித்தாள். அவளது பிரார்த்தனை வீண் போகவில்லை.குணத்திலும் அவனுக்கு ஈடாகவே இருந்தாள் பூரணி.புகழ் மீது அதிக பிரியம் அவளுக்கு.புகழ் ஒரு நாள் போன் செய்யாவிட்டாலும் கூட சாப்பிடாமல் அழுவாளாம்.புகழ் இதை வீட்டில் சொல்லி சொல்லி சிரிப்பான்.வேண்டுமென்றே அவளுக்குப் போன் செய்யாமல் விட்டுவிடுவான்.ஐந்தாம் மாத இறுதியில் பள்ளி விடுமுறையின்போது அவர்களின் திருமணத்தை நடத்திவிட தீர்மானித்தார்கள் பெரியவர்கள். * * * கேரலின் ஓரளவிற்கு பழைய நிலைக்குத் திரும்பியிருந்தாள்.சில சமயங்களில் அவள் சோகமாய் இருக்கும்போது ஏதாவது சேட்டைகள் செய்து அவளது கவலைகளை மறக்க வைத்துவிடுவார்கள்.அவளைத் தனியாக இருக்கவே விடமாட்டார்கள்.எப்போதும் போல் அவர்களுடைய சேட்டைகள் நான்கு சுவர்களுக்குள் அரங்கேறி கொண்டுதான் இருந்தன. பரபரப்பான ஐந்தாம் பருவத்தை மேலும் பரபரப்பாக்க கல்லூரியின் இருபத்தைந்தாம் ஆண்டு நிறைவு விழாவும்,பட்டமளிப்பு விழாவும் வந்து சேர்ந்து கொண்டது.அதைக் கொண்டாடும் வகையில் ஏப்ரல் மாதத்தில் நான்கு நாட்களுக்குக் கல்லூரியில் ஆடல்,பாடல் கொண்டாட்டங்கள் ஏற்பாடாகி வந்தன.பூங்குழலியும், கீதாவும் கலை கலாச்சார பிரிவில் இருந்ததால் தமிழ்த்துறை மாணவர்களின் சார்பாக நடனம் ஆடவிருந்தார்கள்.எப்போதும் ஏன் கோலாட்டமே ஆடிக்கொண்டிருக்க வேண்டுமென்று சற்று வித்தியாசமாக பங்கரா நடனத்தைப் படைக்க பயிற்சி செய்தார்கள்.காலையிலிருந்து ஒன்றரை மணி வரை வகுப்பு.திங்கள், புதன் கிழமைகளில் மதியம் இரண்டு முதல் நான்கு வரை புறப்பாட நடவடிக்கை. திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் மாலை ஐந்து முதல் ஆறு முப்பது வரை விளையாட்டு.சில சமயங்களில் இரவு நேரங்களில் ஏதாவது நிகழ்வுகள் இருக்கும்.அவற்றையெல்லாம் பார்த்துக்கொண்டே பங்கரா நடனப் பயிற்சியையும் மேற்கொண்டார்கள் அவர்கள். தினமும் மாலை ஏழு மணியிலிருந்து இரவு பத்து வரை நடனப் பயிற்சி செய்வார்கள்.பங்கரா நடனம் விறுவிறுப்பான நடன அசைவுகளைக் கொண்டிருப்பதால் ஆடி முடித்த பின் கால்கள் பயங்கரமாக வலிக்கும்.இரவில் படுக்கும்போதுதான் அந்த வலியின் வேதனையே தெரியும்.ஆனால் அவ்வளவு வலிகளையும் மீறி ஏதோ ஒரு சந்தோஷம் இந்த ஐந்தாம் பருவத்தில் நிறைந்திருப்பதாகவே தெரிந்தது.

Tuesday, August 14, 2012

வெளியே வில்லன்....வீட்டில் ஹீரோ???? திரைப்படங்களில் வில்லனாக நடிப்பவர்கள் வீட்டில் எப்படி இருப்பார்கள்?நேரில் போய்ப் பார்த்துவிடலாமே என ஒரு சனிக்கிழமை காலையில் மலேசியத் தமிழ்ப்படங்களில் வில்லனாக நடித்துக்கொண்டிருக்கும் திரு.பாலாவை ‘ஞாயிறுகுரல்’ இதழுக்காக சந்திக்க சென்றேன்.நாளிதழில் அவரது முதல் நேர்காணல் என்பதால் என்னை மாதிரியே ஓர் அழகான..(இருந்துவிட்டு போகட்டுமே??) அணிச்சலை வாங்கிகொண்டு போனேன்.அவரது வீட்டை அடைவதற்குள் அவரைப் பற்றி சிறு அறிமுகம். திரு பாலா ‘செம்மண் சாலை’ என்ற மலேசியத் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர்.அதில் குணச்சித்திர வேடத்தில் கதாநாயகியின் மாமாவின் நண்பராக,’நல்லவராக’ நடித்திருந்தார்.அதன்பிறகு வெளிவந்த ‘எதிர்காலம்’ என்ற திரைப்படத்தில் ஏற்று நடித்திருந்த குணச்சித்திர வேடம்தான் அவரை மக்களிடையே அடையாளம் காட்டியது.அதன்பிறகு ‘சலங்கை’ என்ற திரைப்படத்தில் முதன்முறையாக வில்லன் வேடத்தில் நடித்தார்.வில்லன் என்றாலும் தன் நண்பருக்கு உதவும் நல்ல வில்லனாக நடித்திருந்தார்.அதன்பிறகு ‘விதியின் துண்டுகள்” ( Pieces of Faith) என்ற குறும்படத்திலும் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக வில்லனாக மாறியிருந்தார்.இதோ வில்லனின் வீட்டை அடைந்துவிட்டோம். அவருடைய காதல் மனைவி ஆசிரியை புதல்விதான் என்னை வரவேற்றார்.பாலா குளித்து முடித்து,நெற்றியில் திருநீற்றோடு மாடிப்படிகளில் இறங்கி வந்தார்:நட்போடு கை குலுக்கி நலம் விசாரித்தார்.அவர் எதிரிலேயே அவர் மனைவியிடம் கேட்டேன். உதயா : புதல்வி,உங்கள் கணவர் வீட்டில் வில்லனா?கதாநாயகனா? புதல்வி : உண்மை சொல்லவா?பொய் சொல்லவா? பாலா: (கெஞ்சலாக....) செல்லம்,முப்பத்து முக்கோடி பேர் நேர்காணலைப் படிக்க போறாங்க..கொஞ்சம் நல்லதா சொல்லும்மா புதல்வி : அவரு வீட்டிலும் உண்மையா ஹீரோதான்.வீட்டு வேலை பிரமாதமா செய்வாரு.இன்னைக்கு கூட அவருதான் வீடு கூட்டுனாரு.சமைக்கும்போது நல்லா உதவி செய்வாரு.எனக்கு பசி என்று சொல்லிட்டா போதும் உடனே எதையாவது தயாரிச்சி கொடுத்துடுவாரு. உதயா: அவரு எப்படி சமைக்கறாரு என்று பார்க்கறதுக்குதான் முக்கியமா வந்திருக்கேன்.சரி நீங்க சொல்லுங்க பாலா..உங்க மனைவி எப்படி?கதாநாயகியா இல்லை வில்லியா? பாலா: அவங்கதான் என்னோட முதல் ஆதரவாளர்.எல்லா விசயத்துலயும் எனக்குப் பக்க பலமா இருப்பாங்க.என்னோட நாடக வசனங்களைத் தமிழில் மொழிபெயர்த்துக்கொடுப்பாங்க.அருமையா தோம் யாம் சூப் செய்வாங்க.அப்பப்ப நிறைய பஞ்ச் வசனங்களை எல்லாம் எடுத்துவிடுவாங்க,அவங்ககிட்ட இருந்து நான் கத்துக்குவேன்.அடிக்கடி அவங்க பயன்படுத்தற பஞ்ச் வசனங்களில் எனக்கு ரொம்ப பிடிச்சது “சுட்டுப் போட்டாலும் வராது” என்பதுதான். உதயா : ஒருவேளை உங்களுக்கு சமையல் சரியா வராது என்பதுக்காகதான் அந்த வசனத்தை அடிக்கடி சொல்றாங்களோ என்னவோ? பாலா: என்னை காமெடியன் ஆக்கறிங்களே??? L உதயா: சரி,நீங்க சமைக்கறதை நான் படம் பிடிக்கனுமே?? புதல்வி: என் அம்மா வீட்டுக்கு சமைக்கதான் போய்க்கிட்டு இருக்கோம்.அங்க இவரை சமைக்க வெச்சி புகைப்படம் எடுத்துடலாம். (பக்கத்து தாமானில் இருந்த பாலாவின் மாமியார் வீட்டுக்குப் போனோம்.அங்கு கைலான் கீரையை அவரது மனைவி சொல்ல சொல்ல சமைக்க ஆரம்பித்தார்.மிக கிக மெதுவாக கீரையை வதக்க, சட்டிக்கு வலிக்கப் போகுது ஹபி,” என்றபடி மற்ற அயிட்டங்களைச் சமைக்க ஆரம்பித்தார் புதல்வி.எப்படியோ சமைத்து முடித்து நிம்மதியோடு வரவேற்பறைக்குப் போனவர் தன் மாமியாரின் வீட்டில் இருந்த குழந்தைகளுடன் கொஞ்சி விளையாட ஆரம்பித்தார்.அதற்குள் மதிய உணவு தயாராகிவிட அனிச்சலை வெட்டினார்.புதல்வி மதிய உணவைப் பரிமாறுவதற்குள் வில்லனாய் மாறி மனைவியின் தங்கைக்கு அனிச்சல் ஊட்டிவிட்டு அவருடைய முகத்தில் அனிச்சலை அப்பி அலங்கோலமாக்கினார்.கோபப்படாமல் அக்காட்சியைப் பார்த்து இரசித்தார் புதல்வி.நான் சில கேள்விகளைத் தொடர்ந்தேன்.) உதயா : கதாநாயகனாக நடிக்காமல் வில்லனா நடிக்கிறோமே என எப்போதாவது வருத்தப்பட்டிருக்கிறீர்களா? பாலா : நிச்சயமா இல்லை,விருப்பப்பட்டுதான் நடிக்கறேன். உதயா : வில்லன் பாத்திரத்தில் மறக்க முடியாத தருணம்? பாலா: நான் இறந்து போன காட்சிதான் (சிரிப்பு) உதயா: மலேசிய நாடக,திரைப்படத் துறையில் வில்லன் நடிகர்களுக்கான வாய்ப்புகள் எப்படி இருக்கின்றன? பாலா : மலேசிய மக்கள் பெரும்பாலும் நகைச்சுவைப் படங்களை அதிகமாய் விரும்புவதால் வில்லன்களுக்கு மௌசு கொஞ்சம் குறைவுதான். உதயா : இத்துறையில் உங்களின் எதிர்பார்ப்பு? பாலா : என் திறமைக்கேற்ற வாய்ப்புகளை எதிர்பார்க்கிறேன்,எந்த வேடமானாலும் நடிக்க தயார். வேற எதுவும் கேள்விகள் இருக்கா? (கண்களை உருட்டுகிறார்) உதயா : இல்லை,நான் உங்களைப் பேட்டி எடுக்க வரலை,வில்லன்கள் வீட்டில் எப்படி இருப்பார்கள் என பார்க்கவே வந்தேன்,அப்படியே கொஞ்சமாய்ப் பேட்டி.. மதிய உணவு தயாராகிவிடவே,கண்டிப்பாக சாப்பிட்டுவிட்டுதான் போகவேண்டும் என ரசம்,உருளைக்கிழங்கு பிரட்டல்,கைலான் கீரை பிரட்டல்,காய்கறி பிரட்டல்,அப்பளம்,மீன் சம்பல் என்று பலவித அயிட்டங்களைப் பரிமாற ஆரம்பித்தார் புதல்வி.என் பக்கத்தில் அமர்ந்த பாலா, “நான் சமைச்ச கீரையைச் சாப்பிட்டு பாருங்களேன்,” என்றார்.பயந்து போய் தட்டைத் தூக்கிக்கொண்டு எழுந்துவிட்டேன். “ நான் அதிக நாள் உயிர் வாழ ஆசைப்படறேன் அண்ணா,” என்றபடி விரைவாக சாப்பிட்டு எழுந்தேன்.தன் மனைவியின் குடும்பத்தோடு அவர் பழகிய விதம்,அவர்களுக்கிடையில் இருந்த அந்நியோன்யமான உறவு,கலாட்டா யாவற்றையும் இரசித்தவாறு விடைபெற்றேன். “ நான் உண்மையில் நெத்திலி சம்பல் ரொம்ப சுவையா சமைப்பேன்,அடுத்த வாரம் கண்டிப்பா வீட்டுக்கு வாங்க,சமைச்சி தரேன்,” என்று அழைப்பு விடுத்தார்.எனக்குப் பிடித்த நெத்திலி சம்பல் ஆயிற்றே??நேரம் இருந்தால் கண்டிப்பாக வருகிறேன் என்று அனைவரிடமும் விடைபெற்று கிளம்பினேன். ( பாலா அவர்கள் வெகு பிரசித்தி பெற்ற வில்லன் நடிகர் அல்லதான்,ஆனாலும் புகழ பெற்றவர்கள் யாவருமே ஒரு காலத்தில் சிறிய நடிகராக அறிமுகமாகி இருந்தவர்கள்தானே?அவருக்கான வாய்ப்புகள் தொடர்ந்து வந்தால் நிச்சயம் பிரகாசிப்பார்,தினக்குரலும் வாழ்த்துகிறது..) - உதயகுமாரி கிருஷ்ணன், பூச்சோங்

வளையல் பெண்ணோடு வண்ணத்திரை பிரபலங்கள் - 12 ஆகஸ்ட் 2012

வெளியே வில்லன்....வீட்டில் ஹீரோ???? திரைப்படங்களில் வில்லனாக நடிப்பவர்கள் வீட்டில் எப்படி இருப்பார்கள்?நேரில் போய்ப் பார்த்துவிடலாமே என ஒரு சனிக்கிழமை காலையில் மலேசியத் தமிழ்ப்படங்களில் வில்லனாக நடித்துக்கொண்டிருக்கும் திரு.பாலாவை ‘ஞாயிறுகுரல்’ இதழுக்காக சந்திக்க சென்றேன்.நாளிதழில் அவரது முதல் நேர்காணல் என்பதால் என்னை மாதிரியே ஓர் அழகான..(இருந்துவிட்டு போகட்டுமே??) அணிச்சலை வாங்கிகொண்டு போனேன்.அவரது வீட்டை அடைவதற்குள் அவரைப் பற்றி சிறு அறிமுகம். திரு பாலா ‘செம்மண் சாலை’ என்ற மலேசியத் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர்.அதில் குணச்சித்திர வேடத்தில் கதாநாயகியின் மாமாவின் நண்பராக,’நல்லவராக’ நடித்திருந்தார்.அதன்பிறகு வெளிவந்த ‘எதிர்காலம்’ என்ற திரைப்படத்தில் ஏற்று நடித்திருந்த குணச்சித்திர வேடம்தான் அவரை மக்களிடையே அடையாளம் காட்டியது.அதன்பிறகு ‘சலங்கை’ என்ற திரைப்படத்தில் முதன்முறையாக வில்லன் வேடத்தில் நடித்தார்.வில்லன் என்றாலும் தன் நண்பருக்கு உதவும் நல்ல வில்லனாக நடித்திருந்தார்.அதன்பிறகு ‘விதியின் துண்டுகள்” ( Pieces of Faith) என்ற குறும்படத்திலும் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக வில்லனாக மாறியிருந்தார்.இதோ வில்லனின் வீட்டை அடைந்துவிட்டோம். அவருடைய காதல் மனைவி ஆசிரியை புதல்விதான் என்னை வரவேற்றார்.பாலா குளித்து முடித்து,நெற்றியில் திருநீற்றோடு மாடிப்படிகளில் இறங்கி வந்தார்:நட்போடு கை குலுக்கி நலம் விசாரித்தார்.அவர் எதிரிலேயே அவர் மனைவியிடம் கேட்டேன். உதயா : புதல்வி,உங்கள் கணவர் வீட்டில் வில்லனா?கதாநாயகனா? புதல்வி : உண்மை சொல்லவா?பொய் சொல்லவா? பாலா: (கெஞ்சலாக....) செல்லம்,முப்பத்து முக்கோடி பேர் நேர்காணைப் படிக்க போறாங்க..கொஞ்சம் நல்லதா சொல்லும்மா புதல்வி : அவரு வீட்டிலும் உண்மையா ஹீரோதான்.வீட்டு வேலை பிரமாதமா செய்வாரு.இன்னைக்கு கூட அவருதான் வீடு கூட்டுனாரு.சமைக்கும்போது நல்லா உதவி செய்வாரு.எனக்கு பசி என்று சொல்லிட்டா போதும் உடனே எதையாவது தயாரிச்சி கொடுத்துடுவாரு. உதயா: அவரு எப்படி சமைக்கறாரு என்று பார்க்கறதுக்குதான் முக்கியமா வந்திருக்கேன்.சரி நீங்க சொல்லுங்க பாலா..உங்க மனைவி எப்படி?கதாநாயகியா இல்லை வில்லியா? பாலா: அவங்கதான் என்னோட முதல் ஆதரவாளர்.எல்லா விசயத்துலயும் எனக்குப் பக்க பலமா இருப்பாங்க.என்னோட நாடக வசனங்களைத் தமிழில் மொழிபெயர்த்துக்கொடுப்பாங்க.அருமையா தோம் யாம் சூப் செய்வாங்க.அப்பப்ப நிறைய பஞ்ச் வசனங்களை எல்லாம் எடுத்துவிடுவாங்க,அவங்ககிட்ட இருந்து நான் கத்துக்குவேன்.அடிக்கடி அவங்க பயன்படுத்தற பஞ்ச் வசனங்களில் எனக்கு ரொம்ப பிடிச்சது “சுட்டுப் போட்டாலும் வராது” என்பதுதான். உதயா : ஒருவேளை உங்களுக்கு சமையல் சரியா வராது என்பதுக்காகதான் அந்த வசனத்தை அடிக்கடி சொல்றாங்களோ என்னவோ? பாலா: என்னை காமெடியன் ஆக்கறிங்களே??? L உதயா: சரி,நீங்க சமைக்கறதை நான் படம் பிடிக்கனுமே?? புதல்வி: என் அம்மா வீட்டுக்கு சமைக்கதான் போய்க்கிட்டு இருக்கோம்.அங்க இவரை சமைக்க வெச்சி புகைப்படம் எடுத்துடலாம். (பக்கத்து தாமானில் இருந்த பாலாவின் மாமியார் வீட்டுக்குப் போனோம்.அங்கு கைலான் கீரையை அவரது மனைவி சொல்ல சொல்ல சமைக்க ஆரம்பித்தார்.மிக கிக மெதுவாக கீரையை வதக்க, சட்டிக்கு வலிக்கப் போகுது ஹபி,” என்றபடி மற்ற அயிட்டங்களைச் சமைக்க ஆரம்பித்தார் புதல்வி.எப்படியோ சமைத்து முடித்து நிம்மதியோடு வரவேற்பறைக்குப் போனவர் தன் மாமியாரின் வீட்டில் இருந்த குழந்தைகளுடன் கொஞ்சி விளையாட ஆரம்பித்தார்.அதற்குள் மதிய உணவு தயாராகிவிட அனிச்சலை வெட்டினார்.புதல்வி மதிய உணவைப் பரிமாறுவதற்குள் வில்லனாய் மாறி மனைவியின் தங்கைக்கு அனிச்சல் ஊட்டிவிட்டு அவருடைய முகத்தில் அனிச்சலை அப்பி அலங்கோலமாக்கினார்.கோபப்படாமல் அக்காட்சியைப் பார்த்து இரசித்தார் புதல்வி.நான் சில கேள்விகளைத் தொடர்ந்தேன். உதயா : கதாநாயகனாக நடிக்காமல் வில்லனா நடிக்கிறோமே என எப்போதாவது வருத்தப்பட்டிருக்கிறீர்களா? பாலா : நிச்சயமா இல்லை,விருப்பப்பட்டுதான் நடிக்கறேன். உதயா : வில்லன் பாத்திரத்தில் மறக்க முடியாத தருணம்? பாலா: நான் இறந்து போன காட்சிதான் (சிரிப்பு) உதயா: மலேசிய நாடக,திரைப்படத் துறையில் வில்லன் நடிகர்களுக்கான வாய்ப்புகள் எப்படி இருக்கின்றன? பாலா : மலேசிய மக்கள் பெரும்பாலும் நகைச்சுவைப் படங்களை அதிகமாய் விரும்புவதால் வில்லன்களுக்கு மௌசு கொஞ்சம் குறைவுதான். உதயா : இத்துறையில் உங்களின் எதிர்பார்ப்பு? பாலா : என் திறமைக்கேற்ற வாய்ப்புகளை எதிர்பார்க்கிறேன்,எந்த வேடமானாலும் நடிக்க தயார். வேற எதுவும் கேள்விகள் இருக்கா? (கண்களை உருட்டுகிறார்) உதயா : இல்லை,நான் உங்களைப் பேட்டி எடுக்க வரலை,வில்லன்கள் வீட்டில் எப்படி இருப்பார்கள் என பார்க்கவே வந்தேன்,அப்படியே கொஞ்சமாய்ப் பேட்டி.. மதிய உணவு தயாராகிவிடவே,கண்டிப்பாக சாப்பிட்டுவிட்டுதான் போகவேண்டும் என ரசம்,உருளைக்கிழங்கு பிரட்டல்,கைலான் கீரை பிரட்டல்,காய்கறி பிரட்டல்,அப்பளம்,மீன் சம்பல் என்று பலவித அயிட்டங்களைப் பரிமாற ஆரம்பித்தார் புதல்வி.என் பக்கத்தில் அமர்ந்த பாலா, “நான் சமைச்ச கீரையைச் சாப்பிட்டு பாருங்களேன்,” என்றார்.பயந்து போய் தட்டைத் தூக்கிக்கொண்டு எழுந்துவிட்டேன். “ நான் அதிக நாள் உயிர் வாழ ஆசைப்படறேன் அண்ணா,” என்றபடி விரைவாக சாப்பிட்டு எழுந்தேன்.தன் மனைவியின் குடும்பத்தோடு அவர் பழகிய விதம்,அவர்களுக்கிடையில் இருந்த அந்நியோன்யமான உறவு,கலாட்டா யாவற்றையும் இரசித்தவாறு விடைபெற்றேன். “ நான் உண்மையில் நெத்திலி சம்பல் ரொம்ப சுவையா சமைப்பேன்,அடுத்த வாரம் கண்டிப்பா வீட்டுக்கு வாங்க,சமைச்சி தரேன்,” என்று அழைப்பு விடுத்தார்.எனக்குப் பிடித்த நெத்திலி சம்பல் ஆயிற்றே??நேரம் இருந்தால் கண்டிப்பாக வருகிறேன் என்று அனைவரிடமும் விடைபெற்று கிளம்பினேன். ( பாலா அவர்கள் வெகு பிரசித்தி பெற்ற வில்லன் நடிகர் அல்லதான்,ஆனாலும் புகழ பெற்றவர்கள் யாவருமே ஒரு காலத்தில் சிறிய நடிகராக அறிமுகமாகி இருந்தவர்கள்தானே?அவருக்கான வாய்ப்புகள் தொடர்ந்து வந்தால் நிச்சயம் பிரகாசிப்பார்,தினக்குரலும் வாழ்த்துகிறது..) - உதயகுமாரி கிருஷ்ணன், பூச்சோங்

Tuesday, June 19, 2012

அப்பாவுக்குப் பிடித்த நானும் எனக்குப் பிடித்த நெத்திலி சம்பல் நாசிலெமாவும்

அப்பாவுக்குப் பிடித்த நானும் எனக்குப் பிடித்த
நெத்திலி சம்பல் நாசி லெமாவும்


    அப்பாவைப் பிறந்தது முதல் என்பதைவிட கருவில் இருக்கும்போதே நிச்சயம் எனக்குப் பிடித்திருக்கும்.அன்பான அந்தக் கரகரப்பான குரலைக் கேட்டே வளர்ந்திருப்பேன்.ஆனால் நாசி லெமாக் வை எப்போது எனக்குப் பிடிக்க ஆரம்பித்தது என என்னால் நிச்சயமாக சொல்ல முடியவில்லை.தமிழ்ப்பள்ளியில் பயின்றபோது,அது தோட்டப்புற பள்ளி என்பதால் இலவச உணவுத் திட்டத்தில் புதன்தோறும் நாசி லெமாக் வழங்கப்படும்.சில சமயங்களில் நாங்கள் நெத்திலி ஆய்ந்தும் கொடுத்திருக்கிறோம்.
     ஓய்வு நேர மணி அடிக்கும் பொறுப்பு என்னுடையதாக இருந்தது.என் பள்ளி மாணவர்கள் அன்று மட்டும் என்னைச் சீக்கிரமாக மணி அடிக்க சொல்லிக்கொண்டே இருப்பார்கள்.என் அம்மா இரண்டு வேலை செய்ததால் நான் சம்பல் கேட்கும்போதெல்லாம் மிளகாயை அரைத்து செய்து கொடுக்க அவரால் இயலவில்லை.நான் ஊறவைத்த மிளகாயை எடுத்துக்கொண்டு என் பெரியம்மாவின் வீட்டு அம்மியில் அரைத்துக்கொண்டு வருவேன்.பெரியம்மாவின் வீட்டு அம்மியில் அரைத்தால் அந்தச் சமையல் ருசியாக இருக்கும் என்று ஏதோ ஒரு நம்பிக்கை எனக்குள் பதிந்திருந்தது.
   தமிழ்ப்பள்ளியில் பயிலும்போதே நெத்திலி சம்பல் செய்யவும் கற்றுக்கொண்டேன்.மாதந்தோறும் சம்பள நாட்களில் அப்பா தோட்டத்துக் கடையில் நெத்திலி வாங்கி கொடுப்பார்.நான் சந்தோஷமாக சம்பல் செய்வேன்.அது கொதிக்கும்போது மிகவும் இரசித்துப் பார்ப்பேன்.என் அப்பா நான் சமைத்த சம்பலை இருசித்து சாப்பிடுவதையும் பெருமையாக பார்ப்பேன்.அப்பா என்னைக் கன்னத்தில் முத்தமிட்டு,ரொம்ப நல்லா இருக்குடா” என்பார்.
       அவ்வருட பள்ளி விடுமுறையில் அத்தை வீட்டுக்குப் போனபோது என்னைச் சுற்றி வந்துகொண்டிருந்த என் பதின்ம வயது அத்தையின் மகன்கள் நான் சமைத்த சம்பலை இருசித்துச் சாப்பிட்டார்கள்.பருவமடையாத அந்த வயதில் என் சின்ன மாமாவைத் திருமணம் செய்து கொண்டால் தினமும் அவருக்கு நெத்திலி சம்பல் நாசி லெமாக் செய்து கொடுக்கவேண்டும் என்று ஏதோ ஓர் ஆசை எனக்குள் தோன்றியது.அவர் வெளியே எங்காவது போய்விட்டால் அவருக்காக தனியாக எடுத்து வைத்துவிடுவேன்.
    நான் இடைநிலைப் பள்ளிக்குப் போனபிறகு,பள்ளிக்கு வெளியே ஒரு மலாய்க்கார மாது விற்கும் நாசி லெமாக் வை தினமும் வாங்கி சாப்பிடுவேன்.மாத இறுதியில் அப்பாவிடம் காசு இல்லாதபோது அந்தக் கடையை ஏக்கத்தோடு பார்த்துவிட்டுப் போய்விடுவேன்.நாளுக்கு நாள் நாசி மெலாக் மீதான மோகம் அதிகரித்துக்கொண்டுதான் இருந்ததே தவிர குறைந்தபாடில்லை.அதற்கு அப்பாவும் ஒரு காரணம். தாப்பா மார்க்கெட் அருகே ஒரு சீன மாது விற்கும் நாசி லெமாக் வெகு சுவையாக இருக்கும்.அப்பா பட்டணம் போகும் போதெல்லாம் எனக்கு அந்தச் சீன மாதின் நாசி லெமாக் வாங்கி வந்து கொடுப்பார்.தாப்பா பட்டணத்தில் எந்தக் கடையில் நாசி லெமாக் விற்கப்பட்டாலும் அப்பா உடனே எனக்காக வாங்கி விடுவார்.

 

   ஒரு தடவை கடுமையான மழை பெய்ததால் அப்பாவுக்கு வேலை இல்லை.அப்பா காலையிலேயே என்னைப் பட்டணத்திற்கு அழைத்துப் போனார்.அவர் வழக்கமாக பசியாறும் கடையில் பசியாறாமல் என் கையைப் பிடித்து என்னை வேறொரு கடைக்கு அழைத்துப் போனார்.ஏன் என்று யோசித்துக்கொண்டே அப்பா என்னிடம் கைகாட்டிய திசையைப் பார்த்தேன்.அங்கே வாழை இலையில் வெகு அழகாய் மடித்து வைக்கப்பட்ட நாசி லெமாக் பொட்டலங்கள்.நான் சந்தோசமாய் அப்பாவைப் பார்த்து சிரித்தேன்.அதன்பிறகு அப்பாவுடன் பட்டணம் போகும்போதெல்லாம் அப்பாவின் கையை பிடித்துக்கொண்டே அந்தக் கடையினுள் பெருமிதமாய் நுழைவேன்.என்னைப் பார்த்ததும் அந்தக் கடைக்காரி நாசி லெமாக் பொட்டலத்தை எடுத்து வைத்துவிடுவாள்.அங்கேயே பசியாற ஒன்று; எடுத்துக்கொள்ள ஒன்று என இரண்டு நாசி லெமாக் வாங்கி கொடுப்பார்.அதைக் கையில் எடுத்துக்கொண்டு அப்பாவுடன் கையைப் பிடித்துக்கொண்டு தாப்பா பட்டணத்தில் பல இடங்களைச் சுற்றிக்கொண்டிருப்பேன்.
    நான் தற்காலிகமாய் ஒரு கணினி மையத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் வேலை செய்தபோது அப்பா காலையிலேயே எனக்கு நாசி லெமாக் வாங்கி கொடுத்து அனுப்புவார். 2006- ஆம் ஆண்டில் எல்லாரும் பூச்சோங் வந்துவிட்டோம்.அப்பா தோட்டத்து முருகன் கோயிலை விட்டு வர மனமில்லாமல் ஓரிரு வருடம் கழித்து வந்துவிடுவதாக சொன்னார்.நான் ஏங்கி போனேன்.ஆனால் அப்பா மாதந்தோறும் இங்கு வந்துவிடுவார்.காலையிலேயே மார்க்கெட் சென்று அந்தச் சீன மாதிடம் எனக்குப் பிடித்த நாசி லெமாக் வாங்கி கொண்டு வருவார்.அவர் இங்கு வந்து சேர மணி ஒன்றுக்கு மேல் ஆகிவிடும்.அப்பா வரும்போதெல்லாம் என் மதிய உணவு எனக்குப் பிடித்த தாப்பா நாசி லெமாக் வாக இருக்கும். ஒரு தடவை அப்பா வந்த பேருந்து தாமதமாக வந்து சேர்ந்தது.அதற்குள் அவர் வாங்கி வந்த நாசி லெமாக் கெட்டுப் போய்விட்டது.என் முகம் வாடிப்போனது அப்பாவை உறுத்தியது போலும்.அதன்பிறகு அவர் நாசி லெமாக் வாங்காமல் தாப்பாவிலிருந்து நெத்திலி வாங்கி வர ஆரம்பித்தார்.அவர் வரும்போதெல்லாம் நான் நெத்திலி சம்பல் நாசி லெமாக் செய்வேன்.அப்பா எனக்கு ஊட்டிவிடுவார்.என் அண்ணனுக்கும் நான் செய்யும் செத்திலி சம்பல் நாசி லெமாக் ரொம்ப பிடிக்கும்.ஏனோ எனக்கு அப்பா தாப்பாவிலிருந்து வாங்கி வரும் நெத்திலி போட்டு சம்பல் செய்தால் மட்டுமே திருப்தியாக இருக்கும்.
     2008- ஆம் ஆண்டுக்குப் பிறகு அப்பா இனிமேல் இங்கேயே என்னுடன் இருப்பேன் என்றார்.எனக்கு அளவுக்கதிக மகிழ்ச்சி. அச்சமயம்தான் அப்பாவை முதல் தடவையாக மருத்துவமனையில் சேர்த்திருந்தார்கள்.எனக்குத் தெரிந்து அப்பா மருத்துவமனையில் இருப்பதைப் பார்த்ததே இல்லை.காய்ச்சல் என்று எந்த நோய்க்கும் அப்பா மருத்துவமனைக்குப் போனதே இல்லை.அப்பா குணமாகி வீட்டுக்கு வந்தார்.அன்று இரவு அவருக்குப் பிடித்த நெத்திலி சம்பல் நாசி லெமாக் செய்துகொண்டிருந்த போதுதான் அப்பா மாரடைப்பால் எதிர்பாராமல் ஒரு நிமிடத்திற்குள் என் கைகளில் தன் உயிரை விட்டார்.நான் செய்த நாசி மெலாக் வைச் சாப்பிடும் முன்பே அவர் உயிர் பிரிந்தது;எல்லாவற்றையும் தூக்கிக் கொட்டிவிட்டேன்
   அதன்பிறகு நாசி லெமாக் செய்யும்போதெல்லாம் எனக்கு அப்பாவின் நினைவு வரும்.தந்தையர் தினம்,அவர் மறைந்த தினம் போன்ற நாள்களில் யாராவது ஒரு பெரியவருக்கு நெத்திலி சம்பல் செய்து கொடுப்பேன்.என் அப்பா சாப்பிட்டது போன்ற ஒரு திருப்தி தோன்றும். இன்று வரையில் நான் நாசி மெலாக் வை விரும்பி சாப்பிட்டுக்கொண்டுதான் இருக்கிறேன்.ஆனால் என் ஒரு கையை அப்பா இறுக்கமாய்ப் பற்றியிருக்க,இன்னொரு கையில் பத்திரமாய் அடைக்கலமாகியிருந்த தாப்பா நாசி லெமாக்வை மிஞ்சும் சுவையில் எந்த நாசி லெமாக்வும் நிச்சயம் இருக்கப்போவதில்லை காரணம் வெறும் நெத்திலி,மிளகாய் என்பதைக் கடந்து அப்பாவின் அன்பும் நிறைந்து இருந்த நாசி லெமாக் அவை.....

 
உதயகுமாரி கிருஷ்ணன்,பூச்சோங்

Thursday, May 31, 2012


சிறுகதை



கனவில் வந்த நரிகள்



      சமீப காலமாய்  என் கனவில் அடிக்கடி நரிகள் வந்த வண்ணம் இருக்கின்றன.தடித்தும்,மெலிந்தும்,நீண்டும்,குறுகியும் பல பரிமாணங்களைக் கொண்டிருக்கும் அந்நரிகள் தங்களின் வருகையைப் பற்றி ஒருபோதும் எனக்கு அறிவித்ததே இல்லை.தங்களின் வருகையின் நோக்கம் குறித்து கூட என்னிடம் விவாதிக்காமல் இருந்த அவை குறைந்தபட்சம் என் கனவில் வருவதற்கான அனுமதியையும் பெறவில்லை.இருப்பினும் விசா இல்லாமல் என் அதிகாலைக் கனவுகளில் தினந்தோறும் சுதந்திரமாய்ப் பிரவேசித்துக் கொண்டேதான் இருக்கின்றன அவை.நரிகளை நேருக்கு நேர் பார்த்ததில்லை.தொலைக்காட்சியில் கூட மிக மிக சொற்ப சமயங்களில் மட்டுமே பார்த்திருந்த அவற்றின் அங்க அவயங்கள் குறித்து தெளிவான ஒரு பார்வையும் எனக்கு இருந்ததில்லை.இருப்பினும் அவை நரிகள்தாம் என்பதில் எந்த ஐயமும் இல்லை எனக்கு.ஒருமுறை ஏற்பட்ட காட்சிப்பிழையினால் தெரு ஓரமாய்ச் சுற்றிக் கொண்டிருந்த சில நாய்களின் முகத்தைக் காலியாக்கி நரி முகத்தை நிரப்பிப் பார்த்ததுண்டு.ஆனால் என் கனவில் வருபவை நிச்சயம் கலப்படமற்ற அக்மார்க் நரிகள்தாம்.

   ஆனால் ஏன் இப்படி என்னைத் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கவேண்டும்?ஏதேனும் விட்டகுறை தொட்டகுறையாக இருக்குமா என யோசிப்பதும் ஏற்புடையதாக தோன்றவில்லை.காரணம் நரிகளுடன் ஒருபோதும் குலவி உறவாடியதில்லை நான்.கதைகளில் கூட வடையைத் தூக்கிக் கொண்டு போன திருட்டுத்தனம் நிறைந்த நரிகளையும்,கொக்கை ஏமாற்றி அகலமான பாத்திரத்தில் பாயாசத்தை ஊற்றிக் கொடுத்து அதன் தவிப்பைக் கண்டு மகிழ்ந்த சிறுபுத்தியும்,வில்லத்தனமும் நிறைந்த நரிகளையும் மட்டுமே படித்து அறிந்த காரணத்தினால் அவற்றின் மீது வெறுப்பு மட்டுமே படர்ந்து நாளடைவில் அவற்றின் முழு உருவமே மறந்து போன நிலையில் எனக்கும் நரிகளுக்கும் எந்தவித தொடர்பு இருந்துவிட முடியும்?

    ஒருவேளை நான் கனவில் காண்பது நரிகள் அல்லவோ?வேறு ஏதேனும் மிருகத்தை நரியாய்க் கற்பனை செய்து கொள்கிறேனோ என்ற ஐயம் மிக மெல்லிய நூலிழையில் வந்து போனதுண்டு.அந்த நூலிழை சந்தேகத்திற்குக் காரணம்  நள்ளிரவைக் கடந்தும் இளமையாய் இருந்த ஓர் இரவில் பயந்து நடுங்கி கொண்டே இனிய உதயம் இதழில் வெளிவந்திருந்த டிராகுலாவின் தமிழாக்கத்தைப் படித்தபோது அவற்றின் அருகிலிருந்த கதாநாயகனைக் காட்டிலும் அவற்றின் கண்களுக்குப் புலப்படும் சாத்தியமே இல்லாமல்  பாதுகாப்பான இடத்தில்,மெத்தையில் முகத்திற்கு முக்காடு போட்டுக்கொண்டு படித்துக்கொண்டிருந்த என்னைப் பயமுறுத்திய ஓநாய்களை நரிகளோடு ஒப்பிட்டு அவ்வப்போது என்னை நானே குழப்பிக்கொண்டு  மற்றவர்களையும் குழப்பியதுண்டு.(அடேங்கப்பா,இந்த விசயத்தைச் சொல்வதற்கு நான் எவ்வளவு பெரிய நீளமான வாக்கியத்தைப் பயன்படுத்த வேண்டியிருக்கிறது?)ஆனால் அவை யாவும் எப்போதுமே மூர்க்கத்தனம் நிறைந்த கொடூரமான முகத்தைக் கொண்டிருப்பதாகவே கதாநாயகன் அவ்வப்போது வர்ணித்ததால் அந்தக் கொடிய முகமும்,கோரப்பார்வையும் எனக்குள் அமானுஷ்யமாய் உறைந்து போயிருந்தன.என் கனவில் வருபவையோ முகம் முழுக்க சிரிப்பையும்,நட்புத்தனமான பார்வையையும் மட்டுமே கொண்டிருந்தன.என்னிடம் நெருங்கி பழகி நட்பு பாராட்டின.எனவே அவை நிச்சயம் ஓநாய்கள் அல்ல என்ற திண்ணம் ஆழமாய்ப் பரவவே எனக்குள் பிறப்பெடுத்த அந்தச் சந்தேகத்தை மென்று விழுங்கி,குளிர்ந்த நீரைப் பருகி அடிவயிற்றுக்கு அனுப்பி சமாதி கட்டினேன்.

    ஆனாலும் சந்தேகத்திற்கு மட்டும்தான் என்னால் சமாதி கட்ட முடிந்தது.கனவில் வரும் நரிகளைக் கட்டுப்படுத்தவோ குறைந்தபட்சம் அவற்றின் எண்ணிக்கையைக் குறைக்கவோ என்னால் ஏதும் செய்யவியலா நிலமை.கூட்டம் கூட்டமாய் வந்து போகும் நரிகளைக் கண்டு நடுங்கி,சுவரோரமாய்ப் பல்லிக்குப் போட்டியாய் ஒட்டிக்கொண்டு உறங்கிப்போகும்போது நித்திரையில் கிடைக்கும் ஒட்டுமொத்த இன்பத்தையும் மொத்தமாய் இழந்துவிடுவதால் இரவே வராமல் போனால் என்ன என்ற வெறுப்புணர்ச்சியும் தோன்றிவிடுகிறது.

    பெரும்பாலான நேரத்தில் நான் பார்க்கும் யாவற்றையும் நான் படித்த கதைகளோடு சம்பந்தப்படுத்தியே பார்க்கும் எனக்கு இரவு எப்படி தோன்றியது என்ற கதையில் பகல் மட்டுமே சூழ்ந்திருந்த நாட்டில் வாழ சிரமப்பட்டு தன் பிறந்தநாட்டிலிருந்து இரவை கோணிப்பையில் மூட்டையாய்க் கட்டிக்கொண்டு வரச்சொல்லிய பெண்ணின் மீதும் கோபம் கோபமாய் வந்தது.அவள் மட்டும் அம்மாதிரி செய்யாமலிருந்திருந்தால் இந்தப் பூமி நிச்சயம் வெறும் பகலை மட்டுமே கொண்டிருக்கும் என்பதில் கதாசிரியரைவிட எனக்குதான் அதீத நம்பிக்கை.    இரவு இல்லாமல் பகல் மட்டுமே நிரம்பியிருந்தால் உறக்கமும் வராது,கனவும் வராது.நரிகளுக்கும் என் கனவில் வந்து என்னை இம்சைப்படுத்த வேண்டிய தேவையும் இராது.நானும் இப்படி சில நாட்களாய் நரிகளின் புராணம் பாட வேண்டி இராது.

   அந்நரிகள் அப்படி ஒன்றும் என்னைத் துன்புறுத்தி விடவில்லைதான்.முகம் முழுக்க சிரிப்போடு என்னை மிக நெருக்கமாய்ச் சமீபித்து  என்னைக் கொஞ்சிக்குலாவிக்கொண்டுதான் இருந்தன.ஆனால் அந்தச் சிரிப்பும்,கொஞ்சலும்தானே என்னை இப்படி நிலைகுலைய செய்கின்றன.இப்படி சிரித்துக்கொண்டேதானே சிறுமுயலை சிங்கராஜாவிடம் மாட்டிவிட்டன.என்னையும் இப்படி யாரிடமாவது மாட்டிவிட போகின்றனவா? என்ற நடுக்கம் இரவில் மட்டுமல்ல நன்றாக பொழுது விடிந்த பின்பும் கூட எனக்குள் குறையவே இல்லை. அக்கனவைக் காணும் நேரத்தைவிட மீண்டும் அதை நினைத்துப்பார்க்கும்போது ஏற்படும் பயம்தான் அலாதியாக இருக்கின்றது. சிலவேளைகளில் வெறும் கனவாக இருந்தாலும் நம்மை பயமுறுத்ததானே செய்கின்றன.அதுவும் என்னைப் போன்று அடிக்கடி கற்பனையில் இன்பம் காணும் மனம் கனவைப் பின்தொடர்ந்து அதிபயங்கரமாய் ஏதோ நடக்கப்போவதாய் மிகையாய்க் கற்பனை செய்துக்கொண்டு பயந்து நடுங்குவது இன்று நேற்றா நடக்கிறது?அவற்றையெல்லாம் பட்டியல் போட்டால் கனவில் வந்த பேய்கள்,கனவில் வந்த யானைகள், கனவில் வந்த ..... இப்படி பல தலைப்புகளில் கதை எழுத நேரிடும்.

   நினைவு தெரிந்த நாளிலிருந்து எத்தனை கனவுகள் மாதக்கணக்கில் என்னை அடிமைப்படுத்தி வைத்திருந்தன?நான் வசித்த தோட்டப்புறத்தில் என் வீட்டிலிருந்து முருகன் கோயிலுக்குச் செல்லும் வழியில் எதிரெதிரே இருந்த இரண்டு வரிசை வீடுகளுக்கிடையே ஓர் எலுமிச்சை மரம் இருந்தது.முட்களோடு கூடிய எலுமிச்சைக் காய்கள் காய்த்து தொங்கும்போது அந்த எலுமிச்சை மரம் மிக அழகானதாய்த் தோன்றும் எனக்கு.மரத்தையும்,அந்த எலுமிச்சைக் காய்களையும் ஆசையாய் வருடிப் பார்த்துவிட்டுதான் செல்வேன்.

    அந்த எலுமிச்சை மரத்திலிருந்து ஒரு நாள் பாதி தலை கொண்ட ஒரு பேய் இறங்கி வந்து தோட்டத்திலிருந்த மக்களைச் சாகடிப்பதாய்க் கனவு கண்டதிலிருந்து அம்மரத்தைப் பார்த்தாலே பயந்து அலறி தலை தெறிக்க ஓடிய நாட்கள் எண்ணிலடங்கா..ஓட்டப்பந்தயத்தில் கூட அவ்வளவு வேகமாய் ஓடியதில்லை.பின் ஒரு நாளில் வெட்டி சாய்க்கப்பட்ட பின்பும் கூட அந்த எலுமிச்சை மரம் இருக்கும் இடம் வந்தால் தலையை இடது புறம் திருப்பிக்கொண்டுதான் போவேன்.அத்தகைய அதி தைரியசாலியும்,கற்பனாவாதியுமான நான் சில நாட்களாய்த் தவறாது கனவில் வந்து போகும் நரிகள் குறித்து பயப்படாமல் இருக்க முடியுமா?

   இப்படி பயந்து கொண்டே இருந்த போதுதான் ஒருநாள் துணிந்து நரிகளுடன் பேசிவிடலாம் என தீர்மானம் செய்துக்கொண்டு படுத்திருந்தேன்.வெறுமனே வந்து போகாமல் தங்களின் வேலையைச் சீக்கிரம் செய்துமுடித்துவிட்டு என்னைவிட்டு விலகும்படி சொல்லிவிட வேண்டும் என நினைத்திருந்தேன்.

    அந்தத் தீர்மானத்தோடு அன்று நான் உறங்க சென்றேன்.போர்வையை இழுத்துப் போர்த்திக்கொண்டு அறை முழுக்க பார்வையைச் சுழல விட்டேன்.பக்கத்தில் படுத்திருந்த தங்கையைப் பார்த்தேன்.மின்னல் வடிவில் உடலை மடித்து ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவளை அமைதியாய்ப் பார்த்துக்கொண்டே உறக்கத்திற்காய்க் காத்திருந்தேன்.மெத்தை விளம்பரத்தில் நடிப்பவள் போன்று முகத்தில் பௌடர் கலையாமல் படுத்திருந்தாள்.இதே வேறொரு இரவாக இருந்திருந்தால் அவள் தூங்கும்போது கைத்தொலைப்பேசியிலிருந்து எழும் வெளிச்சத்தை அவள் முகத்திற்கு நேராய் பாய்ச்சி அவள் எந்த துலங்களையும் காட்டாமல் இருப்பதைக் கண்டு சிரித்துக்கொண்டு இருந்திருப்பேன்.ஏனோ எல்லாரும் தூங்கிவிட்டபிறகு அவர்களின் முகத்தில் மெல்லிய வெளிச்சத்தைப் பாய்ச்சி பார்ப்பதில் ஓர் இன்பம் எனக்கு.அது எனக்கு ஒருவித மனநோயாகவே தோன்றவில்லை.சில செயல்களுக்குக் காரண காரியம் இருக்காதல்லவா?அந்த மாதிரிதான் இதுவும்.ஆனால் இன்று அப்படி எதுவும் செய்ய தோன்றவில்லை.இதுநாள் வரை நரிகளின் மீதிருந்த பயத்தைச் சுருட்டி தலையணக்கடியில் வைத்துவிட்டு அறை முழுக்க என் பார்வையைச் சுழலவிட்டபடி நரிகளுக்காக காத்திருக்க ஆரம்பித்தேன்.

     என் காத்திருப்பை வீணாக்காமல் வந்து சேர்ந்தன அவை.வழக்கம்போல் சிரித்த முகத்துடன் என்னை நெருங்கி  வந்து உறவாட எத்தனித்தன.என் பலத்தையெல்லாம் ஒன்று திரட்டி முதல்முறையாக அவற்றை என்னிடமிருந்து தள்ளிவிட்டேன்.அதிர்ச்சியடைந்த நரிகளுள் ஒன்று சிரித்த முகத்துடன் ஆனால் மிக ஆவேசமாக மீண்டும் என்னை ஸ்பரிசிக்க வந்தது.அதற்கு ஈடு கொடுத்து போராட தயாரானேன்.அதன் பின்னால் நின்றிருந்த நரி ஒன்று அதைத் தூண்டிவிட்டுக் கொண்டே இருக்க,என் மீது பாய தயாரானது அது.என் உடலில் ஒட்டிக்கிடந்த கொஞ்சநஞ்ச பயத்தையும் பிய்த்து எடுத்து காலில் போட்டு மிதித்தேன்.பின் அதை நோக்கி சென்றேன்; மூர்க்கதனமாய்த் தாக்க ஆரம்பித்தேன்.எதிர்பாராத அத்தாக்குதலால் நிலைகுலைந்து போன அது சற்றே தடுமாறி போனது.எப்போதும் நரிகள் என்னை ஆக்ரமிக்க தொடங்கும்போது நான் பேச்சற்று,செயலற்று கிடப்பேன்.பொதுவாக கெட்டகனவு காணும் எல்லாரும் எதிர்கொள்வதைப் போன்று எனக்கும் நான் எவ்வளவு கத்தினாலும் என் குரல் வெளியே யாருக்கும் கேட்காத மாதிரியே இருக்கும்.

    இன்று அப்படி இல்லாமல் நான் திடீரென தாக்கியதும் அந்த நரி சற்று செயலிழந்து போனது.என் செயலைப் பார்த்து வியப்படைந்த ஏனைய நரிகளின் புன்னகை முகமும் மறைந்து போய்,சரியாக கணிக்கவியலாத உணர்ச்சியைத் தங்கள் முகத்தில் தேக்கியவாறு ஆச்சரியத்தில் உறைந்து போயிருந்தன.நான் சற்றும் தாமதிக்கவில்லை.எனக்கு மிக அருகில் நின்றிருந்த அந்த நரியைப் பிடித்து இழுத்தேன்.மிக அருகில் அதை உற்று நோக்கியபோது அதன் முகம் எனக்கு மிக பரிச்சயமான முகமாக தோன்றியது.சிறு குழப்பத்தில் இருந்த எனக்கு அந்த நரி முகத்தின் பின்னால் எனக்கு மிகப் பழக்கமான வேறு ஏதோ ஒரு முகம் மறைந்துகிடப்பதாய் நொடிப்பொழுதில் மின்னல் வெட்டு ஒன்று தோன்றி மறைய,எதிர்பாராத கணத்தில் அந்நரியின் மீது விழுந்து அதன் முகத்தில் கையை வைத்து அதன் முகத்தைக் கிழிக்க ஆரம்பித்தேன்.என்னை அலைக்கழிக்க விடாமல் உடனே என் கையோடு வந்தது நரிமுகம்..உள்ளே..உள்ளே....

   அந்த நரிமுகத்தின் உள்ளே மறைந்திருந்தது நினைக்காத நேரமில்லை என்றும்,ஏக்கத்தில் அழவைக்கிறாய் என்றும் உருகி உருகி பழகிவிட்டு,காரணமின்றி எதிரியாகிப் போன என்  முன்னாள் முகநூல் நண்பன் ஒருவன்.அந்நரியை என் மீது பாய சொல்லி தூண்டிவிட்டுக்கொண்டு இருந்த இன்னொரு நரியின் முகத்தைப் பிய்த்தபோது அவனுடைய ஆருயிர்த்தோழி என சொல்லிக்கொண்டு இழிவான வேலையில் ஈடுபட்ட புழுவினும் அற்பமான ஒருத்தி தன் ஆவேச முகத்தைக் காட்டினாள்.தொடர்ந்து ஆவேசமாய் அங்கிருந்து ஓடமுயன்ற எல்லா நரிகளின் முகத்தையும் கிழித்தெறிந்தேன்.ஒவ்வொன்றின் பின்னாலும் எனக்கு மிகப் பரிச்சயமான மனித முகங்கள். அவை உணர்த்திய உண்மை என்னை ஓங்கி அறைந்தது.இதுநாள் வரையில் என்னைச் சுற்றி மனித ரூபத்தில் இருந்தவை பெரும்பாலும் நரிகளே.மனித முகத்தை மறைக்குமளவுக்கு நரிகளின் தீய நயவஞ்சக குணத்தைப் பூசிக்கொண்ட அம்மனித முகங்கள் என்னிடம் நன்றாகப் பழகியதாய் நடித்திருக்கின்றன.என் அன்புக்கு விலையில்லை என நெகிழ்ந்துகொண்டே அவை எனக்குப் பின்னால் நிறைய சதிவேலைகளில் ஈடுபட்டிருக்கின்றன.அந்த உண்மை என்னை இரணமாய்க் கொன்றது.

      உண்மை வெளிபட்டுவிட்ட காரணத்தினாலோ என்னவோ அதன்பிறகு என் கனவில் அந்நரிகள் வருவது நின்று போனது.இருந்தாலும் திருப்தியடையவில்லை நான்.கனவில் வந்த நரிகளின் முகத்திரையை மட்டும்தானே கிழித்திருக்கிறேன். ஆனால் என்னைச் சுற்றி இன்னும் எத்தனை எத்தனை நரிகளோ.எல்லாவற்றையும் கண்டுபிடித்து அழிப்பது சாத்தியமானதல்லவே. அதற்காக நானும் நரியாகி அவற்றுடன் நட்பு பாராட்டவும் முடியாது.நரிகள் என்னை அண்டாமல் இருக்க ஒரே வழி நான் சிங்கத்தின் முகத்தோலைப் போர்த்திக்கொண்டு அலைவதுதான்.சிங்கமாய் மாறிவிட தீர்க்கமாய் முடிவு செய்த பின் நிறைய சிங்கம் பற்றிய கதைகளைப் படிக்க ஆரம்பித்திருக்கிறேன்.இனி என் கனவுகளில் தினந்தோறும் சிங்கங்கள் வர ஆரம்பித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லைதான்....

  



உதயகுமாரி கிருஷ்ணன்,

பூச்சோங்..