குழந்தைகளின்
உலகம் தனித்துவம் வாய்ந்தது.அந்த உலகத்தில் சிண்டரெல்லாக்களும் கூட வண்ண வண்ண
கனவுகளைச் சுமந்தபடி துள்ளித் திரிகிறார்கள்.எங்கிருந்தாவது தேவதைகள் வந்து தங்கள்
ஆசைகளை நிறைவேற்றிக் கொடுக்காதா என்ற ஏக்கம் அவர்களைத் தாக்காமல் இருப்பதில்லை.வறுமை
நிலையில் உடுத்திக்கொள்ள நல்ல துணியோ,உண்பதற்கு நல்ல உணவோ இல்லாமல் ஏங்கி
கிடைக்கும் அடிவர்க்க குழந்தைகள் யாவருமே என் கண்களுக்கு சிண்டரெல்லாவாகதான்
தெரிகிறார்கள்.
இளமையில் வறுமை கொடியது என்பார்கள்.வறுமை
குழந்தைகளின் இரசனைகளையும்,ஆசைகளையும்,எதிர்பார்ப்புகளையும்
எந்தவிதத்திலும் கட்டுப்படுத்துவதில்லை.அவர்கள் கட்டுக்கடங்காத பணத்திற்கோ,அறுசுவை விருந்துக்கோ ஏங்குவதில்லை.அவர்களின் எதிர்பார்ப்பு சிறுசிறு
விசயங்களில் அடங்கிவிடுகின்றது.அவற்றில் ஒன்றுதான் பண்டிகைக்கால எதிர்பார்ப்பு.
எட்டு பேர் கொண்ட அந்தக் குடும்பத்தில் 6
பிள்ளைகள்.வறுமையின் காரணமாக முதல் மூன்று பிள்ளைகளை கெடாவிலுள்ள ஓர் ஆசிரமத்தில்
விட்டுவிட்டார் திருமதி மலர்விழி.மீதமுள்ள மூவரும் பெண்குழந்தைகள்.எட்டு வயதில்,ஐந்து
வயதில்,இரண்டு வயதில் இருக்கும் அந்தக் குழந்தைகளைக் காண சென்றிருந்தேன்.
அடுக்குமாடி வீட்டில் மூன்றாவது மாடியில்
இருந்த அவர்களின் வீட்டில் நுழைந்தபோது அந்தக் குழந்தைகளின் வறுமை நிலையை அவர்கள்
உடுத்தியிருந்த உடைகளும்,வீட்டுச் சூழலும் பறைசாற்றின.
நான்காவது பெண்பிள்ளை ஹேமலதா இரண்டாம் ஆண்டில்
பயில்கிறாள்.பள்ளியில் அவளுக்குச் சில உதவிகள் கிடைக்கின்றன.இலவச சாப்பாடும்
கிடைக்கிறது.ஆனால் தீபாவளி நெருங்கி கொண்டிருக்கும் வேளையில் வகுப்பில் மற்ற
மாணவர்கள் பள்ளிகளில் விற்கப்படும் தீபாவளி வாழ்த்து அட்டைகளை வாங்கும்போது இவள் மனதிலும் சஞ்சலம் ஏற்பட்டிருக்கிறது.தன்
அம்மாவிடம் கேட்டிருக்கிறாள்.குடும்பம் இருக்கும் சூழலில் அதையெல்லாம்
வாங்கமுடியுமா என மறுத்திருக்கிறார் இவளது அம்மா.
வகுப்பில் உடன் பயிலும் பிள்ளைகள் தங்கள்
வீட்டில் தங்களுக்கு நான்கு,ஐந்து புத்தாடைகள் வாங்கியிருப்பதாக சொல்ல,இவள் மனதில் மேலும் ஏக்கம் அதிகரித்திருக்கிறது.
ஹேமலதாவின் வீட்டுக்குச் சென்றபோது என்னிடத்தில்
அந்த விசயத்தைச் சொன்ன அவளது அம்மா அவளது தீபாவளி ஆசைகளைப் பூர்த்தி செய்யும்
நிலையில் தான் இல்லை என வருத்தமாக கூறினார்.அவளை அருகில் அழைத்து, “இந்தத் தீபாவளி சந்தோசமா இருக்கனும்னா உனக்கு என்ன வேனும்?” என்றேன்.தனக்கு இளஞ்சிவப்பு நிறத்தில் ஒரு சுடிதார் வேண்டும் என்றாள்; விளையாடுவதற்கு கொஞ்சமாய் மத்தாப்பும் வேண்டும் என்றாள்.
இளையவள் யோகதர்ஷினியை அழைத்து என்ன வேண்டுமென
கேட்டபோது தயங்கி தயங்கி தனக்கு ஒரு புதிய சுடிதார் மட்டும் போதும்;வேறெதுவும்
தேவையில்லை என்றாள்.
இதுதான் குழந்தைகளின் மனம்.அறுசுவை விருந்தோ,பணமோ
தந்துவிடாத மகிழ்ச்சியை அவர்களுக்கு புத்தாடையும்,மத்தாப்பும்
கொடுக்கிறது.
ஹேமலதாவின் தீபாவளிக் கொண்டாட்டத்தை அவள்
எதிர்பார்த்தபடி அமைத்துக்கொடுக்க எனக்கு மிகவும் நெருக்கமான ஒரு குடும்பம்
முன்வந்தது.(அவர்கள் தங்களை வெளிப்படுத்திக்கொள்ள விரும்பவில்லை).
ஹேமலதாவின் வீட்டுக்கு சில பலகார மாவுகள்,மசாலைப்
பொருள்கள்,முட்டை,அரிசி,சீனி,மைலோ ஆகியவற்றோடு அவர்களுக்குப் பிடித்தமான
இளஞ்சிவப்பு நிற சுடிதார் வாங்கி கொடுப்பதற்கும் பணத்தை ஒதுக்கியிருந்தார்கள்.
தீபாவளி நெருங்கும் சமயத்தில் ஒருநாள் அந்தப்
பொருள்களோடு அவர்கள் கேட்ட இளஞ்சிவப்பு நிற சுடிதாரோடு அவர்கள் வீட்டின் கீழ்
நிற்கையில்,”எங்களுக்கு புது சட்டை வாங்கிட்டு வந்திருக்கீங்களா?” என ஆர்வமாய் வந்து நின்றாள் இளையவள்.அவள் முகத்தில் ஒரு மலர்ச்சி.
வீட்டுக்குள் நுழைந்ததும் அந்தக் குழந்தைகளிடம்
அவர்கள் ஆசைப்பட்ட சுடிதாரைக் கொடுத்தேன்.அப்போது அவர்கள் அடைந்த பரவசத்தையும்,சந்தோசத்தையும்
வார்த்தைகளால் வர்ணிக்க முடியவில்லை.உடனே ஓடிப்போய் அந்த உடையைப் போட்டுப்
பார்த்தார்கள்.அந்தப் புத்தாடை அணிந்ததும் அவர்களின் தோற்றம் பன்மடங்கு பளிச்சென
இருந்தது.துப்பட்டாவைக் கொஞ்சம் ஸ்டைலாக போட்டுவிட,நாணத்தோடும்,நன்றி உணர்வோடும் என்னைப் பார்த்த அந்தக் கணம் எனக்கும் மகிழ்ச்சியாக
இருந்தது.
தேவதைகள் நிஜத்தில் பூமிக்கு
வருவதில்லை.சிண்டரெல்லா குழந்தைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்து அவர்களை
மகிழ்விக்கும் தேவதைகளாக நாம் மாறினால் என்ன?
ஜனநி ராம் என்ற சகோதரி கடந்த வருடம்
திரு.சந்தியன் மற்றும் அவர்தம் மனைவியோடும்,தன் தோழிகளோடும் இணைந்து 100
ஏழைக்குடும்பங்களுக்கு தீபாவளி சமயத்தில் உதவியிருக்கிறார்கள்.செலவுகளை
ஏற்றுக்கொண்ட ஒருவர் தன் பெயரைக் குறிப்பிட விரும்பாமல் பணத்தை மட்டும்
கொடுத்துவிட,இவர்கள் அந்தக் குடும்பங்களுக்கு
உதவியிருக்கிறார்கள்.அந்தக் குடும்பங்களில் இருந்த ஏறத்தாழ 40 குழந்தைகளை
துணிக்கடைக்கு அழைத்துச் சென்று நவீன பாணி சுடிதார்
எடுத்துக்கொடுத்திருக்கிறார்கள்.அதைப் பெற்றுக்கொண்டபோது குழந்தைகளின் முகத்தில்
ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை என்கிறார் ஜனனி.ஒரு சிறுமி ஜனனியைக்
கட்டியணைத்து தனக்கு அந்தப் புத்தாடை மிகவும் பிடித்திருப்பதாக சொல்லி
சந்தோசப்பட்டிருக்கிறாள்.
சரி,எல்லா குழந்தைகளின்
எதிர்பார்ப்பையும் நம்மால் பூர்த்தி செய்துவிடமுடியாது எனினும் ஒருவர் ஒரு
குழந்தைக்கு என செய்தாலே போதுமே.பல குழந்தைகளின் வாழ்வில் ஒளியூட்ட முடியுமே?
நீங்கள் ஆசிரியர் பணியில் இருந்தால் உங்கள்
பள்ளியில் பயிலும் ஏதாவதொரு ஏழைக்குழந்தைக்கு புத்தாடை எடுத்துக்கொடுத்து,மத்தாப்பு
வாங்கி கொடுக்கலாம்.எத்தனையோ பள்ளிகளில் எத்தனையோ ஆசிரியர்கள்.ஒவ்வொருவரும் ஒரு
பிள்ளைக்கு செய்தாலும் எத்தனையோ குழந்தைகளுக்கு அவர்கள் ஆசைப்பட்ட புத்தாடை
கிடைக்குமே?
ஆசிரியர்களை அடுத்து பெற்றோரும் உதவி செய்ய முடியும்?நீங்கள்
ஓரளவு வசதி படைத்தவரா?உங்கள் பிள்ளைகளுக்கு நான்கைந்து
புத்தாடைகள் வாங்கும்போது ஒருகணம் உங்கள் பிள்ளைகள் பயிலும் அதே வகுப்பில் ஓரிரு
ஏழைக் குழந்தைகளும் பயிலக்கூடும்,அவர்களையும் ஒருகணம்
நினைத்துப் பார்க்கலாமே?இன்று நாம் அவர்களுக்குச் செய்ததை
எதிர்காலத்தில் அவர்கள் நல்ல நிலையில் இருக்கும்போது அடுத்தவர்களுக்கு
செய்வார்கள்.
தீபாவளி
பண்டிகை என்பதே அடுத்தவர்களின் வாழ்வில் ஒளியூட்டக்கூடிய ஒரு பண்டிகை.நம்மால்
இயன்ற அளவு குழந்தைகளின் வாழ்வில் ஒளியேற்றுவோம்.குழந்தைகளுக்குதான் பண்டிகை
என்பதே.அவர்களின் வாழ்வில் முதலில் மகிழ்ச்சி எனும் தீபம் ஏற்றுவோம்.
No comments:
Post a Comment