சிறுகதை
கனவில்
வந்த நரிகள்
சமீப காலமாய் என் கனவில் அடிக்கடி நரிகள் வந்த வண்ணம்
இருக்கின்றன.தடித்தும்,மெலிந்தும்,நீண்டும்,குறுகியும்
பல பரிமாணங்களைக் கொண்டிருக்கும் அந்நரிகள் தங்களின் வருகையைப் பற்றி ஒருபோதும்
எனக்கு அறிவித்ததே இல்லை.தங்களின் வருகையின் நோக்கம் குறித்து கூட என்னிடம்
விவாதிக்காமல் இருந்த அவை குறைந்தபட்சம் என் கனவில் வருவதற்கான அனுமதியையும் பெறவில்லை.இருப்பினும்
விசா இல்லாமல் என் அதிகாலைக் கனவுகளில் தினந்தோறும் சுதந்திரமாய்ப் பிரவேசித்துக்
கொண்டேதான் இருக்கின்றன அவை.நரிகளை நேருக்கு நேர் பார்த்ததில்லை.தொலைக்காட்சியில்
கூட மிக மிக சொற்ப சமயங்களில் மட்டுமே பார்த்திருந்த அவற்றின் அங்க அவயங்கள்
குறித்து தெளிவான ஒரு பார்வையும் எனக்கு இருந்ததில்லை.இருப்பினும் அவை நரிகள்தாம்
என்பதில் எந்த ஐயமும் இல்லை எனக்கு.ஒருமுறை ஏற்பட்ட காட்சிப்பிழையினால் தெரு
ஓரமாய்ச் சுற்றிக் கொண்டிருந்த சில நாய்களின் முகத்தைக் காலியாக்கி நரி முகத்தை
நிரப்பிப் பார்த்ததுண்டு.ஆனால் என் கனவில் வருபவை நிச்சயம் கலப்படமற்ற அக்மார்க் நரிகள்தாம்.
ஆனால்
ஏன் இப்படி என்னைத் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கவேண்டும்?ஏதேனும்
விட்டகுறை தொட்டகுறையாக இருக்குமா என யோசிப்பதும் ஏற்புடையதாக தோன்றவில்லை.காரணம் நரிகளுடன்
ஒருபோதும் குலவி உறவாடியதில்லை நான்.கதைகளில் கூட வடையைத் தூக்கிக் கொண்டு போன
திருட்டுத்தனம் நிறைந்த நரிகளையும்,கொக்கை
ஏமாற்றி அகலமான பாத்திரத்தில் பாயாசத்தை ஊற்றிக் கொடுத்து அதன் தவிப்பைக் கண்டு
மகிழ்ந்த சிறுபுத்தியும்,வில்லத்தனமும்
நிறைந்த நரிகளையும் மட்டுமே படித்து அறிந்த காரணத்தினால் அவற்றின் மீது வெறுப்பு
மட்டுமே படர்ந்து நாளடைவில் அவற்றின் முழு உருவமே மறந்து போன நிலையில் எனக்கும்
நரிகளுக்கும் எந்தவித தொடர்பு இருந்துவிட முடியும்?
ஒருவேளை நான் கனவில் காண்பது நரிகள் அல்லவோ?வேறு ஏதேனும் மிருகத்தை நரியாய்க் கற்பனை செய்து கொள்கிறேனோ
என்ற ஐயம் மிக மெல்லிய நூலிழையில் வந்து போனதுண்டு.அந்த நூலிழை சந்தேகத்திற்குக்
காரணம் நள்ளிரவைக் கடந்தும் இளமையாய்
இருந்த ஓர் இரவில் பயந்து நடுங்கி கொண்டே இனிய உதயம் இதழில் வெளிவந்திருந்த
டிராகுலாவின் தமிழாக்கத்தைப் படித்தபோது அவற்றின் அருகிலிருந்த கதாநாயகனைக்
காட்டிலும் அவற்றின் கண்களுக்குப் புலப்படும் சாத்தியமே இல்லாமல் பாதுகாப்பான இடத்தில்,மெத்தையில்
முகத்திற்கு முக்காடு போட்டுக்கொண்டு படித்துக்கொண்டிருந்த என்னைப் பயமுறுத்திய
ஓநாய்களை நரிகளோடு ஒப்பிட்டு அவ்வப்போது என்னை நானே குழப்பிக்கொண்டு மற்றவர்களையும் குழப்பியதுண்டு.(அடேங்கப்பா,இந்த விசயத்தைச் சொல்வதற்கு நான் எவ்வளவு பெரிய நீளமான
வாக்கியத்தைப் பயன்படுத்த வேண்டியிருக்கிறது?)ஆனால்
அவை யாவும் எப்போதுமே மூர்க்கத்தனம் நிறைந்த கொடூரமான முகத்தைக் கொண்டிருப்பதாகவே
கதாநாயகன் அவ்வப்போது வர்ணித்ததால் அந்தக் கொடிய முகமும்,கோரப்பார்வையும்
எனக்குள் அமானுஷ்யமாய் உறைந்து போயிருந்தன.என் கனவில் வருபவையோ முகம் முழுக்க
சிரிப்பையும்,நட்புத்தனமான பார்வையையும்
மட்டுமே கொண்டிருந்தன.என்னிடம் நெருங்கி பழகி நட்பு பாராட்டின.எனவே அவை நிச்சயம்
ஓநாய்கள் அல்ல என்ற திண்ணம் ஆழமாய்ப் பரவவே எனக்குள் பிறப்பெடுத்த அந்தச்
சந்தேகத்தை மென்று விழுங்கி,குளிர்ந்த
நீரைப் பருகி அடிவயிற்றுக்கு அனுப்பி சமாதி கட்டினேன்.
ஆனாலும் சந்தேகத்திற்கு மட்டும்தான் என்னால்
சமாதி கட்ட முடிந்தது.கனவில் வரும் நரிகளைக் கட்டுப்படுத்தவோ குறைந்தபட்சம்
அவற்றின் எண்ணிக்கையைக் குறைக்கவோ என்னால் ஏதும் செய்யவியலா நிலமை.கூட்டம்
கூட்டமாய் வந்து போகும் நரிகளைக் கண்டு நடுங்கி,சுவரோரமாய்ப்
பல்லிக்குப் போட்டியாய் ஒட்டிக்கொண்டு உறங்கிப்போகும்போது நித்திரையில் கிடைக்கும்
ஒட்டுமொத்த இன்பத்தையும் மொத்தமாய் இழந்துவிடுவதால் இரவே வராமல் போனால் என்ன என்ற
வெறுப்புணர்ச்சியும் தோன்றிவிடுகிறது.
பெரும்பாலான நேரத்தில் நான் பார்க்கும்
யாவற்றையும் நான் படித்த கதைகளோடு சம்பந்தப்படுத்தியே பார்க்கும் எனக்கு ”இரவு எப்படி தோன்றியது”
என்ற கதையில்” பகல்
மட்டுமே சூழ்ந்திருந்த நாட்டில் வாழ சிரமப்பட்டு தன் பிறந்தநாட்டிலிருந்து இரவை கோணிப்பையில்
மூட்டையாய்க் கட்டிக்கொண்டு வரச்சொல்லிய பெண்ணின் மீதும் கோபம் கோபமாய் வந்தது.அவள்
மட்டும் அம்மாதிரி செய்யாமலிருந்திருந்தால் இந்தப் பூமி நிச்சயம் வெறும் பகலை
மட்டுமே கொண்டிருக்கும் என்பதில் கதாசிரியரைவிட எனக்குதான் அதீத நம்பிக்கை. இரவு இல்லாமல் பகல் மட்டுமே
நிரம்பியிருந்தால் உறக்கமும் வராது,கனவும்
வராது.நரிகளுக்கும் என் கனவில் வந்து என்னை இம்சைப்படுத்த வேண்டிய தேவையும் இராது.நானும்
இப்படி சில நாட்களாய் நரிகளின் புராணம் பாட வேண்டி இராது.
அந்நரிகள் அப்படி ஒன்றும் என்னைத்
துன்புறுத்தி விடவில்லைதான்.முகம் முழுக்க சிரிப்போடு என்னை மிக நெருக்கமாய்ச்
சமீபித்து என்னைக் கொஞ்சிக்குலாவிக்கொண்டுதான்
இருந்தன.ஆனால் அந்தச் சிரிப்பும்,கொஞ்சலும்தானே
என்னை இப்படி நிலைகுலைய செய்கின்றன.இப்படி சிரித்துக்கொண்டேதானே சிறுமுயலை
சிங்கராஜாவிடம் மாட்டிவிட்டன.என்னையும் இப்படி யாரிடமாவது மாட்டிவிட போகின்றனவா? என்ற நடுக்கம் இரவில் மட்டுமல்ல நன்றாக பொழுது விடிந்த
பின்பும் கூட எனக்குள் குறையவே இல்லை. அக்கனவைக் காணும் நேரத்தைவிட மீண்டும் அதை
நினைத்துப்பார்க்கும்போது ஏற்படும் பயம்தான் அலாதியாக இருக்கின்றது. சிலவேளைகளில்
வெறும் கனவாக இருந்தாலும் நம்மை பயமுறுத்ததானே செய்கின்றன.அதுவும் என்னைப் போன்று
அடிக்கடி கற்பனையில் இன்பம் காணும் மனம் கனவைப் பின்தொடர்ந்து அதிபயங்கரமாய் ஏதோ
நடக்கப்போவதாய் மிகையாய்க் கற்பனை செய்துக்கொண்டு பயந்து நடுங்குவது இன்று நேற்றா
நடக்கிறது?அவற்றையெல்லாம் பட்டியல்
போட்டால் “கனவில் வந்த பேய்கள்,கனவில் வந்த யானைகள், கனவில்
வந்த ..... இப்படி பல தலைப்புகளில் கதை எழுத நேரிடும்.
நினைவு தெரிந்த நாளிலிருந்து எத்தனை கனவுகள்
மாதக்கணக்கில் என்னை அடிமைப்படுத்தி வைத்திருந்தன?நான்
வசித்த தோட்டப்புறத்தில் என் வீட்டிலிருந்து முருகன் கோயிலுக்குச் செல்லும்
வழியில் எதிரெதிரே இருந்த இரண்டு வரிசை வீடுகளுக்கிடையே ஓர் எலுமிச்சை மரம் இருந்தது.முட்களோடு
கூடிய எலுமிச்சைக் காய்கள் காய்த்து தொங்கும்போது அந்த எலுமிச்சை மரம் மிக
அழகானதாய்த் தோன்றும் எனக்கு.மரத்தையும்,அந்த
எலுமிச்சைக் காய்களையும் ஆசையாய் வருடிப் பார்த்துவிட்டுதான் செல்வேன்.
அந்த எலுமிச்சை மரத்திலிருந்து ஒரு நாள் பாதி
தலை கொண்ட ஒரு பேய் இறங்கி வந்து தோட்டத்திலிருந்த மக்களைச் சாகடிப்பதாய்க் கனவு
கண்டதிலிருந்து அம்மரத்தைப் பார்த்தாலே பயந்து அலறி தலை தெறிக்க ஓடிய நாட்கள்
எண்ணிலடங்கா..ஓட்டப்பந்தயத்தில் கூட அவ்வளவு வேகமாய் ஓடியதில்லை.பின் ஒரு நாளில்
வெட்டி சாய்க்கப்பட்ட பின்பும் கூட அந்த எலுமிச்சை மரம் இருக்கும் இடம் வந்தால்
தலையை இடது புறம் திருப்பிக்கொண்டுதான் போவேன்.அத்தகைய அதி தைரியசாலியும்,கற்பனாவாதியுமான நான் சில நாட்களாய்த் தவறாது கனவில் வந்து
போகும் நரிகள் குறித்து பயப்படாமல் இருக்க முடியுமா?
இப்படி பயந்து கொண்டே இருந்த போதுதான் ஒருநாள்
துணிந்து நரிகளுடன் பேசிவிடலாம் என தீர்மானம் செய்துக்கொண்டு
படுத்திருந்தேன்.வெறுமனே வந்து போகாமல் தங்களின் வேலையைச் சீக்கிரம்
செய்துமுடித்துவிட்டு என்னைவிட்டு விலகும்படி சொல்லிவிட வேண்டும் என
நினைத்திருந்தேன்.
அந்தத் தீர்மானத்தோடு அன்று
நான் உறங்க சென்றேன்.போர்வையை இழுத்துப் போர்த்திக்கொண்டு அறை முழுக்க பார்வையைச்
சுழல விட்டேன்.பக்கத்தில் படுத்திருந்த தங்கையைப் பார்த்தேன்.மின்னல் வடிவில் உடலை
மடித்து ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவளை அமைதியாய்ப் பார்த்துக்கொண்டே
உறக்கத்திற்காய்க் காத்திருந்தேன்.மெத்தை விளம்பரத்தில் நடிப்பவள் போன்று முகத்தில்
பௌடர் கலையாமல் படுத்திருந்தாள்.இதே வேறொரு இரவாக இருந்திருந்தால் அவள்
தூங்கும்போது கைத்தொலைப்பேசியிலிருந்து எழும் வெளிச்சத்தை அவள் முகத்திற்கு நேராய்
பாய்ச்சி அவள் எந்த துலங்களையும் காட்டாமல் இருப்பதைக் கண்டு சிரித்துக்கொண்டு
இருந்திருப்பேன்.ஏனோ எல்லாரும் தூங்கிவிட்டபிறகு அவர்களின் முகத்தில் மெல்லிய
வெளிச்சத்தைப் பாய்ச்சி பார்ப்பதில் ஓர் இன்பம் எனக்கு.அது எனக்கு ஒருவித
மனநோயாகவே தோன்றவில்லை.சில செயல்களுக்குக் காரண காரியம் இருக்காதல்லவா?அந்த மாதிரிதான் இதுவும்.ஆனால் இன்று அப்படி எதுவும் செய்ய
தோன்றவில்லை.இதுநாள் வரை நரிகளின் மீதிருந்த பயத்தைச் சுருட்டி தலையணக்கடியில்
வைத்துவிட்டு அறை முழுக்க என் பார்வையைச் சுழலவிட்டபடி நரிகளுக்காக காத்திருக்க
ஆரம்பித்தேன்.
என் காத்திருப்பை வீணாக்காமல் வந்து சேர்ந்தன
அவை.வழக்கம்போல் சிரித்த முகத்துடன் என்னை நெருங்கி வந்து உறவாட எத்தனித்தன.என் பலத்தையெல்லாம்
ஒன்று திரட்டி முதல்முறையாக அவற்றை என்னிடமிருந்து தள்ளிவிட்டேன்.அதிர்ச்சியடைந்த
நரிகளுள் ஒன்று சிரித்த முகத்துடன் ஆனால் மிக ஆவேசமாக மீண்டும் என்னை ஸ்பரிசிக்க
வந்தது.அதற்கு ஈடு கொடுத்து போராட
தயாரானேன்.அதன் பின்னால் நின்றிருந்த நரி ஒன்று அதைத் தூண்டிவிட்டுக் கொண்டே
இருக்க,என் மீது பாய தயாரானது அது.என்
உடலில் ஒட்டிக்கிடந்த கொஞ்சநஞ்ச பயத்தையும் பிய்த்து எடுத்து காலில் போட்டு
மிதித்தேன்.பின் அதை நோக்கி சென்றேன்; மூர்க்கதனமாய்த்
தாக்க ஆரம்பித்தேன்.எதிர்பாராத அத்தாக்குதலால் நிலைகுலைந்து போன அது சற்றே தடுமாறி
போனது.எப்போதும் நரிகள் என்னை
ஆக்ரமிக்க தொடங்கும்போது நான் பேச்சற்று,செயலற்று
கிடப்பேன்.பொதுவாக கெட்டகனவு காணும் எல்லாரும் எதிர்கொள்வதைப் போன்று எனக்கும்
நான் எவ்வளவு கத்தினாலும் என் குரல் வெளியே யாருக்கும் கேட்காத மாதிரியே
இருக்கும்.
இன்று அப்படி இல்லாமல் நான் திடீரென
தாக்கியதும் அந்த நரி சற்று செயலிழந்து போனது.என் செயலைப் பார்த்து வியப்படைந்த
ஏனைய நரிகளின் புன்னகை முகமும் மறைந்து போய்,சரியாக
கணிக்கவியலாத உணர்ச்சியைத் தங்கள் முகத்தில் தேக்கியவாறு ஆச்சரியத்தில் உறைந்து
போயிருந்தன.நான் சற்றும் தாமதிக்கவில்லை.எனக்கு மிக அருகில் நின்றிருந்த அந்த
நரியைப் பிடித்து இழுத்தேன்.மிக அருகில் அதை உற்று நோக்கியபோது அதன் முகம் எனக்கு
மிக பரிச்சயமான முகமாக தோன்றியது.சிறு குழப்பத்தில் இருந்த எனக்கு அந்த நரி
முகத்தின் பின்னால் எனக்கு மிகப் பழக்கமான வேறு ஏதோ ஒரு முகம் மறைந்துகிடப்பதாய்
நொடிப்பொழுதில் மின்னல் வெட்டு ஒன்று தோன்றி மறைய,எதிர்பாராத
கணத்தில் அந்நரியின் மீது விழுந்து அதன் முகத்தில் கையை வைத்து அதன் முகத்தைக்
கிழிக்க ஆரம்பித்தேன்.என்னை அலைக்கழிக்க விடாமல் உடனே என் கையோடு வந்தது
நரிமுகம்..உள்ளே..உள்ளே....
அந்த நரிமுகத்தின் உள்ளே மறைந்திருந்தது நினைக்காத
நேரமில்லை என்றும்,ஏக்கத்தில் அழவைக்கிறாய்
என்றும் உருகி உருகி பழகிவிட்டு,காரணமின்றி
எதிரியாகிப் போன என் முன்னாள் முகநூல் நண்பன் ஒருவன்.அந்நரியை என் மீது பாய சொல்லி
தூண்டிவிட்டுக்கொண்டு இருந்த இன்னொரு நரியின் முகத்தைப் பிய்த்தபோது அவனுடைய
ஆருயிர்த்தோழி என சொல்லிக்கொண்டு இழிவான வேலையில் ஈடுபட்ட புழுவினும் அற்பமான
ஒருத்தி தன் ஆவேச முகத்தைக் காட்டினாள்.தொடர்ந்து ஆவேசமாய் அங்கிருந்து ஓடமுயன்ற
எல்லா நரிகளின் முகத்தையும் கிழித்தெறிந்தேன்.ஒவ்வொன்றின் பின்னாலும் எனக்கு மிகப்
பரிச்சயமான மனித முகங்கள். அவை உணர்த்திய உண்மை என்னை ஓங்கி அறைந்தது.இதுநாள்
வரையில் என்னைச் சுற்றி மனித ரூபத்தில் இருந்தவை பெரும்பாலும் நரிகளே.மனித முகத்தை
மறைக்குமளவுக்கு நரிகளின் தீய நயவஞ்சக குணத்தைப் பூசிக்கொண்ட அம்மனித முகங்கள் என்னிடம்
நன்றாகப் பழகியதாய் நடித்திருக்கின்றன.என் அன்புக்கு விலையில்லை என
நெகிழ்ந்துகொண்டே அவை எனக்குப் பின்னால் நிறைய சதிவேலைகளில் ஈடுபட்டிருக்கின்றன.அந்த
உண்மை என்னை இரணமாய்க் கொன்றது.
உண்மை வெளிபட்டுவிட்ட காரணத்தினாலோ என்னவோ
அதன்பிறகு என் கனவில் அந்நரிகள் வருவது நின்று போனது.இருந்தாலும்
திருப்தியடையவில்லை நான்.கனவில் வந்த நரிகளின் முகத்திரையை மட்டும்தானே
கிழித்திருக்கிறேன். ஆனால் என்னைச் சுற்றி இன்னும் எத்தனை எத்தனை நரிகளோ.எல்லாவற்றையும்
கண்டுபிடித்து அழிப்பது சாத்தியமானதல்லவே. அதற்காக நானும் நரியாகி அவற்றுடன் நட்பு
பாராட்டவும் முடியாது.நரிகள் என்னை அண்டாமல் இருக்க ஒரே வழி நான் சிங்கத்தின்
முகத்தோலைப் போர்த்திக்கொண்டு அலைவதுதான்.சிங்கமாய் மாறிவிட தீர்க்கமாய் முடிவு
செய்த பின் நிறைய சிங்கம் பற்றிய கதைகளைப் படிக்க ஆரம்பித்திருக்கிறேன்.இனி என் கனவுகளில்
தினந்தோறும் சிங்கங்கள் வர ஆரம்பித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லைதான்....
உதயகுமாரி
கிருஷ்ணன்,
பூச்சோங்..