Tuesday, November 22, 2011

சிறுகதை - பெண்மை

சிறுகதை


பெண்மை

       அந்தி சாயும் நேரம்.சாயங்கால பறவைகள் சத்தமாய் எதைப் பற்றியோ பேசிக்கொண்டிருந்தன.ஆள் அரவமற்ற அந்த ஒற்றையடிப் பாதையில் தனியாக நடந்து வந்து கொண்டிருந்தாள் அகல்யா.தனிமையும்,இளமையும் அவளுடைய பயத்தைக் கொஞ்சமாய்த் தூண்டிவிட நடையில் வேகத்தைக் கூட்டினாள்.
     வழக்கமாக அவளைத் தன் காரில் ஏற்றிக்கொண்டு போகும் தோழி அன்று வேலைக்கு வரவில்லை.பேருந்திற்கு காத்திருந்தால் தாமதமாகிவிடும் என்றுதான் குறுக்குப் பாதையைத் தேர்ந்தெடுத்திருந்தாள்.சில அவசர வேளைகளில் நேரத்தை மிச்சப்படுத்த எண்ணுவது இயல்புதானே? அதுவுமில்லாமல் சில நிமிடங்களில் என்ன ஆபத்து நிகழ்ந்து விட போகிறது என்ற குருட்டு நம்பிக்கை வேறு.எனவே,எதைப் பற்றியும் யோசிக்காமல் நடக்க ஆரம்பித்தாள் அவள்.ம்ழை மெல்லிய கீதம் இசைக்க ஆரம்பித்தது.கைப்பையிலிருந்த சிறுகுடையை விரித்து நடந்தாள்.
     கொஞ்ச தூரம் நடந்த பிறகு பேசாமல் காத்திருந்து பேருந்திலேயே வந்திருக்கலாமோ என்றொரு நெருடல் அவளை வருடியது.இருப்பினும் பாதி தூரத்தைக் கடந்தாகிவிட்டது.இன்னும் பத்து நிமிடம் நடந்தால் கடைத்தெரு வந்துவிடும் என்று தன்னை தைரியப்படுத்திக் கொண்டு நடந்தாள்.
   பின்னால் ஏதோ மோட்டார் சைக்கிள் வரும் சத்தம் கேட்டது.அவளுடைய இதயம் படபடவென அடித்துக் கொள்ள ஆரம்பித்தது.மனதிற்குள் திடீர் பயமொன்று உற்பத்தியானது.தோளில் மாட்டியிருந்த கைப்பையை இறுக்கமாகப் பற்றிக்கொண்டு வேகமாக நடக்க ஆரம்பித்தாள்.ஆனால் அவளை முந்தி கொண்டு அவள் முன்னால் வந்து நின்றது அந்த மோட்டார் சைக்கிள்.
    என்னா பொண்ணு, தனியா போற? துணைக்கு வரட்டுமா?” மோட்டார் சைக்கிளில் வந்த அந்த இந்திய இளைஞன் கிண்டலாய்க் கேட்டது காதில் விழுந்தும் ஒன்றும் விளங்காதமாதிரி நடக்க எத்தனித்தாள்.அவன் அவளைப் போகவிடாமல் குறுக்கே நின்றதோடு அவளுடைய கையைப் பிடித்து இழுத்தான்;இடுப்பைக் கிள்ளினான்.அவள் கையிலிருந்த குடை அவன் காலடியில் விழுந்தது.அவள் அவனோடு போராட முடியாமல் தோற்றுப் போனாள்;தன்னை விட்டு விடும்படி கெஞ்சினாள்.அவன் கேட்பதாய் இல்லை.அவள் அவனை இலேசாய் முறைத்தாள்.
   என்னடி முறைக்கிற? நீ என்னா ஐஸ்வர்யா ராயா?” அவன் நக்கலாய்க் கேட்டான்.ஏன்? ஐஸ்வர்யா ராய்க்கு மட்டும்தான் முறைப்பதற்கு உரிமை இருக்கிறதா?நடிகைகளுக்குக் கொடுக்கப்படும் மரியாதை கூட தன்னைப் போன்ற சராசரி பெண்களுக்குக் கிடைப்பதில்லையே என்று மனம் நொறுங்கி போனாள்.அவனிடம் கோபப்பட்டு பேசுவதில் பயனேதுமில்லை என்று புரிந்தது.மீண்டும் கெஞ்சினாள்.ஆனால் அது கேட்பதாக இல்லை.அவளுடைய கைகளை முரட்டுத்தனமாக பிடித்து இழுத்தது.அவளுடைய தோளில் கையை வைக்க முனைந்தது.
    அகல்யா நடுங்கிப் போனாள்.சுற்றும் முற்றும் பார்த்தாள்.கண்ணுக்குத் தெரிந்த வரையில் எந்த மனித நடமாட்டமும் இல்லை.அவனிடமிருந்து தப்புவது கடினமே என புரிந்து போனது.அவளுக்குப் பத்திரிக்கைகளில் படித்த சம்பவங்கள் யாவும் நினைவிற்கு வந்தன.திரைப்படங்களில் காட்டப்படுவதுபோன்று தன்னைக் கதற கதற கற்பழிக்க போகிறானா? கற்பழிக்க அவகாசம் இல்லையென்றாலும் குறைந்தபட்சம்..... அவளால் அதற்கு மேல் யோசிக்கமுடியவில்லை;பயத்தில் மெல்ல பின்னால் நகர்ந்தாள்.
   எங்க போற?என்கிட்ட இருந்து அவ்வளவு சுலபமா தப்பிச்சிடலாம்னு நினைக்கறியா?” கேலியாய்ச் சிரித்தான்.ஆனாலும் அவன் மோட்டார் சைக்கிளிலிருந்து இறங்காமலேயே பேசிக்கொண்டிருந்ததால் தப்பித்து ஓட சிறிதளவேனும் வழியுண்டா என யோசித்தவாறு பின்னால் பார்த்தாள்.அவனும் பார்த்தான்.மீண்டும் நகைத்தான்.
    அவள் கெஞ்சினாள்.
    உங்களுக்குக் கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லையா?உங்க தங்கச்சியை யாராவது இப்படி பண்ணினா உங்களால தாங்கிக்க முடியுமா?” தன் வார்த்தைகள் அவனைச் சற்றேனும் யோசிக்கவைக்காதா என எதிர்பார்த்தவள் ஏமாந்து போனாள்.
    இது எனக்கும்,உனக்கும் நடப்பது,எதுக்காக என் குடும்பத்தை இழுக்கற?” அவன் கோபமானான்.ஓ அவன் தங்கையைப் பற்றிப் பேசினால் அவனுக்குக் கோபம் வருகிறதோ?இவளும் ஒருவனுக்குத் தங்கைதானே?” ஆத்திரம் வந்தபோதும் அவளால் அதை வெளிப்படுத்த இயவில்லை.
  அதற்குள் அவன் மோட்டார் சைக்கிளை விட்டு இறங்கிவிட்டிருந்தான்.இதற்கு மேல் அந்த மிருகத்திடமிருந்து தப்புவது சாத்தியமில்லை என்று அவளுக்குத் தெளிவாகப் புரிந்து போனது.இனி அவளை யாருமே காப்பாற்ற முடியாது.சூடான மெழுகுவர்த்தியில் ஒட்டிக்கொண்ட ஈசலைப் போன்று தன் நிலையை எண்ணி துடித்துப்போனாள். முடிகளால் நிறைந்திருந்த அவனுடைய முரட்டுத்தனமான கை அவள் தோள்பட்டையிலிருந்து மெல்ல மெல்ல கீழே இறங்கியது.இறைவனை நினைத்துக்கொண்டு சத்தமாக கத்தியேவிட்டாள்.
    திடீரென நான்கைந்து மோட்டார் சைக்கிள்கள் வரும் சத்தம் கேட்டது.அது அவசர அவசரமாய் அவளை விட்டுவிட்டு தன்னுடைய மோட்டார் சைக்கிளைக் கிளப்பிக்கொண்டு புறப்பட்டது.அவளுக்கோ உடல் முழுவதும் வியர்த்து விட்டிருந்தது.நடுமுதுகு நனைந்து போயிருந்தது,மின்சார தாக்குதலுக்கு ஆட்பட்டதைப் போன்று உடல் திடீர் திடீரென தூக்கி வாரிப்போட்டது;மூச்சிறைத்தது;உடல் ஒரு மெல்லிய நடுக்கத்திற்கு ஆட்பட்டிருந்தது.அங்கு நிற்கும் ஒவ்வொரு கணமும் ஆபத்து போல் இருந்தது.சுயநினைவே இல்லாததுபோன்று ஓட்டமும்,நடையுமாய் எப்படியோ வீடு வந்து சேர்ந்தாள்.அதன் பின்பும் அவளுடைய நடுக்கம் குறையவில்லை.குளியலறைக் கதவைத் திறந்து உள்ளே நுழைந்தாள்.அவள் இயல்பிலேயே மிகவும் மென்மையான மனம் படைத்தவளாதலால் அதிகமாகவே பயந்து விட்டிருந்தாள்.கண்களிலிருந்து கண்ணீர் பொலபொலவென கொட்ட ஆரம்பித்திருந்தது.
  ஷவரை வேகமாக திறந்து வைத்து உடலை நனைத்தாள்.நெடுநேரம் குளித்தாள்.அவன் தொட்ட இடம் யாவும் அருவெறுப்பாய் இருந்தது.அவள் பயிற்றுப்பணியில் இருக்கும் ஒரு தாதி.ஆண் நோயாளிகளைத் தொட்டு பணிவிடை செய்து மருந்திட்டிருக்கிறாள்.அப்போது தோன்றாத ஓர் அருவெறுப்பு சற்று முன் அந்த மிருகம் தொட்டதால் தோன்றியிருந்தது.
  அவளால் இயல்பாக இருக்கவே முடியவில்லை.காரணமின்றி அழுகை அழுகையாக வந்தது.உடல் முழுவதும் கூசுவதுபோல் இருந்தது.அடிமனதில் பயம் இன்னும் இருந்து கொண்டே இருந்தது.உடல் இன்னமும் நடுங்கி கொண்டிருந்தது.  
      அந்த மோட்டார் சைக்கிள்கள் மட்டும் அந்நேரத்தில் வராமல் இருந்திருந்தால்……அவளால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. அவளுடைய எண்ணங்கள் தாறுமாறாய்ச் சிதறி ஓடின.
    அவன் சாதாரணமான தொட்டதே தன்னை இந்த அளவுக்குப் பாதித்திருக்கிறது என்றால் எத்தனையோ பெண்கள் கொடூரமான முறையில் கற்பழித்துக் கொல்லப்பட்டிருக்கிறார்களே? அந்தச் சமயத்தில் அவர்களுடைய மனநிலை,உணர்வுகள் எப்படி இருந்திருக்கும்? கென்னி ஓங் போன்றவர்களெல்லாம் எப்படி கதறித் துடித்திருப்பார்கள்?கடைசி நிமிடம் வரை யாராவது தங்களைக் காப்பாற்ற வருவார்களா என்று  எப்படியெல்லாம் எதிர்பார்த்து,வேண்டி தவித்திருப்பார்கள்?அவர்களுக்குள்ளும் கடைசி நம்பிக்கை,கடைசி எதிர்பார்ப்பு எல்லாம் சிறிதளவேனும் இருந்திருக்கும்தானே?பொய்யாய்ப் போன நம்பிக்கையோடு கணநேர வேதனைக்குப் பிறகுதானே உயிரை விட்டிருப்பார்கள் என்பதை அவளால் அப்போது உணர முடிந்தது.
     ஒருமணி நேரத்திற்கு மேல் தண்ணீரிலேயே நனைந்தவள் அம்மா அழைத்ததும் குளியலறையிலிருந்து வெளிப்பட்டாள்.
    ஏற்கனவே மழைல நனைஞ்சிட்டு,இவ்ளோ நேரம் குளிச்சா என்னவாகறது?” அம்மாவின் கரிசனம் பொங்கும் குரல் அவளை அழவைத்துவிடும் போலிருந்தது.இவளுக்கு நடந்ததை அறிந்தால் பாவம் அம்மா எப்படி துடித்துப் போவாள்?அதனால் அம்மா சந்தேகப்படாமல் இருப்பதற்காக சாப்பிட அமர்ந்தாள்.ஒரு வாய் சோறு இறங்கியதும் அவள் கண்களிலிருந்து கண்ணீர் பொலபொலவென கொட்ட ஆரம்பித்தது.எப்படியோ சமாளித்து சாப்பிட்டு எழுந்தவள் உடனே படுக்கையறைக்குச் சென்றாள்.
    ஆனால் அவளால் உறங்கவே முடியவில்லை.மீண்டும் மீண்டும் அந்தச் சம்பவம் அவள் நினைவில் வந்து கொண்டே இருந்தது.என்ன கேட்டான்? நீ என்ன ஐஸ்வர்யா ராயா?” என்றல்லவா கேட்டான்.ஒரு வேளை ஐஸ்வர்யா ராயாக இருந்திருந்தால் என்ன செய்திருப்பானாம்?காலில் விழுந்து வணங்கியிருப்பானோ? இப்போது அவளுடைய பயம் கோபமாக மாறிப்போயிருந்தது, காரணமின்றி ஐஸ்வர்யா ராய் மீது கோபம் வந்தது. ஆண் வர்க்கத்தின்மேலும் அளவிலா கோபம் வந்தது.
     என்னதான் பெண்களுக்கான சம உரிமை குறித்த சர்ச்சைகள் எழுந்தாலும் ஒரு சில ஆண்களின் கண்களுக்குப் பெண் என்பவள் வெறும் காமப்பொருளாகதானே தெரிகிறாள்?இது மாதிரி வக்கிரமான ஆண்கள் எப்படி பெண்களுக்கான சமஉரிமையைப் பற்றி நினைத்துப் பார்ப்பார்கள்?ஒரு கவிஞர் தன் கவிதையில் காய்கறிகளில் பாதியும்,பெண்களில் பாதியும் சமையலறையிலேயே சமாதியாகிவிடுவதாக குறிப்பிட்டுள்ளதைப் போன்று இந்த வக்கிரக்காரர்களின் சிந்தையில் பெண் என்பவள் படுக்கையறையிலேயே சமாதியாகப் போகிறவள்தானோ?
     பெண்ணாசையை அடக்க முடியவில்லையென்றால் திருமணம் செய்து கொள்ள வேண்டியதுதானே? இல்லையென்றால் பணத்திற்காக மோசம் போகும் பெண்களிடம் போகவேண்டியதுதானே?தெருவில் போகும் பெண்களை ஏன் சீண்ட வேண்டும்?” அவள் எதையெதையோ சிந்தித்தவாறு புலம்பி கொண்டிருந்தாள்.கவலை,அருவெறுப்பு,பயம், கோபம்,ஆக்ரோஷம் என பல்வேறு உணர்ச்சிகளின் பரிமாணங்களில் சிக்கிச் சுழன்று கொண்டிருந்தாள்.
  மனதைரியமுள்ள பெண்களாக இருந்தால் நடந்ததையெல்லாம் எப்போதோ மறந்துவிட்டு பெரிதாக எதுவும் நடக்காததை எண்ணி இயல்பு நிலைக்குத் திரும்பியிருப்பார்கள்.ஆனால் எல்லா பெண்களுடைய மனநிலையும் ஒரே மாதிரி இராதே?மிகவும் இளகிய மனமும்,கூச்ச சுபாவமும் படைத்த அகல்யாவை அந்தச் சம்பவம் மனதளவில் பெரிதும் பாதித்துவிட்டிருந்தது.
    அகல்யா கோபத்தின் விளிம்பில் இருந்தாள்.நடந்து முடிந்ததை நினைத்து அழாமலிருப்பதற்கு அவள் தன்னுடைய கோபத்தைக் தக்க வைத்துக்கொள்ள வேண்டியிருந்தது.அவன் கையில் கிடைத்தால் அவனைக் கண்டந்துண்டமாக வெட்டி கதற கதற சாகடிக்க வேண்டும்போல் இருந்தது.அவனிடம் பேசுவதாய் நினைத்துக்கொண்டு கோபத்தில் ஏதேதோ அரற்றினாள்.
    விடிய விடிய அவள் உறங்கவே இல்லை.புலம்பி புலம்பி காய்ச்சல் வேறு.நல்லவேளையாக அன்று மதிய வேலை என்பதால் சற்று ஓய்வெடுத்துவிட்டுக் கிளம்பினாள்.
   அகல்யா, இங்க வாம்மா,” தலைமை தாதி அழைக்கவே அவரை நெருங்கினாள்.
   ஏழாம் நம்பர் பேஷண்டுக்கு நேத்து சாயந்திரம் நடந்த ஒரு விபத்துல ஒரு கையும் ஒரு காலும் முறிஞ்சு போச்சி,இன்னைக்கு அவரைதான் நாம் கவனிக்கனும்,நீ வார்டுக்குப் போ,நான் வாஷ்ரூம் போயிட்டு வர்றேன்
    அகல்யா ஏழாம் எண் அறைக்குள் நுழைந்தாள்;மறுகணம் அதிர்ந்தாள்.அங்கே படுத்திருந்தவன் வேறு யாருமல்ல,முன்தினம் அவளிடம் சில்மிஷம் செய்தவன்தான்.

     மெல்ல அவனை நெருங்கினாள் அகல்யா …..


                                                 உதயகுமாரி கிருஷ்ணன்.
                                                         பூச்சோங்

Saturday, November 12, 2011


உன்னால்தானே நானே வாழ்கிறேன் - அத்தியாயம் 4


   புகழேந்தி தூரத்தில் வந்து கொண்டிருந்ததைப் பார்த்த பூரணி சட்டென்று பின்னால் திரும்பி நடந்தாள்.சமீப காலமாக அவள் இவ்வாறு நடந்து கொள்வது அவனுக்குப் புதிராகவே இருந்தது.அவளுடைய அமைதியான முகத்திலும் ஏதோ ஒரு வாட்டமோ என்னவோ அவனுக்கே சரியாக தெரியவில்லை.
    பொதுவாக புகழ் பூங்குழலியைத் தவிர வேறு எந்தப் பெண்ணைப் பற்றியும் இந்த அளவுக்கு சிந்தித்ததில்லை.அவர்களாக பேசினால் பேசுவான்,இல்லாவிட்டால் அமைதியாக இருந்துவிடுவான்.ஆனால் ஏனோ பூரணியை அவனுக்குப் பிடித்திருந்தது.முதல் நாள் பள்ளிக்கு வரும் குழந்தைகளின் முகத்தைப் போன்று  அவளுடைய முகம் பீதியுடன் இருந்தது.அவளுடைய தடுமாற்றம் அவனுக்குப் பிடித்திருந்தது.தவறுதலாக எதையாவது செய்துவிட்டு அவனிடம்தான் வந்து நிற்பாள்.ஆரம்பத்தில் அவன் அவளிடம் பேசியதில்லை.கொஞ்சம் வயதான ஆசிரியர்களிடம் எல்லாம் நன்றாக பேசுபவன் தன்னிடம் அறவே பேசுவதில்லை என்று அவள் புலம்பியதை அறிந்தபோது அவனுக்குச் சிரிப்புதான் வந்தது.எத்தனையோ முறை அவன் மற்ற ஆசிரியைகளிடம் பேசும்போது அவளும் அருகில் இருந்திருக்கிறாள்.ஏதாவது கேட்கலாமா என்று நினைத்தால் அவள் அவன் பக்கம் திரும்பவே மாட்டாள்.தானாக போய்ப் பேசினால் தப்பாக எண்ணிவிடுவாளோ என்றுதான் அவனும் பேசாமல் இருந்தான்.மேலும் அவன் அவ்வளவாக பெண்களை நெருங்கியதில்லை.
     ஆனால் நாளடைவில் அவளாகவே அவனுடன் பேசத் தொடங்கிவிட்டாள்.அவளுடைய பேச்சு குழந்தைத் தனமாக இருப்பதால் அவனுக்கு அவள் பேசுவதைக் கேட்க பிடிக்கும்.ஒரு தடவை அவன் புகைப்பிடித்த ஆறாம் ஆண்டு சிறுவன் ஒருவனை பிரம்பால் அடித்தபோது அவள் பயந்து போய்விட்டாள்.இரண்டு நாள் அவன் பக்கமே வரவே பயப்பட்டாள்.ஆனால் அவளுடைய ஒன்றாம் ஆண்டு மாணவர்கள் குறும்பு செய்தால் புகழ் சாரை கூட்டிட்டு வந்து அடிக்க சொல்லட்டா?” என்று அவனுடைய பெயரைப் பயன்படுத்திதான் பயமுறுத்துவாள்.அவனுக்கு அது பிடித்தது.
    ஒன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு அவள்தான் இசைக்கல்வி போதிப்பவள்.ஒரு நாள் குழந்தைகளுக்குப் பாடல் சொல்லிக்கொடுத்தவள் அவனைப் பார்த்ததும் கூச்சப்பட்டு பாடுவதை நிறுத்திவிட்டாள்.அதிலிருந்து இசைக்கல்வியின்போது எங்கே பக்கத்து வகுப்பிலிருக்கும் அவன் காதில் விழுந்துவிடுமோ என்று கதவையெல்லாம் சாத்திவிட்டு மெதுவான குரலில் பாடுவாள்.ஆனால் அவன் அவளுக்குத் தெரியாமல் கதவருகில் நின்று அவள் பாடுவதைக் கேட்டு இரசித்துவிட்டுதான் வருவான்.
    அணிலே அணிலே ஓடி வா,” என்று குழந்தைக்குரலில் அவள் பாடுவது அவனுக்குப் பிடித்தது.அவள் அவனுடைய ஆறாம் ஆண்டு மாணவர்களுக்கு வட்டாரக்கல்வி போதித்தாள்.மாணவர்களைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறிப்போவாள்.புது ஆசிரியை அதுவும் இளம் ஆசிரியை என்னும்போது மாணவர்கள் குறும்பு செய்வது சகஜம்தானே? அது மாதிரியான சமயங்களில் அவள் படும் அவஸ்தைகளை அவன் ரசிக்கவே செய்தான்.
   ஒரு முறை அவனுக்குப் பயங்கரமான தலைவலி.விசயம் அறிந்ததும் உடனே அவனுக்கு சுடசுட காப்பி கலக்கி கொண்டு வந்து இரண்டு சோலிடோல் கலந்து கொடுத்தாள்.அதன்பிறகு அவன் குணமாகும்வரை வந்து வந்து பார்த்துக்கொண்டே இருந்தாள்.அப்போதுதான் அவனுக்கு அவளை அதிகம் பிடித்தது.
      தான் பூரணியை இரசிப்பது பூங்குழலிக்குத் தெரிந்தால் என்ன ஆகும் என்று அவன் நினைக்காமல் இல்லை.”ஏமாற்றுக்காரா, என்னிடம் வாக்கு கொடுத்துவிட்டு எப்படி உன்னால் பூரணியை நேசிக்க முடிந்தது? துரோகி்,” என்று சண்டை போடுவாளா? இல்லை ஒரு வேளை கோபித்துக் கொண்டு பேசாமல் போய்விடுவாளா? எது நடந்தாலும் சரி,அவளிடம் இதற்கு மேல் பூரணியைப் பற்றி மறைக்கக் கூடாது என்று முடிவெடுத்தான்.இன்னும் இரண்டு வாரத்திற்கு பூங்குழலியைப் பார்க்க முடியாது.தமிழ் பயில்பணிக்காக சிப்பம் தயாரிக்க வேண்டுமாம்,தலை சுற்றி போகிறது என்று புலம்பிக்கொண்டிருந்தாள்.


     புகழிடம் சொன்னது போன்று பூங்குழலி சிப்பம் செய்து முடிக்கும்வரை வீட்டுக்குப் போக வேண்டாம் என நினைத்திருந்தாள்.விடிய விடிய உட்கார்ந்து செய்தாலும் அவளால் முறையாக செய்ய முடியவில்லை.ஏற்கனவே கடந்த வருடம் அவளுடைய சீனியர்களும் இப்படிதான் விடிய விடிய தூங்காமல் அவதிப்பட்டார்கள் சிப்பம் செய்வதற்காக.பூங்குழலியும் அவளுடைய தோழிகளும் ஒன்றாக அமர்ந்துதான் பயில்பணிகளைச் செய்வார்கள்.அப்போதுதான் தூக்கம் வராது என்பது அவர்களுடைய எண்ணம்.
   ஏய், நான் நாளைக்கு செய்யப் போறேன்லா,என் மூளை இப்ப அவுட் ஓப் செர்வீஸ்ல இருக்கு,” கீதா கணினிக்கு ஓய்வு கொடுத்துவிட்டு எழுந்தாள்.
   சரி. நான் எனக்கு மைலோ கலக்கப் போறேன்,யார் யாருக்கு வேணும்?” மற்றவர்கள் கையை உயர்த்தும் முன் அவளே தொடர்ந்து சொன்னாள்.
   அப்படி கேப்பேன்னு நெனச்சீங்களா? சோரி,நான் தூங்கப் போறேன், கொட்டாவி விட்டபடி அறையை விட்டு வெளியேறிய அவளைக் கடுப்பாய் பார்த்தார்கள் மற்ற நான்கு பெண்களும்.
   அடுத்த அரைமணி நேரத்தில் பூங்குழலியைத் தவிர மற்ற எல்லாரும் தூங்க போய்விட்டார்கள்.பூங்குழலி எப்படியாவது முதல் அலகையாவது முடித்துவிட வேண்டும் என்று தூக்கத்தைக் கட்டுப்படுத்திக்கொண்டு டைப் செய்ய ஆரம்பித்தாள்.சற்று நேரத்தில் கீதா அவளைத் தேடி வந்தாள்.அவள் முகம் கலவரமாய் இருந்தது.
   பூங்குழலி, நம்ம கேரலினோட அம்மா…..” அதற்கு மேல் அவளால் பேச முடியாமல் அழ ஆரம்பித்துவிட்டாள்.
   பூங்குழலியால் ஓரளவிற்கு என்ன நடந்திருக்கும் என்று ஊகிக்க முடிந்தது.உடனே கீதாவைப் பின்தொடர்ந்து கேரலினுடைய அறைக்கு ஓடினாள்.அழுதுக்கொண்டே இருந்த கேரலின் பூங்குழலியைப் பார்த்ததும் இன்னும் வேகமாக அழ ஆரம்பித்துவிட்டாள்.
   எப்போது நடந்தது?” பூங்குழலி சைகையாலே கேட்க சரளாவும் சைகையாலே பதினோரு மணி என்று சொன்னாள்.பூங்குழலியின் நெஞ்சம் படபடவென அடித்துக் கொண்டது.ஏனோ அவளுக்கு உடனே தன் அம்மாவைப் பார்க்க வேண்டும் போலிருந்தது.கேரலின் கதறி கதறி அழுதுக்கொண்டிருந்தாள்.சோனியா அவர்களுடைய டியூட்டரிடம் விசயத்தைச் சொல்லிவிட்டு வார்டனை அழைத்து வரப் போயிருந்தாள்.
   நான் இப்பவே எங்கம்மாவைப் பாக்கப் போகனும்,” கேரலினுக்கு எப்படி ஆறுதல் சொல்வதென்று அந்தப் பெண்களுக்குத் தெரியவில்லை.அருகிலிருந்தாலும் பரவாயில்லை.அவளுடைய வீடு மலாக்காவில் இருந்தது.
   வார்டன் வந்துவிட்டிருந்தார்.நள்ளிரவு பன்னிரண்டு மணியாகிவிட்டதால் தலைமை வார்டனிடம் கேட்டுதான் முடிவெடுக்க வேண்டும் என்று சொல்லி அவளை தலைமை வார்டனிடம் அழைத்துப் போனார்.சோனியாவும், பூங்குழலியும் அவளுடன் போனார்கள்.தலைமை வார்டனைக் கண்டு பேசி எக்ஸ்பிரஸ்நிலையத்திற்குப் போய் விசாரித்தபோது நள்ளிரவு ஒரு மணியாகியிருந்தது.மலாக்காவிற்கு அந்நேரத்தில் பேருந்து இல்லை என்று சொல்லிவிட்டார்கள்.கேரலின் அழுது அழுது மயக்கமாகி விட்டிருந்தாள்.அவளைத் தன் அறையில் படுக்க வைத்துக் கொண்டாள் பூங்குழலி.மற்ற பெண்களும் அங்குதான் இருந்தார்கள்.விடிய விடிய தூங்காமல் அழுதுக்கொண்டே இருந்தாள் கேரலின்.அவர்களுடைய டியூட்டர் அவளை மறுநாள் காலை ஆறு மணிக்கெல்லாம் கோலாலம்பூருக்கு விமானத்தில் ஏற்றிவிடுவதாக சொல்லியிருந்தார்.
    அவள் கோலாலம்பூரை எட்டு மணிக்கு அடைந்தாலும் வீடு போய்ச் சேர எப்படியும் பத்து மணிக்கு மேல் ஆகிவிடும்.சில மணி நேரங்களுக்கு மட்டும்தானே அவளுடைய ஆசை அம்மாவின் முகத்தைப் பார்க்க முடியும்? அதை நினைத்தபோது இன்னும் வருத்தமாக இருந்தது மற்ற பெண்களுக்கு.
   வீட்டை விட்டு கல்வியின் காரணமாகவோ, பணியின் காரணமாகவோ நினைத்த நேரத்தில் போக முடியாத அளவுக்குத் தூரமாக இருக்கும்போது இம்மாதிரியான சம்பவங்கள் நிகழ்வது எவ்வளவு வேதனையான விசயம்? இறந்து போன அம்மாவைப் பார்க்க வழியின்றி தோழி படும் வேதனை அவர்களையும் தாக்கியிருந்தது.


                                             வேதனை தொடரும் ……..

Wednesday, July 27, 2011

தொடர்கதை :உன்னால்தானே நானே வாழ்கிறேன் - அத்தியாயம் 3

உன்னால்தானே நானே வாழ்கிறேன் - அத்தியாயம் 3
         
    கெண்டீனில் முதலாம் பருவ மாணவர்களே அதிகம் இருந்தார்கள்.சுவைபானம் வாங்குவதற்காக நீண்ட வரிசையில் நிற்க வேண்டியதாயிற்று பூங்குழலியும் அவளுடைய தோழிகளும்.
      சாப்பாடு வாங்கற எடத்துலதான் தொல்லைன்னா இங்கயுமா? இனிமே சீனியர்களெல்லாம் சாப்பாடு வாங்கிய பிறகுதான் ஜுனியர்கள் வாங்கனும்னு சட்டம் கொண்டு வரனும்,” அரைமணி நேரமாய் காத்திருந்த கடுப்பில் கீதா புலம்பினாள்.
      ஏ மதி,” யாரோ கத்தினார்கள்.அந்தப் பெயரைக் கேட்டதும் அவளுக்கு எரிச்சலாக இருந்தது.அப்படி என்னதான் இருக்கிறதோ அந்த மதிவதனனிடம்? எல்லா பெண்களும் உயிரை விடும் அளவிற்குகீதா எஸ்கோவாக இருந்ததால் ஜுனியர் மாணவர்களுக்கான அறிமுக வாரத்தில் அந்த மதிவதனனைப் பற்றி புகழ்ந்து தள்ளினாள்.குழு நடவடிக்கைகளில் மிகவும் துடிப்பாக ஈடுபடுகிறhனாம்.அதன்பிறகு சாரதா மூலம் அடிக்கடி மதிவதனனைப் பற்றிய பேச்சு எழுந்தது.அவளுடைய வகுப்புத் தலைவன் அவன்தானாம்.வகுப்பை அழகாக கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதோடு பல ஆக்கரமான திட்டங்களைத் திட்டமிட்டு வைத்து விரிவுரைஞர்களிடம் நல்ல பெயரை வாங்கிவிட்டானாம்.
     பொதுவாக தமிழ் விரிவுரைஞர்களிடம் வந்த புதிதிலேயே நன்பெயரை வாங்குவது சாதாரண விசயமல்ல.அவனால் மட்டும் எப்படி அது சாத்தியமானது என்று ஆரம்பத்தில் அவளுக்கும் அவன் மீது வியப்பு இருந்ததுதான்.ஆனால் பிறகு அவளுடைய வியப்பு கோபமாக மாறிப்போனது.
   இறுதி வருடமென்பதால் பூங்குழலியும் அவளுடைய தோழிகளும் பினாங்கு தண்ணீர் மலை கோயிலுக்குத் தைப்பூசத்திற்குப் போய்விட்டு மறுநாள் இரதம் பார்க்க சுங்கைப் பட்டாணி முருகன் ஆலயத்திற்குப் போனார்கள்.அவனும் அவன் நண்பர்களோடு வந்திருந்தான்.கீதாதான் அவனை எல்லாருக்கும் அறிமுகப்படுத்தி வைத்தாள்.ரத ஊர்வலத்தின்போது அவன் ஆடியது அவளுக்குப் பிடிக்கவில்லை.ஆசிரியராக இருந்துகொண்டு அவன் இம்மாதிரி நடந்து கொண்டது அவளுக்கு வெறுப்பை அளித்தது.அவள் முறைத்துப் பார்த்ததும் ஆடுவதை நிறுத்திவிட்டான்.அவளுக்கு முன்னால் தன் நண்பர்களோடு விரைவாக நடந்து போனவன் அங்கு அறிவிப்பு செய்து கொண்டிருந்தவர்களிடம் என்னமோ சொல்லிவிட்டுப்போய்விட்டான்.
    அடுத்து எம்.பி.சாவிலிருந்து வருங்கால ஆசிரியர்கள் பூங்குழலி எண்ட் கம்பெனி  வந்துகிட்டிருக்காங்க, திடீரென அந்த அறிவிப்பு எழவும் எல்லாரும் அவர்களையே பார்க்க பூங்குழலிக்கு வந்ததே கோபம்.அவளுக்குத் தெரியும் அது மதிவதனனுடைய வேலைதான் என்று.ஏனென்றால் சற்று முன்பு அந்த வழியே வந்தபோதுதான் அவனுடைய நண்பன் காணாமல் போய்விட,”சரவணா, எங்கடா இருக்க? உன்னோட மூனு பிள்ளைங்களும் அப்பாவைக் காணோம்னு அழுதுக்கிட்டு இருக்காங்கடா,” என்று குறும்பாய் அறிவிப்பு செய்தான் மதிவதனன்.
    அவனுக்கு நல்ல நேரம் போலும்.அவள் கண்ணில் படாமல் இருந்தான்.மேலும் அவளுடைய கல்லூரியில் எழுத்தாளர் சங்கத்தின் டிசம்பர் மாதச் சிறுகதைத் திறனாய்வு. அதைத்தொடர்ந்து ஷலங்காவியில் பெண்களுக்கான சாரணியர் இயக்கத்தின் தலைமைத்துவ பயிற்சி, பயில்பணிகள் என்று அவள் மிகவும் பரபரப்பாக இருந்ததால் அவனைப் பார்க்கவில்லை.
    பூங்குழலி, இந்தா கேரட் ஜுஸ் கீதா கொடுத்த கேரட் ஜுஸை வாங்கி கொண்டு காலியாய் இருந்த ஒரு மேசையில் அமர்ந்தாள்.
    பூங்குழலி, இன்னைக்கு அஞ்சு மணிக்கே டேவானுக்கு வந்திடுங்க,பேட்மிண்டன் ப்ராக்ட்டீஸ் பண்ணனும், அவளுடைய வகுப்புத் தோழி பிரேமா அவளிடம் சொல்லிவிட்டுப் போனாள்.
   அங்கு மதிவதனனைச் சந்திக்க நேரிடும் என்று முன்னமே தெரிந்திருந்தால் அவள் நிச்சயமாக போயிருக்க மாட்டாள்தான்.அவள் மாலையில் புறப்பாட நடவடிக்கைகள் இல்லாத சமயங்களில் பொதுவாக கூடைப்பந்து விளையாடப் போய்விட்டு ஆறு மணிக்கு மேல்தான் பூப்பந்து விளையாடப்போவாள்.பிரேமா காத்திருப்பாளே என்று ஐந்து மணிக்கெல்லாம் போய்விட்டாள்.
   அவள் அங்கு போனபோது ஜுனியர் மாணவர்கள் மட்டும்தான் விளையாடிக் கொண்டிருந்தார்கள்.பிரேமா இன்னும் வரவில்லை.பூங்குழலி ஒரு நாற்காலியை எடுத்துப் போட்டுக்கொண்டு அவர்கள் விளையாடுவதைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.அப்போதுதான் மதிவதனன் வந்து சேர்ந்தான்.
   என்கூட ஒரு கேம் விளையாடறீங்களா?” அவன் கேட்டதும் அவசரமாய் மறுத்தாள்.
   உங்களுக்குப் பயம்,ஜுனியர் மாணவன்கிட்ட தோத்துப் போயிட்டா என்ன ஆவறதுன்னு அப்படிதானே?”
    அவன் சொன்னதைக் கேட்டு அவளுக்கு இன்னும் ஆத்திரம்தான் வந்தது.அவளாவது தோற்றுப் போவதாவது? கல்லூரிகளுக்கான காகோம் போட்டி விளையாட்டாளர் அவள்.அவளைப் பார்த்து என்ன கேள்வி கேட்டுவிட்டான்.அவனுக்குப் பாடம் கற்பிக்க வேண்டுமாவது அவனுடன் விளையாட வேண்டும் என்று கூந்தலை இறுக கட்டிக்கொண்டு அவனுடன் விளையாடத் தொடங்கினாள்.இரண்டு ஆட்டங்களில் அவள்தான் வெற்றி பெற்றhள்.அதன்பிறகு பிரேமா வந்துவிட்டாள்.அவளை அவனுடன் விளையாட சொல்லிவிட்டு அவள் ஓய்வெடுக்க வந்துவிட்டாள்.கூந்தலை அவிழ்த்து முடியைக் கோதிக்கொண்டிருந்த வேளையில் மதிவதனனும் அவள் அருகே வந்து அமர்ந்தான்.
    அவனை அவ்வளவு நெருக்கத்தில் பார்க்க அவளுக்கு சங்கடமாக இருந்தது.ஆனால் அதையும் மீறி எதுவோ ஒன்று அவனைப் பார்க்கத் தூண்டவே பார்த்தாள்.எப்படிதான் இவனுக்குக் குழந்தை முகம் வந்ததோ? ஒரு சாயலில் பார்க்கும்போது சிறுவயதில் அவளுக்கு மிகவும் பிடித்தமான சல்மான்கானின் ஆரம்பகால தோற்றத்தைப் பெற்றிருந்தான்.பச்சை நரம்புகள் தெரியும்படியான நிறம்.பெரிய பெரிய கண்கள்.செக்கச் செவேலென்ற உதடுகளில் சதா புன்னகை.சிரிக்கும்போது மோவாயின் கீழ் விழுந்த குழி அவனைக் குறும்புக்காரனாய்க் காட்டியது.ஆறடி உயரம் இருப்பான் போலும்.ஆனால் எடை கொஞ்சம் கம்மிதான்.
    கேள்விப்பட்டேன்,நேத்து ராத்திரி ரூம்ல பயங்கர ஆட்டமாம்? மதிவதனன் அப்படி கேட்டபோது அவளுக்கு ஆச்சரியமாகதான் இருந்தது.இவனுக்கு எப்படி தெரியும் என்று.சாரதாதான் சொன்னாளாம்.அவனே சொன்னான்.
   அன்னைக்குத் திருட்டுத்தனமா ரும்ல கரண்ட் கேத்தல்ல ரெடிமேட் பாயாசம் கூட காச்சனீங்களாம்,அப்புறம்…. அவள் விடுதி அறையில் செய்யும் சேட்டைகளையெல்லாம் அவன் ஒவ்வொன்றாக சொல்லிக்கொண்டே போக அவளுக்கு சாரதாவின் மீது பயங்கர கோபம்.பாவி மகள். இவனிடம் எல்லாவற்றையும் சொல்லி வைத்திருக்கிறாள்.பயந்த சுபாவம் கொண்ட பெண்ணாயிற்றே என்று மிரட்டி வைக்காமல் விட்டுவைத்தது எவ்வளவு பெரிய தப்பு என்று யோசித்தாள்.
    மதிவதன் விளையாட போனபிறகு பிரேமாவிடம் சொல்லிவிட்டு நேராக நீலாவின் அறைக்குதான் போனாள்.தன்னுடைய தோழிகளுக்கெல்லாம் குறுந்தகவல் அனுப்பிவிட்டுத்தான் போனாள்.அவர்கள் எல்லாரும் நீலாவின் அறைக்கு வந்தபோது சாரதா பேந்த பேந்த விழித்தபடி உட்கார்ந்திருந்தாள்.
    இப்படி பாவமா பார்த்தா விட்டுடுவோமா? நமக்குள்ள நடந்த விசயத்தையெல்லாம் வெளியில போயி அதுவும் ஓர் ஆண்கிட்ட சொல்லியிருக்க,உனக்கு தண்டனை கொடுக்காம எப்படி விடறது?” அவள் என்ன செய்யப் போகிறாளோ. என்று பயந்தபடி நின்றிருந்தாள் சாரதா.
   கேட்டுக்கோ, இன்னைக்கு ராத்திரி அண்ட்டிக்கிட்ட எங்க எல்லாருக்கும் நீதான் சாப்பாடு வாங்கிட்டு வரனும்.எனக்கும் நாசி லெமாவும், ரெண்டு வடையும்.இவங்களுக்கெல்லாம் என்ன வேணுமோ கேட்டுட்டு வாங்கிட்டு வா.அப்புறம் ராத்திரிக்கு நீதான் எங்க எல்லாருக்கும் தண்ணி கலக்கி தரனும்.நாளைக்கு சாயந்திரம் நாங்க ஓலாராகா முடிஞ்சி வரும்போது மரத்துல இருக்கற ஜம்புக்காயெல்லாம் பறிச்சி, கழுவி, வெட்டி உப்பு போட்டு தயாரா இருக்கனும்,சரியா?” பூங்குழலி அதட்டலாக கேட்க பயந்தபடி தலையசைத்தாள் சாரதா.




                                                     தொடரும் ……………