Sunday, December 29, 2013

வளையல் பெண்ணின் உதயகீதங்கள் : கீதம் 23 : கொடியிலே மல்லிகைப்பூ (1986)





KING OF KINGS’ இளையராஜா ஐயாவின் இசைநிகழ்ச்சி குறித்த விளம்பரங்கள் மின்னல் பண்பலையில் ஒலிக்கும்போதெல்லாம் அவரின் மேன்மையை உணரமுடிகிறது.அவ்வளவு சிறப்புக்குரிய இசைமாமேதையின் காலத்தில் நானும் வாழ்கிறேன் என்பதில் எனக்கு அதிக பெருமையே.

  எத்தனை எத்தனை பாடல்களை அவர் வழங்கியிருக்கிறார்.சந்தோசமாக இருந்தாலும் சரி,சோகமாக இருந்தாலும் சரி அவரது பாடல்களைக் கேட்டால் நமக்காக எழுதப்பட்டதைப் போன்று உணரமுடிகிறது.

  பாடலாசிரியர்கள் அந்தப் பாடல்களைத் தங்கள் சுகமான கற்பனையில் அழகான வரிகளில் புனைந்தாலும் அந்தப் பாடல்கள் நம் மனதில் ஆழப்பதிந்து போவதற்கு முக்கிய காரணம் இசைதான்.

     என் அன்னையின் கருவில் இருக்கும்போதே அவரது பாடல்களைக் கேட்டு வளர்ந்தவள் நான்.பாடல்கள் என்பதைத் தாண்டி அவரது இசையை மட்டுமே கேட்டுக்கொண்டிருப்பது கூட சுகமானதாய் தோன்றுகிறது எனக்கு.அவரது இசையைக் கேட்டால் அழ தோன்றுகிறது;சிரிக்க தோன்றுகிறது;எண்ணிலங்கா கற்பனைகளை என்னுள் வாரி இறைக்கிறது.எனக்குப் பிடித்த காலத்திற்கு எனக்குப் பிடித்தமானவர்களை நினைத்துக்கொண்டு பயணிக்கமுடிகிறது.சில நேரங்களில் எதுவும் செய்யாமல் வெறுமனே சுவரில் தலைசாய்த்து மணிக்கணக்கில் மௌனத்தில் கரையவைக்கிறது.அது எனக்கும் இசைஞானியின் இசைக்குமான உறவு.அந்த உறவுதான் இன்று இந்த இசைத்தொடரை எழுதும் அளவுக்குக் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறது.

     இந்த உணர்வு நிச்சயம் எனக்கு மட்டுமே சொந்தமாக இருக்காது.பலருக்கும் அவரது பாடல்கள் தாக்கத்தைக் கொடுத்திருக்கலாம்.சில பாடல்கள் சோகமாக இல்லாமல் போனாலும் நம் கண்களில் கண்ணீரை வரவழைக்கும் அதற்குக் காரணம் அப்படத்தின் கதையமைப்பும்,கதாபாத்திரங்களும்,அப்பாடல் ஒலிப்பதற்கு முன்னும் பின்னும் உள்ள சூழலும்தான்.அதனால்தான் என் தொடரில் பாடல்களைப் பற்றி எழுதும்போது படத்தின் கதையைப் பற்றியும் எழுதுகிறேன்.

   இந்த வாரத்தில் இடம்பெறப்போகும் பாடலும் அந்த வகையைச் சேர்ந்ததுதான்.இப்பாடல் காதலர்களின் ஏக்கத்தை வெளிப்படுத்தும் பாடல்தான் என்றாலும் கேட்கும்போது ஏனோ அழுகை வருவதுபோல் இருக்கும்.

    1986-ஆம் ஆண்டு எதார்த்த இயக்குனர் பாரதிராஜாவின் இயக்கத்தில் சத்யராஜ்,ரேகா,ரஞ்சினி,ராஜா ஆகியோரின் நடிப்பில் வெளிவந்த படம் கடலோரக் கவிதைகள் பயமுறுத்தும் வில்லனாக நடித்துவந்த சத்யராஜின் கையில் ஆட்டுக்குட்டியைக் கொடுத்து,டீச்சர் டீச்சர் என குழைந்து பேசவைத்து கதாநாயகனாக்கியிருந்தார் பாரதிராஜா.200 நாள்கள் வெற்றிகரமாக ஓடிய இப்படத்தில் இளையராஜாவின் இசையில்  தாஸ் தாஸ் சின்னப்ப தாஸ் தாஸ்’,’அடி ஆத்தாடி’,’பொடிநடையா போறவரே’,’போகுதே போகுதே ஆகிய பாடல்களோடு கேட்கும்போதே நெஞ்சுக்குள் என்னவோ செய்யும் கொடியிலே மல்லிகைப்பூ மணக்குதே மானே என்ற பாடலும் மக்களின் மனதில் நீங்காத இடத்தைப் பெற்றவை.

  கன்யாகுமரி மாவட்டத்தில் முட்டம் என்ற கடல்கிராமத்தைச் சேர்ந்த இளைஞன் சின்னப்பதாஸ் (சத்யராஜ்).படிப்பறிவில்லாத அவன் சாராயம் குடித்துக்கொண்டும் பலரையும் அடித்துக்கொண்டும் அடிக்கடி சிறைச்சாலைக்குச் சென்றுகொண்டும் இருப்பவன்.

 அந்தக் கிராமத்தில் இயங்கும் பாரதியார் துவக்கப்பள்ளிக்கு ஆசிரியையாக வந்து சேருகிறாள் ஜெனிஃபர் (ரேகா).அம்மா இறந்தது முதல் அப்பா,தம்பிகள்,கால் ஊனமுற்ற தங்கை ஆகியோரை கரைசேர்க்கும் பொறுப்பில் இருக்கும் ஜெனிபரின் பார்வையில் முரடனாக தெரிகிறான் சின்னப்பதாஸ்.

   பள்ளியில் ஆயாவாக வேலை செய்யும் அவனது அம்மா அவனுக்குத் தன் அண்ணன் மகள் கங்கம்மாவை (ரஞ்சனி) பெண் பார்க்க அழைத்துச் செல்கிறாள்.ஊரே மிரண்டு நடுங்கும் சின்னப்பதாஸை அவள் அதட்டி,மிரட்ட ஒரு வாயாடி, வம்பு பெண்ணைத் தனக்கு மணமுடிக்க பார்க்கிறாளே என்ற ஆத்திரத்தில் தன் அம்மாவை கைநீட்டி அடித்துவிடுகிறான் சின்னப்பதாஸ்.

  ஜெனிபர் ஆயாவைத் தன் வீட்டுக்கு அழைத்துவந்து,அவளது காயத்திற்கு ஒத்தடம் கொடுத்து,தன் வீட்டிலேயே வைத்து கவனித்துக்கொள்கிறாள்.சின்னப்பதாஸ் ஆத்திரத்தோடு அவள் வீட்டுக்கு வந்து தன் அம்மாவைக் கூப்பிட அவள் வீட்டுக்குள்ளேயே இருக்கிறாள்.

  என்னா கெழவி புட்டுக்கிச்சா?” என கிண்டலாய் கேட்க,அவனது வார்த்தைகளில் ஆத்திரமுற்றவள் அவன் கன்னத்தில் பளார் என அறைகிறாள்.அவன் பேச்சற்று திகைத்துப்போய் நிற்கிறான்.அன்றிரவு திருட்டுத்தனமாக அவள் வீட்டு கூரையின்மேல் ஏறும் அவன் ஜெனிபர் தன் அம்மாவிடம் பேசுவதைக் கேட்க நேரிடுகிறது.அவனுக்குத் தன் தம்பியிடம் சாப்பாடு கொடுத்து அனுப்பியிருப்பதாக அவள் சொல்ல,மதியம் தன்னை அறைந்த அவளிடத்தில் உள்ள அன்பையும் எண்ணி அவன் வருந்துகிறான்.அவன் பார்ப்பதற்கு முரடனாக இருந்தாலும் உள்ளுக்குள் அவனிடம் நற்குணங்கள் நிறைந்திருப்பதை அவள் ஒருநொடியில் உணர்ந்துவிட்டதாய் சொல்ல,அவன் நெகிழ்ந்து போகிறான்.அவனுக்குள் இரசாயன மாற்றங்கள் நிகழ்கின்றன.

   மறுநாள் ஜெனிபரை எதிரில் பார்க்கும்போது வணக்கம் டீச்சர் என்கிறான் பவ்யமாய்.அவள் சிரித்துக்கொண்டே நடக்கிறாள்.பள்ளிக்கூடத்து சுவரில் நானும்,ஜெனியும் நேத்து ராத்திரி ஜாலியா இருந்தோம்,இப்படிக்கு சின்னப்பதாஸ் என கிறுக்கியிருப்பதைக் கண்டதும் அவளுக்கு அவன்மேல் மீண்டும் கோபம் உண்டாகிறது.அவன் அம்மாவும் அவசரப்பட்டு அவனை அடித்துவிட,அறவே படிப்பறிவில்லாத தன்னால் எப்படி எழுதமுடியும்?” என அவன் கேட்க,அப்போதுதான் தன் மகன் அதைச் செய்யவில்லை என்ற விசயம் தாய்க்கு தெரிகிறது.

   மறுநாள் தேவாலயத்திற்குச் சென்று காத்திருக்கும் சின்னப்பதாஸ்,ஜெனிபர் பிரார்த்தனையை முடித்துக்கொண்டு வெளியில் வந்ததும் அவளிடத்தில் தான் அந்தத் தவற்றைச் செய்யவில்லை என்பதை எடுத்துரைக்கிறான்.தனக்காகவும் அவள் பிரார்த்தனை செய்வாளா என கேட்க,அவள் உள்ளே சென்று அவனுக்காகவும் ஏசுநாதரிடம் பிரார்த்தனை செய்துவிட்டு வருகிறாள்.தனக்காகவும் பிரார்த்திப்பதற்கு ஒரு ஜீவன் இருக்கிறதே என அவன் பூரித்துப்போகிறான்.அவளிடம் சந்தோசமாக நன்றி சொல்லி புறப்படுகிறான்.முரட்டு தோற்றத்திற்குள் புதைந்து கிடக்கும் அவனது வெள்ளந்தி மனதை அவளால் புரிந்து கொள்ளமுடிகிறது.

   அந்தச் சம்பவத்திற்குப் பிறகு சின்னப்பதாஸ் கடையில் இருந்த புத்தகங்களை வாங்கிகொண்டு பள்ளிக்கூடத்திற்குப் போகிறான்.அவனைக் கண்டதும் குழந்தைகள் அனைத்தும் மிரண்டு வெளியேற,ஜெனிபர் அவனைத் திட்டி வெளியே அனுப்புகிறாள்.தனக்குப் படித்து தரும்படி அவன் கெஞ்ச,அவள் மறுக்கிறாள்.அவன் தனக்குப் பாடம் போதிக்க ஒத்துக்கொள்ளும்வரையில் தான் ஒற்றைக்காலில் நிற்கப்போவதாய் அவன் மிரட்ட,அவள் அப்போதும் மசியவில்லை.ஆனால் அவன் பிடிவாதமாக ஒருநாள் முழுக்க வெயிலில் ஒற்றைக்காலோடு நிற்க,அவன் மனமிறங்கி பாடம் சொல்லித் தர முன்வருகிறாள்.வழக்கமான குறும்புத்தனம் அவ்வப்போது எட்டிப் பார்த்தாலும் அவளைத் தன் மானசீக குருவாக எண்ணும் அவன் அவளிடத்தில் நெளிந்து,குழைந்து சிறு மாணவனைப் போன்று அடங்கிப் போகிறான்.

  ஒருதடவை பாடம் படிக்கும்போது அவளிடம், திருப்பதிமலையில் யார் இருக்கிறார்?” என கேட்க,அவள், வெங்கடாஜலபதி என்கிறாள்.பழனிமலையில் யார் இருக்கிறார்?” என கேட்டபோது, முருகன் என்கிறாள்.இந்த மலையில் யார் இருக்கிறார்கள்?” என்றதற்கு, நீயும் நானும் மட்டும்தான்,” என அவள் சொல்ல,அவன் வேகமாய் ஓடி அந்த மலையைவிட்டு இறங்குகிறான்.பிறகு மூச்சிரைக்க அவளைப் பார்த்து,”டீச்சர்,இப்போ இந்த மலையில் நீங்க மட்டும்தான் இருக்கீங்க,நீங்கதான் என் தெய்வம்,” என்கிறான்.அவனது வார்த்தைகளில் நெகிழ்ந்து போகும் அவள் மனதில் அவன் மெல்ல இடம் பிடிக்கிறான்.அவனது தூய அன்பு அவள் மனதைக் கலைக்கிறது.

   அவளது வீட்டில் ஆடுகளோடு இருக்கும் ஏசுபிரானின் படத்தைப் பார்த்து அவன் கேள்வி கேட்க,அவனுக்குப் பதிலளிக்கும் அவள் அவனிடம் அந்தமாதிரி திசைமாறி போன ஓர் ஆடு அவனிடம் தஞ்சம் அடைந்தால் என்ன செய்வான் என கேட்க,”உடனே பட்டை,கிராம்பு எல்லாம் போட்டு பிரியாணிதான்,” என்கிறான்.அதுவே நானா இருந்தால்... என அவள் கேட்க அவன் வார்த்தையற்று நிற்கிறான்.மனதில் இனம்புரியாத உணர்வொன்று பரவ,உற்சாகமாக கடலோரத்தில் ஓடுகிறான்.

   ஜெனிபரின் மனதிலும் ஒரு சந்தோசம் ஊற்றெடுக்கிறது.இருவரும் ஒருவர் மீதான ஒருவர் காதலை உணர்ந்தாலும் வாய்விட்டு சொல்லிக்கொள்ளாமல் எப்போதும் போலவே பழகுகிறார்கள்.அப்போதுதான் ஜெனிபரின் குடும்ப நண்பர் லாரன்ஸ் (ராஜா) ஜெனிபரின் வீட்டில் சிலநாள் தங்கிவிட்டு போக வருகிறார்.

   லாரன்ஸ் அமெரிக்காவில் படித்தவர்;பாரிசில் வேலை செய்தவர்அவரது அப்பாவின் கோடிக்கணக்கான சொத்துக்கு ஒரே வாரிசு,சென்னையில் தொழில் தொடங்கப்போகிறார்,” என அவரைப் பற்றி ஜெனிபரும்.அவள் தம்பிகளும் அறிமுகம் செய்துவைக்க சின்னப்பதாசின் மனதில் தாழ்வு மனப்பான்மை உண்டாகிறது.தனக்குத் தெரிந்த ஓரிரு ஆங்கில வார்த்தைகளைக் கலந்து பேசும்,தாஸைப் பார்த்து லாரன்சும்,ஜெனிபரும் நகைக்கிறார்கள்.அவன் கவலையாகிறான்.எப்போதுதான் லாரன்ஸ் ஊர் திரும்புவானோ என கேட்டுக்கொண்டே இருக்கிறான்.லாரன்சோடு ஜெனிபர் அதிக நேரத்தைச் செலவழிப்பது அவனைக் காயப்படுத்துகிறது.ஒரு தடவை லாரன்சுக்கு ஒரு மலையைச் சுற்றிக் காண்பிக்கும்போது அவனுக்குப் பிடித்த பெயரைச் சத்தமாக சொல்ல சொன்னபோது,லாரன்ஸ் ஜெனிபரின் பெயரைச் சொல்ல அவனுக்குள் பொறாமை எட்டிப்பார்க்கிறது.

  ஜெனிபர் லாரன்சோடு ஒன்றாக நடந்து போகும்போது ஊரிலுள்ளவர்கள் அவர்கள் இருவரின் ஜோடிப்பொருத்தம் நன்றாக இருப்பதாகவும்,படித்தவர்கள் ஒன்று சேரும்போதுதான் பார்ப்பதற்கு நன்றாக இருப்பதாகவும் சொல்ல,அவன் மனம் வேதனையடைகிறது.எங்கே அவளை இன்னொருவனிடம் இழந்துவிடுவோமோ என்ற பயம் வரும்போதுதான் அவள் மீதான நேசத்தை அவன் உணர்கிறான்.எங்கே அவனைப் பார்த்தால் வாய்தவறி மனதிலிருப்பது வெளியே வந்துவிடுமோ என்ற அச்சத்தில் அவளைவிட்டு தனியே இருக்கிறான்.கடற்கரையை ஒட்டிய மலையில் பாறைகளுக்கு மத்தியில் ஆட்டுக்குட்டியோடு தனித்து உட்கார்ந்திருக்கிறான்.


      ஆட்டுக்குட்டியின் சத்தம் கேட்டு அங்குப் போகும் ஜெனிபர் சில தினங்களாய் அவன் அவளைப் பார்க்கவராமல் தனித்து இருப்பதன் காரணத்தை வினவுகிறாள்.தனக்கு ஏதோ ஆகிவிட்டதாகவும்,அவன் முகத்தைப் பார்த்து பேசமுடியாமல் இருப்பதையும் சொல்ல,தன் கண்களைப் பார்த்து பேசுமாறு அதட்டுகிறாள்.அவன் தயங்கி தயங்கி நிமிர,அவள் கண்களை நேருக்கு நேர் பார்த்த கணம் தடுமாறி ஆட்டுக்குட்டியை கீழே போட,அது அவன் கையிலிருந்து ஓடுகிறது.அதைத் துரத்தியபடி ஓடும் அவன் காலில் எதுவோ குத்திவிட,அவள் அவன் முன் மண்டியிட்டு அமர்ந்து தன் சங்கிலியில் இருந்த ஊக்கை எடுத்து,அவன் காலில் குத்திய எதையோ எடுக்க,மிக அருகில் இருக்கும் அவளது அன்பையும்,தாய்மை உணர்வையும் கண்டு நெகிழ்ச்சியாக அவன் பார்க்க அப்போது ஒலிக்கிறது இப்பாடல்.

  இப்பாடலில் பல்லவி முடிந்தபிறகு தொடரும் இசையில் கோயில்மணி ஒலிக்க,அதைத் தொடர்ந்து தேவாலயத்து மணியும் ஒலிக்க,அந்தக்கோர்வை அறிவார்த்தமான இசைக்கோர்ப்பு எனலாம்.

   இப்படத்திலோ,பாடலிலோ எந்த இடத்திலும் மதம் என்பது தடையாக காட்டப்படவேயில்லை.இருவர் மனதிலும் காதல் இருந்தாலும் அதை வெளியில் சொல்வதில் ஏனோ தயக்கம்.அதை உள்ளுக்குள் வைத்திருப்பதால் மனதில் தோன்றும் குழப்பம்,வேதனை,ஏக்கம் ஆகியவற்றை வெகு அழகாக, கவித்துவமாக இப்பாடலில் வெளிக்கொணர்ந்திருக்கிறார் வைரமுத்து.இப்பாடலின் ஒவ்வொரு வரியையும் தனித்தனியே பார்த்தால் அதன் எதார்த்தத்தில் நம் மனமும் மயங்கிப்போவது திண்ணம்.இப்பாடல் காட்சியில் அந்தக் கடலோர கிராமத்தின் இயற்கைக் காட்சிகளும்,கடலும் வெகு அழகு.

   இத்தகைய அற்புதமான பாடல்களையெல்லாம் நாம் கேட்பதற்கு களம் அமைத்துக்கொடுக்கும் மின்னல் பண்பலையை இவ்வேளையில் நாம் பாராட்டியே ஆகவேண்டும்.நேயர்களின் மனம்கவரும் வகையில் நிகழ்ச்சியை வழங்குவதற்காக அவர்கள்  மெனக்கெடுகிறார்கள்.

    ஒருதடவை மஞ்சுளா அக்காள் வானொலி நாடகத்தை ஒலிப்பதிவு செய்துகொண்டிருந்தபோது அருகிலிருந்து பார்க்கும் வாய்ப்பு கிட்டியது.நான்கு மணி நேரத்திற்கு மேல் உட்காராமல் நின்று கொண்டே,சரியாக வரும்வரையில் மீண்டும் மீண்டும் பேச சொல்லி அவர் ஒலிப்பதிவு செய்தபோது பணியின்பால் அவர் கொண்டிருக்கும் அக்கறையையும்,சிரத்தையையும் அறிந்து கொள்ளமுடிந்தது.

  மின்னல் பண்பலையில் மாலை ஐந்து தொடக்கம் எட்டுவரையில் ஒலியேறும் ஆனந்த தேன்காற்று நிகழ்ச்சிக்கு நான் ரசிகை.புனிதா சுப்ரமணியம்,கவிதா கன்னியப்பா.எஸ்.சித்ரா,சரஸ்பிஜின், ஆகியோர் ஒவ்வொருநாளும் நேயர்களின் மனம் கவரும் பாடல்களைத் தயார் செய்து நேயர்களை எங்கும் நகரவிடாமல் செய்துவிடுகிறார்கள்.

  மின்னல் பண்பலையின் ஃபேஸ்புக் பக்கத்தில் முன்கூட்டியே ஆனந்த தேன்காற்று தொகுப்பில் அன்று இடம்பெறப்போகும் பாடல்களில் சிலவற்றைப் பட்டியலிட்டு விளம்பரம் போடுவதால் ஆர்வம் அதிகமாகிறது.நமக்குப் பிடித்த பாடல்கள் பட்டியலில் இருந்தால் அந்தப் பாடல் எப்போது ஒலிக்கும் என ஏக்கத்தோடு காத்திருக்க செய்கிறது.நிகழ்ச்சி அறிவிப்பாளர்கள் இடையிடையே நேயர்களின் கருத்துகளையும் வாசித்து,அங்கீகாரம் கொடுப்பது நன்று.

 கடந்த இரு வாரங்களாக (14&21 டிசம்பர்)ஒடிசி இசை பயிற்சி மையத்தின் மாணவர்கள் இப்படியும் பாடலாம்என்ற தலைப்பில் இளையராஜா பாடல்களை ( VOICE CULTURE)நவீன முறையில் பாடியது கூட கேட்க இனிமையாகதான் இருந்தது.கவிதா கன்னியப்பா வெகு சிறப்பாக அந்நிகழ்ச்சியைத் தயாரித்து வழங்கியிருந்தார்.

   அவர்களின் சேவை என்றென்றும் தொடரவேண்டும் என நாமும் வாழ்த்துவோம்.இன்று உதயகீதங்கள் தொடரில் இடம்பெற்ற பாடலை அன்பிற்கினியவனோடு மின்னல் பண்பலையின் எஸ்.குமரன், சுமதி,சுகுமாறன்,ஹரி,பாலமுருகன்,தெய்வீகன்,புனிதா,புவனேஸ்வரி,சித்ரா,பிரேமா,புவனா,ரவின்,செல்லதுரை,ஜோன்சன்,

சரஸ்வதி,சரஸ்பிஜின்,கவிதா,திவ்யமாலினி,மஞ்சுளா,ஹேமலதா,மோகன்தாஸ் அனைவருக்கும் சமர்ப்பிக்க விரும்புகிறேன்.உங்களின் சேவை இனிதே தொடரட்டும்.

    வாருங்கள் தினக்குரல் அன்பர்களே ஜெயச்சந்திரன்,ஜானகியின் குரலில் கிறங்கடிக்கும் அந்த இனிய கீதத்தில் நாமும் கலந்து இலயிக்கலாம்.

ஆ : கொடியிலே மல்லியப்பூ மணக்குதே மானே
     எடுக்கவா தொடுக்கவா துடிக்கிறேன் நானே
     பறிக்கச் சொல்லி தூண்டுதே பவழமல்லித் தோட்டம்
     நெருங்க விடவில்லையே நெஞ்சுக்குள்ள கூச்சம்

பெ : கொடியிலே மல்லியப்பூ மணக்குதே மானே
      கொடுக்கவா தடுக்கவா தவிக்கிறேன் நானே

சரணம் : 1

பெ : மனசு தடுமாறும் அது நெனைச்சா நிறம் மாறும்
     மயக்கம் இருந்தாலும் ஒரு தயக்கம் தடை போடும்

ஆ : நித்தம் நித்தம் உன் நெனப்பு நெஞ்சுக்குழி காயும்
     மாடு ரெண்டு பாதை ரெண்டு வண்டி எங்கே சேரும்

பெ: பொத்திவெச்சா அன்பு இல்ல

     சொல்லிப்புட்டா வம்பு இல்ல

     சொல்லத்தானே தெம்பு இல்ல

      இந்தத் துன்பம் யாரால?

 

சரணம் : 2

ஆ : பறக்கும் திசையேது இந்த பறவை அறியாது
     உறவோ தெரியாது அது உனக்கும் புரியாது

பெ : பாறையிலே பூமொளைச்சு பார்த்தவக யாரு
     அன்பு கொண்ட நெஞ்சத்துக்கு ஆயிசு நூறு

ஆ : காலம் வரும் வேளையிலே

     காத்திருப்பேன் பொன்மயிலே

பெ : தேதி வரும் உண்மையிலே

     சேதி சொல்வேன் கண்ணாலே

பெ : கொடியிலே மல்லிகைப்பூ மணக்குதே மானே
     கொடுக்கவா தடுக்கவா தவிக்கிறேன் நானே
     பறிக்கச் சொல்லி தூண்டுதே பவழமல்லித் தோட்டம்
     நெருங்க விடவில்லையே நெஞ்சுக்குள்ள கூச்சம்

ஆ : கொடியிலே மல்லிகைப்பூ மணக்குதே மானே
     எடுக்கவா தொடுக்கவா துடிக்கிறேன் நானே







 

Sunday, December 15, 2013

வளையல் பெண்ணின் உதயகீதங்கள் : கீதம் 22 : பூவே பூச்சூடவா.......... ( பூவே பூச்சூடவா - 1985)


  



         ஊரே அடங்கியிருக்கும் அந்த இரவில் ஒரு வீட்டில் மட்டும் விளக்கு எரிகிறது.அங்கே ஒரு வயதான அம்மாள் தன்னந்தனியே பல்லாங்குழி ஆடிக்கொண்டிருக்கிறாள்.அவள் முகத்தில் ஓர் அலட்சியம் தெரிந்தாலும் உள்ளுக்குள் ஏதோ சோகமும்,விரக்தியும் புதைந்திருக்கிறது.அவளைத் தவிர அந்த வீட்டில் யாருமேயில்லை என்றபோதிலும் அவள் வீட்டு வாசலில் அழைப்புமணி பொருத்தப்பட்டிருக்கிறது.அடிக்கடி அந்த அழைப்பு மணியை ஒலிக்க செய்து அவளை வெறுப்பேற்றுகிறது அண்டை வீட்டு சிறுவர் பட்டாளம்.தொல்லையாக இருந்தாலும் அவள் அந்த அழைப்புமணியைக் கழற்றாமலேயே வைத்திருக்கிறாள்.அவள் யாருக்காக அந்த அழைப்புமணியை வைத்திருக்கிறாள்.அலட்சியமான முகத்தின் பின்னே மறைந்து கிடக்கும் சோகமும் எதிர்பார்ப்பும் எதனைப் பற்றியது?


   இந்தக் கேள்விக்கான விடையை பூவே பூச்சூடவா என்ற திரைப்படத்தைப் பார்த்துதான் தெரிந்து கொள்ளவேண்டும்.

   1985-ஆம் ஆண்டு பத்மினி,நதியா,ஜெய்சங்கர்,எஸ்,வி,சேகர் நடிப்பில்,பாசில் இயக்கத்தில் வெளிவந்துள்ள இந்தத் திரைப்படம் பாட்டிக்கும்,பேத்திக்கும் இடையிலான உணர்ச்சிப்போராட்டம் நிறைந்த உறவில் அழகியலும்,சோகமும் கலந்து புனையப்பட்டுள்ளது.பெரும்பாலும் தாய்,மகள் பற்றிய உறவுகளையே கணிசமாக பறைசாற்றி வந்த தமிழ்த்திரையுலகில் அபூர்வமாய் பாட்டியின் குணாதிசயங்களை மிக எதார்த்தமாக,உணர்ச்சிப்பூர்வமாக,மனம் நெகிழும் வகையில் உயிரோட்டமாக எடுத்துரைத்த படம் பூவே பூச்சூடவா’.

     ஆழ்மனதில் ஆத்மராகம் மீட்டும் இப்படத்திற்கு அற்புதமாக அமைந்துவிட்ட பாடல்களும் வெற்றியை ஈட்டித் தந்துள்ளன.சின்னக்குயில் பாடும் பாட்டு’,’பட்டாசை சுட்டு சுட்டு போடட்டுமா’,’பூவே பூச்சூடவா ஆகிய பாடல்களை இன்றைய குழந்தைகளால் கூட ரசிக்க முடிகிறது.

   இப்படத்தில் காட்டப்பட்ட பாட்டி மிகைத்தன்மை இல்லாத எதார்த்தமான குணம் கொண்டவர்.பொங்கி வரும் விம்மலை உதட்டில் தேக்கிவைத்து கட்டுப்படுத்தும் அந்தக் காட்சியே போதும்.அந்தப் பாத்திரத்திற்கு அற்புதமாய் பொருந்தியவர் பத்மினியம்மாள்.அதேமாதிரி நதியாவும் சொல்லத் தேவையில்லை.அவரிடத்தில் அந்தத் துருதுருப்பும்,பெரிய பொட்டும்,விதவிதமான தோடுகளும் என்னை ஈர்த்தவை.

    இனி படத்தில் பூவே பூச்சூடவா பாடல் ஒலிக்கும் சூழலைக் கொஞ்சம் மீட்டுணர்ந்து வரலாமா?

   17 வருடங்கள் கழித்து பூங்காவனத்தம்மாவைப்(பத்மினி) பார்க்க வருகிறார் பேத்தி சுந்தரி (நதியா).வாசலில் அழைப்புமணி ஒலிப்பதைக் கேட்டு வழக்கம்போல் அண்டைவீட்டுக் குழந்தைகளின் வேலை என நினைத்துக்கொண்டு,”வந்துடுச்சிங்க வானரங்க!கையை உடைச்சி அடுப்புல வெச்சிடறேன் என பற்களைக் கடித்தபடி குடையை ஓங்கியபடி வரும் பூங்காவனத்தம்மா தன் சாயலில் அழகான இளம்பெண் ஒருத்தி நிற்பதைக் கண்டு வியக்க,அவளே தன்னை அறிமுகப்படுத்திக்கொள்கிறாள்; வீட்டுக்குள் நுழைகிறாள்.

   சுந்தரியைப் பார்த்து முறைத்துவிட்டு கதவைச் சாத்திக்கொள்கிறாள் பாட்டியம்மா.அவளது விரல் கதவிடுக்கில் சிக்கிக்கொள்ள மனம் கேளாமல் கதவைத் திறக்கிறாள்.

  உங்க உறவே வேண்டாம்னு முழுக்கு போட்டு 17 வருஷம் ஆச்சே,இப்போ எதுக்காக வந்திருக்கே?” என வெறுப்பைக் காட்டுகிறாள்.அவளுக்கு உணவு கொடுக்கவும் மறுக்கிறாள்.ஆனால் பேத்தி மஞ்சள் நிற சுடிதாரை அணிந்து கொண்டு வரும்போது ஆசையாய் பார்க்கிறாள்.வீட்டிலிருக்கும் ஊஞ்சலை ஓடிவந்து தாண்டுவதைப் பார்த்து வியக்கிறாள்.தொல்லை கொடுத்துக்கொண்டிருந்த மூன்று சுட்டிப்பையன்களையும் பிடித்து வந்து,திமிராக இருந்த ஒருவனின் வாயில் கெட்டுப்போன ரொட்டியைத் திணித்து,”மூக்கை அறுக்கவா?முழியைத் தோண்டவா? என  மிரட்டுவதை பிரமிப்பாய் பார்க்கிறாள்.ஆனால் எதையும் வெளிக்காட்டிக்கொள்ளாமல் வீம்பாக இருக்கிறாள்.


   பேத்தியோ குறும்புகளின் ராணியாய் இருக்கிறாள்.சின்னஞ்சிறு குழந்தைகளோடு கும்மாளமாய் ஊர் சுற்றிவிட்டு இரவில் திரும்புகிறாள்.முகத்தில் பேய் முகமூடியை மாட்டிக்கொண்டு எதிர்வீட்டு வாலிபனைப் பயமுறுத்துகிறாள்.அவளது குறும்புகளில் மனம் மகிழ்ந்தாலும் கோபமான முகத்துடன் சுந்தரியை நெருங்கி,”உனக்கு உன் அப்பான்னா ரொம்ப பிரியமா? என கேட்கிறாள்.அவள், ஆமாம் என,அவளை ஏசி வீட்டைவிட்டு துரத்திவிடுகிறாள்.

  சுந்தரியும் முறைத்துக்கொண்டு வந்து தனியே இருட்டில் அமர்ந்திருக்க,மனம் கேளாமல் அவளை வீட்டுக்கு அழைக்கிறாள் பாட்டி.நெடுங்காலம் தனித்தே வாழ்ந்துவிட்டதாலும்,விரக்தியில் இருப்பதாலும் யாரிடம் எப்படி நடந்து கொள்ளவேண்டுமென தெரியாமல் பேசிவிட்டதாக சொல்லி அவளிடம் மன்றாடி அவளை மீண்டும் வீட்டுக்கு அழைத்துப் போகிறார்.

     அவளிடம் தன் சோகத்தைச் சொல்கிறாள்.தன் ஒரே மகள் அலமேலுவை மணமுடித்துக் கொடுத்தபிறகு அவளைத் தன்னிடமிருந்து பிரித்து எடுத்து தனிக்குடித்தனம் போன அவளது தந்தையின்மீது உள்ள கோபத்தையும்,கர்ப்பமாக இருந்த சமயத்தில் மீண்டும் மகள் தன்னிடம் வந்தபோது அடைந்த ஆனந்தத்தையும்,ஒரு தீபாவளி சமயத்தில் பிறந்த பேத்தியைக் கையில் ஏந்தி இன்பமாக கொஞ்சிய தருணத்தையும் அவள் சொன்னபோது சுந்தரிக்கும் தன் பாட்டியின்மீது பரிதாபம் ஏற்படுகிறது.தன் மகள் இறந்தபிறகு பேத்தியை தான் வளர்ப்பதற்காக நான்கு வருடங்களாக நீதிமன்றம் வரை அலைந்து,தனக்கு வயதாகிவிட்டது என நீதிமன்றம் குழந்தையை அவள் தந்தைதான் வளர்க்கவேண்டும் என தீர்ப்பு சொன்னதையும் சொல்லி,தன் கோபத்துக்கான நியாயங்களை அவள் எடுத்துரைக்கும்போது பேத்தியின் நெஞ்சமும் கலங்கிப் போகிறது.

  எவ்வளவு தொந்தரவா இருந்தும் வாசலில் இருக்கும் அழைப்புமணியை ஏன் கழட்டாமல் வெச்சிருக்கேன் தெரியுமா?என்னைக்காவது அர்த்தராத்திரியில நீ வந்து அடிக்கமாட்டியான்னுதான்மா என பாட்டி அழுகையினூடே சொல்லிமுடிக்கும்போது தான் இனி தன் பாட்டியைவிட்டு வேறு எங்கும் போகப்போவதில்லை என சுந்தரி சத்தியம் செய்து கொடுக்கிறாள்.

   விரக்தியடைந்த தன் வாழ்வில் பாலை வார்க்க வந்த பேத்தியைப் பெருமையோடு அக்கம் பக்கத்தாரிடம் காட்டும் பாட்டி வாசலில் பொருத்தியிருந்த அழைப்புமணியை இனி தேவையில்லை என  கழற்றிவிடுகிறாள்;பேத்தியைக் கோயிலுக்கு அழைத்துப்போகிறாள்.

    தன் பேத்தி என்றைக்காவது தன்னைத் தேடி வருவாள் என்ற நம்பிக்கையில் அவளுக்குக் குழந்தைப் பருவம் முதல் மங்கையான பருவம் வரையில் தேவைப்படும் உடைகளையும்,ஆபரணங்களையும் வாங்கி வைத்திருப்பதை எடுத்துக் காட்டுகிறாள் பாட்டி.நவீன உடைகள் முதல் காஞ்சிபுரம் பட்டுச்சேலைகள் வரை எல்லாவித உடைகளையும்,ஆபரணங்களையும் காட்டி,”உனக்காக எல்லாம் சேர்த்து வெச்சிட்டேன் புருஷனைத் தவிர,” என மூத்தவள் முகம் நிறைய பூரிப்போடு எடுத்துக் காட்ட அந்த அன்பில் நெகிழும் இளையவளின் கண்கள் நீரால் அரும்புகின்றன.அப்போது ஜேசுதாஸ் ஐயாவின் குரலில் சுகமாய் ஒலிக்கிறது இந்தப் பாடல்.

     பாட்டியும்,பேத்தியும் சுகமாய் இருக்கும் தருணத்தில் சுந்தரியின் அப்பா (ஜெய்சங்கர்) வருகிறார்.அவரைச் சந்திக்க விரும்பவில்லை என சொல்லிவிட்டு வரும்போது  சுந்தரி தன் தந்தையின் புகைப்படத்தைக் கையில் வைத்து பார்த்துக்கொண்டிருப்பதைக் கண்ட பாட்டிக்கு அளவில்லாத கோபம் ஏற்படுகிறது.அவள் அப்பாவைப் பற்றி தப்பாக பேச,சுந்தரிக்குக் கோபம் வருகிறது.திருமணமானபின்னும் தன் மகளிடம் அளவுக்கதிக உரிமை எடுத்துக்கொண்டது பிடிக்காமல்தான் தன் தந்தை தனிக்குடித்தனம் போனதாய்ச் சொன்னவள் திருமணத்திற்குப் பின் ஒரு பெண்ணிடம் அவளது கணவனுக்குதானே அதிக உரிமை என கேட்கிறாள்.தன் தாய் இறந்தபிறகு வேறு மணம் செய்துகொள்ளாமல்,தன்னை யாரிடமும் கொடுக்காமல் ஒரு பூ மாதிரி வளர்த்த தன் தந்தையைப் பற்றி இதற்கு மேல் ஒரு வார்த்தை கோபமாகப் பேசினாலும் தனக்குப் பிடிக்காது என சுந்தரி பேச,பாட்டியின் கோபம் அதிகரிக்கிறது.

  அப்பா மேல இவ்வளோ பாசம் வெச்சிக்கறவ எதுக்கு இங்கே வரனும்?நாடகமாடி என் சொத்தையெல்லாம் எடுத்துக்கறதுக்கா?” என பாட்டி சரமாரியாக கேட்க,சுந்தரி அறைக்குள் நுழைந்து கதவைச் சாத்திக்கொள்கிறாள்.பாட்டி கதவை இடைவிடாது தட்டிக்கொண்டே இருக்க,நோயின் தீவிரத்தில் துவண்டு போயிருந்தவள்,அழுத்தம் தாளாமல் கதவைத் திறந்து வெளியே வருகிறாள்;தான் சாப்பிட்டுக்கொண்டிருக்கும் மருந்து மாத்திரைகளைக் கொட்டி காண்பிக்கிறாள்.தனக்கு மூளையில் பாதிப்பு இருப்பதையும்,எந்த நேரத்திலும் தன் உயிர் பிரிந்துவிடக்கூடும் என்ற உண்மையையும் போட்டு உடைக்கிறாள்.தன்னைப் பரிதாபமாக பார்ப்பவர்களின் பார்வையிலிருந்து விலகி,தன் கடைசிக்காலத்தில் தன் அம்மா வாழ்ந்த வீட்டில் வாழ வந்திருப்பதாய் இளையவள் துவண்டு போன முகத்தோடு சொல்ல,பாட்டியால் அதைத் தாங்கி கொள்ளவே முடியவில்லை;பேத்தியை அன்போடு அணைத்துக்கொள்கிறாள்.

   
அறுவைச் சிகிச்சை செய்தால் ஒருவேளை அவள் பிழைக்ககூடும்.ஆனால் அந்த அறுவை சிகிச்சையில் அவள் உயிர் போய்விடவும் வாய்ப்பு இருப்பதால் அந்த அறுவை சிகிச்சை வேண்டாம் என சொல்லும் சுந்தரி தன் அப்பா அதற்காகதான் தன்னை அழைத்துப்போக வந்திருக்கிறார் என்ற விசயத்தைச் சொல்லி தன்னை அப்பாவிடம் அனுப்பவேண்டாம் என கெஞ்சுகிறாள்.பாட்டியின் நெஞ்சம் கலங்குகிறது.உன்னை எங்கும் அனுப்பமாட்டேன் என சொல்லிவிட்டு,கடவுளே என் பிள்ளையைக் காப்பாத்துப்பா என பேத்தியைக் கட்டியணைத்தவாறு கதறி அழுகிறாள்.அப்போது சோகமாக ஒலிக்கிறது இந்தப் பாடல்.

     இந்தப் பாடலில், யார் வீட்டில் அழைப்புமணி ஒலித்தாலும் தன் ஓடிவந்து பார்ப்பதாய் சொல்லும் வரிகளிலேயே அந்தப் பாட்டியின் காத்திருப்பையும்,ஏக்கத்தையும் முழுமையாய் உணரமுடிகிறது நம்மால்.தன் பேத்தியின் முகத்தில் தன் வாலிப சாயலைக் காண்பதாய் சொல்வதாகட்டும்,ஜென்மங்கள் மாறும்போது தன் பேத்திக்கே மகளாய் பிறந்து அவளைவிட்டு நீங்காமல் இருக்கவேண்டும் என சொல்வதாகட்டும், ஒரு பாட்டியின் எண்ணங்களை உயிர்ப்புள்ள வார்த்தைகளாக்கியுள்ளார் கவிப்பேரரசு வைரமுத்து.

   இப்பாடல் சுகமாய் ஒலிக்கும்போதும் சோகமாக ஒலிக்கும்போதும் அதே இசைதான்;அதே வரிகள்தான்,சோகப்பாடலை சித்ரா பாடியிருப்பார்.நான் உன் மகளாக வேண்டும் என்ற வரி மட்டும்தான் மாறியிருக்கும்.முன்பாதியில் பேத்தியுடனான குதூகலத்தைக் காட்டும் காட்சிகள்,சோகமாய் ஒலிக்கும்போது சோகத்தை மனதினுள் புதைத்து வைத்துக்கொண்டு பேத்தி குணமாவதற்காக பாட்டி மேற்கொள்ளும் செயல்களைக் காட்டி நம் கண்களில் கண்ணீரை வரவழைக்கிறது.

     தாயைப் போன்றே பாட்டி என்ற உறவும் குழந்தைகளின் வாழ்வில் மிக முக்கியமான உறவு.கண்டிப்பாக இருப்பவர்கள் கூட பாட்டி என்ற நிலையை அடையும்போது சாந்தமான,பாசமே உருவானவர்களாக மாறிவிடுகிறார்கள்.உழைத்து ஓய்ந்த அந்திமப் பொழுதில் அவர்களின் வாழ்வை இனிமையாக்குவது பேரன்,பேத்திகளின் உறவுதான்.பேரன்,பேத்திகளைப் பார்க்கும்போது அவர்கள் தங்கள் பிள்ளைகளின் சிறுவயது சாயலில் இருப்பதால் அவர்களுக்குத் தாங்கள் முதன்முதலில் தாய்மையான தருணமும்,தங்கள் சிசுவைக் கையில் ஏந்திய கணமும் நினைவுக்கு வரும்.தங்கள் பிள்ளைகளை மீண்டும் குழந்தையாக காண்பது போன்ற உணர்வின் உந்துதலில் தங்கள் பேரப்பிள்ளைகளை அதிக பாசம் காட்டி வளர்க்கிறார்கள்.

    தாயை இழந்த எத்தனையோ குழந்தைகளை அந்தப் பாட்டிதான் குறை தெரியாமல் வளர்க்கிறாள்.குழந்தைகளுக்குக் கதைகள் சொல்லி,வேடிக்கை காட்டி சோறு ஊட்டி,தலைசீவி சடை பின்னி இதையெல்லாம் தாயைக் காட்டிலும் பாட்டியால்தான் சிறப்பாக செய்யமுடியும்.

   என் பாட்டியைக் கண்டு பயந்து நடுங்கினாலும் என் வாழ்வில் பாட்டிக்கும் முக்கிய இடம் உண்டு.அம்மா வேலைக்குப் போனபோது எங்களை ஆயாக்கொட்டகையில் விடாமல் வளர்த்தவர் பாட்டி.என் பாட்டிதான் வானம்பாடி பத்திரிக்கையின் முதல் வாசகி.அவரிடமிருந்துதான் என் அம்மாவுக்கும்,அடுத்து எனக்கும் வாசிக்கும் பழக்கம் ஏற்பட்டு என்னை எழுத்துத் துறையிலும் கால்பதிக்க வைத்துள்ளது.அதனால்தானோ என்னவோ இன்று தள்ளாத வயதில் இருக்கும் அவரைப் பார்க்கும்போது சிறுவயதில் என்னை அடித்து அழவைத்ததைத் தாண்டி பரிதாபமும்,கனிவும் தோன்றுகிறது.

  நான் சொன்ன அனைத்தும் தாத்தாமார்களுக்கும் பொருந்தும்.வயதான காலத்தில் அவர்களைக் கொண்டு போய் முதியோர் இல்லங்களில் விட்டுவிடாமல் பேரக்குழந்தைகளுக்கு அவர்களோடு வாழும் பாக்கியத்தை ஏற்படுத்திக்கொடுக்கவேண்டியது நம் கடமையாகும்.

  இவ்வார உதயகீதங்கள் தொகுப்பில் இந்தப் பாடலை எழுதுவதற்கு ராஜசோழன் சாரும் ஒருவர்.எத்தனையோ முறை,”உங்களுக்குப் பிடித்த பாடல் ஒன்றை உங்களுக்குச் சமர்ப்பணமாக எழுதப்போகிறேன்,” என சொன்னபோது அது சரியல்ல என மறுத்துவந்தவரை விடாது வற்புறுத்தியபோது, இந்தப் பாடலைப் பற்றி எழுதும்மா,”என்றார்.

  என் உதயகீதங்கள் தொடரை நான் தொடர்ந்து எழுதுவதற்கு ராஜசோழன் சார்தான் காரணம்.குழந்தையைப் போன்று அக்கறையாக,பாசமாக என்னைக் கவனித்துக்கொள்ளும் அவரது அன்பும்,ஊக்கமும்தான் நான் தினக்குரலில் எனது படைப்புகளைத் தொடர்ந்து வழங்கிவர காரணம்.

  இன்றைய உதயகீதங்கள் தொகுப்பை என் மாயலோகத்து அன்பிற்கினியவனோடு,மதிப்பிற்குரிய ராஜசோழன் சாருக்கும்,தாத்தா,பாட்டி என்ற நிலையை எட்டிப்பிடித்திருக்கும் மூத்த தலைமுறையினருக்கும் சமர்ப்பிக்க விழைகிறேன்.

 

பூவே பூச்சூடவா…..எந்தன் நெஞ்சில் பால் வார்க்கவா

பூவே பூச்சூடவா….என் நெஞ்சில் பால் வார்க்கவா

வாசல் பார்த்து கண்கள் பூத்து

காத்து நின்றேன் வா..

பூவே பூச்சூடவா…….எந்தன் நெஞ்சில் பால் வார்க்க வா

 

அழைப்புமணி எந்த வீட்டில் கேட்டாலும்

ஓடி நான் வந்து பார்ப்பேன்

தென்றல் என் வாசல் தீண்டவேயில்லை

கண்ணில் வெந்நீரை வார்த்தேன்

கண்களும் ஓய்ந்தது... ஜீவனும் தேய்ந்தது

ஜீப தீபங்கள் ஓயும் நேரும்

நீயும் நெய்யாக வந்தாய்

இந்தக் கண்ணீரில் சோகம் இல்லை

இன்று ஆனந்தம் தந்தாய்

பேத்தி என்றாலும் நீயும் என் தாய்

பூவே பூச்சூடவா……..எந்தன் நெஞ்சில் பால் வார்க்க வா

 

காலம் கரைந்தாலும்…..கோலம் சிதைந்தாலும்

பாசம் வெளுக்காது மானே

நீரில் குளித்தாலும் நெருப்பில் எரித்தாலும்

தங்கம் கருக்காது தாயே

உன் முகம் பார்க்கிறேன்

அதில் என் முகம் பார்க்கிறேன்

இந்தப் பொன்மானைப் பார்த்துக்கொண்டே

சென்று நான் சேரவேண்டும்

மீண்டும் ஜென்மங்கள் மாறும்போதும்

நீ என் மகளாக வேண்டும்

பாசராகங்கள் பாடவேண்டும்

பூவே பூச்சூடவா....எந்தன் நெஞ்சில் பல் வார்க்க வா

வாசல் பர்த்து கண்கள் பூத்து

காத்து நின்றேன் வா

பூவே பூச்சூட வா

எந்தன் நெஞ்சில் பால் வார்க்க வா

எந்தன் நெஞ்சில் பால் வார்க்க வா