Wednesday, July 2, 2014

வளையல் பெண்ணின் உதயகீதங்கள் 33 :ஓ பட்டர்பிளை பட்டர்பிளை:(மீரா 1992)

வளையல் பெண்ணின் உதயகீதங்கள்
கீதம் 33 : ஓ பட்டர்பிளை பட்டர்பிளை (மீரா 1992)


    பள்ளிப் பருவத்தில் எனக்கு சனிக்கிழமைகள் பிடித்தமானவையாக இருந்தன.பள்ளி விடுமுறை என்பதால் வீட்டில் இருக்கலாம் என்ற காரணத்திற்காக மட்டுமல்ல.தொலைக்காட்சியில் தமிழ்ப்படம் போடுவார்களே அதனால்.

    வீட்டில் வீடியோ வசதி இல்லாத அந்தக் காலத்தில் எனக்குத் தொலைக்காட்சி பார்ப்பதென்றால் அதுவும் தமிழ்ப்படங்கள் பார்ப்பதில் அதிக ஆசை.சனிக்கிழமைகளை வெகு ரசனையோடு எதிர்கொள்வேன்.வெள்ளிக்கிழமையே என் கொண்டாட்டம் தொடங்கிவிடும்.படம் பார்க்கும்போது சாப்பிடுவதற்காக வெள்ளி இரவே தேங்காய்ப்பூ கேண்டி செய்து வைப்பேன்.

     மறுநாள் அதிகாலை ஆறு மணிக்குள் எழுந்துவிடுவேன்.வெந்நீரில் இதமாய் குளித்துவிட்டு பொழுது விடிவதை வீட்டுக்கு வெளியே நின்று ரசிப்பேன்.பின் விரைவாக வீட்டுவேலைகளையெல்லாம் முடித்துவிட்டு தொலைக்காட்சியில் கார்ட்டூன் பார்ப்பேன்.தமிழ்ப்படம் ஒளியேறப்போகும் நேரத்திற்காக வெகு ஆவலோடு காத்திருப்பேன்.

   தமிழ்ப்படம் ஒளியேறும் அந்தத் தினத்தில் எல்லாமே இனிமையாக இருக்கும் எனக்கு.அன்றுதான் கச்சான் பூத்தே விற்கும் அண்ணன் மோட்டார் சைக்கிளில் வருவார்.அம்மா வாங்கி கொடுக்கும் கச்சான் வகைகளைக் கொறித்துக்கொண்டே தமிழ்ப்படங்களைப் பார்த்த பொழுதுகள் என் வாழ்வின் ரசனைமிக்க பொழுதுகள்.அப்படியோர் ரசனையான பொழுதில் நான் பார்த்த ரசனையான படம்தான் மீரா’.

    எனக்கு மிகவும் பிடித்தமான வண்ணத்துப்பூச்சிக்கும் முக்கியத்துவம் கொடுத்ததால் இப்படம் என்னுள் ஆழமாய்த் தங்கிப்போனது.வீட்டிலிருந்த பழைய இந்தியன் மூவி நியூஸ் பத்திரிக்கையில் வெளிவந்திருந்த ஐஸ்வர்யா,விக்ரம் படத்தையெல்லாம் வெட்டி நான் பாடல் வரிகளைச் சேமித்து வைக்கும் புத்தகத்தில் ஒட்டிவைத்திருந்தேன்.படத்தின் கதையை எனக்குப் புரிந்த விதத்தில் என் நாள்குறிப்பில் எழுதி வைத்திருந்தேன்.அந்த அளவுக்கு என்னைக் கவர்ந்தது மீரா படம்.

  விக்ரம்,ஐஸ்வர்யா,சரத்குமாரின் நடிப்பில் 1992-ஆம் ஆண்டில் காதலர் தினத்தன்று வெளிவந்த மீரா படத்தில் இளையராஜாவின் இசையில் பள்ளிப்பாடம்’,’ஒய்யா புது ரூட்டுலதான்’,’லவ்வுன்னா லவ்வு’,’பனிமலை’,’ஓ பட்டர்பிளை ஆகிய பாடல்கள் இடம்பெற்றிருந்தன.அனைத்துப் பாடல்களிலும் ஒய்யா புது ரூட்டுலதான் மற்றும் ஓ பட்டர்பிளை பாடல்கள்தான் முதல்நிலை.படத்தின் கதை வழக்கத்தைவிட மாறுபட்ட கதையாகும்.

  மீரா (ஐஸ்வர்யா) கல்லூரியின் அழகு தேவதை.அழகு,கவர்ச்சியோடு,பணமும் சேர்ந்து கொள்ள கொஞ்சம் இறுமாப்போடே வலம் வருபவளின் வாழ்க்கையில் குறுக்கிடுகிறான் ஜீவா (விக்ரம்).அவனது சேட்டைகள் யாவும் அவளை எரிச்சலுற செய்கின்றன.

  அவனது சேட்டைகளைப் பொறுக்கமுடியாமல் அவனை எச்சரித்து அனுப்புகிறாள்.அவன் மீது புகார் கொடுக்க,கல்லூரியைவிட்டு நீக்கப்படுகிறான்.அப்போதும் அவன் திருந்தவில்லை.

 அவளது தந்தை வெளியூருக்குப் போய்விட்ட ஒரு மழைப்பொழுதில் அவளது வீட்டின் முன் வந்து நிற்கிறான்.என்னை நினைக்கும்போதெல்லாம் இந்த அடிதான் ஞாபகத்திற்கு வரனும்,” என சொல்லிவிட்டு ஒரு கட்டையால் அவனை அடிக்க,பதிலுக்கு அவளை இழுத்து,”இனி என்னை நினைக்கும்போதெல்லாம் இந்த முத்தம்தான் நினைவுக்கு வரனும்,” என சொல்லி முத்தமிட்டு தள்ளிவிடுகிறான்.மல்லாந்து படுத்துக்கொண்டே அழுபவள் கொஞ்சநேரம் கழித்து ஆவேசமாய் எழுந்து,”நீ கொடுத்த முத்தத்தைத் துப்பிட்டேன்,என்கிட்ட பணம் இருக்கு,உன்னை என்ன செய்யறேன் பாரு,” என திட்டிவிட்டுப் போகிறாள்.

  ஜீவா நடந்துகொண்ட விதம் அவள் மனதைக் காயப்படுத்த,கோபத்தோடு அந்த இருட்டில் காவல்நிலையத்திற்கு நடந்து போகிறாள்.ஜீவா மேலுள்ள கோபத்தில் கரிசனையாய் கேட்ட ஆட்டோக்காரனிடமும்,”போலிஸ்ல புடிச்சி கொடுத்துடுவேன்,” என கத்திவிட்டுப் போகிறாள்.அப்போது அவள் இரண்டு கொலைகளைப் பார்க்க நேரிடுகிறது;அந்தக் கொலையைப் பற்றி தகவல் சொல்வதற்காக காவல் நிலையத்திற்குப் போகிறாள்.அங்கே அந்தக் கொலைக்காரனே காவல்துறை அதிகாரியாக இருப்பதைக் கண்டு அதிர்ச்சியாகிறாள்.

  புலம்பிக்கொண்டே வீட்டுக்கு வருபவள் தன் துணிமணிகளை எடுத்துக்கொண்டு வீட்டைவிட்டு கிளம்புகிறாள்.அப்போது அந்தக் கொலைக்கார கும்பல் அவளைத் தேடி வீட்டுக்கே வருகிறது;வேலைக்காரியை அடித்து,மீராவைப் பற்றி விசாரிக்க,அங்கே வரும் ஜீவாவிடம்,”மீராவுக்கு ஏதோ ஆபத்து என சொல்கிறாள் அந்த வேலைக்காரி.

  ஒரே இரவில் அடுத்தடுத்து சந்தித்த அதிர்ச்சியான சம்பவங்கள் மனதைப் பாதிக்க,ஆண்கள் மீதே ஒட்டுமொத்த வெறுப்புடன் மதுரைக்குப் போகும் பேருந்தில் ஏறுகிறாள் மீரா.துணையாக போகும் ஜீவாவிடம் பொரிந்து தள்ளுகிறாள்.அத்தனைக்கும் காரணம் அவன்தான் என கோபப்படுகிறாள்.அவளைச் சமாதானப்படுத்துவதற்காக அவன் செய்யும் சேட்டைகள் யாவும் அவளுக்கு எரிச்சலைதான் உண்டு பண்ணுகின்றன.அவன் இருந்தால் தான் பேருந்தில் ஏறப்போவதில்லை என சண்டை போட,ஓட்டுனர் இருவரையும் பேருந்தைவிட்டு இறக்கிவிட்டுப் போகிறார்.

  அட்டை போல் ஒட்டிக்கொண்டே வரும் ஜீவாவை விட்டு விலகியபோது அந்தக் கொலைக்கார கும்பல் அவளைத் தேடிக்கொண்டிருப்பதைப் பார்த்து கலவரமாகிறாள்;மீண்டும் அவனிடமே வந்து சேருகிறாள்.இரவில் வேறு வழியின்றி ஒரு மாதின் வீட்டில் தங்குவதற்கு இடம் கேட்கிறான்.

  அந்தப் பெண் மீராவிடம் சிடுசிடுவென எரிந்து விழுந்துவிட்டு,ஜீவாவிடம் குழைந்து குழைந்து பேச,மீராவின் முகத்தில் எள் வெடிக்கிறது.இரவில் தூங்கும்போது அவனிடம் கோபத்தைக் காட்டுகிறாள்.போர்வையைக் கொடுத்தால்,”நீயே வெச்சுக்க,” என கடுப்போடு சொல்கிறாள்.

ஏதாவது பேசேன்,” என்கிறான்.

உன்கிட்ட பேசறதுக்கு என்ன இருக்கு?” என முகத்தில் அடித்தாற்போல் சொல்லிவிட்டு திரும்பி படுக்கிறாள்.அப்போது அங்கு சுவரில் ஒரு வண்ணத்துப்பூச்சியின் படத்தைப் பார்க்கிறான்.

  ஏய்,உனக்கு பட்டர்பிளை பிடிக்குமா?” என்கிறான்.

  எங்க எங்க?” என ஆசையாய் கேட்கிறாள்.

இதோ என்றதும் ஆசையாய் பார்க்கிறாள்.

  புடிக்குமாவா?என் காலத்து பொண்ணுங்க எல்லாருக்கும் பட்டர்பிளைன்னா ரொம்ப பிடிக்கும்,” என்கிறாள்.

 அவன் அவளைப் பார்க்கிறான்.

  என்ன பார்க்கறே,ஆனா உன்னைப் புடிக்காது என வெடுக்கென சொல்லிவிட்டு தூங்கிப்போகிறாள்.

 ஜீவா அந்த வண்ணத்துப்பூச்சியைப் பார்த்து,”ஓ பட்டர்பிளை,நீயாவது எங்களைச் சேர்த்து வெய்யேன்,” என்கிறான்.மறுநாள் அவன் எழும்போது,குளித்து முடித்த மீரா செடியின்மேல் அமர்ந்திருக்கும் வண்ணத்துப்பூச்சியை முத்தமிடுவதைப் பார்க்கிறான்;பாடுகிறான்.அப்போது இப்படி சுகமாய் ஒலிக்கிறது பாடல்.

ஆ: ஓ பட்டர்பிளை பட்டர்பிளை
    ஏன் விரித்தாய் சிறகை
    வா வா ஓ பட்டர்பிளை பட்டர்பிளை
    ஏன் விரித்தாய் சிறகை
    அருகில் நீ வருவாயோ
    உனக்காக திறந்தேன் மனதின் கதவை...
பெ: ஆ ஆ ஓ பட்டர்பிளை பட்டர்பிளை
     ஏன் விரித்தாய் சிறகை
     வா வா ஓ பட்டர்பிளை பட்டர்பிளை
     ஏன் விரித்தாய் சிறகை..
     எனையும்தான் உனைப்போலே வடித்தானே
     இறைவன் இணங்கும் தலைவன்..

ஆ: நெருங்கும்போது அகப்படாமல் பறந்துபோகிறாய்
     நிழலைப் போல தொடரும் என்னை மறந்து போகிறாய்
பெ: ஹஹா உனக்கு யாரும்
     தடைகள் இங்கு விதிப்பதில்லையே
      ஹஹா எனக்கும் கூட
      அடிமைக்கோலம் பிடிப்பதில்லையே
ஆ: உனை நான் சந்தித்தேன் உனையே சிந்தித்தேன்
     எனை நீ இணைசேரும்
     திருநாள் வருமோ பட்டர்பிளை பட்டர்பிளை
பெ: ஹா ஹா ஓ பட்டர்பிளை பட்டர்பிளை

பெ: மலர்கள் தோறும் நடந்து போகும் சிறிய ஜீவனே
    உந்தன் மனதைக் கொஞ்சம்
    இரவல் கேட்கும் எனது நெஞ்சமே
ஆ: ஹா ஹா விழிகள் நூறு கடிதம் போட்டும்
    பதில்கள் இல்லையே
     விரகதாபம் அனலை மூட்டும்
     பருவம் தொல்லையே
பெ: உனை நான் கொஞ்சத்தான்
     மடிமேல் துஞ்சத்தான்
    தினம் நான் எதிர்பார்க்கும்
    திருநாள் வருமோ பட்டர்பிளை பட்டர்பிளை
ஆ: ஓ பட்டர்பிளை பட்டர்பிளை
    ஏன் விரித்தாய் சிறகை
பெ: வா வா ஓ பட்டர்பிளை பட்டர்பிளை
     ஏன் விரித்தாய் சிறகை
ஆ:அருகில் நீ வருவாயோ
    உனக்காக திறந்தேன் மனதின் கதவை.
பெ: ஹாஹா ஓ பட்டர்பிளை பட்டர்பிளை பட்டர்பிளை



     இப்பாடலில் அந்தப் பெண் வண்ணத்துப்பூச்சியை ரசித்து பாட,அந்த ஆணோ அவளையே அந்த வண்ணத்துப்பூச்சியாய் எண்ணி பாடுவது அழகு.இனிமை நிறைந்த இப்பாடலைப் புனைந்தவர் வாலி.

   பாடலின் ஆரம்ப இசையே மனதை வருடி,பாடலைத் தொடர்ந்து கேட்கும் ஆர்வத்தைத் தூண்டிவிடுகிறது.

  இப்படத்தின் இயக்குனர் பி.சி.ஸ்ரீராம் என்பதால் இப்பாடல் காட்சியும் வெகு அழகு.மீரா வண்ணத்துப்பூச்சி சிறகை விரிப்பதுபோன்று தாவணியைக் காற்றில் படரவிடுவது கவிதைத்தனமான காட்சி.அதிகாலைப் பொழுதின் இருளில் பார்வையில் படும் குளம்,அன்னங்கள்,வண்ணத்துப்பூச்சிகள் என ஒட்டுமொத்த அழகையும் இப்பாடலில் காட்டியிருக்கிறார்.

   குதூகலமாய் ஒலிக்கும் ஆஷா போன்ஸ்லேயின் குழந்தைக் குரலோடு சேர்ந்து ஒலிக்கும் எஸ்.பி.பாலா ஐயாவின் குரல் விக்ரம் குரலோடு அற்புதமாய் பொருந்திப்போகிறது.ஏக்கத்தை அற்புதமாய் வெளிப்படுத்தியிருக்கிறார்.குறிப்பாக விரகதாபம் என்ற சொல்லை உச்சரிக்கும்போது..

   இப்பாடல் எனக்குள் ஏதேதோ எண்ணங்களை வாரி இறைத்தது.வண்ணத்துப்பூச்சியைப் பார்க்கும்போதெல்லாம் வாய் இந்தப் பாடலை முணுமுணுக்க ஆரம்பித்தது.என் பாடல் தொகுப்பில் இந்தப் பாடலும் வந்து சேர,தினமும் மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டே இருந்தேன்.இந்த நொடி வரையில் மனதில் ஆழமாய் பதிந்து போன இப்பாடலை இசைக்கல்வி பாட நேரத்தில் என் இரண்டாம் ஆண்டு செல்லங்களுக்கும் சொல்லித் தந்தேன்.அவர்களுக்கும் இப்பாடல் அதிகம் பிடித்துப்போனது. 

    
இதே பாடல் பின்னர் படத்தில் சோகமாகவும் ஒலிக்கிறது.எங்குச் சென்றாலும் துரத்திவரும் கொலைக்காரர்களுக்கு பயந்து எங்கெங்கோ ஓடிக்கொண்டே இருக்கும் மீராவும்,ஜீவாவும் கடைசியில் ஒரு சிறுவனின் வீட்டில் அடைக்கலமாகிறார்கள்.அதைத் தெரிந்து கொண்ட கொலைக்காரனின் ஆட்கள் அங்கும் வந்துவிட,அவளைக் காப்பாற்றும் முயற்சியில் கொல்லப்படுகிறான்.மீராவை அந்தச் சம்பவம் அதிகம் பாதித்துவிட,வாய்விட்டு கதறி அழுகிறாள்.எப்போதும் குறும்பும்,கலகலப்புமாய் இருப்பவள் சோகத்தின் உச்சத்தில் வாடிப்போய் கிடக்க,அவளை ஆறுதல் படுத்தும் விதத்தில் பாடுகிறான் ஜீவா.   

  அந்தி சாயும் பொழுதில் அழுது அழுது துவண்டு போயிருக்கும் பெண் அவளை மடியில் கிடத்தியும்,தோளில் சாய்த்துக்கொண்டும்,அவள் கூந்தலை வருடி,தலையிலும்,கன்னத்திலும் முத்தமிட்டு,தேற்றும் விதம் அழகியல் ததும்பும் கவிதை.வாருங்கள் அந்தச் சோக கீதத்தையும் பாடிப்பார்க்கலாம்.
 

ஓ பட்டர்பிளை பட்டர்பிளை
நீ எனக்கோர் குழந்தை
ஓ பட்டர்பிளை பட்டர்பிளை
நீ எனக்கோர் குழந்தை
அன்பே ஓ பட்டர்பிளை பட்டர்பிளை
நீ எனக்கோர் குழந்தை
மடியில் நான் உனைத் தாங்கி
படிப்பேனே புதிதாய் இனிதாய் கவிதை
ஓ பட்டர்பிளை பட்டர்பிளை

இருவர் வாழ்வில் இணையும்போது
விளையும் சோகங்கள்
இனிய காற்று வீசும்போது
கலையும் மேகங்கள்
இலை உதிர்ந்தபின்பு மீண்டும் பூக்கும்
வசந்த காலங்கள்
அன்று உனது கண்கள் எழுதிப் பார்க்கும்
இளமைக் கோலங்கள்
இனிமேல் சொர்க்கம்தான்...அது நம் பக்கம்தான்
இணைந்தே புதுப்பாடல் இசைப்போம் உயிரே
பட்டர்பிளை பட்டர்பிளை
அன்பே ஓ பட்டர்பிளை பட்டர்பிளை

அணைகள் தாண்டி அலைகள் பாயும்
நதிகள் அல்லவா?
துணிவு என்னும் துணையைக் கொண்டு
விதியை வெல்ல வா
இங்கு இனிமை பாதி கொடுமை பாதி
மனிதர் வாழ்விலே
என்றும் மழையும் தோன்றும் வெயிலும் தோன்றும்
சிறிய வானிலே
கலங்கும் கண்ணென்ன வலிக்கும் நெஞ்சென்ன
நினைத்தால் நிறைவேறும் திருநாள் வரலாம்
பட்டர்பிளை பட்டர்பிளை
அன்பே ஓ பட்டர்பிளை பட்டர்பிளை
நீ எனக்கோர் குழந்தை
அன்பே ஓ பட்டர்பிளை பட்டர்பிளை
நீ எனக்கோர் குழந்தை
மடியில் நான் உனைத் தாங்கி படிப்பேன்
புதிதாய் இனிதாய் கவிதை

அன்பே ஓ பட்டர்பிளை பட்டர்பிளை