Saturday, August 17, 2013

வளையல் பெண்ணின் உதயகீதங்கள் : கீதம் 15: வான்மேங்களே


       வான்மேகங்களே வாழ்த்துங்கள் (புதிய வார்ப்புகள் 1979)
 
 
 
 
 
 
     தமிழ்த்திரையிசையுலகில் எண்பதாம் ஆண்டு காலக்கட்டம் ஒரு பொற்காலம் என்பதை யாராலும் மறுத்துப் பேசமுடியாது.ஹிந்திப் பாடல்களையே பெருமளவில் விரும்பி கேட்டுக்கொண்டிருந்தவர்களை தமிழ்ப்பாடல்களைத் திரும்பி பார்க்கவைத்த காலம் அது.இளையராஜா எனும் அற்புத கலைஞரை நமக்குக் கொடுத்த காலம் அது.அந்தக் காலக்கட்டத்தில் வெளியான பாடல்களை இன்று கேட்டாலும் நம் இதயத்தினுள் இதமான ஓர் உணர்வை உணர முடிகிறது.

  அந்தக் காலம் தொட்டு இந்தக் காலம் வரையில் பல்லாயிரக்கணக்கான பாடல்கள் வந்து கொண்டிருக்கும் போதிலும் எழுபதாம் கடைசியில் தொடங்கி தொன்னூறாம் ஆரம்ப காலக்கட்டம் வரையில் வெளிவந்த பாடல்களே என்றும் சாகாவரம் பெற்றவையாக மக்களால் போற்றப்படுவதற்கு அந்தக் காலக்கட்டம் தந்த இனிமையான சூழல் என்பதை என் பார்வையில் உணர்கிறேன்.

  ஆம் மலேசியாவில் தோட்டப்புற வாழ்க்கை இனிமையாக இனித்துக்கொண்டிருந்த காலக்கட்டம்.இணையம்,அஸ்ட்ரோ என வசதிகள் இல்லாத அந்தக் காலத்தில் இசை ஒன்றுதான் மக்களைப் பெரிதும் மகிழ்விக்கும் அம்சமாக இருந்தது.என் அம்மா உள்பட மூத்த தலைமுறையினரை கேட்டால் அந்தக் காலத்து இனிமை இப்போது இல்லை என்பார்கள்.

  தோட்டப்புற வாழ்க்கையின் இனிமையோடு பெரிதும் ஒன்றி போயிருந்ததால்தான் அந்தக் காலக்கட்டத்தில் வந்த பாடல்கள் பலரின் மனதில் இன்றும் நிரந்தரமாய் தங்கியிருக்கின்றன.

  என்னைக் கேட்டால் என் வாழ்வில் வசந்தகாலம் நான் பட்டுப்பூச்சியாய் பறந்து திரிந்த தொன்னூறாம் ஆண்டு காலக்கட்டம்தான் என்பேன்.தோட்டப்புற வாழ்க்கையை அனுபவிக்கும் வாய்ப்பு கிடைத்ததால்தான் என்னால் எதனையும் இரசனையோடு அணுக முடிகிறது என நம்புகிறேன்.அதிலும் தமிழ்ப்பள்ளியில் பயின்ற அந்தக் காலக்கட்டம் இருக்கிறதே.வாழ்வின் வசந்த காலங்கள் அவை.தினம் கூவும் குயில்,பூமரங்கள்,கோயில், ஆகியவற்றோடு பள்ளிக்குப் பணியாற்ற வந்திருக்கும் ஆண் ஆசிரியர்கள் வரையில் எல்லாமும் என்னைப் பெரிதும் கவர்ந்தவை.என் பார்வையில் அந்தத் தோட்டப்புற வாழ்க்கையின் இனிமையோடு அதிகம் பொருந்தி போன ஒரு படம்தான் புதிய வார்ப்புகள்’.

  1979- ஆம் ஆண்டு பாரதிராஜாவின் இயக்கத்தில் பாக்யராஜ் முதன்முதலில் கதாநாயகனாக அறிமுகமான படம் இது.அவரே வசனம் எழுதியுள்ள இப்படத்தில் ரதி நாயகியாக நடித்திருந்தார்.கிராமத்தின் அழகிய சூழலை இப்படத்தில் கண்டு இரசிக்கலாம்.

  இளையராஜா ஐயாவின் இசையில் நம்தன நம்தன,வான்மேகங்களே,இதயம் போகுதே ஆகிய திகட்டாத கானங்கள் இடம்பெற்றிருந்தன.

  பள்ளிப் பருவத்தில் புதிதாய்,இளம் ஆண் ஆசிரியரைக் கண்டபோது மனம் குறுகுறுத்ததுண்டு எனக்கு.தோட்டத்தில் பெரும்பாலோர் சாதாரண அரைக்கால் சட்டை,வேலை உடை என இருக்கையில் முழுக்கை சட்டை,நீள காற்சட்டை,கழுத்துப் பட்டை,கடிகாரம் அணிந்து கம்பீரமாய் வந்து நின்ற ஆண் ஆசிரியர்கள் விபரம் புரியாத அந்த வயதில் எனக்குள் சிறு சலனத்தை ஏற்படுத்தியதுண்டு.ஏனோ அவர்கள் ஏசிவிட்டால் மட்டும் என்னால் தாங்கி கொள்ளவே இயலாது;தேம்பி தேம்பி அழுதுவிடுவேன்.கனவில் கூட அவர்களைக் கண்டு ஏங்கியதுண்டு.அத்தகைய ஈர்ப்பு பெரும்பாலும் எல்லா பால்ய வயது பெண்களுக்கும் இருந்திருக்கும்.அப்போது பதின்ம வயதில் இருந்த மூத்த பெண்கள் கூட பள்ளிக்கு வந்திருந்த ஆண் ஆசிரியர்களை மறைந்து பார்த்து இரசித்ததுண்டு.இப்படத்தை சில வருடங்களுக்கு முன்பு பார்த்தபோது எனக்கு அந்த ஞாபகம்தான் வந்தது.கண்டிப்பாக இப்படம் வெளிவந்த அந்தக் காலக்கட்டத்தில் எத்தனை பெண்கள் படம் தந்த பாதிப்பில் தோட்டத்துப் பள்ளியில் இருந்த ஆண் ஆசிரியர்களின் மீது ஈர்ப்பு கொண்டிருப்பார்கள்?நிஜத்தில் தோட்டப்புறத்துப் பெண்களுக்கும்,பள்ளி ஆசிரியர்களுக்கும் படத்தில் வந்ததுபோல் சுகமான காதல் எல்லாம் இருந்திருக்கும் எனவும் என் மனம் எண்ணிப் பார்த்தது.இனி இப்படத்தின் சுகமான காட்சிகளை கொஞ்சம் மீட்டுணர்ந்து வருவோமா?

     கிராமத்துப் பள்ளிக்கு ஆசிரியராக வந்து சேர்ந்த வாலிபன் ஒருவனுக்கும்,கிராமத்து அழகுப்பெண் ஒருத்திக்கும் இடையிலான காதலைச் சொன்ன படம் இது.

    புத்தகத்தில் மூழ்கியபடி பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்த சண்முகமணி(பாக்யராஜ்) என்ற வாலிபன் ஒருவன் தன்னை மறந்து தாயமங்கலம் கிராமத்தைத் தாண்டி விடுகிறான்.வேறொரு கிராமத்தில் இறங்கி நடந்து போகும்போது வழித்துணையாக சமூகநல சேவகியோடு இணைந்து நடக்கிறான்.அவனை அதிசயமாய் பார்க்கும் கிராமத்து சிறுவர்கள் அவன் புதிதாய் வந்திருக்கும் ஆசிரியர் என அறிந்ததும் தலை தெறிக்க ஓடுகிறார்கள்.

  கோயில் தலைவர் அவனை வரவேற்று அவனைப் பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லிக்கொடுப்பதைக் காட்டிலும் நல்ல பழக்கவழக்கங்களைச் சொல்லிக்கொடுப்பதே முக்கியமானது என்கிறார்.அவனும் தலையாட்டுகிறான்.

   அப்பள்ளியின் பெண் ஆசிரியை ஒருவருக்கு  மாணவர்கள் சக்கரவள்ளிக் கிழங்கு,கத்தரிக்காய் என தோட்டத்தில் விளைந்த காய்கறிகளையெல்லாம் கொண்டு போய் கொடுக்கிறார்கள்.இன்னொரு ஆசிரியையோ தன் கைக்குழந்தையையும் வகுப்பறையில் தொட்டில் கட்டி தூங்கவைத்துவிட்டு பாடம் நடத்துகிறார்.அந்தத் தொட்டிலை ஆட்டுவதற்கு ஒரு மாணவியை வேறு நியமித்திருக்கிறார்.அப்போது சண்முகமணி வெகு ஆர்வமாக சத்தம் போட்டு ஆத்திசூடி சொல்லிக்கொடுக்க,பக்கத்து வகுப்பு ஆசிரியை வந்து சத்தம் போடுகிறார்.இங்கே பக்கத்துல நாங்களும் இருக்கோம்,கொஞ்சம் ஞாபகத்துல வெச்சிக்குங்க,” என்கிறார்.அவருக்கு பயந்து சண்முகமணியும் சன்னமான குரலில் அறம் செய விரும்பு,ஆறுவது சினம் என பாடம் நடத்துகிறான்.

  ஒருநாள் சண்முகமணி ஆற்றங்கரைக்குச் சென்றபோது அவனிடம் படிக்கும் துரைசாமியின் அக்கா ஜோதி(ரதி) ஆற்றுக்கு தண்ணீர் எடுக்க வருகிறாள்.அப்போது அவளது இடுப்பிலிருந்த குடம் நழுவி உருண்டோட அவன் அதை கையில் எடுக்கிறான்.அவனைப் பார்த்ததும் அவளுக்குத் தன் தம்பி அவன் ஒரு பெண் ஆசிரியைக்குப் பயந்து கிசுகிசுப்பாக ஆத்திசூடி சொல்லித் தந்தது பற்றி சொன்னது நினைவுக்கு வர,சிரிப்பு வருகிறது.அவன் குடத்தை வைத்துவிட்டு நகர்ந்ததும் ஓடிப்போய் எடுக்கிறாள்.

 மறுநாள் அவள் கோயிலில் நவக்கிரகத்தைச் சுற்றிவிட்டு மரத்தடி பிள்ளையாருக்குச் சூட்டுவதற்காக பூ பறிக்க எத்தனிக்கையில் சண்முகமணி அங்கு அமர்ந்து புத்தகம் படித்துக்கொண்டிருப்பதைப் பார்த்துவிடுகிறாள்.அவன் குனிந்த தலையோடு புத்தகத்தில் மூழ்கியிருக்க அவள் வேண்டுமென்றே கோயில் மணியைச் சத்தமாக ஒலித்துவிட்டு இறைவனை வணங்கிவிட்டு பிரகாரத்தைச் சுற்றி வருகிறாள்.அவளைப் பார்த்துக்கொண்டே இருக்கும் அவன் வேண்டுமென்றே அவளை அழைப்பதுபோல் கைகளை பலமாக தட்டுகிறான்.அவள் திரும்பி பார்த்ததும் ஒன்றுமே தெரியாததுபோல் சாமி கும்பிட ஆரம்பிக்கிறான்.அவள் அவனை தூணின் பின்னால் இருந்து திருட்டுத்தனமாக நோக்க,அவனும் அவளை நோக்குகிறான்.

  அடுத்த சந்திப்பில் ஆற்றின் குறுக்கே இருக்கும் மரத்தண்டு பாலத்தில் ஜோதி நடந்துவர,எதிரே அவனும் நடந்து வருகிறான்.ஒருவர் மட்டுமே செல்ல முடியும் என்பதால் அவள் அவனை வழிவிடுமாறு கேட்கிறாள்.அவன் முரண்டு பிடிக்கிறா.தான் முக்கால்வாசி வந்துவிட்டதாகவும்,இடுப்பில் குடம் வேறு சுமந்து வருவதாகவும் சொல்கிறாள்.தனக்கு முன்வைத்த காலை பின் வைத்து பழக்கமில்லை என அவனும் அவளைச் சீண்டுகிறான்.மவளும் விட்டுக்கொடுப்பதாய் இல்லை.உடனே அவன் தன் கையிலிருந்த கதைப்புத்தகத்திலிருந்து சில வரிகளைச் சத்தமாக படிக்கிறான்.

  நேரம் ஆக ஆக இருட்டிக்கொண்டே வந்தது என அவன் கதையை ஒருமாதிரி வாசிக்க,அவள் கோபமாகிறாள்.ஒரு பந்தயம் வைக்கலாம்,தோற்றுப்போனால் அவன் வழிவிடவேண்டும் என்கிறாள்.என்ன பந்தயம் என அவன் கேட்க,தான் சொல்வதைத் திருப்பி சொல்லவேண்டுமென சொல்கிறாள்.

  இவ்வளவுதானே?” என அலட்சியமாய் சொல்கிறான்.

  இது யார் தெச்ச சட்டை?இது தாத்தா தெச்ச சட்டை என்ற வரிகளைச் சொல்ல சொல்கிறாள்.அவன் சரியாக சொல்ல,வேகமாக மீண்டும் மீண்டும் சொல்லவேண்டும் என்கிறாள்.வேகமாய்ச் சொல்லும்போது அவன் உளறிவிட இருவரும் சிரிப்பை அடக்கமாட்டாமல் சிரிக்கிறார்கள்.அப்போது கால் வழுக்கி விழப்போன அவள் மரத்தின் விழுதுகளைப் பிடித்துக்கொண்டு அந்தரத்தில் ஊசலாட,அவன் சட்டென்று அவளைத் தாங்கிப்பிடிக்கிறான்.அந்த முதல் ஸ்பரிஷம் இருவரையுமே தடுமாற வைக்கிறது.அவள் மிக அருகிலிருக்கும் அவன் முகத்தை வைத்த கண் வாங்காமல் பார்க்கிறாள்.இருவருக்குள்ளும் ஈர்ப்பு உண்டாகிறது.

  மறுநாள் காலையில் ஜோதியின் தம்பி பள்ளிக்கு நேரமாகிவிட்டது என புலம்புகிறான்.ஜோதி விறகு அடுப்போடு போராடி அவனுக்கு தோசை வார்த்து கொடுக்கிறாள்.சாப்பிட்டு முடித்த அவன் பள்ளிக்குப் போக தயங்குகிறான்.ஸ்கூலுக்கு மட்டம் போட திட்டம் போடறியா?” என அவள் அவனைத் திட்ட,அவன் புது வாத்தியாரு ரொம்ப கண்டிப்பானவரு,லேட்டா போனா திட்டுவாரு என அழுகிறான்.அவளை உடன் வந்து பள்ளியில் விட்டுவிட்டு போக சொல்கிறான்.தனக்குப் பிடித்தமானவனைப் பார்க்க அவளுக்கு வாய்ப்பு கிடைத்தால் சும்மா இருப்பாளா?ஆவலோடு கிளம்புகிறாள்.அவன் வகுப்பில் நுழையும்போது தூண் ஓரமாய் ஒளிந்து நிற்கிறாள்.

ஏண்டா லேட்டு?” என ஆசிரியர் கேட்டதுமே அவன் அக்கா என அலறுகிறான்.

வந்ததே லேட்டு,இதுல சிபாரிசு வேறா?” என திட்டுகிறான்.

பிள்ளைங்களுக்கு அடிச்சி சொல்லிக்கொடுக்கக்கூடாது,அணைச்சி சொல்லிக்கொடுக்கனும்னு சொல்லு,” என்கிறாள்.அவன் புன்னகை பூக்கிறான்.

லேட்டா வந்ததுக்கு சரியான காரணத்தைச் சொல்லு என அவளைப் பார்த்தபடி அவனிடம் சொல்கிறான் சண்முகமணி.

வீட்ல இருக்கற ஈர அடுப்புக்கு அது தெரியலையே,” என்கிறாள்.அவன் எழுந்து அவள் பக்கம் நெருங்கி வருகிறான்.அப்போது நகர்ந்த அவள் தலை பள்ளிக்கூடத்து மணியில் இடித்துக்கொள்ள,” இது ஒன்னும் கோயில் மணி இல்லை,ஸ்கூல் மணி என்கிறான்.அவள் சிரித்துக்கொண்டே அங்கு இருந்து ஓடிவிடுகிறாள்.

  அதன்பின்னர் ஒருநாள் கோயிலில் அவன் படித்துக்கொண்டிருக்கும்போது பிள்ளைகள் சத்தம் போட்டுக்கொண்டிருக்க அவன் தன்னையறியாது சைலண்ட் என்கிறான்.

  இது ஒன்னும் பள்ளிக்கூடம் இல்ல,கோயில் என்கிறாள் பதிலுக்கு.அப்போது இதமாய் ஒலிக்கிறது இந்தப் பாடல்.

  பாடலின் ஆரம்ப இசையே மனதைத் தூண்டில் போட்டு இழுக்க ஆரம்பித்துவிடுகிறது.இசை,வரிகள்,மலேசிய வாசுதேவனின் குரல் எல்லாமே அற்புத கலவையாய் இருக்கிறது இப்பாடலில்.

 இப்பாடல் படமாக்கப்பட்ட விதமும் வெகு அருமை.ரதி இது கோயிலு,பள்ளிக்கூடம் இல்லை என சொல்லிவிட்டு பார்க்கும்போது இப்பாடலின் ஆரம்ப இசை ஒலிக்க,பாக்யராஜ் அவரைப் பார்த்து மென்மையாக புன்னகைப்பார்.பள்ளியிலேயே தங்கிவிடும் பாக்யராஜ் சுகமாக பாய்,தலையணையில் படுத்து உறங்கி,கனவு காண்பதாய் இப்பாடல் காட்சி அமைக்கப்பட்டுள்ளது.சூரிய ஒளி இலைகளின் நடுவே காட்சி தருவதை அழகாய்ப் படம் பிடித்திருப்பார்கள்.பெண்ணவள் கோயில் மணியை ஒலித்து பாடலைப் பாட ஆரம்பிக்க,அவன் கைத்தட்டி அழைத்து பாடுவதாய் தொடங்கும் இப்பாடல்.சலசலத்து ஓடும் ஆற்று நீர்,இயற்கையாக தோற்றமளிக்கும் சூரியகாந்தி பூக்கள்,அடிவானம்,பச்சைப் பசேலென்ற புல்வெளி, அனைத்தும் அற்புதமாக அமைந்திருக்கும்.கோயிலில் மாலை கட்டி சூடுவேன் கண்ணா என அவள் பாடும்போது அவன் அவளை இறுக்கி அணைக்க,கிறங்கிப்போகும் அவள் குயிலோசை கேட்டதும் கண் மலர்த்தி பார்க்கும்போது மரக்கிளையில் குயில் தெரியும்.உடனே அவளும் கூ குக்குக்கூ என ஓசை எழுப்பிவிட்டு குயில் தங்களை வாழ்த்திப் பாடுவதாய் சொல்வாள்.பாடலின் ஊடே பள்ளி மணி ஒலிக்கப்பட்ட,சுகந்தமான கனவில் அது தன் மனம் கவர்ந்தவள் எழுப்பும் கோயில் மணி என்ற சுகமான கற்பனையில் அவன் தொடர்ந்து கனவில் மூழ்குகிறான்.அப்போது பள்ளி மாணவர்கள் கூட்டமாய் பாடம் படிக்க ஓடிவர,ரதியும் வெள்ளைச் சீருடை,சிவப்புப் பாவாடை அணிந்து ஒரு காலை மடக்கி உட்கார,அவன் ஆசிரியர் தோரணையில் பிரம்பு,கரும்பலகை சகிதம் அமர்ந்திருக்க,அமர்ந்து பார்க்க,பிள்ளைகள் அவளைத் தனித்துவிட்டு மறைந்துவிட,பள்ளியில் அவன் பாடல் சொல்வதைக் கேட்டு தான் ஆசை கொண்டதாக அவள் பாடுமிடம் அறிவார்த்தமான கற்பனையின் வெளிப்பாடு.அந்தக் காட்சியில் ரதி நடுவகிடு எடுத்து வழித்து சீவிய தலை,கனகாம்பரமும் மல்லிகையும் சேர்த்த பூச்சரம்,சிவப்பு வளையல்கள்,ஜிமிக்கி,பொட்டு என குடும்பப்பாங்காய் அழகாக இருப்பார்.பாடல் முடியும்போதே பள்ளிக்கு வந்துவிடும் பிள்ளைகள் ஆசிரியர் புன்னகை முகத்தோடு சுகமாய் தூங்கி கொண்டிருப்பதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பார்கள்.கனவு காணும்போது நிஜத்தில் நடப்பவையும் கனவில் சேர்ந்து வரும் இல்லையா?அதை அழகாக இப்பாடல் காட்சியில் கையாண்டிருக்கிறார் பாரதிராஜா.ஆரம்பம் முதல் இறுதிவரையில் இரசிக்கக்கூடிய வகையில் இப்பாடலின் இசையை வழங்கியிருக்கிறார் இளையராஜா.ரதிக்கும்,பாக்யராஜ்க்கும் இடையில் ஒலிக்கும் அந்தலாலலலலா லாலாலலா என்ற இசையே போதுமே.அவர் பத்திரிக்கைக்கு அளித்த ஒரு பேட்டியில் பாக்யராஜ் போன்றவர்கள் எல்லாம் கதாநாயகனாக நடிக்கும் படத்துக்கு நான் இசையமைக்க வேண்டியிருக்கிறது,” என தமாஷாக சொன்னதாகவும்,பின்னர் அவரின் திறமையைப் பார்த்து தான் சொன்ன அந்த வார்த்தைக்காக வருந்தியதாகவும் சொல்லியிருந்தார்.

 இந்த தேகம் மறைந்தாலும்

 இசையாய் மலர்வேன்

    என எஸ்.பி.பாலா ஐயா பாடிய வரிகள் நம் மலேசிய வாசுதேவன் ஐயாவுக்கும் பொருந்தும்.(இப்பாடல் கூட முதலில் எஸ்.பி.பாலா ஐயா பாடவேண்டிய பாடல்தான்.)அவரின் தேகம் மறைந்தாலும் குரல் மட்டும் காற்றில் கலந்து இது போன்ற இனிக்கும் கீதமாய் ஒலித்துக்கொண்டேதான் இருக்கிறது.

    உடன் இணைந்து பாடிய ஜானகியம்மாளையும் பாராட்டாமல் இருக்கமுடியவில்லை.ஏக்கம்,கிறக்கம்,நேசம் அனைத்தையும் சரிவிகிதமாய் வெளிப்படுத்தியிருக்கிறார்.இப்பாடலை எழுதியவர் யார் என அறியமுடியவில்லை.

  அன்பிற்கினியவனுக்கும்,தோட்டத்து தமிழ்ப்பள்ளியில் என்னால் மறக்கவே முடியாத ஆண் ஆசிரியர்களுக்கும் இப்பாடல் வரிகள்.

 

பெண் : வான்மேகங்களே வாழ்த்துங்கள் பாடுங்கள்

        நான் இன்று கண்டுகொண்டேன் ராமனை

        வான்மேகங்களே...

ஆண் : வான்மேகங்களே வாழ்த்துங்கள் பாடுங்கள்

       நான் இன்று கண்டுகொண்டேன் சீதையை

       வான்மேகங்களே....

 

பெண் : பாலிலே பழம் விழுந்து

        தேனிலே நனைந்ததம்மா

        பாலிலே பழம் விழுந்து

        தேனிலே நனைந்ததம்மா

        பூவிலே மாலை கட்டி சூடுவேன் கண்ணா..

        கூ குக்குக்கூ

        குயில் பாடி வாழ்த்தும் நேரம் கண்டேன்

ஆண்  : வான்மேகங்களே வாழ்த்துங்கள்...பாடுங்கள்

 

ஆண் : தென்றலே ஆசை கொண்டு

       தோகையை கலந்ததம்மா

      தென்றலே ஆசை கொண்டு

       தோகையை கலந்ததம்மா

        தேவதை வண்ணம் கொண்ட பூவை நீ கண்ணே

        மா அம்மம்மா நெஞ்சில் தீபம் ஏற்றும்

        நேரம் கண்டேன்

பெண் : வான்மேகங்களே வாழ்த்துங்கள்..பாடுங்கள்..

 

பெண் : பள்ளியில் பாடம் சொல்லி

       கேட்க நான் ஆசை கொண்டேன்

       பாவையின் கோயில் மணி

       ஓசை நீ கண்ணே

       டா டண்டண்டா

       சங்கின் ஓசை கேட்கும்

       நேரம் என்றோ

ஆண் : வான்மேகங்களே வாழ்த்துங்கள் பாடுங்கள்

பெண் : நான் இன்று கண்டுகொண்டேன் ராமனை

        வான்மேகங்களே...

 

 

No comments:

Post a Comment