Sunday, April 7, 2013

வளையல் பெண்ணின் உதயகீதங்கள்

கீதம் 4

விழியில் விழுந்து இதயம் நுழைந்து’  (அலைகள் ஓய்வதில்லை)





    எனக்கு மட்டும் சொந்தம் உனது
    இதழ் கொடுக்கும் முத்தம்
      
    அந்தப் பாடல் வரிகளை வெறுமனே படிக்கும்போது நம் கற்பனையில் தோன்றும் பிம்பம் வேறு.தாபத்தில் ஏங்குபவர்களின் உணர்ச்சி என நினைக்க தோன்றும்.ஆனால் அதே வரிகளை பாடலாக கேட்கும்போது அல்லது கேட்டபிறகு நம்முள் விரியும் பிம்பம் வேறு.முத்தம் என்ற தொடுதல் இன்பத்தை முக்கியமாக கருதி வெளிப்படுத்தப்பட்ட வார்த்தைகள் அல்ல அவை.ஓர் ஆணின் மீது அளவு கடந்த நேசத்தைச் சுமந்து நிற்கும் ஒரு பெண்ணின் உரிமைக்குரல்.ஏக்கம்,பிடிவாதம்,பொறாமை,சோகம்,
அளவு கடந்த அன்பு அனைத்தையும் குழந்தைத்தனம் இழைய வெளிப்படுத்தும் வார்த்தைகளாகதான் என் பார்வையில் அந்த வார்த்தைகள் பதிவாகியிருக்கின்றன.அந்தப் பாடலை நூற்றுக்கணக்கில் கேட்டு மகிழ்ந்ததில் அப்பாடல் முழுமையாய் என்னுயிரில் கலந்துவிட்டது.ஒருத்தி தான் நேசிப்பவனிடத்தில் சிறுகுழந்தை போன்று உரிமையோடு தேம்பும் விசும்பல் போன்றுதான் அந்த வரிகள் என்னுள் மிக ஆழமாய்ப் பதிந்திருக்கின்றன.
     ஆர்.டி.பாஸ்கரின் தயாரிப்பில் இயக்குனர் பாரதிராஜா திரைக்கதை,வசனம் எழுதி இயக்கிய அருமையான காதல் படம் அலைகள் ஓய்வதில்லை ஜூலை மாதம் 1981-ஆம் ஆண்டு வெளிவந்த இப்படத்தில்தான் நடிகர் கார்த்திக்கும்,ராதாவும் அறிமுகமானார்கள்.அப்படத்தில் இளையராஜா இசையமைத்து,வைரமுத்து எழுதிய பாடலான விழியில் விழுந்து,இதயம் நுழைந்து,உயிரில் கலந்த உறவே என்ற பாடலில் இடம்பெற்ற வரிகள்தாம் அவை.இதே படத்தில் காதல் ஓவியம்,தரிசனம் கிடைக்காதா,ஆயிரம் தாமரை மொட்டுகளே,வாடி என் கப்பக்கிழங்கே போன்ற பாடல்களும் இடம்பெற்றிருந்தன.
   இனி விழியில் விழுந்து பாடலின் சுவையில் திளைப்போம்.மிக மிக இனிமையான இப்பாடலை நன்கு உள்வாங்கி இரசிக்கவேண்டுமென்றால் படம் தொடங்கி,கார்த்திக்,ராதாவுக்குள் காதல் மலரும் தருணங்களையும் நாம் கொஞ்சம் அசை போட்டாக வேண்டும்.
    பிராமண குடும்பத்தைச் சேர்ந்த விடலைப் பையன் விச்சு(கார்த்திக்).அவன் அம்மா சங்கீதம் சொல்லிக்கொடுத்து சம்பாதித்து அவனை வளர்க்கிறாள்.அவனோ விடலைப் பையன்களுக்கே உரிய குறும்போடு நண்பர்களோடு ஊரைச் சுற்றி திரிகிறான்.அதே ஊரில் செல்வாக்கு நிறைந்த கிறிஸ்துவ குடும்பம் டேவிட்டுடையது.(தியாகராஜன்)அவனுடைய தங்கைதான் மேரி(ராதா).பட்டணத்தில் படித்துவிட்டு கிராமத்திற்குத் திரும்பும் மேரியிடம் வம்பு செய்வதில் விச்சுவுக்கும்,அவன் நண்பர்களுக்கும் தனி மகிழ்ச்சி.பார்க்கும் இடங்களிலெல்லாம் அவளைக் கேலி செய்கிறார்கள்.திமிர்ப்பேட்டை ராணி என பழிப்பு காட்டுகிறார்கள்.ஒரு தடவை அவளுடைய ஒலிப்பதிவு கருவியை எடுத்து அதில் கவிதையைப் பதிவு செய்கிறான் விச்சு.அப்போது சண்டை போட்டாலும் இரவில் தூங்கும்போது அந்தக் கவிதையைக் கேட்டு புன்னகை வருகிறது அவளுக்கு.
    ஆனால் விச்சுவுக்கோ சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் அவளை வாரிவிடவேண்டும் என்ற ஆசை.அதற்கேற்றாற்போல் ஒருநாள் விளையாட்டில் தோற்றுப்போனதற்குத் தண்டனையாக ராதா பாடவேண்டிய சூழல்.ஒளிபடைத்த கண்ணினாய் வா வா வா என அவள் பெருங்குரலெடுத்து கத்த,விச்சுவின் பட்டாளம் குஷியாய் அவளை நெருங்குகிறது.அவளுடைய குரலைக் காட்டிலும் கழுதையின் குரல் தேவலை என்றெல்லாம் பாடி அவளை அழவைக்கிறார்கள்.இரவில் தூங்கும்போது அவள் அவமானத்தால் கண்ணீர் வடிக்கிறாள்.
  மேரியை,விச்சுவின் அம்மாவிடம் சங்கீதம் கற்றுக்கொள்ள அனுப்புகிறார் டேவிட்.தன் வீட்டில் மேரியைப் பார்த்ததும் சும்மா இருப்பானா விச்சு?மேரி பாடும்போது வேண்டுமென்றே ஒரு கழுதையை இழுத்துக்கொண்டு வந்து வீட்டின் பின்னால் நிறுத்தி வைத்து,அடித்து கத்த வைக்கிறான்.அவன் செய்வது மேரியின் மனதைப் புண்படுத்துகிறது.அந்த வைராக்கியத்தில் விச்சுவின் அம்மா சொல்லிக்கொடுத்தவற்றை நினைவில் எந்நேரமும் ஓடவிட்டுக்கொண்டே இருக்கிறாள்.ஒரு தடவை தரிசனம் கிடைக்காதா?” என்ற பாடலைப் படித்துக்கொடுக்கும்போது விச்சுவின் அம்மாவுக்கு இருமல் வந்துவிட,மேரி தொடர்ந்து பாடுகிறாள்.அந்தக் குரலின் இனிமையிலும்,தெய்வீகத்திலும் மயங்கி விச்சு கூட எழுந்து வந்துவிடுகிறான்.
    அவனுக்கும் சங்கீத ஆர்வம் இருந்த காரணத்தால் அவனை மேரி பாடிய பாடல் என்னவோ செய்கிறது.அவள் மேல் அவனுக்குக் காதல் பிறக்கிறது.மேரி கண்டு கொள்ளாமல் போனாலும் தொடர்ந்து முயன்றதில் அவளுக்கும் அவன் மேல் காதல் பிறக்கிறது.அவர்களின் காதல் மேரியின் அண்ணி எலிஸியின் (சில்க்) காதில் விழுகிறது.விச்சுவின் அம்மாவிடம் இனி தங்கள் வீட்டில் வந்து பாடல் சொல்லிக்கொடுக்கும்படி சொல்லிவிடவே,விச்சுவால் மேரியைப் பார்க்க முடியாமல் போகிறது.மேரிக்கு ஒரு கடிதம் எழுதி,அதை தன் அம்மாவின் ஹார்மோனியப் பெட்டியில் செருகி வைக்கிறான்.
  மேரியின் வீட்டில் விச்சுவின் அம்மா அலைபாயுதே என்ற பாடலைச் சொல்லிக்கொடுக்க,சுரத்தே இல்லாமல் பாடுகிறாள் மேரி.அவள் எண்ணங்களும் ஒரு நிலையில் இல்லாமல் அலைபாய்ந்து கிடக்கிறது..திடீரென ஹார்மோனியப் பெட்டிக்குள்ளிருந்து விச்சுவின் கடிதம் வந்து விழுகிறது.எடுத்துப் பார்க்கிறாள்.
     

     விழியில் விழுந்து
     இதயம் நுழைந்து
     உயிரில் கலந்த உறவே

என்ற வரிகள் கண்ணில் பட,விச்சு கடற்கரையில் நின்று பாடுவதைக் கற்பனை செய்பவள் அடுத்த வரிகளை வாய்விட்டுப் பாடிவிட, சம்பந்தமில்லாமல் அவள் பாடுவதைப் பார்த்து விச்சுவின் அம்மா அதிர்ச்சியாக,அவள் வெட்கத்தில் அசடு வழிகிறாள்.அடுத்த காட்சியில் இரவும்,பகலும் உரசிக்கொள்ளும் அந்திப்பொழுதில் கடற்கரையில் காத்திருக்கும் காதலனைச் சந்திக்க ஓடிச் செல்கிறாள்.அப்போது இப்பாடல் சந்தோசமாக ஒலிக்கிறது.சுகமான இப்பாடல் காட்சியில் இருவதும் தினமும் பொன்னிற ஒளியில்,அந்தி மயங்கும் வேளையில் சந்தித்து மகிழ்கிறார்கள்.இவர்களைப் போன்றே இரவும்,பகலும்,அலையும்,கடலும் கூட உரசிக்கொள்கின்றனவாம்.முதல் சரணத்தோடு நின்று மீண்டும் சில காட்சிகளுக்குப் பிறகு சோகமாக ஒலிக்கிறது இப்பாடல்.

   மேரியின் தேர்வு முடிவுகள் வெளியாகவிருக்கின்றன.தான் தேர்வு எழுதப்போகும்போது அம்மா சொல்லியும் கூட, இந்த தேங்காய் நமக்கு இரண்டு வாரத்துக்கு கறிக்கு உதவும் என மறுத்துவிட்டுப் போகும் விச்சு,மேரிக்காக கோயிலில் தேங்காய் உடைத்து வேண்டுகிறான்.மேரி கேட்கும்போது அசடு வழிந்தபடி உண்மையைச் சொல்கிறான்.அவள் தேர்வில் தேர்ச்சியடைந்துவிட்டால் மேற்படிப்புக்காக அவள் வீட்டில் மீண்டும் பட்டணத்தில் அனுப்பி விடுவார்கள்.அவளைத் தினமும் பார்க்கமுடியாமல் போய்விடும்.எனவே அவள் தேர்வில் தோல்வி அடைந்துவிடவேண்டும் என வேண்டிக்கொண்டதாய் அவன் சொல்ல,சிரித்துவிடும் அவள் தானும் அதையே வேண்டிக்கொள்கிறாள்.ஆனால் எதிர்பாராவிதமாக மேரி தேர்வில் நல்ல தேர்ச்சியைப் பெற்றுவிட,அவள் காதலைத் தடுக்கும் எண்ணத்தில் சில்க் தன் கணவனிடம் சொல்லி,மேரியை கல்லூரிக்கு அனுப்பிவிட திட்டமிடுகிறாள்.
       மேரி அழுதுக்கொண்டே தன் நிலை குறித்து கடிதம் எழுதி,ஹார்மோனியப் பெட்டியில் வைத்து அனுப்புகிறாள்.மேரி மேல்படிப்புக்குச் செல்வதால் இனி சங்கீத வகுப்பு தேவையில்லை என சொல்லி,தட்சணை எல்லாம் கொடுத்து விச்சுவின் அம்மாவை அனுப்பி வைக்கிறான் மேரியின் அண்ணன்.வழியில் ஒரு கல்லில் சிக்கி,மாட்டு வண்டி தடுமாற,மேரி எழுதிய காகிதம் விச்சுவின் அம்மாவின் கண்களில் படுகிறது.எடுத்துப் படித்துப் பார்ப்பவள் அதிர்ந்து போகிறாள்.விசயம் வெளியே தெரிந்தால் தன் மகனைக் கட்டி வைத்து அடிப்பார்களே என்ற எண்ணத்தில் கடிதத்தைக் கிழித்து எறிகிறாள்.அது விழியில் விழுந்து,இதயம் நுழைந்து,உயிரில் கலந்த உறவே என ஒவ்வொரு வார்த்தையாக துண்டு துண்டாக போய் விழுகிறது.அவள் கடற்கரையில் காத்திருக்க,அவன் கடிதம் காணாமல் ஏங்கி நிற்கிறான்.மீண்டும் அப்பாடல் தொடர்கிறது.உனக்கு மட்டும் கேட்கும் எனது உயிர் உருகும் சத்தம் என்ற வரிகள் ஒலிக்கும் நேரத்தில் கார்த்திக் எதையோ உணர்பவனாய் அவளைத் தேடி ஓடுகிறான்.அதாவது அவளது உயிர் உருகும் சத்தம் அவனுக்குக் கேட்டுவிட்டதாம்.எத்தனை சுகமான கற்பனை?

  இப்பாடலின் ஒவ்வொரு வரியும் ஜீவனுள்ளவை.ஒரு பெண்ணுக்கு தான் நேசிக்கும் ஆண்மகன்தான் மிகச் சிறந்தவனாக தோன்றுவான்.எந்த விசயமாக இருந்தாலும் அவனிடம்தான் சொல்ல தோன்றும் முதலில்.யாராவது ஏசிவிட்டாலோ,அடித்துவிட்டாலோ,காயப்படுத்திவிட்டாலோ அன்புக்குரிய அவனிடம்தான் முதலில் முறையிட தோன்றும்.இந்தப் பாடலும் அப்படிதான்.கடிதத்தில் பரிமாறிக்கொள்ளப்படும் வரிகளாய் அமைந்திருக்கிறது. முதலில் சங்கீத ஸ்வரங்களில் ஆரம்பித்து,ஸாஸ நிநி என ஆரம்பிக்கும் ஸ்வரத்தில் அதே ராகத்தில் இளையராஜாவின் குரலில் விழியில் விழுந்து என ஆரம்பிக்கும்போதே மனதை வருட ஆரம்பித்துவிடுகிறது இப்பாடல். பொதுவாக ஆணின் மனதிலிருந்து எழும் வார்த்தைகளுக்கு ஆண் பாடகர்கள்தாம் குரல் தருவார்கள்.இப்பாடலில் விச்சு எழுதிய வரிகளை மேரி பாடுவது போன்று அமைக்கப்பட்டிருப்பதால் பெண்குரல் சசிரேகாவின் குரலே அதிகம் ஒலிக்கிறது.தகத்தோம் என்ற ஜதியில் மீண்டும் ஆண்குரல் வருகிறது.

   இப்பாடலின் பல்லவியில் அந்திப் பொழுதில் கடற்கரையில் காத்திருப்பதாக தூது விடும் வகையில் அமைந்திருக்கின்றன வரிகள்.முதல் சரணத்தில் விச்சு அவளை வர்ணிக்கிறான்.அவள் பட்டு உடுத்தினால் பட்டுப்பூச்சிகள் மோட்சம் பெறுமாம்.அவள் மல்லிகையைச் சூடிக்கொண்டால் ரோஜாவுக்குக் காய்ச்சல் வந்துவிடுமாம்.எத்தனை அழகான வரிகள் அவை?முதல் சரணம் முடியும்வரையில் காதல் ஏக்கத்தையும்,அபத்தங்களையும் இரசனையோடு சொல்லும் வரிகள் அதற்குப் பின் வலிகள் சுமந்து வெளிப்படுகின்றன.தன்னை கல்வி கற்க அண்ணன் வெளியூர் போக சொல்வதை காதலனிடம் சொல்கிறாள்.துடிக்கும் தன் நிலையை கரையில் எடுத்துப்போட்ட மீனோடு ஒப்பிடுகிறாள். பெண்களுக்கே உரிய குணங்களில் ஒன்று எந்த விசயமாவது அழவைத்துவிட்டால் உடனே நேசத்திற்குரிய ஆணுக்கு நாம் அழுதது தெரியவேண்டும்.அவன் நம்மை ஆறுதல் படுத்தவேண்டும். என்ற எதிர்பார்ப்பு.பின்னர் நாம் அழுதது தெரிந்துவிட்டதே என்று எழும் மெல்லிய கூச்சம் கூட அவன் மீதான நேசத்தையும்,உரிமையையும் அதிகப்படுத்தும்.இந்தப் பாடலில் மேரியும் அப்படிதான் அழுது முடித்த விழிகளோடு காத்திருப்பேன் என காதலனுக்குச் சொல்கிறாள்.அதேவேளையில் எது நடந்தாலும் தன் ஆணை வேறு எந்தப் பெண்ணுக்கும் கொடுக்கமாட்டேன் என்ற உறுதியோடு இருப்பதை,தனக்கு அவன் மீது இருக்கும் ஆழமான அன்பை,உரிமையை,ஏக்கத்தை,சோகத்தை,பொறாமையை எல்லாம் எனக்கு மட்டும் சொந்தம் உனது இதழ் கொடுக்கும் முத்தம் என்ற ஒரே வரியில் சொல்லிவிடுகிறாள்..இப்போது சொல்லுங்கள்??அந்த வரிகள் முத்தத்திற்காக ஏங்கும் மனநிலையைக் குறிப்பவையா??உன்னை வேறு எவளும் தொட்டுவிடக்கூடாது என்று தேம்பிக்கொண்டே ஒருத்தி பாடுவதுபோன்றதொரு பிம்பத்தை இப்போது உங்களால் கற்பனை செய்து பார்க்கமுடிகிறதா?இரவும்,பகலும் உரசிக்கொள்ளும் அந்திப்பொழுதில் மட்டுமல்ல,இரவும்,பகலும் உரசிக்கொள்ளும் வைகறைப் பொழுதில் கூட இப்பாடலைக் கேட்டபடி உங்கள் அன்பிற்கினியவர்களை நினைத்துப் பாருங்களேன்.அவர்களின் மீதான ஏக்கம் பலமடங்கு கூடும் என்பது திண்ணம்.இப்பாடலை எழுதி முடித்த இந்தப் பொழுது வரையில் என் நினைவில் நிறைந்திருக்கும் என் அன்பிற்கினியவனோடு சேர்த்து உங்களுக்கும் இந்தப் பாடல் வரிகள்.

ஸ க ம ப நி ஸா..
ஸா நி ப ம க ஸ..
மமபா பப பா.. கமப கமக ஸா..
நிநிஸ காக கஸஸா.. நிநிஸ காக மமபா..
ஸாஸ நிநி பாப மாம காக ஸாஸ நிநி ஸா

விழியில் விழுந்து
இதயம் நுழைந்து
உயிரில் கலந்த உறவே
விழியில் விழுந்து
இதயம் நுழைந்து
உயிரில் கலந்த உறவே
இரவும் பகலும் உரசிக்கொள்ளும்
அந்திப் பொழுதில் வந்துவிடு
அலைகள் உரசும் கரையில் இருப்பேன்
உயிரைத் திருப்பித் தந்துவிடு
விழியில் விழுந்து
இதயம் நுழைந்து
உயிரில் கலந்த உறவே



உன் வெள்ளிக் கொலுசொலி
வீதியில் கேட்டால்
அத்தனை ஜன்னல்களும் திறக்கும்
நீ சிரிக்கும்போது பௌர்ணமி நிலவு
அத்தனை திசையும் உதிக்கும்
நீ மல்லிகைப் பூவைச் சூடிக்கொண்டால்
ரோஜாவுக்குக் காய்ச்சல் வரும்
நீ பட்டுப்புடவை கட்டிக்கொண்டால்
பட்டுப் பூச்சிகள் மோட்சம் பெறும்.




விழியில் விழுந்து
இதயம் நுழைந்து
உயிரில் கலந்த உறவே
கல்வி கற்க காலை செல்ல
அண்ணன் ஆணையிட்டான்
காதல் மீன்கள் இரண்டில் ஒன்றை
கரையில் தூக்கிப் போட்டான்.


விழியில் விழுந்து இதயம் நுழைந்து
உயிரில் கலந்த உறவே
இரவும் பகலும் உரசிக்கொள்ளும்
அந்திப் பொழுதின் போது
அலையின் கரையில் காத்திருப்பேன்
அழுத விழிகளோடு

எனக்கு மட்டும் சொந்தம் உனது
இதழ் கொடுக்கும் முத்தம்
உனக்கு மட்டும் கேட்கும் எனது
உயிர் உருகும் சத்தம்


 உதயகுமாரி கிருஷ்ணன், பூச்சோங்


No comments:

Post a Comment