Friday, April 5, 2013

தவறுகள் உணர்கிறோம்



                                           தவறுகள் உணர்கிறோம் -  1

தெய்வம் வாழ்வது எங்கே???
தெய்வம் வாழ்வது எங்கே??
தவறுகளை உணரும் மனிதன் நெஞ்சில்.....


   சிம்புவின் நடிப்பில் என்னை மிகவும் கவர்ந்த படமான வானம் திரைப்படத்தில் இடம்பெற்ற அருமையான பாடல் அது.தாம் செய்த தவறுகளை உணரும் மனத்தில்தான் தெய்வம் வாழ்கிறது.நம் தவறுகளை எப்போது உணர்கிறோம்?உணர்ந்ததையும் சில வேளைகளில் மறைக்கிறோம்தானே? பிரிவு,உயிர் பிரியும் நேரம்,நமக்கு ஏற்படும் இழப்பு,கால ஓட்டம் ஆகியவைதான் நம் தவற்றை நமக்கு உணர வைக்கும் நானும் சில தவறுகளைச் செய்து உணர்ந்து வந்திருக்கிறேன்,தவறுகளை உணர்ந்த தருணங்களை உங்களோடு பகிர விழைகிறேன்.
     என் அனுபவங்களின் வாயிலாக நான் கண்டதில் முதன்மையாய் ஒரு மனிதனை அவனது தவறுகளை உணரச்செய்வது உயிர்’.ஓர் உயிர் பிரியும் அல்லது பிரியப்போகும் தருணத்தை உணரும்போது எந்த மனிதனும் தான் செய்த தவற்றையெண்ணி துடிக்கிறான்.
   ஒன்றாம் ஆண்டுக்கு ஆசிரியையாக சிறிது காலம் பணியாற்றியபோது நடந்த சம்பவம் இது.என் வகுப்பு மாணவர்கள் வெகு சுட்டி.என்னிடத்தில் மிக நெருக்கமாகவும்,அன்பாகவும் பழகுவார்கள்.எனக்கும் அதற்குமுன் அனுபவம் இராததால் முழுமையாய்க் குழந்தைகளைக் கையாளத் தெரியாத நிலை.வகுப்பில் சூரியா என்றொரு சிறுவன் இருந்தான்.ஒருநாள் தேர்வு சமயத்தில் சூர்யா பச்சை நிறத்தில் இருந்த ஒரு மூக்குக் கண்ணாடியைப் பள்ளிக்கு எடுத்து வந்திருந்தான்.அவனுடைய முகத்தைப் பெருமளவு நிறைத்திருந்த அக்கண்ணாடியை மாட்டிக்கொண்டு அவன் செய்த அலப்பறை இருக்கிறதே அப்பப்பா... அஃதிலும் தேர்வு நேரத்தில் அவன் அந்த மாதிரி செய்ததை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.ஏற்கனவே சில மூத்த ஆசிரியர்கள் நான் குழந்தைகளை அதிகமாய்க் கொஞ்சிக்கொண்டிருப்பதாக குற்றப்பத்திரிக்கை வாசித்துக்கொண்டிருந்தார்கள்.எனவே சூரியாவை கண்ணாடியைப் புத்தகப்பையில் வைத்துவிட்டு தேர்வைக் கவனிக்க சொன்னேன்.அவன் என் பேச்சைக் கேளாமல் தொடர்ந்து அந்தக் கண்ணாடியை அணிந்து கொண்டு வகுப்பறையைச் சுற்றி சுற்றி நடந்து கொண்டிருந்தான்.நான் சூரியாவின் கண்ணாடியைக் கழற்றி கரும்பலகையின் மத்தியில் மாட்டப்பட்டிருந்த ஆணியில் மாட்டி வைத்துவிட்டேன்.சூரியா அழவும் இல்லை,கத்தவும் இல்லை.தேர்வெழுதி முடித்தபிறகு எடுத்துக் கொடுப்பதாக சொல்லிவிட்டதால் அமைதியாக எழுதினான்.ஆனால் அடிக்கடி எழுந்து வந்து கரும்பலகையை அண்ணாந்து பார்த்துக்கொண்டே இருந்தது அந்தக் குட்டி உருவம்.அதற்குள் என் பாடம் முடிந்துவிடவே,வேறொரு வகுப்புக்குச் சென்றுவிட்டேன்.அந்தக் கண்ணாடியைப் பற்றி அப்படியே மறந்தும்விட்டேன்.
   பள்ளி முடிந்து நெடுநேரம் ஆனபிறகே ஞாபகத்திற்கு வந்து,வகுப்பறையைப் போய்ப் பார்த்தபோது அந்தக் கண்ணாடி அங்கு இல்லை.கடைசியாக வகுப்புக்குள் நுழைந்த ஆசிரியையும் தான் எடுத்துக்கொடுக்கவில்லை என்றார்.அக்கண்ணாடியை வேறு யாரோ எடுத்துவிட்டார்கள் என்பதை உணர்ந்தேன்.மனம் கொஞ்சம் உறுத்தியது.பிள்ளை அந்தக் கண்ணாடிக்காக எப்படியெல்லாம் ஏங்கியிருப்பான் என யோசிக்கையில் மனம் கனத்தது.வீடு திரும்பும் வழியில் அதே மாதிரியான பச்சைநிற கண்ணாடி ஒன்றை வாங்கி வைத்தேன்,மறுநாள் கொடுத்துவிடலாம் என்று.
  மறுநாள் சூரியா பள்ளிக்கு வரவில்லை.அதற்கடுத்த மூன்று நாளும் வரவில்லை.என்னவாகியிருக்கும் என யோசித்துக்கொண்டிருந்தபோது சூரியாவின் அம்மா என்னை அழைத்தார்.அழுதுகொண்டே அவர் சொன்ன விசயத்தைக் கேட்ட நான் துடித்துப் போனேன்.சூரியாவுக்குத் திடீரென காய்ச்சல் அதிகமாகி பரிசோதித்ததில் அவனுக்கு டிங்கி காய்ச்சல் கண்டிருப்பதை அறிந்திருக்கிறார்கள்.சூரியா மிகவும் மோசமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாக அவன் அம்மா அழுதபோது எனக்குள் ஏற்பட்ட குற்ற உணர்ச்சியை என்னால் கட்டுப்படுத்தவே முடியவில்லை.சூரியா இறந்துவிடுவானோ என்ற பயம் என்னை ஆக்ரமித்தது.வீட்டுக்குப் போனதும் முதல் வேலையாக பூஜை அறையில் மண்டியிட்டு அழுதேன்.நெடுநேரம் கண்கலங்க அவனுக்காக பிரார்த்தனை செய்தேன்.
   தொடர்ந்து இரண்டு நாள்கள் என்னால் சரியாக தூங்கவோ,சாப்பிடவோ முடியவில்லை.கழுத்து வலிக்க கண்ணாடியை அண்ணாந்து பார்த்துக்கொண்டே இருந்த அந்தக் குட்டிப்பையனின் உருவம் என் கண்ணுக்குள் வந்து என்னை இம்சைப்படுத்தியது.வெறும் இரண்டு வெள்ளி பொருளாக இருந்தாலும் அந்தக் கண்ணாடி அவனை எந்தளவுக்கு கவர்ந்திருக்கக்கூடும்?எடுக்க முடியாத தூரத்தில் இருந்த கண்ணாடி அவனை எந்த அளவுக்கு ஏமாற்றியிருக்கும்.கண்டிப்பாக வீடு திரும்பும்போது நான் வந்து எடுத்துக்கொடுத்துவிட மாட்டேனா என ஏங்கியிருப்பான் தானே?ஒருவேளை அவனுக்கு ஏதாவது ஆகிவிட்டால் என் மீதான அவனுடைய கடைசி பதிவு எப்படி இருந்திருக்கும்?நான் கண்ணாடியை வலுக்கட்டாயமாக அவனிடமிருந்து பறித்து,கரும்பலகை ஆணியில் மாட்டிவைத்த காட்சிதானே அவனுக்குள் கடைசியாய்ப் பதிவாகியிருக்கும்?
  குற்ற உணர்ச்சி என்னைக் கொன்று தின்றது.அறிந்து செய்யவில்லையென்றாலும் ஒரு பிஞ்சு உள்ளத்தை எவ்வளவு பெரிய ஏமாற்றத்திற்குள்ளாக்கி காயப்படுத்தியிருக்கிறேன்,அதைத் திருத்திக்கொள்வதற்கு எனக்கொரு வாய்ப்பு கிடைக்காதா என ஏங்கினேன்.நல்லவேளையாக அதிர்ஷ்டவசமாக சூரியா டிங்கி காய்ச்சலிலிருந்து மீண்டுவிட்டான்.அவன் குணமாகி பள்ளிக்கு வந்ததும் நான் செய்த முதல் வேலை,அவன் தலையை வருடிக்கொடுத்து,அவனிடம் ஈகோ பார்க்காமல் மன்னிப்பு கேட்டு,அவனுக்காக வாங்கி வைத்த கண்ணாடியைக் கொடுத்ததுதான்.அந்தக் கண்ணாடியைப் பார்த்தபோது அவன் அடைந்த பரவசம் என் குற்ற உணர்ச்சியைப் போக்கி,என்னை மகிழ்ச்சிப்படுத்தியது.




உதயகுமாரி கிருஷ்ணன்,பூச்சோங்

தொடரும்....











No comments:

Post a Comment