Friday, April 12, 2013

தவறுகள் உணர்கிறோம் 3: நள்ளிரவில் அழவைத்த பூனை


    இந்த வாரமும் என் தவறை உணர வைத்த ஓர் உயிரைப் பற்றிதான் பேசப்போகிறேன்.இந்த முறை மனித உயிரல்ல,ஒரு பூனையின் உயிர் எனக்கு என் தவற்றை உணர்த்தியது.நான் தமிழ்ப்பள்ளியில் படித்தபோது நடந்த சம்பவம் இது.
 அது தோட்டப்புறத் தமிழ்ப்பள்ளி.என் வீட்டுக்கு அருகில்தான் இருந்தது.எனக்கு என் பள்ளியை மிகவும் பிடிக்கும்.பள்ளி முடிந்தபின் கொஞ்சநேரம் விளையாடிவிட்டுதான் வீடு திரும்புவோம்.எங்களுக்கு மதியம் வகுப்பு இருக்கும்.அதே மாதிரி மாலையில் ஐந்து மணிக்கு மேல் தினமும் எங்களின் தலைமையாசிரியர் பள்ளிக்குப் பூப்பநது விளையாட தன் நண்பர்களோடு வருவார்.எங்களுக்குக் கொஞ்சநேரம் கணிதப் பாடம் கொடுப்பார்.பிறகு எங்களை விளையாட விட்டுவிடுவார்.என் வகுப்பறையின் பின்னால் உடல்நலக்கல்விப் பாடத்திற்காக அடுக்கு அடுக்காக இருக்குமே?அந்த மெத்தை இருந்தது.தனித்தனியே நகர்த்தி வைக்கக்கூடிய நான்கு அடுக்குகள்,கடைசி அடுக்கில் மெத்தை இருக்கும்.அதைதான் ஆக மேலே அடுக்கவேண்டும்.நாங்கள் மாலையில் திடலில் கண்டபடி ஓடிப்பிடித்து விளையாடிவிட்டு வகுப்பறைக்கு வந்து அந்த மெத்தையில் அமர்ந்து ஓய்வெடுப்போம்.
   எங்கள் பள்ளி தோட்டப்புற பள்ளி என்பதால் பள்ளியில் நிறைய காய்கறிகளும்,பப்பாளிப் பழமரங்களும் இருந்தன.சில வேளைகளில் நாங்கள் அடைகாத்து வைக்கும் பப்பாளிப் பழங்களை வேறு யாராவது திருடிக்கொண்டு போய்விடுவார்கள்.எனவே பப்பாளிப் பழங்களைப் பழுக்கும் முன்னரே பறித்து,அந்த அடுக்குகளின் அடியில் மறைத்துவைப்போம்.மதிய வகுப்பின்போது அந்தப் பப்பாளிப் பழத்தை வெட்டிச் சாப்பிடுவோம்.சில வேளைகளில் கத்தி கிடைக்காவிட்டால் அரைக்காயாய்ப் பழுத்திருக்கும் பப்பாளிப் பழங்களை தேங்காய் உடைப்பதுபோன்று உடைத்தும்,கழுவிச் சாப்பிட்டிருக்கிறோம்.
  ஒருதடவை பறித்து வைத்த பப்பாளிப் பழங்களை விடுமுறை சமயமென்பதால் அப்படியே மறந்துவிட்டோம்.விடுமுறை முடிந்து பள்ளி திரும்பியபோது பந்தப் பப்பாளிப் பழங்கள் கருப்பு நிறத்தில் அழுகிப்போய்,பார்ப்பதற்கே பயங்கரமான தோற்றத்தைத் தந்தன.அன்றுமுதல் அந்த அடுக்கில் பப்பாளிப் பழங்களை மறைத்துவைக்கக்கூடாது என்று வகுப்பாசிரியை சொல்லிவிட்டார்.அதன்பிறகு அது பூனையின் வீடாகிப்போனது.
   சில நாள் நானும் என் இன்னொரு தோழியும் வழக்கதைவிட சற்று அதிகமாக பள்ளியிலிருந்து விளையாடிவிட்டு வீடு திரும்ப ஆரம்பித்திருந்தோம்.அந்தச் சமயத்தில்தான் அப்பூனை அந்த மெத்தையின் அடியில் அதாவது கடைசி அடுக்கில் குட்டி போட்டிருந்தது.எனக்குப் பூனைகளை ஏனோ பிடிக்காது.எனவே,நானும் தோழியும் கலைந்திருந்த அந்த அடுக்குகளை ஒன்றாக அடுக்கி,அந்தப் பூனைக்குட்டிகள் கண்ணுக்குத் தெரியாதவண்ணம் ஒன்றாகப் போட்டுவிட்டு மேலே அமர்ந்து கதை பேசிக்கொண்டிருந்தோம்.அப்படியே மறந்தும்விட்டோம்.
  இரவு ஏழு மணிக்கு மேல்தான் வீடு திரும்பினோம்.குளித்து,சாப்பிட்டுவிட்டு,பாடம் படித்துவிட்டு உறங்க சென்ற வேளையில் திடீரென பூனைக்குட்டிகளின் ஞாபகம் வந்தது.அப்போதுதான் கலைந்திருந்த அந்த அடுக்குகளை ஒன்றாக மூடிவைத்து,அதன்மேல் அமர்ந்திருந்ததும்,மறுபடி கலைத்துப்போடாமல் வந்துவிட்டதும் ஞாபகத்திற்கு வந்தது.உள்ளே பூனைக்குட்டிகள் இருந்தனவே.எப்படி தாய்ப்ப்பூனை உள்ளே நுழைந்து குட்டிகளுக்குப் பாலூட்டும்?காற்று இல்லாமல் பூனைக்குட்டிகள் இறந்துவிடுமோ?என் அண்ணனிடம் சொன்னேன்.மணி பதினொன்றைத் தாண்டிவிட்டதால் எங்களுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை.கண்டிப்பாக பூனைக்குட்டிகள் காற்று இல்லாமலும்,தாய்ப்பால் இல்லாமலும் இறந்துவிடும் என்றார் அண்ணன்.அப்பாவும் அன்று வீட்டில் இல்லை.
    பயமும்,குற்ற உணர்வும் என்னைத் தாக்கியது.அப்பா இருந்திருந்தால் அந்நேரத்திற்குக் கண்டிப்பாய்ப் பள்ளிக்கு ஓடிப்போய்,அந்த அடுக்குகளை நகர்த்திவைத்துவிட்டிருப்பேன்.பேசாமல் தனியே போய்விடலாமா என்று கூட தோன்றியது.ஆனால் சுவாரஸ்யமாய் பேசிக்கிடந்த பேய்க்கதைகளெல்லாம் நினைவுக்கு வந்ததால் அமைதியாக படுத்திருந்தேன்.நெடுநேரம் உறக்கமில்லை.எப்படியோ உறங்கிப் போனேன்.
  காலையில் கண்விழித்ததுமே எனக்குப் பூனைக்குட்டிகளின் ஞாபகம் வந்தது.விரைந்து குளித்து,பள்ளிக்கு வழக்கத்தைவிட சீக்கிரமாக ஓடினேன்.பக் பக்கென்று அடித்துக்கொள்ளும் மனத்தோடு,முதல்வேலையாக அந்த அடுக்கை நகர்த்தி வைத்துவிட்டுப் பார்த்தால் உள்ளே தாய்ப்பூனையும்,குட்டிகளும் ஒன்றையொன்று அணைத்தவாறு படுத்திருந்தன.ஒருகணம் என் முகத்தில் புன்னகை தோன்றி மறைந்தது.அப்போதுதான் அந்த அடுக்குகளில் சிறுசிறு ஓட்டைகள் இருப்பதைக் கவனித்தேன்.அந்த ஓட்டையின் வாயிலாக தாய்ப்பூனை உள்ளே நுழைந்திருப்பதையும்,காற்றோட்டம் இருந்ததையும் அறிந்து நிம்மதியடைந்தேன்.அதன்பிறகு வெகுநேரம் பள்ளியில் விளையாடுவதை நிறுத்திக்கொண்டேன்.என்றாவது நேரமாகிவிட்டதென்ற அவசரத்தில் என்னை அறியாமல் மீண்டும் அந்தத் தவற்றைச் செய்துவிடக்கூடாதில்லையா?


உதயகுமாரி கிருஷ்ணன்

தொடரும்.....





No comments:

Post a Comment