Wednesday, April 10, 2013

தவறுகள் உணர்கிறோம்

தவறுகள் உணர்கிறோம்  -    2

   இரண்டாண்டுகளுக்கு முன் சிலாங்கூரில் உள்ள ஒரு பள்ளியில் சிலநாள் பணிபுரிந்தேன்.நிறைய ஆண்கள் ஆசிரியர்களாக இருந்த பள்ளி அது.ஆசிரியர்களின் எண்ணிக்கையும் அதிகமாக இருந்ததால் எனக்கு எல்லாரையும் நினைவில் வைத்துக்கொள்ள சற்று சிரமமாகவே இருந்தது.அவ்வேளையில் ஐம்பத்தைந்து வயது மதிக்கத்தக்க ஓர் ஆசிரியரைப் பார்த்தேன்.(அவருடைய பெயரைக் குறிப்பிட விரும்பவில்லை.) ஏனோ எனக்கு அவரைப் பார்க்கவே பயமாக இருந்தது.பள்ளிக்குப் புதிது என்பதால் நான் அலுவகத்திற்குச் செல்லும் படியைத் தவறவிட்டு வேறொரு கட்டிடத்திற்குள் நுழைந்துவிடுவேன் அடிக்கடி.ஒருமுறை அப்படிதான் நான் நடந்து போய்க்கொண்டிருந்தபோது எதிரே அந்த ஆசிரியர் நின்று கொண்டிருந்தார்.கைகளைக் கட்டியவாறு குறுகுறுவென்று என்னையே பார்த்துக்கொண்டிருந்தவர்,”ம்ம்ம் இந்தப் பக்கம்,” என்று கரகரப்பான குரலில் புன்னகையற்ற குரலில் அலுவலகத்துப் படியைக் காட்டினார்.நான் வெடவெடத்துப் போனேன்.முதல்முறையாக ஏன் அவரைக் கண்டால் இவ்வளவு பயம் வருகிறது என யோசிக்க ஆரம்பித்தேன்.
   அதன்பிறகு அவரைப் பார்க்கும்போதெல்லாம் ஓடி ஒளிந்துவிடுவேன்.அச்சமயத்தில்தான் அங்குள்ள சில ஆசிரியர்கள் என்னிடத்தில் அவரைப் பற்றி சொன்னார்கள்.அவருடைய குடும்பத்தில் நடந்த சில பிரச்சனையால் அவர் மனநிலை பாதிக்கப்பட்டு இருப்பதாகவும்,சில வேளைகளில் அவர் நிதானமின்றி எதையாவது செய்துவிடுவார் என்றும் என்னை எச்சரித்தார்கள்.அவர் பல ஆண்டுகள் அந்தப் பள்ளியில் வேலை செய்துவிட்டதாகவும்,அவருடைய வயது மற்றும் சேவை கருதி அவரைப் பள்ளியில் போதனை தவிர்த்து மற்ற வேலைகளைக் கொடுத்து வைத்திருப்பதாகவும் சொன்னார்கள்.ஏற்கனவே அவரைக் கண்டால் பம்மிவிடும் நான் அந்த விசயத்தைக் கேள்விப்பட்ட பிறகு இன்னும் உஷாரானேன்.அந்த வேளையில்தான் நான் பத்திரிக்கைகளுக்கு எழுதுவேன் என்ற விசயம் ஓர் ஆசிரியை மூலம் எல்லாருக்கும் தெரிய வந்து,அந்த ஆசிரியருக்கும் தெரியவந்தது.அவர் என்னைத் தேடி வந்து நேர்காணல் செய்தார்.நான் அவஸ்தையில் நெளிந்தேன்.அவருக்குப் புத்தகம் படிப்பதென்றால் மிகவும் பிடிக்கும் என்றார்.நிறைய எழுத்தாளர்களை அறிந்து வைத்திருந்தார்.எனக்கு அவரது நிலை பரிதாபத்தை உண்டு பண்ணியதால்,அவரைப் பார்த்தால் ஓரிரு வார்த்தைகள் பேசிவிட்டுப் போவேன்.குஷியாகிப் போன அவர் என்னிடத்தில் உரிமையாக தேடி வந்து பேச ஆரம்பித்தார்.ஒரு தடவை எனக்குப் பிடித்த வளையல் வாங்கி வந்து தந்தார்.என்னைப் பார்த்தால் என் உச்சந்தலையில் கையை வைத்து,”கோட் பிளெஸ் யூ மை சாய்ல்ட் என்று வாழ்த்திவிட்டுப் போவார்.என் அப்பா மாதிரிதானே என்று நானும் அதைத் தடுக்கவில்லை.
   அந்தப் பள்ளி ஆசிரியர்கள் என்னிடத்தில் வெகு அன்பாய் இருந்தார்கள்.சில சீனியர் ஆசிரியைகள் என்னைக் கன்னத்தில் செல்லமாய்த் தட்டி கொஞ்சிவிட்டும் போவார்கள்.அதையெல்லாம் பார்த்த அந்த ஆசிரியர் ஒருநாள் அதே மாதிரி திடீரென என்னைக் குழந்தையைக் கொஞ்சுவதுபோல் செல்லமாக என் கன்னத்தில் தட்டிவிட்டுப் போய்விட்டார்.அதை ஓரிரு ஆசிரியர்கள் பார்த்துவிடவே,என்னை எச்சரித்தனர்.அவர் சில சமயங்களில் நிதானமின்றி நடந்து கொள்வார்,ஜாக்கிரதை எனவே,நான் பழையபடி அவரைப் பார்த்தால் பதுங்க ஆரம்பித்தேன்.
  அப்போதுதான் ஷா ஆலம் தமிழ்மணிமன்றம் நடத்திய சிறுகதைப் போட்டியில் நான் எழுதிய நல்லதோர் வீணை செய்தே என்ற சிறுகதையும் சிறந்த கதைகளில் ஒன்றாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு,தொகுப்பில் இடம்பெற்றது.நூல்வெளியீட்டு விழா குறித்து ஆசிரியர்களிடம் தெரிவித்தபோது கூட்டத்தோடு சேர்ந்து கேட்டுக்கொண்டார் அவரும்.
  நூல் வெளியீட்டுப் பிறகு அந்த மண்டபத்தில் அமர்ந்தபோது என்னமோ பெரிய மனுஷி மாதிரி என்னிடமும் சிலர் வந்து கையொப்பம் பெற்றார்கள்.நான் கையொப்பம் இட்டுக்கொண்டிருந்தபோது என் பின்னாலிருந்து யாரோ புத்தகத்தை நீட்ட,அதிலும் கையொப்பம் இட்டுக்கொண்டிருந்தபோது என் தலையில் கைவைத்து வாழ்த்திய அந்த ஸ்பரிசத்தை அடையாளம் கண்டு திடுக்கிட்டு நிமிர்ந்தபோது அந்த ஆசிரியர் அங்கு இருந்தார்.பள்ளியிலிருந்து வந்த ஒரே ஜீவன்.எப்போதோ வாய்மொழியாக நான் சொன்ன விசயத்தை நினைவு வைத்திருந்து,மறவாமல் வந்து,பணம் கொடுத்து நூலையும் வாங்கியிருக்கிறார்.முதல்முறையாய் என்னவோ போலிருந்தது.எம் குடும்பத்தினரிடம் அவரை அறிமுகம் செய்தேன்.
  அந்தச் சம்பவம் எனக்கு என் தவற்றை உணர்த்தியது.அவரா மனநலம் சரியில்லாதவர் என ஒதுக்கி வைத்திருக்கிறார்கள்?பணம் கொடுத்து,நூல் வாங்கி தமிழுக்கு ஆதரவு தரும் அவரைவிட சிறந்தவர்களாய் அவரைக் குறை சொல்பவர்கள் இருந்திட முடியுமா?ஒருவேளை என் அப்பாவுக்கு இப்படி ஒரு குறை இருந்தால் இப்படிதான் ஓடி ஒளிவேனா?முதல்முறையாய் அவர் விசயத்தில் என் தவற்றை உணர்ந்தேன்.அதன்பிறகு அவரிடத்தில் அக்கறையாகவும்,அன்பாகவும் நடந்து கொள்ள ஆரம்பித்தேன்.அப்போதுதான் அவரிடத்தில் இருந்த பல நல்ல விசயங்களை அறிந்தேன்.அவர் கிள்ளானில் இருக்கும் ஒரு முதியோர் இல்லத்திற்கு வாரந்தோறும் காலை உணவு வழங்கி வருகிறார்.அவரைப் போன்றே குடும்பத்தினரின் ஆதரவு இல்லாத அவ்ர்களுக்காக அவர் நிறைய பணம் ஒன்றும் செலவு செய்துவிடவில்லைதாம்.ஆனால் கொடுக்கவேண்டும் என்ற அவரது மனசு?.அங்கு 25 பேர் இருந்தார்கள்.வாரந்தோறும் 25 இடியப்பம் வாங்கி கொண்டு போய்க் கொடுத்துவிடுவாராம்.மாதம் ஒன்றுக்கு எழுபது முதல் எண்பது வெள்ளி மட்டுமே செலவு செய்வதாக கூறினார்.அவருடைய நல்ல மனதை நான் போற்றினேன்.அவரிடத்தில் இருந்த அந்த நலல் விசயத்தை நானும் பின்பற்ற ஆரம்பித்தேன்.
    அப்பள்ளியில் இருந்த ஓர் ஆசிரியை சொன்னதுபோல இப்போது அவர் இப்படி இருக்கலாம்.ஆனால் ஒருகாலத்தில் அவர் எவ்வளவு சிறப்பான நிலையில் இருந்தாரோ,அதற்கு நாம் மரியாதை கொடுக்கவேண்டும்.அவரை யாராவது மிக அன்பாக கவனித்துக்கொண்டால் அவர் முழுமையாக அந்த மனச்சிதைவிலிருந்து மாறிவிடுவார் என நம்பினேன்.அதனால் அவரிடத்தில் சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் மிகவும் அன்பாக பழகினேன்.நான் அந்தப் பள்ளியில் இல்லாதபோதும் என்னை அலைபேசியில் அழைத்துப் பேசுவார் சில சமயம்.கடந்தாண்டு என்னுடைய அப்பா என்ற சிறுகதைக்குப் பரிசு கிடைத்தபோது அந்த நிகழ்வுக்கு ஏன் என்னை அழைக்கவில்லை என வருத்தப்பட்டார்.மலேசிய சிவசங்கரி என்று வேண்டுமென்றே கலாய்ப்பார்.ஒருமுறை அவர் எத்தனையோ வருடங்களுக்கு முன் சேமித்து வைத்திருந்த,பத்திரிக்கைகளில் வெளிவந்திருந்த(பழுப்பேறிய நிறத்தில் இருந்தது) கதைகளின் தொகுப்பைக் கொண்டு வந்து என்னிடம் கொடுத்து படிக்க சொன்னார்.இன்றுவரையில் பத்திரமாக வைத்திருக்கிறேன் அதை..


  - உதயகுமாரி கிருஷ்ணன்


தொடரும்....




No comments:

Post a Comment