சுட்டிக் குமரனும்,சில குட்டி
தேவதைகளும்
குமரனை ஆறு ஆண்டுகளுக்கு முன்தான்
முதன்முதலில் சந்தித்தேன்.செம்பனை ம்ர கொண்டைகள்,நீண்ட சடைகள்.இரட்டைக் கொம்புகள்,கழுத்தோடு
ஒட்டிக்கிடந்த கூந்தல் ஆகியவற்றுக்குச் சொந்தமான ஒன்றாம் ஆண்டு தேவதைகளின்
மத்தியில் கருத்த முகமும்,நீண்ட பெரிய
விழிகளுமாய்,வரிசை தப்பாத
அழகிய,பெரிய பற்கள் எல்லாம் தெரிய என்னைப் பார்த்து சிரித்த
குமரன்தான் என்னை முதலில் ஈர்த்தவன்.
முதலாம் ஆண்டுக்கு வகுப்பாசிரியையாக
நியமிக்கப்பட்டிருந்தேன்.எந்தவொரு முன் அனுபவமும் இல்லாமல் எப்படி குழந்தைகளைக்
கையாள்வது என எதுவும் தெரியாத நிலையில் அவர்கள் என் கண்களுக்கு மாணவர்களாக
தெரியவில்லை.கட்டியணைத்து கொஞ்சுவதற்காக எனக்குக் கிடைத்த பொம்மைகள் போன்றுதான்
தெரிந்தார்கள்.ஆண்கள்,பெண்கள் எல்லாருமே
எனக்குத் தேவதைகளாகதான் தெரிந்தார்கள்.எந்தவொரு சம்பிரதாயத்தையும் பின்பற்றவில்லை
நான்.அந்தக் குழந்தைகள் என் கையைப் பிடித்துக்கொண்டு உலா வந்தன.என் உடைகளை,தோடுகளை,வளையல்களைத்
தொட்டுப் பார்த்து இரசித்தன.அசந்த வேளையில் பட்டென்று என் கன்னத்தில்
முத்தமொன்றைக் கொடுத்துவிட்டு ஓடிப்போயின.எதையும் தடுக்கவில்லை நான்.பாட நேரத்தில்
மட்டுமே அவர்கள் என்னிடம் நெருங்கி வந்து சேட்டை செய்யாமல் தடுத்தேன்.மற்ற
நேரங்களில் அவர்களோடு நானும் குழந்தையாய் மாறிப்போயிருந்தேன்.அந்தக் குழந்தைகள்
என்னிடத்தில் அன்பாய் இருப்பதைப் பார்த்து அவர்களின் பெற்றோரும் என்னிடத்தில்
பிரியமாக இருந்தார்கள்.அடிக்கடி வகுப்பில் இருக்கும் எல்லா மாணவர்களுக்கும்
சேர்த்து எதையாவது சமைத்துக் கொடுத்து அனுப்புவார்கள்.நான் எல்லாரையும் ஒன்றாக
உட்காரவைத்து உணவை ஊட்டிவிடுவேன்.சிரிப்போடு,காணாமல் போயிருந்த முன்வரிசைப் பற்கள் தெரிய அவர்கள் வாயை பிளந்து வாங்கி
சாப்பிடும் அழகே அழகுதான்.
மாணவர்கள் என்னிடத்தில் அன்னியோன்யமாய்
இருந்தார்கள்.ஆண் மாணவர்களுக்குக் கழிவறைக்குப் போய் வந்தால் ‘ஜிப்’ பூட்டத் தெரியாது,நான்தான் ‘ஜிப்’ பூட்டிவிட்டு,இடைவார்பபட்டையை
அணிவித்துவிடுவேன்.உடல்நலக்கல்விப் பாடம் முடிந்ததும் பெண்பிள்ளைகளை ஓர் அறையில்
உடைமாற்ற சொல்லிவிட்டு ஆண்மாணவர்களை வகுப்பிலேயே உடைமாற்ற சொல்வேன்.ஆண்பிள்ளைகள்:
உடனே வகுப்பறை கதவைச் சாத்திவிட்டு,”பார்த்து டீச்சர்,பொம்பளைப் பிள்ளைங்க பார்த்துடப்போகுதுங்க,” என்பார்கள்.ஆனால் நான் பார்த்தால் பரவாயில்லையாம்.அவர்களின்
பெரிய மனுஷ தோரணை எனக்குச் சிரிப்பை உண்டாக்கும்.ஒரு தடவை வகுப்பறையில் ஒரே
சத்தம்.ஏதும் பிரச்சனையோ என்று பயந்து போய் எட்டிப் பார்த்தால் ஒரு சிறுவன்
மேசையின் மேல் ஏறி நின்று கொண்டு வெறும் உள்ளாடை மட்டும் அணிந்து கைகளை மடக்கி ‘போஸ்’
கொடுத்துக்கொண்டிருந்தார்.அடுத்தக்கட்டமாக மேசையில் இருந்து குதிக்கவும் தயாராக
இருந்தார்.அதை இரசித்துப் பார்த்துக்கொண்டிருந்தது ஒரு கூட்டம்.”இருங்கடா, கேமரா
எடுத்துட்டு வந்து எல்லாரையும் இப்படியே படம் பிடிச்சி வகுப்புல ஒட்டி வைக்கிறேன்,” என்று சொன்னதுதான் தாமதம்,உடனே வெள்ளைநிற சீருடையை எடுத்து மறைத்துக்கொண்டும்,மேசைக்கடியில் பதுங்கியும்விட்ட அந்தக் காட்சியை இப்போது நினைத்தாலும்
சிரிப்பு வந்துவிடுகிறது.
இப்படி எல்லா மாணவர்களும் என்னிடத்தில்
நெருங்கி வந்தாலும் குமரன் மட்டும் என்னைச் சமீபித்து நிற்கவே மாட்டான்.என்னைப்
பார்த்தால் பளீரென்று பற்கள் தெரிய சிரிப்பான்.கொஞ்சம்
வெட்கப்பட்டுக்கொள்வான்.நான் வேண்டுமென்றே அவனைக் குறுகுறுவென்று பார்ப்பேன்.உடனே
தலையைக் குனிந்து கொள்வான்.ஆனால் அதெல்லாம் கொஞ்சநாள்களுக்குதான்.அதன்பிறகு குமரன்
என்னை அடிக்கடி கலாய்த்துக்கொண்டே இருந்தான்.
என் கண்கள் கபில நிறத்தில் இருந்ததால் எனக்கு
சந்திரமுகி என்று பெயர் வைத்திருந்தான்.தினமும் நான் அணிந்து செல்லும் உடையைப்
பற்றி விமர்சனம் செய்வான்.ஒரு தடவை நான் கருப்பு நிற பாவாடை,சட்டை அணிந்து சென்றிருந்தேன்.என்னை நெருங்கி வந்தவன்,ஒருகணம் என்னை ஏற இறங்க பார்த்தான்.பிறகு, “நல்லாதான் இருக்கு,” என்று சொல்லிவிட்டு சிரித்துக்கொண்டே
ஓடிவிட்டான்.பிரிதொருநாள் விளையாட்டுப் போட்டிக்கான பயிற்சிகள் இருந்ததால் நான்
விளையாட்டு உடையில் சென்றிருந்தேன்.குமரனுக்கு ஒரே கோபம்.
“நீங்க என்னா
ஆம்பளைப் பிள்ளையா?ஏன் இப்படி சட்டை
போட்டுக்கிட்டு வந்திருக்கீங்க?எனக்குப் பிடிக்கல
என்பான்.அதே மாதிரி கால் பாதத்தை முழுமையாய் மறைக்கும் காலணி அணிந்தாலும்
அவனுக்குப் பிடிக்கவில்லை.
“இந்த மாதிரி காலணி
போடாதீங்க,பொம்பளைப் பிள்ளை மாதிரி வார் உள்ள செருப்பு போட்டுட்டு
வாங்க,” என்று கோபமாக சொல்லிவிட்டுப் போய்விட்டான்.அன்று அவன் என்னைப்
பார்க்கவே இல்லை.பெரும் கோபத்தில் இருந்தான்.
சில சமயங்களில் வகுப்பறையில் குமரனின் சேட்டை
தாங்க முடியாததாக இருக்கும்.கரும்பலகை அழிப்பானை எடுத்து முகத்தில்
தேய்த்துக்கொள்வான்.முகம் நிறைய பௌசர் போட்டமாதிரி வெள்ளையாய் இருக்கும்,மற்ற குட்டி தேவதைகள் குமரனைப் பார்த்து சிரிக்கும்.எனக்கும்
அவனைப் பார்த்து சிரிப்பு வந்துவிடும்,அடக்கிக்கொண்டு
கண்டிப்பேன்,ஒருதடவை வகுப்பில்
இருந்த ஒரு பெண்பிள்ளையை மாதிரி எப்படியோ இழுத்துப் பிடித்து அவனும் ஒரு செம்பனை
கொண்டை போட்டிருந்தான்.
இப்படி
எவ்வளவோ சேட்டைகள் செய்தாலும் குமரனின் மீது எனக்குக் கோபமே வரவில்லை.அவனுடைய
செய்கைகள் எதுவுமே எனக்குத் தண்டிக்கக்கூடியதாகவோ,அதிகப்பிரசங்கித்தனமாகவோ தோணவில்லை.அவனுடைய ‘குழந்தைமையை’ நான் அழிக்க
விரும்பவில்லை.
குமரன் வெகு அழகாய் படம் வரைவான்.இறைவனின்
உருவபப்டங்களை அப்படியே பார்த்து வரைவான்.ஒரு தடவை நான் பள்ளிக்கு சேலை அணிந்து
சென்றேன்.குமரன் என்னைப் பார்ப்பதும்,நான் பார்த்தால்
தலையைக் குனிந்து கொள்வதுமாய் இருந்தான்.என்னடா செய்கிறான் என்று பார்த்தால் ஏதோ
படம் வரைந்து கொண்டிருந்தான்.நான் அருகே போனதும் என்னிடம் காட்டாமல் ஒளித்து
வைத்துக்கொண்டான்.இரண்டு தினங்களுக்குப் பின் குமரனின் பக்கத்தில் அமர்ந்திருந்த
ஒரு குட்டிப் பெண் என்னிடம் சொன்னாள்.குமரன் அவளிடம் சொல்லி இருக்கிறான்.”டீச்சர் அன்னைக்கு புடவையில ரொம்ப அழகா இருந்தாங்க,நானு மயங்கி போயிட்டேன்,அவங்களை அப்படியே படமா வரைஞ்சி என் ரூம்ல மாட்டி வெச்சிருக்கேன்,அன்னாடம் நான் அந்தப் படத்தைப் பார்ப்பேன்,” என்று சொல்லியிருக்கிறான்.
குமரனிடம் அது குறித்து கேட்டபோது அவனுக்கு
வெட்கம் வந்துவிட்டது.அவனுடைய வெட்கத்தை நான் வெகுவாய் இரசிப்பேன்.ஒரு தடவை
வகுப்பில் இருந்த ஒரு மாணவி மற்ற மாணவர்களிடம்,”உதயா டீச்சர் என் சித்தி தெரியுமா?” என்று சொல்லி
வைக்க வகுப்பு முழுக்க பரவிட்டது.குமரனுக்கு ஒரே கோபம்,அவனால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.அவன் மூலம் எனக்கு விசயம் தெரிந்தபோது
எனக்குக் கொஞ்சம் பதற்றமாகிவிட்டது,காரணம் அந்த
மாணவிக்கு கல்யாணமாக வேண்டிய வயதில் ஒரு சிற்றப்பா இருந்தார்.அந்தச் சிற்றப்பா
மீது அவளுக்கு அதிக பாசம்,ஏதும்
தப்பாகிவிடப்போகிறது என்று உடனே வகுப்பில் எல்லா மாணவர்களின் முன்பும் இனிமேல்
இப்படி விளையாட்டுத்தனமாக சித்தி,அத்தை என்றெல்லாம்
சொலல்க்கூடாது என்று சொல்லிவைத்தேன்.அதன்பிறகே குமரன் இயல்பானான்.
குமரனைக் கடைசியாய் கடந்த ஆண்டு
பார்த்தேன்.வளர்ந்திருந்தான்.ஆனாலும் குழந்தைத்தனமும்,குறும்புத்தனமும் அவனைவிட்டு விலகாமல் இருந்தன.எனக்கு அவசர வேலை இருந்ததால்
கொஞ்சநேரம் பேசிவிட்டுக் கிளம்பிவிட்டேன்.
ஒன்றாம் ஆண்டு குழந்தைகளோடு நான் கழித்த அந்த
அழகான நாள்கள் மிக இனிமையானவை.மீண்டும் ஒருமுறை அந்தக் குட்டி தேவதைகளோடு
இன்புறும் காலம் வருமா என ஏக்கத்தோடு காத்திருக்கிறேன்...
உதயகுமாரி கிருஷ்ணன்,பூச்சோங்
No comments:
Post a Comment