வளையல் பெண்ணின் வாலுப்பையனும் வசப்பட்ட வாகனமும்
குத்தீட்டி
குமுதா தன் அரிசிப் பற்களை நறநறவென கடித்தபடி தினக்குரல்
அலுவலகத்தில் குறுக்கும் நெடுக்கும் நடந்து கொண்டிருந்தார்.நான்கு நாள்கள் தீபாவளி
ஷாப்பிங் போயிருந்த சமயத்தில் அவரது ஈட்டியை யாரோ துருப்பிடிக்கவைத்துவிட்டதே
அவரது கோபத்திற்குக் காரணம். அந்தச் சம்பவத்திற்குக் காரணமான தண்ணி வண்டி
தங்கையா தன் வண்டியோடு எங்கேயோ தலைமறைவாகி விட்டிருந்தார்.
நடந்தது ஏதும் அறியாமல் விசிலடித்தபடி உள்ளே
நுழைந்த வாலுப்பையனிடம் ஜனாதிபன் பாலன் நடந்ததைச் சொல்ல,தான் போய் குத்தீட்டி
குமுதாவுக்கு வேறொரு புதிய ஈட்டி வாங்கி வருவதாக சொல்லிவிட்டு நாதன்
கணேஷ்குமாரை அழைத்துக்கொண்டு பழமை வாய்ந்த ஓர் இரும்புக் கடைக்குப்
புறப்பட்டார்.அவர் எதிர்பார்த்தமாதிரியே அற்புதமான ஈட்டி ஒன்று கிடைத்துவிட,அதைக்
கையில் வைத்துக்கொண்டு விதவிதமாக போஸ் கொடுக்க,உடனே
படம்பிடித்து ஃபேஸ்புக்கில் ஏற்றினார் நாதன்.ஈட்டிக்கு வேண்டிய பணத்தைக்
கொடுத்துவிட்டு புறப்படுகையில் அவர் கண்களில் ஒரு வினோதமான வாகனம் படவே,உடனே அதனருகில் சென்ற வாலுப்பையன் அந்த வாகனத்தைப் பற்றி கடைக்காரரிடம்
கேட்டார்.
அந்த வாகனம் தான் அந்தக் கடையை வாங்கும்போதே
அங்கு இருந்ததாகவும் விரைவில் பழைய இரும்பு கடையில் அதை விற்கப்போவதாகவும் சொன்ன
கடைக்காரரிடம் தான் அந்த வாகனத்தை இரு தினங்களுக்கு வாடகைக்கு எடுத்துச் செல்வதாக
சொல்லி,பணத்தைக் கொடுத்துவிட்டு புறப்பட்டார் வாலுப்பையன்.
கடகடவென பெரும் சத்தம் கேட்கவே,காதைப்
பொத்திக்கொண்டே வெளியே வந்த ராஜசோழன் வினோதமான வாகனத்தைக் கண்டதும்
குழப்பமானார்.வாலுப்பையன் ராஜசோழனோடு பி.ஆர்.ராஜனின் அறைக்குள் நுழைந்தார்;விசயத்தைச் சொல்ல ஆரம்பித்தார்.
“சார்,இது
சாதாரண வாகனமில்லை சார்,நாம் நினைச்ச காலக்கட்டத்துக்கு
நம்மைக் கொண்டு செல்லக்கூடிய ‘டைம் மெஷின்’ என வாலுப்பையன் சொல்ல பி.ஆர்.ராஜன் ஆர்வமானார்.இவ்வருட
தீபாவளிக்கு தினக்குரல் வாசகர்களை மகிழ்ச்சிப்படுத்தும் வண்ணம் ஏதாவது
செய்யவேண்டும் என எண்ணிக்கொண்டிருந்த அவர் சில வாசகர்களை குலுக்கல் முறையில்
தேர்ந்தெடுத்து,அந்த வாகனம் மூலம் எண்பதாம் ஆண்டு காலக்கட்டத்திற்கு
ஏற்றிச் சென்று தோட்டப்புறத்தில் தீபாவளி கொண்டாட வைக்கலாம் என திட்டம் போட்டார்.ராஜசோழன்
உடனே விரைந்து அறிவிப்பை வெளியாக்கினார்.கௌரி மணியம் ஃபேஸ்புக்கிலும்,வாட்ஸ் அப்பிலும் விசயத்தைப் பரப்ப,ஆர்வமான அனைவரும் விரைந்து தங்கள் விபரங்களை அனுப்பி வைத்தனர்.அவர்களில்
குலுக்கல் முறையில் சில வாசகர்கள் தேர்வாகினர்.
தீபாவளிக்கு ஒரு வாரம் முன்னரே குறிப்பிட்ட
திகதியில் அனைவரும் தினக்குரல் அலுவலகத்தின் முன் ஒன்று கூடியிருந்தனர்.எண்பதாம்
ஆண்டு காலத்திற்குப் பயணிக்கப்போகிறோம் என்பதால் க.கண்ணன்,இல.நவரத்னம்,வேணுகோபால் பத்மினி,வேலு ராமரெட்டி,ஆர்.லோகநாதன்,சு.விக்னேஸ்வரன்,அ.நடராஜா,கோயாங் வசந்த்,செல்வராஜூ குமரன்,சு.ராமன்,ஆர்.தர்மராஜ்,கே.இளம்தமிழ்,பி.ஏ.ஜீவேந்திரன்,எல்.எம்.பூபாலன்,சிவாலெனின்,வே.ம.அருச்சுணன்,பாலகோபாலன்
நம்பியார்,பாலசேனா,மு.குமாரவேல்,மு.சரவணமூர்த்தி,எஸ்.வாசன்,கோ.இராமசாமி,கு.உ.மகாலிங்கம் பத்மினி,சங்கரன் நாகப்பன்,கேம்.எஸ்.சரவணன்,கம்பத்து பையன்,மா.கதிரவன்,எஸ்.என் மணியம்,எல்.தர்மராஜா ஆகியோர் ஆகியோர்
ரஜினி,கமல்,ராமராஜன்,மோகன் ஸ்டைலில்
உடுத்திக்கொண்டு வந்திருந்தனர்.வாசகிகளான மீனாசெல்வம்,ச.தமிழரசி,ஸ்ரீ,பொன்.வனஜா,மனோன்மணி சுப்ரமணியம்,ஜெயந்தி விஸ்வநாதன்,பாரதி செல்லம்மாள்,பத்மினி மணியம்,திஷாந்தினி,எஸ்.மலர்,மலர்விழி ஆகியோர் நதியா,அமலா,ராதா,ரேவதி மாதிரி அழகாக உடுத்திக்கொண்டு வந்திருந்தனர்.பி.ஆர்.ராஜன்,ராஜசோழன்,எஸ்.பி.சரவணன்
மூவரும் சகலகலா வல்லவன் பாணியில் தகதகவென உடுத்தியிருந்தார்கள்.
புது ஈட்டி கிடைத்துவிட்ட மகிழ்ச்சியில் குத்தீட்டி
குமுதா நதியா கொண்டை போட்டு ஈட்டி வடிவிலான சிறிய பின்னை கொண்டையில்
சொருகியிருந்தார்.தலைமறைவாகயிருந்த தண்ணி வண்டி தங்கையா தன் லொடலொட வண்டியில்
தினக்குரலின் வாராந்திர எழுத்தாளர்களான சுதந்திரன்,டாக்டர்
ஜான்சன்,தினகரன்,புவனேஸ்வரன்,மலாக்கா முத்துகிருஷ்ணன்,மார்கரெட்,மீராவாணி,விமலா ஆகியோரை ஏற்றிக்கொண்டு
வந்தார்.
வாலுப்பையன் வந்ததும் அனைவரும்
ஒவ்வொருவராக பிரமிப்போடு வண்டியில் ஏறி உட்கார ஆரம்பித்தார்கள்.ஓர் ஓரமாக குத்தூசியும்
ஏறி அமர்ந்தது.யாரையும் குத்தாமல் உட்காரும்படி ராஜசோழன் அதை எச்சரித்து
வைத்தார்.சங்கீதா ராமச்சந்திரன் அனைவரும் சரியாக இருக்கிறார்களா என எண்ணிப்
பார்த்துக்கொண்டார்.நாகேந்திரன் வேலாயுதம் வாகனத்தில் இருக்கும்போது
பயணிகள் எவ்வாறு நடந்து கொள்ளவேண்டும்;வாகனத்தினுள் எதைச் செய்யலாம் எதைச்
செய்யக்கூடாது போன்றவற்றை விளக்கினார்.தண்ணி வண்டி தங்கையா யாருக்கும்
தெரியாமல் அந்த வாகனத்தின் பின்னால் தன் வண்டியையும் சேர்த்து கட்டியிருந்தார்.
சரியாக
காலை எட்டு மணிக்கு கண்ணாடிக் குவளைகள் விழுந்து நொறுங்கியமாதிரி ஒரு சத்தத்துடன் ‘கால
இயந்திர வாகனம்’ புறப்பட்டது.எங்கெங்கோ சுரங்கப் பாதைகளில்
எல்லாம் புகுந்து புகுந்து,சில இடங்களில் உயரத்தில் பறந்தும்
வாகனத்தைச் செலுத்திக்கொண்டிருந்தார் வாலுப்பையன்.
அரைமணி நேரத்தில் வாலுப்பையன் தன்
வாகனத்தை நிறுத்தியபோது ஓர் அழகான தோட்டப்புறம் கண்ணுக்குத் தெரிந்தது.
“புதிய வானம்,புதிய
பூமி” என பாடியபடி வேலுராமரெட்டி முதலில் இறங்கினார்.அவரைத்
தொடர்ந்து அனைவரும் இறங்கினர்.கடைசியாக இறங்கிய தண்டி வண்டி தங்கையா தன்
வண்டி பத்திரமாக வந்து சேர்ந்ததா என்பதை உறுதி செய்து கொண்டார்.தாங்கள் 1985-ஆம்
ஆண்டில் இருப்பதாக க.கண்ணன் சொன்னார்.ஸ்ரீ,மீனாசெல்வம்,மீராவாணி ஆகியோர் வீட்டிலிருந்து சுடசுட
நாசிலெமாக் சமைத்து எடுத்து வந்திருந்தனர்.ஆண்கள் அருகிலிருந்த
வாழைத்தோட்டத்திலிருந்து சில வாழை இலைகளைப் பறித்து வர,பெண்கள்
உணவு பரிமாற ஆரம்பித்தனர்.உணவு உண்டபின் அந்தத் தோட்டத்திலிருந்த குடியிருப்புப்
பகுதியை நோக்கிப் புறப்பட்டார்கள்.
அனைவரும் ராஜசோழன் சொன்னபடி எண்பதாம்
ஆண்டு உடையலங்காரத்திலேயே இருந்ததால் அங்கிருந்த தோட்டவாசிகளின் கண்களுக்கு
எதுவும் வித்தியாசமாக படவில்லை.ஒவ்வொருவரும் தங்கள் வீட்டில் இவர்கள் தங்கி
கொள்ளலாம் என சொல்லிவிட்டதில் அனைவருக்கும் மகிழ்ச்சி.தினக்குரல் குடும்பத்தினர்
தாங்கள் எடுத்து வந்திருந்த பலகார வகைகளையும்,புத்தாடைகளையும் அவர்களுக்குக்
கொடுத்தனர்.
வாலுப்பையன் ஓடிப்போய் தன் கால இயந்திர
வாகனத்தின் மேல் நிறைய புற்களையும்,புதரையும் போட்டு அது யார் கண்ணிலும்
படாமல் மூடிவைத்தார்.அப்போதுதான் தண்ணிவண்டியைப் பார்த்தார்.அதற்குள் வாலுப்பையனுக்கு
உதவுவதாக பொய்ச் சொல்லிவிட்டு வந்த தங்கையா அந்த விசயத்தை ராஜன்
சாரிடம் சொல்லிவிடவேண்டாம் என கெஞ்சி கேட்டுக்கொண்டார்.வாலுப்பையனும் பரிதாபப்பட்டு
அந்த விசயத்தைப் பற்றி யாரிடமும் மூச்சுவிடாமல் இருந்தார்.
அன்று மாலை அவர்கள் தோட்டப்புற வீடுகளுக்குச்
சாயம் அடிக்கும் பணியில் ஈடுபட்டார்கள்.அனைவரும் சேர்ந்து செய்ய,சாயம்
பூசும் வேலை விரைவில் முடிய,இரவில் தோட்டத்து மக்கள் எல்லாரும்
தோட்டத்து தமிழ்ப்பள்ளி திடலின் அருகே ஒன்று கூடி ஒன்றாக பலகாரம் செய்யும்
வேலையில் ஈடுபட்டார்கள்.
தோட்டத்து இளைஞர்கள் பெரிய குழாயைப் பொருத்தி
அப்போது பிரபலமாக இருந்த ‘முதல் மரியாதை’ போன்ற படத்திலிருந்து
பாடல்களை ஒளிபரப்பிக்கொண்டிருந்தார்கள்.மின்சாரம் இல்லாத காரணத்தினால் இன்னும் சில
இளைஞர்கள் கேஸ் விளக்கையும்,மண்ணெண்ணை விளக்கையும்
ஏற்றிவைத்தார்கள்.வாசகர்களில் அந்தக் காலக்கட்டத்தில் இளைஞர்களாக இருந்தவர்கள்
பெரிய பாட்டரியைப் பொருத்தி,டியூப்லைட்டைப் பூட்டினார்கள்.சில
இளம் வாசகர்களுக்கு அது வித்தியாசமாகவும்,அதே வேளையில்
பிரமிப்பாகவும் இருந்தது.தாங்கள் இன்னும் கொஞ்சம் சீக்கிரமாக பிறந்திருந்தால்
எவ்வளவு இன்பமாக இருக்கும் என ஏக்கப் பெருமூச்சு விட்டனர்.
உரலில் மாவு இடிக்கும்போது லோகநாதனும்,இளம்தமிழும் உதவிக்குப்
போனார்கள்.அனைவரும் ஆளுக்கொரு வேலையை இழுத்துப்போட்டுக்கொண்டு செய்ய, தோட்டப்புற
தீபாவளியை மீண்டும் அனுபவிக்கமாட்டோமா என ஏங்கி கிடந்த மூத்த வாசகர்களின்
முகத்தில் பரவசமும்,உற்சாகமும் தெறித்தது.
சரவண சிவனும்,புவனேஸ்வரனும் அந்த நிகழ்வுகள்
அனைத்தையும் பயணக்கட்டுரை எழுதுவதற்காக தங்கள் குறிப்புப் புத்தகத்தில் எழுதிவைத்துக்கொண்டிருந்தார்கள்.
கம்பத்துப் பையனும்,கோயாங் வசந்தும்,தினகரனும் தோட்டத்துக்
குழந்தைகளோடு சேர்ந்து ராக்கெட் பட்டாசு வெடித்து விளையாடிக்கொண்டிருந்தார்கள்.அவர்கள்
கொளுத்திப் போட்ட ஒரு பட்டாசு கல்லுருண்டை பிடிப்பதில் மும்முரமாக இருந்த குத்தீட்டி
குமுதாவின் கொண்டையில் பட்டு,கருகின வாசம் வரவே,கோபமான குமுதா இருப்பதிலேயே கெட்டியாக இருந்த ஒரு கல்லுருண்டையை எடுத்து அவர்களின்
மேல் வீசினார்.அவர்கள் உடனே பானை மூடியை எடுத்து கேடயமாக குறுக்கே வைத்துக்கொள்ள,குமுதா அடுப்பில் இருந்த செங்கல்லைத்
தூக்கினார்.பி.ஆர்.அவர்களைப் பார்த்து முறைத்ததும் அவர்கள் அடங்கிப்
போனார்கள்.இந்தமாதிரி சண்டை போட்டால் அவர்களை அங்கேயே விட்டுவிட்டு கிளம்பப்போவதாக
ராஜசோழன் எச்சரிக்க,அவர்கள் மூவரும் நல்ல பிள்ளையாக
உட்கார்ந்து கொண்டார்கள்.
எல்லாரும் பரபரப்பாக வேலை செய்து கொண்டிருந்த
பொழுதில் தண்ணி வண்டி தங்கையா தன் வண்டியை யாரும் கடத்திவிடப்போகிறார்கள்
என்ற பயத்தில் யாருக்கும் தெரியாமல் கால இயந்திர வாகனத்தைத் தேடிப்போனார்.அதைக்
கவனித்துவிட்ட ஆ.நடராஜன் அவரின் பின்னாலேயே செல்ல,அவரின்
பின்னால் விக்னேஷ்வரன் சென்றார்.யாரோ தன்னைப் பின்தொடர்ந்து வருகிறார்கள்
என்ற பதைபதைப்பில் தண்டிவண்டி தங்கையா அந்த வாகனத்தினுள் ஒளிந்து கொள்ள,நடராஜனும்,விக்னேஷ்வரனும்
வண்டியில் ஏறினார்கள்.இருட்டில் ஒருவருக்கொருவர் மோதிக்கொள்ள அவர்களின் கை
தவறுதலாக ஒரு விசையில் பட்டதும் கால இயந்திரம் இன்னும் பல்லாயிரம் ஆண்டுகளுக்குப்
பிந்திய காலக்கட்டத்தை நோக்கி பயணிக்க ஆரம்பித்தது.எப்படியோ போராடி வாகனத்தை
நிறுத்தியபோது அந்தக் காலம் மிக வித்தியாசமாக இருந்ததை உணர்ந்த மூவரும் பீதியில்
உறைந்தார்கள்.அங்கே நிறைய அரக்கர்களின் நடமாட்டம் இருந்தது.அவர்களில் ஆஜானுபாகுவான
தோற்றத்தில் இருந்த ஓர் அரக்கனைக் கண்டு மக்கள் பயந்து ஓடினார்கள்.அவனைக்
கண்டதும்தான் தாங்கள் அந்தக் கால இயந்திர வாகனத்தில் நரகாசுரன் இன்னும்
உயிரோடு இருக்கும் காலத்திற்குச் சென்றுவிட்டதை உணர்ந்தார்கள்.
மீண்டும் வாகனத்தைச் செலுத்த முற்படுவதற்குள் நரகாசுரன்
அவர்களைப் பார்த்துவிட்டான்.அந்த வித்தியாசமான வாகனம் அவனை ஈர்க்கவே, பூமி அதிர,அவ்வாகனத்தின் பின்னால் ஓடிவந்தான்.நடராஜா விரைந்து விசையை அழுத்த,வாகனம் மின்னல் வேகத்தில் பறந்தது.விக்னேஷ்வரன் வாலுப்பையன்
வாகனத்தைச் செலுத்தியபோது கவனித்திருந்ததால் ஒரு விசையில் 1985 என டைப் செய்து,சில எண்களையும் எழுதினார்.
வாகனம் மீண்டும் 1985-ஆம் ஆண்டில் இறங்க,பி.ஆர்.ராஜனும்.ராஜசோழனும் வாசகர்களோடு கவலை நிறைந்த முகத்தோடு காத்திருப்பது தெரிந்தது.நிம்மதிப் பெருமூச்சு
விட்டபடி மூவரும் அவர்களை நெருங்கிப் போக,சட்டென தரை
அதிர்ந்தது.கடகடவென இடி இடிப்பது போன்ற ஒரு சத்தத்தோடு நரகாசுரன்
தண்ணிவண்டியின் பின்னாலிருந்து இறங்கினான்.அப்போதுதான் அவன் அந்த வண்டியை
இறுகப்பற்றிக்கொண்டு தங்களோடு எண்பதாம் ஆண்டு காலக்கட்டத்திற்கு வந்துவிட்டதை
அனைவரும் உணர்ந்தனர்.
அவனது தோற்றத்தைப் பார்த்து பயந்து போன
தோட்டத்து மக்கள் நடுங்கி ஓட தொடங்கினர்.தன் பெரிய மீசையை முறுக்கிவிட்டபடி
பலகாரங்கள் இருந்த இடத்தை நெருங்கிய நரகாசுரன் முறுக்குகளையும்,ஓமப்பொடிகளையும்,
கல்லுருண்டைகளையும்
வாய்க்குள் போட்டு நொறுக்கினான்.
அவன் சாப்பிட்டு முடிப்பதற்குள் எல்லாரையும்
ஏற்றிக்கொண்டு கால வாகனத்தில் பறந்துவிடலாம் என எண்ணிய வாலுப்பையன் மறுகணம் தன்
எண்ணத்தைக் கைவிட்டார்.நரகாசுரன் எண்பதாம் ஆண்டு காலத்திற்கு உயிரோடு வந்ததற்கு
தங்கள் மீது தவறு இருந்ததாலும்,நரகாசுரனை அப்படியே
விட்டுவிட்டு கிளம்பினால் பாவம் அன்பே உருவான அந்தத் தோட்டத்து மக்கள்
பாதிக்கப்படுவார்கள் என நினைத்துப் பார்த்ததாலும் வாலுப்பையன் ஒரு முடிவுக்கு
வந்தார்.அனைவரையும் அழைத்துப் பேசி,நரகாசுரனை எப்படி
அழிக்கலாம் என திட்டம் போட்டார்கள்.
தினகரன் தாங்கள் எடுத்து வந்த நவீன வகை
பட்டாசுகளைப் பயன்படுத்தி ஏதாவது செய்யலாமே என சொல்ல,அனைவரும்
விரைந்து பட்டாசுகளை எடுத்து வந்தனர்.பட்டாசுகளைக் கொளுத்தி நரகாசுரனின்
மேல் போட்டனர்.அவனோ தன்னை கிச்சுகிச்சு மூட்டுவதுபோல் உணர்ந்து நெளிந்தபடி சிரிக்க
ஆரம்பித்தான்.
அவனை அழிக்க பூமாதேவி ஒருவரால் மட்டுமே
முடியும் என வரம் இருப்பதால் மீண்டும் அந்தக் காலக்கட்டத்திற்கு அவனைக் கொண்டு
போய் விட்டால் மட்டுமே அவனை வெல்வது சாத்தியமாகும் என கண்ணன் சொல்ல,பெண்களை
விட்டுவிட்டு ஆண்கள் மட்டும் கால இயந்திர வாகனத்தில் நரகாசுரனை ஏற்றிக்கொண்டு போய்
அவனது காலத்தில் விட்டுவிட்டு வர முடிவெடுத்தார்கள்.ஆண்கள் அனைவரும் வாகனத்தில்
ஏறியபோதும் நரகாசுரன் அந்த இடத்தை விட்டு அசையவே இல்லை.உடனே
வாலுப்பையனுக்கு ஒரு திட்டம் தோன்றவே,தான் செய்த கேக்கை
எடுத்து நரகாசுரனிடம் காட்டினார்.அந்த அணிச்சலின் பின்னே இருக்கும் பயங்கரமான கதை
தெரியாமல் மயங்கிய நரகாசுரன் அவர்களைத் தொடர்ந்து வந்து வண்டியில் ஏற,வாலுப்பையன் விரைந்து வாகனத்தைச் செலுத்தினார்.
மீண்டும் வாகனம் நரகாசுரன் காலத்தை
அடைய,உடனே தன் கையிலிருந்த கேக்கை தூக்கி வாகனத்தை விட்டு வெளியே எறிந்தார் வாலுப்பையன்.ஒரே
தாவலில் நரகாசுரன் வெளியே எகிறி குதிக்க,வாகனம்
ஒருமாதிரி ஆட்டம் காண,வாலுப்பையன் தன் ஓட்டுனர் இருக்கையிலிருந்து கீழே விழப்போனார்.
“ஐயோ,அம்மா!நான்
கீழே விழறேன்,யாராவது பிடிங்களேன்” என
கத்த.மறுகணம் ஒரு கரம் அவரைத் தொட்டு எழுப்பியது.நிமிர்ந்து பார்த்தபோது கட்டிலில்
இருந்து கீழே விழுந்திருந்தார்.இவ்வளவு நேரம் தான் கற்பனையில் இருந்தது தெரியவர,நிஜமாகவே அப்படி ஒரு வாகனம் இருந்தால் எப்படி இருக்கும் என மீண்டும்
கற்பனையில் மூழ்கினார் வாலுப்பையன்.
No comments:
Post a Comment