Sunday, June 16, 2013

தந்தையர் தின சிறப்பு நேர்காணல் - அன்புள்ள அப்பா


 
          தாயானவள் குழந்தையைக் கருவில் சுமந்தால்,தந்தையானவர் குழந்தையை நெஞ்சில் சுமக்கிறார்.பார்வைக்குக் கண்டிப்பாக தெரிந்தாலும் தாய்மை குணம் கொண்ட தந்தையர்கள் இவ்வுலகில் நிறையவே இருக்கிறார்கள்.அப்படிப்பட்ட சில தந்தைமார்களைப் பற்றி என் நட்வு வட்டத்தில் சிலரிடம் கேட்டபோது பல சம்பவங்களைப் பகிர்ந்து கொண்டார்கள்.
  
 
 

மோகனஜோதி சுப்ரமணியம்: எனக்கு என் அப்பா சுப்ரமணியம் சிம்மாதிரி நல்ல நண்பர் உதயா.என் அம்மா இறந்த பிறகு எனக்கு எல்லாமே என் அப்பாதான்.நான் அவர்கிட்ட எந்த விசயத்தையும் மறைக்கமாட்டேன்.நான் அவரை ரொம்ப உரிமையா வா,போ என்றுதான் அழைப்பேன்.என் ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் அப்பா எனக்கு விதவிதமான கைபேசி வாங்கி கொடுப்பாரு.நான் பல்கலைக்கழகத்துல படிக்கிறேன்,ஆனால் என் அப்பாவுக்கு நான் இன்னும் பள்ளிச்சிறுமிதான்.காலையிலேயே ஃபோன் பண்ணி ஸ்கூல் போனியா என்று கேட்பாரு(சிரிப்பு).

 

உதயா: சரி,அப்பாவுடனான நெகிழவைக்கும் சம்பவம் ஏதும்

       இருக்கா?

 

மோகனா: நிறைய இருக்கு.எனக்கு என் அம்மா மேல ரொம்ப பாசம்.எனக்கு 18 வயசு இருக்கும்போது சிறுநீரக பாதிப்பால் அம்மா இறந்துட்டாங்க.அப்பா அம்மாவுக்காக நிறைய செலவு செய்தாரு தெரியுமா?அம்மா இறந்தபிறகு அப்பாவால தனியா வாழ்க்கையைத் தொடர முடியலை.இன்னொரு திருமணம் செய்துக்க விரும்புவதா எங்கள் எல்லாரையும் அழைச்சிப் பேசினாரு.என் அண்ணன்கள் ஒன்னும் சொல்லலை.ஆனால் நான் மட்டும் அப்பாக்கிட்ட நேராவே சொல்லிட்டேன்.அப்பா,நீ வேற யாரையும் கல்யாணம் பண்ணிக்காதே,எனக்குப் பிடிக்கல என சொல்லிட்டேன்.

 

உதயா: அச்சச்சோ ..

 




மோகனா: எனக்கு அம்மா இடத்துல வேற யாரையுமே வெச்சிப் பார்க்க முடியல உதயா.நான் சொன்னதை மதிச்சி அப்பா இரண்டாவது கல்யாணம் செய்துக்கல தெரியுமா?என்னை ரொம்ப செல்லமா பார்த்துக்கறாரு.நான் அவருக்கு அடிக்கடி லெட்டர் எழுதுவேன் தெரியுமா?

 

உதயா: என்னா எழுதுவீங்க?அவருக்குத் தெரியாமல் அவரோட படுக்கை அறையில வெச்சிடுவீங்களா?

மோகனா: நேராவே கொண்டு போயி கையில கொடுப்பேன்.”அப்பா,உன்னைப் பத்தி புகார்க்கடிதம் எழுதியிருக்கேன்,படிச்சிப் பாரு என சொல்வேன்.அப்பா படிச்சிப் பார்த்துட்டு கண் கலங்கிடுவாரு.

 

(அடுத்ததாக தமிழ்ப்பற்றோடு இருக்கும் நண்பர் ராஜ்மகனிடம் உங்க அப்பாவைப் பத்தி சொல்லுங்களேன் என்றேன்)

 

 
 

 ராஜ்மகன் :  நீங்க எம்டன் மகன் தமிழ்ப்படம் பார்த்திருக்கீங்களா உதயா?அதுல வரும் எம்டன் பாத்திரம்தான் என் அப்பா.

 

உதயா: ஹா ஹா,ஆரம்பமே சூப்பரா இருக்கே??

 

ராஜ்மகன் : என் அப்பா என்னை அடிக்காத அடி இல்லை.வெச்சு உரிச்சி எடுத்துடுவாரு.படிப்பு விசயத்துல பயங்கர கண்டிப்பு.எந்நேரமும் படிக்கனும்.வெளிய விளையாடக்கூட போக முடியாது.அவரைப் பார்த்தாலே அப்போது ரொம்ப பயமா இருக்கும்.

 

உதயா: அப்பா அப்படி இருந்ததால உங்கள் குழந்தைப் பருவத்து இன்பத்தையே இழந்துட்டதா ஒரு வருத்தம் உங்களுக்குள்ள இருக்கா ராஜ்?

ராஜ்: கண்டிப்பா உதயா,என் அப்பாக்கிட்ட என்னைக்காச்சும் கேட்கனும்,ஏன்ப்பா அவ்வளோ கண்டிப்பா இருந்தீங்க என.என் அப்பாவுக்கு மனசுக்குள்ள என் மேல ரொம்ப பாசம் இருக்கு உதயா.ஆனால் காட்டிக்க மாட்டாரு.நான் தூங்கும்போது வந்து கன்னத்துல முத்தம் கொடுப்பாரு.என்னைக்காவது என்னை ரொம்ப அடிச்சிட்டா அன்னைக்கு இரவுல வந்து என்னைத் தடவிக்கொடுப்பாரு.நான் எதிர்பார்க்காததையெல்லாம் செய்து இன்ப அதிர்ச்சி கொடுப்பாரு.இந்த வயசுல கூட என்னைத் தன்னோட மடியில உட்கார சொல்வாரு.நான் சின்ன வயசுல செய்த சேட்டைகளையெல்லாம் சொல்லி சிரிப்பாரு.எனக்கு நிறைய விசித்திரமான கதைகளையெல்லாம் சொல்லியிருக்காரு.

 

உதயா: உங்க அப்பாவோட தமிழ்ப்பற்று பற்றி சொல்லுங்க ராஜ்.

 

ராஜ்: என் அப்பா தன்னோட மார்புல பாரதியார் படத்தை பச்சை குத்தியிருப்பாருன்னா தெரிஞ்சுக்குங்களேன் எந்த அளவுக்குத் தமிழ்ப்பற்று நிறைஞ்சவருன்னு.அவர் நிறைய புத்தகங்கள் படிக்கறதைப் பார்த்துட்டு எனக்கும் வாசிக்கும் பழக்கம் அதிகமாகிடுச்சி.அப்பா இப்போ மியன்மார்ல இருக்காரு.அங்கே திருக்குறள் வளர்ச்சி அறக்கட்டளை ஆரம்பிச்சி தமிழுக்குத் தொண்டு செய்துக்கிட்டு இருக்காரு.என் வாழ்க்கைல எனக்கு ரோல் மோடல் என் அப்பாதான் உதயா.அப்பாக்கிட்ட உழைப்பு அதிகமா இருந்துச்சி.யார்க்கிட்டயும் கைகட்டி நிக்கக்கூடாதுன்னு சொந்தத் தொழில் செய்து முன்னேறியவரு.நேர்மையும்,நாணயமுமா இருப்பவரு.அவரை மாதிரியே நானும் இருக்கனும்னு ஆசைப்படறேன்.

 

உதயா: வருங்காலத்துல நீங்க உங்கள் பிள்ளைகளுக்கு எப்படிப்பட்ட அப்பாவா இருப்பீங்க?

 

ராஜ்: நான் வருங்காலத்தில் என் பிள்ளைகளை அதிக பாசம் காட்டி வளர்ப்பேன்.ஆனால் தமிழ்,பண்பாடு என ஒழுக்கத்தோடு வளர்ப்பேன்.கண்டிப்பா தமிழின் சிறப்புகளையெல்லாம் சொல்லி வளர்ப்பேன்.பெண்பிள்ளைகளா இருந்தால் குழந்தையா இருக்கும்போதே நிறைய பட்டுப்பாவாடை சட்டை போட்டு பண்பாட்டோடு வளர்ப்பேன்.

 

(முகநூலில் தன் குரலால் கலக்கிக் கொண்டிருக்கும், கள்ளம் கபடமில்லாத தோற்றத்தில் கவரும் குட்டிப் பெண் அஞ்சலி கதிரவனிடம் அவரது தந்தையுடனான தருணம் குறித்து கேட்டேன்.)

 
 
 

அஞ்சலி: அப்பாவுடனான இனிய சம்பவங்கள் நிறைய இருக்கு அக்கா.

 

உதயா: அதுல ஏதாவது ஒன்னை சொல்லும்மா..

 

அஞ்சலி: ஒரு நாள் அன்பு அப்பா திரு.கதிரவன்கிட்ட  கேளிக்கையாக "அப்பா எப்போதும் அம்மாவே சமைக்கிறாங்க, நீங்க எங்களுக்கு சமைத்து கொடுக்கும் காலம் எப்போ வரும்?” என்று கேட்க அப்பா, “எனக்கு ரொம்ப நல்லாவே சமைக்க தெரியும்,” என்று சொல்லி கொய்தியாவ் கோரேங் செய்ய போய் அது குலைந்து போயிடுச்சி.இருந்தாலும் அந்த "முதல் முயற்சி சுவையாகத் தான் இருந்தது அக்கா .. ஆனாலும் அப்பாவுக்குத் திருப்தி இல்லை. அவர் எங்களுக்காக மற்றொரு நாள் மீன் குழம்பு  சிறப்பாக சமைத்து கொடுத்தார் ..இன்னொரு விசயம் இருக்குக்கா.

 

   என் வாழ்வில் இந்த நாள் மறக்க முடியாத நாள் என்றே சொல்லலாம் அக்கா.. நான் என் குடும்பத்தை பிரிந்து இருந்த நாட்கள் .. எனக்கு அப்பாவின் மீது அதிக பாசம் .அவருக்கும் கூட. அவரை பிரிந்து 4 நாட்கள் கெடாவில் ஒரு பயிற்சி பாசறையில் தங்கியிருக்க வேண்டியிருந்தது.அந்த நாள் மிகவும் மெதுவாக நகர்ந்தது.ஆனால்,மறுநாளே ஒரு மகிழ்ச்சியான சம்பவம் நிகழ்ந்தது.அப்பாவும் நான் தங்கியிருந்த இடத்திருக்கு வந்துட்டாரு.என்னைப் பிரிந்து அவராலும் இருக்க முடியல.குடும்பத்தில் ஒரே பெண்பிள்ளை அல்லவா? .என் மீது அதிக அக்கறையும் வைத்திருக்கிறார் .அவர் வந்ததும் என் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.நான்காவது நாள் பயிற்சி முடிந்து வீட்டுக்குக் கிளம்பினோம். ஒரே களைப்பு. நான் மகிழுந்தின் பின் பக்கம் அமர்ந்திருந்தேன்.அப்படியே தூங்கிட்டேன்.திடீருன்னு அப்பா என்னை எழுப்பினாரு.வீடு வந்துடுச்சின்னு எழுந்து பார்த்தபோதுதான் அப்பா எனக்கு ஓர் இன்ப அதிர்ச்சி கொடுத்தது தெரிஞ்சது.நாங்கள் வந்தடைந்த இடமோ பினாங்கு .அளவில்லாத மகிழ்ச்சி எனக்கு.அந்த நாள் என்னுடைய பிறந்த நாளும்கூட. பினாங்கில் சுற்றித் திரிந்தோம்.பிடித்த ஆடைகள் , உணவுகள், புத்தகம் எல்லாம் அப்பா வாங்கி கொடுத்தார்.அந்தச் சம்பவத்தை நினைத்து நினைத்து மகிழ்ந்தேன்.அப்பா எங்கள் மகிழ்ச்சிக்காக இப்படி எல்லாம் செலவு செய்கிறாரே?இதற்கு கைமாறாக நான் என்ன செய்ய போகிறேன் என்றென்னும் போது நாங்கள் பிறந்த நாளில் இருந்து இன்றைய காலம் வரை எங்களுக்காக செய்த செலவுகளுக்கு நாங்கள் வாழ்நாள் முழுவதும் சம்பாதித்து கொடுத்தாலும் அவருக்கு நாங்கள் பட்ட கடனை அடைக்க முடியாது.இருந்தாலும் அவர் தலை நிமிர்ந்து வாழும்படி நடந்துக் கொள்ள வேண்டும்  என்ற நெறியோடு வாழ்கிறேன்.எனக்கு இப்படி பாசத்தையும் அறிவையும் ஊட்டுகிற அப்பா கிடைத்ததற்கு நான் மிகவும் பெருமைப்படுறேன்க்கா..என் மனதில் என் அப்பாவுக்கு மட்டுமே முதல் இடம்.

 

(நெகிழ்ச்சியான பகிர்வுக்குப் பிறகு நகைச்சுவையாக ஏதாவது இருந்தால் நன்றாக இருக்குமே என தோன்றியது.குறும்புச் சேட்டைகள் நிறைந்த பில்மோர் பாலசேனா அண்ணனிடம் நிச்சயம் தன் தந்தையுடனான நகைச்சுவையான தருணங்கள் அதிகம் இருக்கும் என நினைத்துக் கேட்டபோது,சில நிமிட மௌனத்திற்குப் பிறகு சொன்னார் இப்படி.)

 

பாலசேனா:என் அப்பா திரு.பெருமாள் பில்மோர் எஸ்டேட்டுல கங்காணியா இருந்தவரு மா. நான் திருமணம் ஆவதற்கு முன்பும் பின்பும் பசாருக்கு போயி ஒரு மீனோ, காய்கறியோ எதுவுமே வாங்க தெரியாது..கறிக்கு வாங்கறதுன்னா என்கூட அப்பாவைக் கூட்டிகிட்டு போவேன்.அப்பா என்னை மோட்டார் சைக்கிள் அருகே உட்கார சொல்லிவிட்டு போய் தமிழ்ப் பத்திரிக்கை வாங்கி வந்து  கொடுத்து படிக்க சொல்வாரு. அவர் மட்டும் பாசாருக்குப் போயி எல்லா சாமான்களையும் வாங்கி வருவார். நான் அதுவரை அங்கேயே பேப்பர் படிச்சிக்கிட்டிருப்பேன்.மீன், கோழி இறைச்சி எதையுமே என்னைத் தொடவிடாமல்,அந்த நாற்றமோ எதுவுமே தெரியாத நிலையில் என்னை வளர்த்தாரு. அவர் இறந்த பிறகு பாசாருக்குப் போயி அந்த மாதிரி கறிவகை,செலவுப் பொருட்களையெல்லாம் வாங்க நான் பட்ட கஷ்டம் இருக்கிறதே அப்பப்பா.என்னால மறக்கவே முடியாத ஒரு விசயம்னா என் கண் முன்னாலேயே அப்பா உயிர் விட்டதுதான். எத்தனை ஜென்மம் எடுத்தாலும் அதை என்னால மறக்க முடியாதும்மா.. மனதில் கவலை வந்தால் அப்பாவைதான் நினைப்பேன்.. அழுவேன்.. இப்போதுகூட கண்ணீரோடுதான்..இப்போ என்னைச் சுற்றி அன்பான மனைவி,குழந்தைங்க எல்லாரும் இருந்தாலும் அப்பா இல்லாததால் என்னை அனாதையாதான் உணரறேன்மா.

 

 (பாலசேனா அண்ணாவிடம் இப்படி ஒரு சோகமான விசயத்தை எதிர்பார்க்காததால் அவருடைய வேதனையை நினைவுப்படுத்தியதற்காக மன்னிப்பு கேட்டுவிட்டு அன்பு இதயம் பத்திரிக்கையில் பல படைப்புகளை வழங்கி வந்த ஆசிரியை ஸ்ரீஷாவிடம் பேசினேன்.)

 

 

ஸ்ரீஷா: என் அப்பா திரு.கங்காதரன் அவர்கள்தான் எனக்கு முதல் நண்பர் அக்கா.செம ஜாலி டைப்.நான் என் மேற்கல்வியைத் தொடர்வதற்கு ரொம்ப ஊக்கப்படுத்தறவர்.எனக்கு விரிவுரைஞர் ஆகனும் என்பதுதான் லட்சியம்.அதற்கு முதல் படியா நான் விண்ணப்பிச்சி,நேர்முகத் தேர்வுக்குப் போனதுல தொடங்கி என் ஒவ்வொரு படியிலும் உடனிருப்பவர்.என் தேர்வின்போது கண்விழிச்சி எனக்குப் படிச்சிக் கொடுப்பாரு.இன்றுவரையில் எனக்கு சமைச்சி ஊட்டியும் விடுவாரு.என் அம்மா பட்டப்படிப்பு படிக்கவும் அப்பா எனக்குத் துணையா இருந்தாரு.நிறைய பேர் பல்கலைக்கழகம் சென்று படிக்க தன்முனைப்பு கொடுத்து,உதவியிருக்காரு.

 

 உதயா: உங்க அப்பா செய்த ஏதாவதொரு வீர செயல் பத்தி சொல்லுங்களேன்.

 

 

ஸ்ரீஷா : என் அப்பா காவல் துறை அதிகாரியா இருப்பதால் வீரம் அதிகம்.சில வருடங்களுக்கு முன்பு எங்கள் குடியிருப்புப் பகுதியில் விசாரிக்கறமாதிரி வந்து வீட்டுல திருடிட்டுப் போற கூட்டம் ஒன்னு இருந்துச்சி.ஒரு தடவை எங்களோட எதிர்வீட்டுலயும்,அப்புறம் எங்க வீட்லயும் வந்து விசாரிச்சாங்க.ஆனா அந்த வீட்டுல பேசினதும்,எங்க வீட்டுல பேசினதும் முரணா இருந்ததால அம்மா சந்தேகப்பட்டு அப்பாக்கிட்ட சொன்னாங்க.அப்பா அந்தப் பெண்ணை யோசனையாய்ப் பார்த்தவரு கொஞ்ச நேரத்துல தன் சக அதிகாரிகளோடு வந்து அந்தப் பெண்ணையும்,அவங்க கூட்டத்தையும் கைது செய்துட்டாரு.அந்த வருஷம் அப்பாவுக்கும்,அந்த சக அதிகாரிகளுக்கும் கௌரவிப்பு செய்யப்பட்டது.அந்த ரத்தம் ஓடறதால யார் தப்பு செய்தாலும்,எங்கே தப்பு நடந்தாலும் உடனே தட்டிக் கேக்கற பழக்கம் எனக்கு இருக்கு.

 

 

(தொடர்ந்து மண்வாசனை’,’கடந்து வந்த சுவடுகள் என்ற கட்டுரையின் மூலமும்,கவிதைகளின் வாயிலாகவும் தினக்குரல் வாசகர்களுக்கு அறிமுகமான,இருபத்தோரு வயதே ஆன குட்டிப்பையன்  தினகரன் குரோ சுகுமாறனோ இப்படி பகிர்கிறார்.)
 
 
 
 

   தினா : என் அம்மா இறந்தபோது எனக்கு பதினான்கு வயதுதான் ஆகியிருந்தது அக்கா.அப்பாவும்,அம்மாவும் ஒருநாள் கூட சண்டை போட்டு நான் பார்த்ததேயில்லை.என் அப்பா ஓர் அற்புதமான மனிதர் அக்கா.அவருக்குத் தமிழ்ப்பற்றும்,நாட்டுப்பற்றும் அதிகம்.அப்பா ஒரு மேடை அறிவிப்பாளர் அக்கா.குரோ சுகுமாறன் என்றால் நிறைய பேருக்குத் தெரியும்.அவர் நல்ல தமிழில்தான் பேசுவார்.தமிழ்ப்பத்திரிக்கைகளைத் தவறாமல் வாங்கி படிப்பாரு.மின்னல் பண்பலைதான் விரும்பி கேட்பாரு.தினமும் வீட்டுக்குப் பின்னால வந்து போகும் பறவை,நாய்களுக்கெல்லாம் உணவு வாங்கி போடுவாரு.ஆதரவற்ற பிள்ளைகளுக்கு நிறைய செய்வாரு.அவங்களுக்குப் பிறந்தநாள் வந்தால் பணம் செலவு பண்ணி கொண்டாடுவாரு.நான் எழுத்துத் துறையில் கால் பதிக்கறதுக்கு என் அப்பாதான் காரணம்.அவர் எனக்கு நிறைய தமிழ்ப்புத்தகங்கள் வாங்கி கொடுத்து படிக்கும் ஆர்வத்தை வளர்த்துவிட்டாரு.

 

உதயா: உன் படைப்புகள் பத்திரிக்கைகளில் வரும்போது அப்பா அதிக பெருமைப்பட்டிருப்பாரே தினா?

 

தினா: ஆமாம் கா,எங்கள் பிறந்த ஊரான குரோவைப் பத்தி நான் எழுதிய மண்வாசனை கட்டுரை அவருக்கு ரொம்ப பிடிச்சிருந்தது அக்கா.நிறைய பேர் அவரை அழைச்சி தினகரன் உங்க மகனா என கேட்டபோது அப்பாவுக்கு ரொம்ப பெருமையா இருந்ததாம்.அவருக்கு குரோ முருகன் கோயில் ரொம்ப பிடிக்கும்.தன் கடைசிக் காலத்தில் தன்னோட உயிர் அந்த இடத்தில்தான் பிரியனும்னு சொல்வாருக்கா.அந்தக் கட்டுரை அப்பாவுக்கு நான் கொடுத்த சிறந்த பரிசா நெனைக்கிறேன் கா.என் அப்பா பெருமைப்படறமாதிரி எழுத்துத் துறையில் நல்ல பெயர் வாங்கி தரனும் அக்கா.

 


    (அந்த ஆறு பேரும் தங்கள் தந்தையின் தியாகங்களையும்,அன்பையும் உணர்ந்து போற்றுபவர்களாக இருக்கிறார்கள்.ஆனால் எல்லா பிள்ளைகளும் அப்படி இருக்கிறார்களா என்ன?

   இன்று தந்தையர் தினம்.பல தந்தைமார்கள் தங்கள் அன்பு பிள்ளைகளோடு இன்புற்றிருக்கும் இந்தவேளையில் முதியோர் இல்லங்களில் பிள்ளைகளோடு வாழ்ந்த இனிமையான தருணங்களை நினைவில் சுமந்தபடி ஏக்கத்தோடு காத்திருக்கும் எத்தனையோ தந்தைமாரும் உண்டு.அவர்களைப் பற்றிய தன் கருத்தை நம்மோடு பகிரும்படி,கிள்ளானில் ஸ்ரீபாபா முதியோர் காப்பகத்தை நடத்திவரும் திரு.மோகன் பாலகிருஷ்ணன் அவர்களிடம் கேட்டேன்.)

 

மோகன் : இங்கு இருக்கற தந்தைமார்களுக்கும் தந்தையர் தினம் பற்றிய எதிர்பார்ப்பு இருக்கும்.அந்தக் காலத்துல பிள்ளைகள் அதிகம் இருப்பாங்க.வறுமை நிலை வேற.ஆனால் எந்தச் சமயத்திலும் எந்த அம்மா,அப்பாவும் தங்களோட பிள்ளைகளைக் கொண்டு போய் எந்த ஹோம்லயும் விட்டதில்லை.அதிகமா உழைச்சி,எல்லா கஷ்டத்தையும் தாங்கிகிட்டு பிள்ளைகளை வளர்த்து ஒரு நல்ல நிலைக்குக் கொண்டு வராங்க.ஆனால் பிள்ளைகள் ஏன் அதை நினைச்சிப் பார்க்கறதில்லை.வயதாகிட்டா அவங்களும் குழந்தை மாதிரிதான் என்பதை ஏன் புரிஞ்சுக்க மாட்டறாங்க?வயசான தாய்,தந்தைங்க தங்களோட பிள்ளைகள்கிட்ட எதிர்பார்க்கறது அன்பு ஒன்னை மட்டும்தான்.அதைக் கூட கொடுக்க முடியலன்னா எப்படி?என் அப்பா என்னோட ஒன்பது வயதுலயே இறந்துட்டாரு.அவரு இருந்திருந்தா எவ்வளவோ நல்லா வெச்சிக்கலாம் என்ற ஏக்கம் எனக்கு இருக்கும்.அப்பா இல்லாத கஷ்டம் தெரியாமல் அம்மா என்னை வளர்த்திருக்காங்க.இப்போ நான் ஆதரவு இல்லாமல் நிக்கற 25 பேரை வெச்சி பார்த்துக்கறேன்.ஒரு மகனா இருந்து அவங்களுக்கு செய்யவேண்டிய கடமைகளைச் செய்யறேன்.அவங்க இறந்துட்டா ஒரு மகனா நானே காரியம் செய்து கொள்ளி போடறேன்.மோட்சதீபம் ஏத்தறேன்.யாரோ ஒருத்தன் எனக்கு இருக்கற அக்கறை ஏன் பெத்த பிள்ளைகளுக்கு இல்லன்னு வருத்தமா இருக்கு.

 

உதயா: உங்களோட ஆதங்கத்தைக் கண்டிப்பா எழுதறேன் அண்ணா.சரி இந்த இல்லத்துல தந்தையர் தினத்துக்காக என்ன செய்யப்போறீங்க?

 

மோகன் : தந்தையர் தினத்தன்று கேக் வெட்டுவோம்.அப்புறம் இரண்டு வாரம் கழிச்சி இந்த இல்லத்துல கொஞ்சம் பெரிய அளவுல தந்தையர் தினத்தைக் கொண்டாடி அவங்களுக்குச் சிறப்பு செய்யலாம்னு இருக்கேன்.வெளியே இருந்து சிலரை அழைச்சுட்டு வந்து டான்ஸ் எல்லாம் செய்து தந்தைமார்களை மகிழ்ச்சிப்படுத்தலாம்னு இருக்கேன்.

 

(ரத்த சம்பந்தமே இல்லாத ஒரு தனிமனிதனுக்கு இருக்கும் அந்த அன்பும்,அக்கறையும் எல்லாருக்கும் இருக்கவேண்டும்.சுருங்கிப் போன கைகள் அடுத்தவேளை சாப்பாட்டுக்காக கையேந்தும் நிலை வேண்டாம்.இருக்கும்வரை நமது பெற்றோரை அன்போடு கவனித்துக்கொள்வோம்.தந்தையர் தினத்தன்று மட்டும்தான் என்றல்லாமல் ஒவ்வொரு நாளும் தந்தையிடம் அன்பைப் பகிர்வோம்.அனைத்து தந்தையருக்கும் எனது தந்தையர் தின வாழ்த்துகள்.)

 

மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி  இவன்தந்தை

என்நோற்றான் கொல்எனும் சொல்.

 


-          உதயகுமாரி கிருஷ்ணன்,பூச்சோங்

 

 

 

 

No comments:

Post a Comment