Saturday, February 19, 2011

சிறுகதை - காதல் போயின்

சிறுகதை

காதல் போயின் .......

   இறுதியாக ஒரு முறை கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்துக் கொண்டாள் அவள்.மரணக்களை அவள் முகத்தில் இலேசாய் கோடிட்டிருந்தது.எழுதி வைத்திருந்த கடிதத்தை மீண்டும் ஒருமுறை படித்துப் பார்த்துவிட்டு வரவேற்பறையை எட்டிப் பார்த்தாள்.அக்காவும் மாமாவும் அண்ணாமலையில் மூழ்கியிருந்தார்கள்,அவர்கள் உறங்கப் போகும் வரை காத்திருப்பதைத் தவிர வேறு வழியில்லை.
   ச்சே என்ன உலகம் இதுட? செத்துப் போவதற்கு கூட காத்திருக்க வேண்டியிருக்கிறது?”சலித்துக் கொண்டே மெத்தையிலிருந்த ஒரு வார இதழை கையில் எடுத்தாள்.
   கரு கலைப்பைவிட
     காதல் கலைப்புக்கு
     இரணம் அதிகம்
   அதில் இடம்பெற்றிருந்த கவிதை வரிகள் அவளைச் சட்டென்று கண்கலங்க வைத்தன,உண்மைதானே என்று தனக்குத்தானே தலையாட்டிக்கொண்டாள்.உலகத்தில் எல்லா வலிகளிலும் கொடுமையானது காதல் தரும் வலிதான் என்று யார் ஒப்புக் கொள்ளாவிட்டாலும் சம்பந்தப்பட்ட அவள் ஒப்புக் கொண்டுதானே ஆக வேண்டும்.
    புத்தகத்தை மூடிவிட்டு பால்கனிக்கு வந்து நின்றாள்.இன்னும் சில மணி நேரங்களில் அஸ்தமித்துப் போக போகும் இரவின் அழகை ஆராதித்தாள்.அவளும் அந்த இருளோடு கலந்துவிடப் போகிறவள்தானே?
    இறுதியாக ஒரு தடவை அவனிடம் பேசலாமா?”
    ச்சே. நல்ல மாட்டுக்கு ஒரு சூடு,உனக்கு எத்தனை?”அவளுடைய மனசாட்சி அவளைக் காரித் துப்பியது,என்ன செய்வது துளி கூட வெறுக்க முடியாத அளவுக்கு காதல் அவன் மீது,
     ஒரு வேளை அவன் கெட்டவனாக இருந்திருந்தாலோ அவள் மனதைக் காயப்படுத்தும் அளவிற்குப் பேசியிருந்தாலோ அவனை வெறுக்கக் கூடிய சரிவிகிதங்கள் அதிகரித்திருக்கக் கூடும்,அவன் அப்படியெல்லாம் இல்லையே!
     அவன் நல்லவன்தான் ஆனால கோழை.மணிக்கணக்காய் பேசிக்கொள்வதில் தொடங்கி வெட்கங்களின் விளிம்புகளைத் தாண்டிப் போகாத சின்ன சின்ன தொடுதல்களின் ஸ்பரிசங்களில் குளிர்காய்ந்தது வரை எல்லாமே சுகமாகதான் இருந்தது குடும்ப சூழ்நிலை காரணமாக எதிர்காலம் குறித்த திடீர் பயம் அவனுக்கு வரும்வரை.
   அவளிடம் காதலைச் சொன்னபோது,”இன்னும் காய்ச்சல் இருக்கா?” முதன்முதலாய் அவளுடைய நுதலினைத் தொட்டுப் பார்த்த போது,,,ஆசையாய் அவளுக்கு வளையல் வாங்கி மாட்டிவிட்டபோது,,, அட தப்பு செய்கிறோமோ?”என்ற பயத்தில் விலகிப்போன அவளைச் சமாதானப்படுத்தி சேர்த்து அணைத்துக் கொண்ட போது,,,இப்படி பல பொழுதுகளில் நினைவிற்கு வராத குடும்ப சூழ்நிலை அவன் நினைவிற்கு வந்தது அவள் அவனுடைய காதலை உருக்கி ரத்தத்திற்குப் பதில் அவளுடைய நரம்புகளில் ஊற்றிக்கொண்டபிறகுதான்.பிறகெப்படி பிரித்தெடுக்க இயலும்?
   அவன் திரைப்படங்களில் வருவது போன்றோ கதைகளில் வருவது போன்றோ தனக்கு வியாதி இருப்பதாக பொய்ச் சொல்லி விலகவில்லை,வேறொரு பெண்ணை விரும்புகிறேன் என்றும் அவளைக் காயப்படுத்தவில்லை,அவளைச் சாப்பிட வைத்து தலையெல்லாம் வருடி கொடுத்து நிதானமாகதான் (சொ)கொன்னான் நாம பிரிஞ்சிடலாம் என்று. ஆனாலும் அது அவளைக் காயப்படுத்தியதே?கத்தியை உடலில் மெதுவாக பாய்ச்சினாலும் கூட வலி வலிதானே?
   பாவம் அவனுக்கு என்ன பிரச்சனையோ?அவனுடைய குடும்ப சூழ்நிலையைப் புரிந்து கொண்டு அவளாவது அந்தப் பிரிவை ஏற்றுக் கொண்டிருக்கலாம்,ஆனால் முடியவில்லையே? ஓரே கம்பெனியில் வேலை செய்வதால் தினமும பார்த்து கொண்டே இருக்க வேண்டிய தருணங்களில் அவன் மிகவும் இயல்பாகதான் இருக்கிறான்,இவளால்தான் முடியவில்லை,அவனை நேருக்கு நேர் பார்க்கும்போது சிரிக்கவேண்டுமா முறைக்கவேண்டுமா என்று கூட அவளுக்குத் தெரியவில்லை,அவனைவிட சிறந்ததாய் வேறு காதலன் கிடைக்கமாட்டான் என்பதோ தனக்குத் திருமணம் நடக்காது என்பதோ அல்லவே அவளை வேதனைப்படுத்துவது?அந்தப் பிரிவை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் அவளுக்கு இல்லாமல் போய்விட்டதே?அந்த ஏமாற்றத்தைத் தாங்கும் வலு இல்லையே அவளுக்கு!
   காதல் தோல்வியடைந்து சில துளி கண்ணீரைச் செலவழித்த பின் இயல்பு நிலைக்குத் திரும்பி வாழ்க்கையின் எதார்த்தத்தை ஏற்றுக் கொண்டுவிட்ட அவளுடைய தோழிகளும் இருக்கிறார்கள்தான்,ஆனால் அவர்களுக்கெல்லாம் அந்தக் காதலைவிட சந்தோ‌ஷம் தரக்கூடிய விசயங்கள் நிறைய இருந்தனவே வாழ்வில்.இவளுக்கு அப்படி ஏதும் இல்லையே?இருந்த ஒரே ஒரு பிடிப்பும் கைநழுவிப் போனபிறகு அவள் எப்படி இயல்பு நிலைக்குத் திரும்புவாள்?அவளுடைய வாழ்வில் அன்பு காட்டுவதற்கென்றே வந்த அவனும் பாதியிலேயே விலகிப்போனால் அவள் எப்படி தாங்கி கொள்வாள்?

* * * * * *
   அக்காவும் மாமாவும் மாடிப்படிகளில் ஏறி வரும் சத்தம் கேட்டது.தன் அறைக்குள் நுழைந்து படுத்துக் கொண்டாள்.அவர்கள் தங்கள் அறைக்கதவைத் தாழிடும் சத்தம் கேட்டதும் எழுந்து வந்தாள்,இருபது தூக்கமாத்திரைகளை வாயில் போட்டுக்கொண்டு கொக்கோ கோலாவை வாயில் சரித்தாள்.பிறகு படுத்துக் கொண்டாள்.
   துணிந்து செயலில் இறங்கிவிட்டாலும் மனதில் மெல்லிய பயமொன்று இருக்கவே செய்தது.
   நல்லபடி இறந்துவிடுவேனா?”
   ஒரு வேளை இறந்து போகாமல் உடல் மட்டும் செயலிழந்து போய்விட்டால் ,,,,, ஐயோ வேண்டாம் அப்படி எதுவும் ஆகிவிடக் கூடாது,அப்படி ஒரு நிலமையில் இருப்பதைவிட இறந்துவிடுவதே மேல்.
   அரைமணி நேரம் ஆனது.
   இறந்தபிறகு நடப்பதையெல்லாம் தன்னால் பார்க்க முடியுமா?”
    அவள் புத்தகங்களில் படித்திருக்கிறாள்.தற்கொலை செய்து கொண்டவர்களின் ஆத்மா தன் உடலின் தலைமாட்டிலேயே அமர்ந்து கண்ணீர் விட்டுக்கொண்டிருக்குமென்று.
    நானும் அந்த மாதிரிதான் அழப்போகிறேனா?”
    வழக்கம்போல அவளுடைய அக்காதாள் அவளை எழுப்ப போகிறாள்,பலமுறை கூப்பிட்டும் அவள் எழாமலிருக்கும் பட்சத்தில் நிச்சயம் அவளை நெருங்கி தொடுவாள்,அவளுடைய உடல் சில்லிட்டிருக்கும்,அலறியடித்து கணவனை எழுப்பி அவளை மருத்துவமனைக்குக் கொண்டு போவதற்குள் அவள் நிச்சயம் இறந்துவிட்டிருப்பாள்,அதன் பிறகு போஸ்மார்டம் அது இது என்று சில மருத்துவமனை சம்பிரதாயங்கள் நடந்து முடிந்தபிறகு அவளை வீட்டிற்குள் தூக்கி வருவார்கள்,
     பலரும் வீட்டிற்கு வந்து அவளைப் பார்ப்பார்கள். பலவிதமாக பேசுவார்கள்.எவனிடமோ ஏமாந்து போய்விட்டாள் என்றெல்லாம் வரம்பின்றி பேசுவார்கள்.
    பேசட்டுமே? காதல் தோல்வியால் அவள் மனமுடைந்து அழுதபோது அவர்களா வந்து ஆறுதல் சொன்னார்கள்? உயிரோடு இருந்தால் மட்டும் அவளுடைய வலிகளை அவர்களா ஏற்றுக்கொள்ளப் போகிறார்கள்?
     அவன் வந்து பார்ப்பானா? தான் இறந்ததை நினைத்து அழுவானா? கடைசி கணங்களிலும் அவன் மீதான எதிர்பார்ப்பு,,,
     நிச்சயமாய் இறந்துவிடுவோம் என்ற எண்ணத்தில் இருந்ததாலோ என்னவோ மனதிதல் என்னென்னவோ எண்ணங்கள் தலைதூக்கிப் பார்க்க. திடீரென ஒருவித மயக்கநிலை அவளுக்கு,நெஞ்சு வலித்து மூச்சுவிட சிரமமாக இருப்பதை போன்றொரு பிரமை,
     வயிறு மெல்ல வலிக்க ஆரம்பித்ததோடு கண்களில் உஷ்ணம் பரவ ஆரம்பித்தது,தூக்கம் வந்தது,அவனை நினைத்தபடி கண்களை இறுக ஸ்ரீடிக்கொண்டாள் அவள்,இறப்பதற்குத் தயாராய்,,,,,,,

* * * * * * * * * * * * * * * * * * * * * *

   பாவி பிள்ளையே அறிவிருக்கா உனக்குட? இப்படி பண்ணிட்டியே?” பல கதைகளில் படித்து,பல நாடகங்களில் பார்த்து கேட்டு சலித்துப் போன பழைய வார்த்தைகளையே கிளிப்பிள்ளையாய் ஒப்புவித்துக் கொண்டிருந்தாள் அவளுடைய அக்காள்.கண்டிப்பாக இறந்துவிடுவோம் என்றுதான் அவள் நம்பியிருந்தாள்.இப்படி உயிர் பிழைத்து பலருடைய கேள்விகளுக்கும் பதில் சொல்ல வேண்டி வரும் என்று அவள் நிச்சயம் எதிர்பார்க்கவில்லைதான்,ஆனால் நடப்பதெல்லாம் நம் எதிர்பார்ப்பு படியா நடக்கிறது?மரணத்திற்கு கூட அவளைப் பிடிக்காமல் போய்விட்டதோ?
   விசாரணை,பரிசோதனை எல்லாம் முடிந்து வீட்டுக்கு வந்தபிறகும் அவளுடைய அக்காளின் வசை தொடர்ந்தது,ஆனால் அவளுக்கு மனம் வலிக்கவேயில்லை,இதயத்தில் பெரிய கோடரியையே பாய்ச்சிவிட்டு காதலை அறுத்தெடுத்துக் கொண்டு போயிருக்கிறான் அவளுடைய காதலன்.அவளுடைய அக்கா: ஊசியால் குத்துவதற்குப் போய் காயப்பட முடியுமா என்ன?
   அவனும் அவளை வந்து பார்த்தான்,நடந்ததையெல்லாம் மறந்துவிட்டு யாரையாவது திருமணம் செய்து கொள்ளும்படி அவளிடம் மன்றhடினான்,அதுதான் அவனுக்கு சந்தோஷம் என்றால்,,,,,,,,,, அவனைத் தப்பி தவறி கூட நெருங்க கூடாது என்பதற்கு அதுதான் ஒரே வழி என்றால்....
   அவள் திருமணத்திற்குத் தயாரானாள்.கிடைத்த வரனை அவசர அவசரமாய்
பேசி முடித்தாள் அவளுடைய சுயநலவாதி அக்காள்.சம்பிரதாயங்கள் முடிந்து கழுத்தில் தாலி ஏறியபோது கூட ஏனோ அவளுக்கு அழுகையே வரவில்லை,
 
* * * *

   முதல் இரவு,எந்தவித சலனமும். உணர்ச்சிகளும் இன்றி பொம்மை மாதிரி அமர்ந்திருந்தவளை மிருகத்தனமாய் இழுத்து தன்மீது சாய்த்தான் அவள் கணவன்.தன்னைக் குழந்தை மாதிரி மென்மையாகவே கையாளும் காதலனின் நினைவு வர இத்தனை நாள் அடக்கி வைத்திருந்த காயங்கள் யாவும் மீண்டும் உயிர்த்தெழ வெளியே சத்தம் வராமல்,கண்ணீர் சிந்தாமல் உள்ளுக்குள்ளேயே கேவி கேவி அழுகிறாள் அவள்.இனி ஒவ்வொரு இரவும் அவளைக் கொல்வதற்கு தூக்கமாத்திரைகளும் கொக்கோ கோலாவும் தேவையில்லைதான்.



உதயகுமாரி கிருஷ்ணன்.
பூச்சோங்.

No comments:

Post a Comment