Saturday, February 23, 2013

வளையல் பெண்ணின் 'உதய'கீதங்கள்

வளையல் பெண்ணின் உதயகீதங்கள் :
கீதம் 1: ஓ நெஞ்சே நீதான்






  என் தந்தைக்கும்,எனது அன்பிற்கினிய நண்பர்கள் சுதாகர்,ராஜ் ஆகியோருக்கும் பிடித்தமான பாடலோடு என் தொடரை ஆரம்பிக்க விழைகிறேன்.திரைக்கதை ஜாம்பவான் என பெயர் வாங்கிய கே.பாக்யராஜ் அவர்கள் திரைக்கதை,வசனம் எழுதி இயக்கி 1982- ஆம் ஆண்டு வெளிவந்த படம் டார்லிங் டார்லிங் டார்லிங்’.சங்கர் கணேஷ் அவர்களின் இசையில் இப்படத்தில் இரண்டே இரண்டு பாடல்கள்தாம் என்றபோதிலும் இரண்டும் மனதை அள்ளும் பாடல்கள்.குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால் எஸ்.பி.பாலா ஐயாவின் உருக்கமான குரலில் இடம்பெறும் பாடலான ஓ நெஞ்சே நீதான் பாடும் கீதங்கள் என்ற பாடல்.நான் இப்படத்தைப் பார்க்க காரணமாக இருந்தது இந்தப் பாடல்தான்.ஒரு தடவை வானொலியில் கேட்டபோது மனதை என்னவோ செய்தது.அதன்பின்னர் அப்படத்தைத் தேடிப்பிடித்து வாங்கி பார்த்தேன் என் அப்பாவோடு.நானும் அப்பாவும் இப்படத்தை ஏறத்தாழ முப்பது,நாற்பது தடவையாவது பார்த்திருப்போம்.தந்தையின் தோளில் சாய்ந்து,அதிகமாய்ச் சிரித்து,அதிகமாய் அழுதும் நான் பார்த்த ஒரு படம்.சிறுவயதில் தன்னோடு ஒன்றாக படித்து,தன் தந்தையின் பணி காரணமாக வெளிநாட்டுக்குப் படிக்கப் போய்விடும் ராதா(பூர்ணிமா) மீது ராஜா(கே.பாக்யராஜ்) கொண்டிருக்கும் காதல்தான் படத்தின் கதை.கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்குப் பிறகு தன் தோழிகளோடு ஊட்டிக்குத் திரும்பி வரும் ராதாவுக்கு ராஜா பற்றிய நினைவு அறவே இல்லாமல் இருக்கிறது.அவளுக்கு வேறொருவனோடு நிச்சயதார்த்தமும் நடந்து முடிந்திருக்கிறது.அவள் ராஜாவைத் தன் வீட்டு வேலைக்காரனாக,ஒரு கேலிக்குரியவனாகதான் பார்க்கிறாள்.தன் தோழிகளோடு சேர்ந்து அவனைக் கிண்டல் செய்தவண்ணம் இருக்கிறாள்.ஒருநாள் அவர்களுக்கு ஊட்டியைச் சுற்றிக்காட்ட செல்கிறான்.அன்று இரவில் அவர்களுக்குப் பொழுதுபோகவில்லை என்பதால் என்ன செய்யலாம் என யோசிக்கிறார்கள்.அந்த லூசை கூப்பிட்டு டான்ஸ் ஆடச்சொல்லு என்கிறாள் ராதாவின் தோழி.டான்ஸ் ஆட சொன்னால் கேலி பண்ணறோம் என நினைப்பாரு என சொல்லும் ராதா ராஜாவைப் பாட சொல்ல,அவன் தயங்குகிறான்.உங்க காதலியை நினைச்சுப் பாடுங்களேன் என அவனைக் கேட்கிறாள் ராதா.அவளின் வார்த்தைகளைக் கேட்டதும் ராஜாவுக்கு சிறுவயதில் ராதாவோடு பள்ளியில் பாடிய ஓ மை லோட் என்ற ரைமிங் பாடல் நினைவுக்கு வருகிறது.அவர் ஏக்கத்தில் தயங்கி நிற்க,”இருங்கடி அன்னாரு இப்பதான் சுதி பிடிக்கறாரு என்ற தோழியின் கிண்டலுக்குப் பின்,அதே ரைமிங் மெட்டில் ஆரம்பிக்கிறார் பாடலை.ஓ நெஞ்சே நீதான் என நெஞ்சை அள்ளும் அப்பாடலைக் கேட்க கேட்க ராதாவைப் போன்றே நம்மாலும் ராஜாவின் காதலின் ஆழத்தையும்,அவன் மனதில் புதைந்து கிடக்கும் ஏக்கத்தையும் உணரமுடிகிறது.பாக்யராஜின் சோகமுகமும்,பாடல் காட்சியும் நமக்கு ராஜாவின் மேல் பரிதாபத்தை ஊட்டக்கூடியதாகவே இருக்கிறது.அப்பாடல் காட்சியில்  சிறுவயது ராதா தன்னிடம் காதலாய் இருந்ததையும்,அவள் அதே தோற்றத்தில் ஓடிவருவதையும் கற்பனை செய்து பார்க்கிறான் ராஜா.பல வருடங்களுக்குப் பிறகு ஊர் திரும்பும் அவளை வரவேற்க இரயில் நிலையத்திற்குப் போகும் ராஜா அவள் மயங்கிப்போகவேண்டுமென மிடுக்கான நடை நடந்து ராதாவை நெருங்க,அவளோ அவனது தோற்றத்தைக் கொஞ்சமும் பொருட்படுத்தாமல் பெட்டிகளைத் தூக்க சொல்ல,ராஜா பரிதாபமாய் பெட்டியைச் சுமந்து செல்லும் காட்சி நம்மையும் பரிதாபப்பட வைக்கிறது.ராதா காதலோடு அவனுடன் கைகோர்த்து புல்வெளியில் நடப்பதுபோன்றும்,அவளது மடியில் படுத்திருப்பதுபோன்றும் கற்பனை செய்து பார்க்கும் காட்சியும் உச்சுக்கொட்ட வைக்கிறது.அவளது ஒவ்வொரு செய்கையும் தன்னைக் காயப்படுத்துவதை நாசூக்காய் சொல்லும் என் ஆசை மங்கை எந்நாளும் என்னைக் கண்ணீரில் தாலாட்டினாள் என்ற வரிகள் நம்மையும் அழவைக்கின்றன.இப்போது அந்தக் காட்சிகளைக் கற்பனையில் நினைத்தவாறு அந்தச் சோக கீதத்தில் நாமும் கொஞ்சம் நனைந்து பார்க்கலாமா?




ஓ நெஞ்சே நீதான் பாடும் கீதங்கள்.. .
ஏன் இன்று நீர் மேல் ஆடும் தீபங்கள்.
ஓ நெஞ்சே நீதான் பாடும் கீதங்கள்.. .
ஏன் இன்று நீர் மேல் ஆடும் தீபங்கள்
ராகங்கள் சொல்லாதோ காதல் சந்தத்தை
ராகங்கள் சொல்லாதோ காதல் சந்தத்தை
சோகத்தில் தள்ளாடும் பேதை உள்ளத்தை
சோகத்தில் தள்ளாடும் பேதை உள்ளத்தை
ஓ நெஞ்சே ..
ஓ நெஞ்சே நீதான் பாடும் கீதங்கள்
ஏன் இன்று நீர்மேல் ஆடும் தீபங்கள்


தென்னங்கிளிதான் நீ சொல்லும் மொழி தேன்
தென்னங்கிளிதான் நீ சொல்லும் மொழி தேன்
சங்கீதம் பொங்காதோ உன் சின்னச் சிரிப்பில்
செந்தூரம் சிந்தாதோ உன் கன்னச் சிவப்பில்
என் ஆசை மங்கை எந்நாளும் கங்கை
கண்ணீரில் தாலாட்டினாள்..
என் ஆசை மங்கை எந்நாளும் கங்கை
கண்ணீரில் தாலாட்டினாள்..
ஓ நெஞ்சே
ஓ நெஞ்சே நீதான் பாடும் கீதங்கள்
ஏன் இன்று நீர் மேல் ஆடும் தீபங்கள்
ராகங்கள் சொல்லாதோ காதல் சந்தத்தை
ராகங்கள் சொல்லாதோ காதல் சந்தத்தை
சோகத்தில் தள்ளாடும் பேதை உள்ளத்தை
சோகத்தில் தள்ளாடும் பேதை உள்ளத்தை
ஓ நெஞ்சே ..
ஓ நெஞ்சே நீதான் பாடும் கீதங்கள்
ஏன் இன்று நீர்மேல் ஆடும் தீபங்கள்


உள்ளக்கதவை நீ மெல்ல திறந்தால்
உள்ளக்கதவை நீ மெல்ல திறந்தால்
அந்நாளே பொன்னாளாய் என் ஜென்மம் விடியும்
எந்நாளும் பன்னீரில் என் என் நெஞ்சம் நனையும்
கொத்தான முல்லை பித்தான என்னை
எப்போது முத்தாடுவாள்...
கொத்தான முல்லை பித்தான என்னை
எப்போது முத்தாடுவாள்...


ஓ நெஞ்சே
ஓ நெஞ்சே நீதான் பாடும் கீதங்கள்.. .
ஏன் இன்று நீர் மேல் ஆடும் தீபங்கள்

ராகங்கள் சொல்லாதோ காதல் சந்தத்தை
ராகங்கள் சொல்லாதோ காதல் சந்தத்தை
சோகத்தில் தள்ளாடும் பேதை உள்ளத்தை
சோகத்தில் தள்ளாடும் பேதை உள்ளத்தை
ஓ நெஞ்சே
ஓ நெஞ்சே நீதான் பாடும் கீதங்கள்.. .
ஏன் இன்று நீர் மேல் ஆடும் தீபங்கள்

 


No comments:

Post a Comment