Sunday, February 10, 2013

நீயும் நானும்

நீயும் நானும் 1


         நீயும் நானும் ஊடல் கொண்டிருக்கும் ஒரு பொழுதில் நீ தரையில் சப்பணமிட்டு அமர்ந்து உன் மடிக்கணினியில் ‘பேஸ்புக்’ நட்புத்தளத்தைத் திறந்து வைத்து எவளோ ஒரு குறத்தியிடம் வழிந்து கொண்டிருப்பாயாம்.(அவள் பேரழகியாகவே இருந்தாலும் நீ ரசித்தால் அவள் குறத்திதான் எனக்கு)நான் உனக்கு எதிர்ப்புறம் உன் முதுகில் என் முதுகைச் சாய்த்து கால்நீட்டி அமர்ந்தபடி ‘வாக்மேனில்’ பாடல் கேட்டபடி அமர்ந்திருப்பேனாம்.சட்டென்று எனக்கும்,உனக்கும் பிடித்தமான பாடல் ஒலிக்க,என் விழிகள் துயில் கொள்ள துடிக்க,உன் மடிக்கணினியைப் பிடுங்கி கட்டிலுக்கடியில் கடாசிவிட்டு உன் மடியில் படுத்து உறங்க ஆரம்பிப்பேனாம்.நீ உடனே உன் மடிக்கணினியை மறந்துவிட்டு இந்த மடிக்கன்னியை இரசிக்க ஆரம்பிப்பாயாம்......



நீயும் நானும் 2


      நீ அதிக பதட்டமாய் இருக்கும் ஒரு நேரத்தில் நான் ஏதோ தவறு செய்துவிட,நீ என்னை அதிகமாய்த் திட்டிவிடுவாயாம்.ஆங்கிலத்தில் ‘இரிட்டேட்டிங் ஈடியட்’ என திட்டிவிடுவாயாம்.நான் ஒன்றும் பேசாமல் முறைத்தவாறு உன் அருகில் வந்து உன்னை இறுக்கமாய்க் கட்டி அணைத்துக் கொள்வேனாம்.தடுமாறிப் போகும் நீ என்னை நிமிர்த்திப் பார்க்கும்போது என் கண்களில் கண்ணீர் நிறைந்திருக்குமாம்..உடனே நீ தமிழில் என்னைச் சமாதானப்படுத்துவாயாம்... அப்புறம்..அப்புறம்..அப்புறம்.. அப்புறம் என்ன..வழக்கமாய் உன்னிடமிருந்து கிடைக்கும் ‘எல்லாமும்’ அன்றைக்குக் கொஞ்சம் ‘கூடுதலாகவே’ கிடைக்குமாம்..


நீயும் நானும் 3

     ஒரு தடவை நீ என்னை ஏசி,நான் அழுதுவிட அன்று நீ என்னை வழக்கத்தைவிட ‘விஷேஷமாய்’ கவனித்தது என்னுள் ஏக்கமாய்ப் பதிந்துவிட,மீண்டும் அதில் கிறங்கி போக எண்ணிய நான் ஒரு பொழுதில் வேண்டுமென்றே நீ அதிக வேலையாய் இருக்கும் சமயம் உன்னிடம் வம்பு பண்ணுவேனாம்.நான் அனுப்பிய குறுஞ்செய்தியால் நீ என்மீது கோபம் கொண்டிருக்கிறாய் என வேண்டுமென்றே விளையாட்டுக்கு குறுஞ்செய்தி அனுப்புவேனாம்.நீ அதிக வேலையாக இருப்பதால் பதில் அனுப்ப மாட்டாயாம்..எனக்குத் தெரிந்தும் வேண்டுமென்றே ‘அப்படியொரு எஸ்.எம்.எஸ் அனுப்பி உன்னைக் காயப்படுத்திய என் கையைத் தண்டிக்கப் போகிறேன்,இனி அந்தக் கையால் கைபேசியைப் பிடித்து எந்தக் குறுஞ்செய்தியும் அனுப்ப முடியாது,’ என அனுப்பி வைப்பேனாம்.நீ பதற்றத்தில் உன் வேலைகளையெல்லாம் விட்டுவிட்டு கோபத்தோடு வீட்டுக்கு வருவாயாம்..நான் வேண்டுமென்றே என் கைகளை மறைத்துக்கொண்டு பேசாமல் இருப்பேனாம்.நீ அதிகமாய் இரசித்து,நேசிக்கும் கதை எழுதும் என் வளையல் கையை ஏதோ பண்ணிவிட்டேன் என்று நீ ஆத்திரத்தோடு என்னை நெருங்குவாயாம்.ஓங்கி ஓர் அறை விடவேண்டும் என எண்ணிக்கொண்டே நான் பின்னால் மறைத்து வைத்திருந்த என் கையைப் பற்றி இழுத்து பார்ப்பாயாம்..வண்ண வண்ண வளையல்கள் அணிந்து,நன்கு சிவந்த மருதாணியோடு என் கை மிகவும் அழகாக இருக்குமாம்.”நீங்க ரொம்ப நேசிக்கற,உங்களுக்குச் சொந்தமான இந்தக் கையைத் தண்டிக்க எனக்கு என்ன உரிமை இருக்கு??அதான் இப்படி அழகுப்படுத்தி வெச்சிருக்கேன்..அன்புத் தண்டனை,” என சொல்லிவிட்டு உன்னைப் பார்த்து முறைப்பேனாம்.உன் கோபம் பட்டென மறைந்து வழக்கமாய் என்னை மயக்கும் சிரிப்பு சிரித்துக்கொண்டே,”உன் விளையாட்டு ரசனைக்கு ஓர் அளவே இல்லையா பெண்ணே? என கேட்டுக்கொண்டே என் வளை கையில் ஒரு ‘முத்த வளையல்’ பதித்து என்னை உன் மார்போடு அணைத்துக்கொள்வாயாம்..


நீயும் நானும் 4

     நீ எனக்குத் தந்தை மாதிரியும்,நான் உனக்குத் தாய் மாதிரியும் இருப்போமாம்.வழக்கமாய் இரவுகளில் நீ என் மடியில் தலைவைத்துப் படுப்பாயாம்.நான் உன் தலை கோதி,உன் காதில் மென்மையாய் பாடல்கள் பாடி,உறங்கவைப்பேனாம்.ஆனால் முதன்முதலாய் நீ என்னைவிட்டு சிலநாள் தனியாக வெளியூரில் தங்கவேண்டி வருமாம்..வழக்கமாய் வானொலியோடு நாம் க(ளி)ழிக்கும் மாலை வேளையில் நீ என்னிடம் விடைபெற்று போகும்போது என் கன்னத்தில் வழியும் துளி கண்ணீராய் உன் இதழ்களால் ஒற்றி எடுத்துவிட்டு கிளம்பிவிடுவாயாம்.அன்றிரவு சோகத்தில் சாப்பிடாமல் உறங்கிவிடும் நான் திடீர் என இடி இடிக்கும் சத்தத்தில் பயந்து நடுங்கி விழிக்கும்போது என் பக்கத்தில் குறும்புச் சிரிப்போடு நீ அமர்ந்திருப்பாயாம்.வேண்டுமென்றே வெளியூர் போவதாய்ச் சொல்லி என்னைச் சிணுங்க வைத்திருப்பதை அறிந்து நான் கோபம் கொள்வதற்குள் என்னைத் தூக்கிக்கொண்டு போய் சாப்பிடவைப்பாயாம்.வெளியில் பெய்து கொண்டிருக்கும் மழையை இரசித்தபடி,இடிமின்னலைப் பொருட்படுத்தாமல் வானொலியைத் திறந்து வைத்து, விடியவிடிய ஒருவர் தோளில் மற்றொருவர் சாய்ந்து நமக்குப் பிடித்தமான எண்பதாம்,தொன்னூறாம் ஆண்டு பாடல்களைக் கேட்டுக்கொண்டே மௌனத்தில் கரைந்து இருப்போமாம்.


நீயும் நானும் 5

     பனி தூறும் ஓர் அதிகாலப் பொழுதில் நான் 3 மணிக்குத் துயில் களைவேனாம்.என் இடையை உரிமையோடு வளைத்திருக்கும் உன் கையை மெதுவாய் விலக்கிவிட்டு தூங்கும் உன்னை ஒரு கணம் இரசிப்பேனாம்.பிறகு விடுவிடுவென வீட்டைக்கூட்டி,துடைத்து, சமையல் செய்வேனாம்.சமையல் முடிந்ததும் குளித்துவிட்டு வந்து மணியாகிவிட்டதாக பொய்ச் சொல்லி உன்னை எழுப்புவேனாம்.தூக்கத்தில் சிணுங்கும் உன்னைத் தள்ளிக்கொண்டு போய் குளியலறையில் விட்டு,உன் தலையில் தண்ணீரை ஊற்றுவேனாம்.வேறு வழியின்றி நீ குளித்துவிட்டு வருவதற்குள் வீடு முழுக்க கமகமவென சாம்பராணி புகையைப் போட்டு வைப்பேனாம்.உன்னை அழைத்துக்கொண்டு போய் பசியாற வைப்பேனாம்.உண்மை அறியும் நீ செல்லமாய் என் தலையில் தட்டிவிட்டு எனக்கும் ஊட்டிவிடுவாயாம்.வாசமான சாம்பராணி புகையை நுகர்ந்துகொண்டே இருவரும் சுடசுட தேநீரைச் சுவைப்போமாம்.பிறகு இருவரும் அந்தப் பனி பொழுதில்,குயில் கூவும் ஓசையைக் கேட்டுக்கொண்டே,கைகள் கோர்த்தபடி நட்சத்திரங்களை வேடிக்கை பார்த்துக்கொண்டே வீட்டுக்கு வெளியே உலாவுவோமாம்.எனக்குத் தூக்கம் வந்ததும் நீ என்னை வீட்டுக்குள் அழைத்து வந்துவிடுவாயாம்.குளிர் தாங்க முடியாத நான் உன் மார்பில் முழுவதுமாய் என்னைப் புதைத்துக்கொண்டு படுத்திருப்பேனாம்,உனக்கு உறக்கம் கலைந்து போனாலும் எனக்காக ஏதோ ஒரு பாடலை முணுமுணுத்தபடி,ஒரு கையால் என்னை அணைத்தபடி நான் எழுதிய ‘நீயும் நானும்’ தொகுப்பைப் படித்துக்கொண்டே படுத்திருப்பாயாம்.உன் ‘கதகதப்பில்’ சுகமாய் உறங்கி போவோமாம் நானும் உன் அன்பின் சின்னமாய் என் வயிற்றில் வளரும் ஓவியா குட்டியும்.



ஆக்கம் : உதயகுமாரி கிருஷ்ணன், பூச்சோங்....

3 comments:

  1. இது கற்பனைக் கதையா அல்லது உங்கள் வாழ்க்கைக் கதையா?

    ReplyDelete
  2. படிப்பவர்களை அந்த சூழலுக்கே கொண்டு செல்லக்கூடிய வல்லமை வாய்ந்த எழுத்து. மனம் கவர்ந்த வரிகள். வாழ்வை அணு அணுவாக இரசித்து / இருசித்து வாழும் உங்கள் வாழ்க்கை மெம்மேலும் சிறக்க வாழ்த்துகள் உதயா (ஊதா பூ)..

    ReplyDelete